“சொல்லுங்க மிஸ்டர். சுகுமாரன். ஏதோ சொன்னீங்களே? என்ன சொன்னீங்க? ஹான்.. ஸ்டேட்டஸ உடைப்பீங்களா.. முத உங்களுக்கு அவரோட ஸ்டேட்டஸ் என்னன்னு தெரியுமா?ஹ்ம்?’ என்று மதி சுகுமாரனை நேர் பார்வை பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் உள்ளே நுழைந்ததில் இருந்து அவளை மட்டும் பார்த்திருந்த சுகுமாரன், அவள் ரகு அருகில் சென்று அமர்ந்ததும் சற்று வியப்போடு புருவம் உயர்த்திப் பார்த்தார்.
அவளை முழுதாக மேல் இருந்து கீழ் வரை அளந்தவர், “ரகுநந்தன் யார் இது? உங்களுக்கும் இந்த பொண்ணுக்கும் என்ன உறவு வேணும்னாலும் இருக்கலாம்.
பட் ஆபிஸ்ல இவங்களை எல்லாம் அலோ பண்ணலாமா? உங்க ரெபுடேசனை இது பாதிக்கும்னு உங்களுக்கு தோனலையா?” என்று கேட்டார்.
“என்னோட ரெபிடேஷன் பத்தி ரொம்ப கவலைப்படுறீங்களே மிஸ்டர் சுகுமாரன். ஆனால் நம்ம பேசுற ஒவ்வொரு வார்த்தையும் நம்ம ரெபிடேஷனை சொல்லுங்கிறத மறந்துட்டீங்களே.
அதுவும் நம்ம யார் முன்னாடி பேசுறோங்கறது நம்ம உயிருக்கே சேதத்தை ஏற்படுத்தலாம். அதனால யோசிச்சு பேசுங்க” என்று ரகு கூறும்போது,
அந்த கடைசி வாக்கியம் இதற்கு மேல் நீ பேசினால் உன்னை கொலை செய்யவும் தயங்க மாட்டேன் என்று உறுதி அளித்தது.
சுகுமாரனை பார்த்துக் கொண்டிருந்த ரகுவின் முகத்தில் எந்த உணர்வும் இல்லை என்றாலும் அவன் கண்கள் அத்தனை உக்கரமாக இருந்தது.
அதனை பார்த்த ரவி, “ஏன்டா நண்பா டென்ஷன் ஆகுற.
சுகுமாரன் சார்க்கு கொஞ்சம் வயசு ஆகிடுச்சில, அதான் வயசான காலத்துல என்ன பேசிறோம்னு தெரியாம பேசிறாரு.
ஒரு தடவை தெளிவா சொன்னா புரிஞ்சுக்குவாரு. என்ன சார் புரிந்துக்குவீங்கல்ல”
என்று ரவி “தெளிவா” என்ற வார்த்தையை அழுத்தி கூறினான். நிச்சயம் அதில் இருந்தது மிரட்டல் தான்.
மதி முகத்தில் சுகுமாரன் பேசும்போதும் சரி மற்ற இருவர் பேசும்போதும் சரி எந்த மாற்றமும் இல்லாமல் அதே புன்னகையோடு தான் அமர்ந்திருந்தாள்.
இவர்கள் இருவரின் அப்பட்டமான மிரட்டலில் எதையோ உணர்ந்து கொண்ட சுகுமாரன் மீண்டும் மதியை உற்று கவனிக்க, அவள் நெற்றியில் இருந்த குங்குமமும் கழுத்தில் மின்னிக் கொண்டிருந்த தங்கச்சங்கிலியும் எதையோ உணர்த்தியது.
உடனே அதனை புரிந்து கொண்டவராக, ரகுவிடம் “என்ன ரகு? ஊருக்கு தெரியாம கல்யாணமா? வெயிட்..வெயிட்..அப்படி கேட்கக் கூடாதில்ல.. ஊருக்கு தெரியாம ரகசியமாக குடும்பம் நடத்துறீங்களா?இப்படிதான கேட்கனும், கரெக்ட் தான?” என்று மீண்டும் வார்த்தையை விட்டார்.
இப்போது இருவரிடமும் பொறுமை பறந்து இருக்க, அவர் வாயை உடைத்துவிடும் வேகம் இருவரிடமும்.
வேகமாக எழும்ப முயற்சித்த ரகுவை தடுத்து நிறுத்தியவள், ரவி எழுந்து நின்றதும், “ரவி அண்ணா உட்காருங்க எதுக்கு இவ்வளவு டென்ஷன். இவர் என்னைப் பத்தி தானே பேசுறாரு. நானே பதில் சொல்றேன். உட்காருங்க”, என்று அவனை அமைதிப்படுத்தி உட்கார வைத்தாள்.
அதுவரை நடந்து கொண்டிருந்த அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த சுகுமாரன் இருவரின் கோபத்தையும் கூட அலட்சியம் தான் செய்து கொண்டிருந்தார்.
மதி அவனிடம் நான் பேசிக் கொள்கிறேன் என்று கூறியதும் அவளிடமே திரும்பி, “என்ன பொண்ணே நீ என்ன சொல்ல போற? ஆமா உன்னை மிஸஸ் ரகுநந்தன்னு கூப்பிடனுமா…?இல்லை இது ரகசிய கல்யாணம்ல அதான் கேட்கிறேன்” என்றார்.
“என்னை எப்படி கூப்பிடனும்ங்கிறது இன்னும் கொஞ்ச நேரம் நீங்களே டிசைட் பண்ணிடுவீங்க சார். அது இருக்கட்டும் நீங்க ஏதோ சொன்னீங்க இல்ல…. ஹான்..ரகசியமா குடும்பம் நடத்துறது. ரகசியமா குடும்பம் நடத்துறன்னா அர்த்தம் என்னன்னு உங்களுக்கு தெரியுமா ரகு”, என்று சுகுமாரனிடம் ஆரம்பித்து ரகுவிடம் கேள்வியை திருப்பி,
மனைவியின் கேள்வியில் எதையோ உணர்ந்தவன், “அப்படின்னா என்ன மதி எனக்கு தெரியாதே” என்று அவளுடன் ஒத்து ஊதினான்.
“ஊருக்குள்ள ஒரு பணக்கார பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிட்டு, அந்த பொண்ணோட சொத்துலையே சாப்பிட்டு கொழுத்து போய் இருக்கும் போதும், ஊருக்கு வெளியே ஒரு தனி பங்களா வாங்கி அத சுத்தி தோட்டத்தை அமைச்சு,
அந்த பங்களாக்குள்ள ஒரு பொண்ண குடி வச்சு, அந்த பொண்ணு கூட குடும்பம் நடத்துறது தான் ரகசியமா குடும்பம் நடத்துறது. இன்னும் தெளிவா சொல்லணும்னா……”
என்று இழுத்த மதி சுகுமாரனை ஒரு நிமிடம் நன்றாக உத்து கவனிக்க, அவர் முகத்தில் சிறு யோசனை இருந்த போதும் அலட்சியம் மாறவில்லை.
மதி தொடர்ந்து, “இந்த ஊருக்குள் பெத்த பேரு வாங்கின ஒரு பெரிய மனுசன், தேவகிங்கிற பேருள்ள ஒரு பொண்ணு கூட ஊருக்கு வெளியில குடும்ப நடத்திறாரு பாருங்க, அதை தான் ரகசியமா குடும்பம் நடத்துறதுன்னு சொல்லுவாங்க” என்று கூறி முடித்தாள்.
அவள் அந்த பெயரை உச்சரிக்கும் போதே சர்வமும் அடங்கி அமர்ந்து விட்டார் சுகுமாரன். அலட்சியபாவம் மொத்தமாக மாறி மிரண்டு போன கண்கள், அவர் தான் அந்த பெரிய மனிதர் என்பதை சொல்லாமல் சொல்லியது.
மிரண்டு போயிருந்தாலும் சில நிமிடங்களிலேயே தன்னுடைய பாவனைகளை மாற்றிக் கொண்டார். வருடமாக தொழில் செய்பவருக்கு அது அத்தனை கடினமாக இல்லை.
எனினும் அவர் கேட்ட விசயம், அதாவது அவருடைய பல வருட ரகசியம், சின்னதாக தன் மனைவியின் காதுக்கு சென்றால் கூட, நிச்சயம் அவரை மொத்தமாக வீழ்த்திடும் வீரியம் உடையது.
அதனால் தன் பேச்சில் அந்த பயத்தை அவரால் காட்டாமல் இருக்க முடியவில்லை.
“ஹான்..அது..வந்து…ஓகே.. ஓகே ..எனக்கு படம் பண்ணனும் அவ்வளவுதான். எப்ப பண்ணுவீங்க மிஸ்டர் ரகு சொல்லுங்க” என்று அவர் மீண்டும் முந்தைய பேச்சிற்கு வந்து நின்றார்.
அவர் பேச்சை கேட்ட ரவிக்கு மனதுக்குள் இதுதான் ஓடிக்கொண்டிருந்தது, “என்ன இந்த நரி ஏதேதோ தந்திரம் செஞ்சு, நம்மளை டார்ச்சர் பண்ணும். நம்ம இதை சமாளிக்கணும்னு நினைச்சா, இது வெறும் கொசுவா இருக்கும் போல.
நம்ம வீட்டு பெண்சிங்கம் பட்டின்னு அடிச்சு உஃப்னு ஊதி விட்டுருச்சு. இது தெரியாம இது பெரிய அப்பாடக்கர்ன்னு நினைச்சிட்டோமே”, என்று தனக்குள்ளையே சொல்லி நகைத்துக் கொண்டான்.
சுகுமாரன் கேள்விக்கு, “உங்க கேள்விக்கு நான் எப்போவோ பதில் சொல்லட்டும் சுகுமாரன். என்னால உங்க கூட படம் பண்ண முடியாது. அதுமட்டுமில்லாம இப்ப நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். இனிமே எப்பவுமே உங்களுக்கு நான் படம் பண்ற ஐடியால இல்ல. நீங்க கிளம்பலாம்”, என்று அவன் கூற,
“மிஸ்டர் ரகுநந்தன், உங்களோட ரெண்டு படம் முடிஞ்சதுக்கு அப்புறம் கூட, நீங்க எங்களுக்கு படம் பண்ணலாம்.
நீங்க நான் பேசுனது எல்லாம் மனசுல வச்சுக்காதீங்க. நான் ஏதோ உங்க பிரண்டு சொன்ன மாதிரி வயசாகுதுல அதான் கொஞ்சம் உளறிட்டேன்”
இப்போது வார்த்தைகள் பணிவாக வந்தது சுகுமாரனிடம், ஏனெனில் இப்போது படம் பண்ணவில்லை என்று அவன் கூறினான் என்றால் கூட, அவர் மனைவியை சமாளித்து விடலாம்.
ஆனால் அவன் எப்போதும் செய்ய மாட்டான் என்ற விசயம் அவர் மனைவிக்கு தெரிந்தால், நேரடியாக இவனிடமே வந்து கேட்பாள்.
அப்படி கேட்கும்போது தன்னை பற்றிய விஷயத்தை அவன் கூறிவிட்டான் என்றால், அது நிச்சயம் தனக்கு ஆபத்தில் முடியலாம் என்று உணர்ந்தே பணிவுடன் பேச, ஆனால் ரகு அதனை ஏற்கவில்லை.
“நான் சொன்னதுதான். நீங்க என் மனைவி கிட்ட தப்பா பேசிருக்கீங்க. அப்படி இருக்கும்போது உங்களுக்கு நான் இனிமேல் எப்பவும் எந்த ஃபேவரும் பண்றதா இல்ல”, என்று கூறினான்.
“அப்படியா சரி கேளுங்க” என்றதும், அவருக்கு அதிர்ச்சி தான்.
ஒரு பேச்சுக்கு சாரி சொல்கிறேன் என்று கூறியதும், உண்மையில் தன்னை சொல்ல சொல்கிறானே என்று தான் அவருக்கு தோன்றியது.
உண்மையில் ரகுநந்தனிடம் அவருக்கு வந்திருக்கும் பணிவு இன்னும் கூட மதி இடம் வரவில்லை.
ஏனெனில் அவள் இன்னும் உலகுக்கு தெரியாத ரகுவின் மனைவி. அவள் பேச்சு சபை ஏறாது என்பது அவர் எண்ணம். அதனால் மதியை மதிக்கும் எண்ணத்தில் அவர் இல்லவே இல்லை.
ஆனால் இப்போது அவன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்பது போல், ரகு அவரை பார்த்து இருக்க, அவருக்கு என்ன செய்ய என்று புரியவில்லை.
அவருக்கு வேறு வழியும் இல்லையே அதனால் மன்னிப்பு கேட்க தயாரானார். மதியிடம் திரும்பியவர், “சாரி மிஸஸ். ரகுநந்தன். என்னை மன்னிச்சிடுங்க” என்றார்.
மதி அவரிடம், “ஒரு வழியா என்னை எப்படி கூப்பிடனும்னு முடிவு பண்ணிட்டீங்க போல இருக்கு”, என்று கூறிவிட்டு
“ஓகே ஃபைன். ஐ அக்செப்ட் யுவர் சாரி”(Ok Fine. I accept your sorry), என்று கூறி அமைதியாகிவிட்டாள்.
இப்போது ரகுவிடம் திரும்ப, அவன் என்ன என்பது போல் பார்த்திருந்தான். மீண்டும் அவரே பேச ஆரம்பித்தார்,
“நீங்க சொன்னத நான் செஞ்சிட்டேன். நீங்க இப்ப படம் பண்ணலனாலும் பரவாயில்லை. பின்னாடி கண்டிப்பா பண்ணவீங்க தான? என்ன சொல்றீங்க?”
“யோசிக்கிறேன்”
“இல்ல நீங்க அப்படி சொல்லக்கூடாது. நீங்க….”
“போதும் மிஸ்டர் சுகுமார். நீங்க கிளம்பலாம். உங்களுக்கு நான் கொடுத்த டைம் முடிஞ்சிடுச்சு. எனக்கு ஷூட்டிங் டைம் ஆச்சு”
சுகுமாரனுக்கு எப்போதும் தன்னைப் பற்றிய தலைகனம் அதிகமாகவே இருக்கும். தொழில் நடத்துவதில் ஆரம்பித்து தான் செய்யும் ரகசிய வேலைகள் வரை அனைத்திலும் தெளிவாக, தான் காய் நகர்த்துவதாக எண்ணிக் கொண்டிருந்தார்.
யாருக்கும் தெரியாமல் அத்தனை ரகசியமாக வைத்திருக்கும் ஒரு விசயம், தன் முன் அமர்ந்திருக்கும் பெண்ணுக்கு தெரிந்திருக்கிறது என்பதே அவருக்கு பெரிய அடியாக இருந்தது.
தான் மாட்டிக் கொள்வோம் என்று பயத்தில் இருந்தவர், இவர்கள் சொல்லும்படி கேட்க வேண்டியதாகிவிட்டது.
அவர்கள் தன்னை அவமதித்து விட்டதாகவே எண்ணியவருக்கு, அவர்களை பழிவாங்கிடும் எண்ணம் தான்.
ஆனால் அதையும் தாண்டி அவர்களிடம் தன் ரகசியம் இருக்கும் வரை, தான் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
அவர் அங்கிருந்து சென்றதும் ரவி மதியிடம், “மதிமா உனக்கு எப்படிடா இவனை பத்தி தெரியும்?” என்று கேட்க,
அதற்கு மதி, “அட நீங்க வேறண்ணா. எனக்கு எங்க தெரியும். நான் ஊருக்கு வந்த புதுசுல ஒரு வேலை விஷயமா, சிட்டிய தாண்டி ஒரு இடத்துக்கு போயிருந்தேன். அங்க சுத்தி இருக்கிற வீடு பத்தி எல்லாம் விசாரிச்சிட்டு இருந்தோம்.
அப்ப அங்க இருந்த ஒரு வீட்டில யாரு இருக்கான்னு விசாரிச்சப்போ, ஊருக்குள்ள இருக்க ஒரு பெரிய மனுஷன் இங்க ரகசியமா இன்னொரு குடும்பம் நடத்திக்கிட்டு இருக்காருன்னு தெரிஞ்சது.
அந்த லேடியோட பேரு கூட தேவகின்னு சொன்னாங்க. அது தெரிஞ்ச கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் இந்த ஆளோட காரு, அந்த வீட்டுல இருந்து வெளியே வந்ததை பார்த்தேன்.
அப்ப இந்த ஆளோட கார் தான் அதுன்னு எனக்குத் தெரியாது. அந்த கார இங்க பாத்தப்ப எங்கயோ பாத்த மாதிரி இருக்கின்னு தான் நினைச்சேன். அப்பவும் எனக்கு அது ஞாபகம் வரல.
ஆனா அவரே ‘ரகசியம்’ ‘குடும்பம்’னு பாய்ன்ட் எடுத்துக் கொடுத்திட்டாரு. சும்மா அவர் கிட்ட போட்டு தான் வாங்குனே. அதான் உண்மைன்னு காட்டிக் கொடுத்திட்டுப் போறாரு”, என்று அவள் கூற,
மற்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு மதியிடம் திரும்ப, இப்போது மூவரும் ஒரே நேரத்தில் வெடித்து சிரித்தனர்.
முதன் முதலில் ரகு மதியை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறியதுமே ரவி அவளைப் பற்றிய மொத்த தகவலையும் திரட்டும் வேலையைத் தொடங்கிவிட்டான்.
ரகுவின் திருமணத்தை நடத்த முழுமூச்சாக நின்றிருந்தவன், மறுபுறம் மதியைப் பற்றி ஆராய்வதையும் நிறுத்தவில்லை.
அவளைப் பற்றிய தகவல் அனைத்தும் அவனுக்கு மதியின் மீது ஒரு பிரமிப்பு ஏற்படுத்தியது. அதன் பின் அவள் ரகுவிற்கு எல்லாமுமாக மாற, அந்த மதிப்பு அவள் மேல் பாசத்தை வரவழைத்தது.
இன்று இத்தனை இலகுவாக இந்த பிரச்சனையை அவள் தீர்த்தது, ரகு மிகவும் பாதுக்காப்பாக இருப்பதை உணர்த்தியது.
பெண்ணை பாதுகாக்க தான் ஆண் என்று கூறுகின்றனர்.
ஆனால் உண்மையில் பல நேரங்களில் ஆணின் மனம் உடைந்திடாமல் இருக்க, அவனுக்கு ஏற்படும் பெரும் பிரச்சனைகளைத் தவிர்க்க இப்படி பல நேரங்களில் அவனை பாதுகாக்கும் ஆயுதமாக பெண் தான் இருக்கிறாள்.
மதியின் இன்றைய செயலும் சரி, இதற்கு முன் கார்மெண்ட்ஸ் சென்ற அன்று நடந்தது பற்றி ஆராயந்ததும் சரி, அனைத்தையும் பார்த்த ரவிக்கு, தன் நண்பனுக்கு அப்படி ஒரு பாதுகாப்பு மதி தான் என்று தோன்றுவது ஒன்றும் மிகையல்ல.
அவர்கள் சிரிப்பு சத்தம் தொடர்ந்து கொண்டிருக்க கௌதமி உள்ளே நுழைந்தார்.
வந்தவர் நேரடியாக ரவியிடம் சென்று “ரவி இன்னும் இரண்டு வாரத்தில் இவங்க ரெண்டு பேருக்கும் ரிசப்ஷன். அதுக்கு தேவையான ஏற்பாடெல்லாம் ஆரம்பிச்சிடு.
அப்புறம் மதி நீயும் இந்த ரெண்டு வாரத்துக்குள்ள உன்னோட எல்லா வேலையும் முடிச்சிடு.
முடிக்க முடியலனாலும் உன்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு முடி போதும். இதுக்கு மேல உங்க ரிசப்ஷன தள்ளி போட நான் தயாரா இல்லை”, என்று கூறிவிட்டு
அவர் வெளியேற எத்தனிக்க, அச்சமயம், “அத்தை ஒரு தடவை யோசிங்க. எனக்கு ரெண்டு வாரத்தில இந்த வேலையை முடிக்க முடியாது”, என்று மதி கூறினாள்.
“இல்லை மதி. இப்ப வெளியே போன சுகுமார் அவனா வெளிய எதுவும் பேச மாட்டான். நீ சொன்ன விஷயமே போதும் அவன் பயந்து வாய் மூடிட்டு இருப்பான்.
ஆனா அவன் வேற யார் மூலமாவது உன்னை பத்தி தப்பா சித்தரிக்கிறேன் ட்ரை பண்ணுவான்.
அதனால அவனுக்கு முன்னாடி நம்ம முந்திக்கணும். ரெண்டு வாரத்துல உனக்கு ரிசப்ஷன். உன் வேலைய எல்லாம் முடிச்சிடு” என்று விட்டு வேகமாக வெளியேறிவிட்டார்.
கௌதமிக்கு சுகுமாரன் இங்க வந்தபோதே தகவல் வந்திருந்தது. அவரும் ஒரு மிகப்பெரிய கார்மெண்ட்ஸ் நடத்துபவர் தானே. இருவரும் எதிரெதிர் அணியில் இருப்பவர்கள் தான்.
அதனால்தான் சுகுமாரன் உள்ளே வந்ததுமே கௌதமியின் உதவியாளர் அவருக்கு தெரிவித்திருந்தார்.
இருந்தும் கௌதமி, அவர் டைரக்டர் ரகுநந்தனை தானே சந்திக்க வந்திருக்கிறான் என்று அதனை கண்டு கொள்ளவில்லை.
ஆனால் அவர் வெளியேறும் சமயம் மதி வீட்டிற்குள் வருவதை கண்டார். அதுவும் அவள் நேராக ரகுவின் அலுவலகம் செல்வதையும் கண்டு கொண்டவருக்கு சுகுமாரன் உள் இருக்கும் நேரம் இவள் செல்வது அவருக்கு சரியாக படவில்லை.
ரகு பார்த்துக் கொள்வான் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். மதி விசயத்தில் அவன் எப்படி என்று இந்த சில நாட்களிலேயே புரிந்துக் கொண்டு இருந்தார்.
எனினும் ஏதோ ஒன்று அவரை அங்கு போ என்று கூற, என்றும் செல்லாத அந்த அலுவலகத்திற்குள் வந்துவிட்டிருந்தார்.
எப்போதும் அலுவலகத்தில் வேலை செய்யும் நபர்கள் 10 மணிக்கு மேல் வருவதால் அன்று அலுவலகம் அமைதியாக இருந்தது.
அங்கு சூழ்ந்திருந்த அமைதியின் காரணத்தினால் தான், அறைக்கு வெளியே நின்றிருந்த மதிக்கும் சரி, மதியின் கண்களுக்கு படாமல் சற்று தள்ளி நின்றிருந்த கௌதமிக்கும் சரி சுகுமாரன் பேசுவது தெளிவாக கேட்டது.
சுகுமாரன் ரகுவை பேசியதை கேட்டவர், அதற்கு மதி கொடுத்த பதில்களையும் கேட்கத் தவறவில்லை.
இதற்கு மேல் இவர்களின் வரவேற்பு விழாவை தள்ளிப் போடுவது சரியல்ல என்று முடிவு எடுத்தவர், கூடவே இன்னொரு முடிவும் எடுத்தார்.
அதனை வரவேற்பின் போது தெரிவித்துக் கொள்ளலாம் என்று அதற்கு தேவையான பணிகளையும் தொடங்க முடிவெடுத்துக் கொண்டார்.
அவர் வெளியேறியதும் ரவி, “டேய் மச்சான் என் ஃப்ரெண்ட்க்கு ரிசெப்ஷன் டா. நான் போய் வேலை ஆரம்பிக்கிறேன்”, என்று கூறிவிட்டு குடுகுடுவென்று வெளியே ஓடினான்.
“டேய் டேய்..” என்று அவனை ரகு தடுத்து நிறுத்த முயற்சிக்க, அவன் கேட்கவில்லை.
அதன்பின் மதியிடம் திரும்பியவன் “மதி உனக்கு ஓகேவா ரிசிப்ஷன் ரெண்டு வாரத்துல, உன்னால முடியுமா” என்று கேட்டான்.
“நோ ப்ராப்ளம் ரகு. நான் பாத்துக்குறேன்”,
“இல்லன்னா நான் ஏதாவது பிளான் பண்ணி தள்ளி வச்சிடவா?”
“சூட்டிங் இந்த வீக் முடிஞ்சிடும். அப்புறம் எல்லாம் மத்த வேலை தான். ரிசப்ஷன் அன்னைக்கு மட்டும் லீவ் எடுத்துக்க வேண்டியது தான்”
“சரி, என்னோட பென்டிரைவ் குடுங்க” என்று கேட்க, அவனும் அதனை எடுத்து நீட்டினான். அவளும் அவனுடையதை அவள் பையில் இருந்து எடுத்துக் கொடுத்தாள்.
“உங்களுக்கும் ஷூட்டிங் டைம் ஆச்சுல. நீங்க கிளம்புங்க. நானும் கிளம்புறேன்” என்று திரும்பியவள், மீண்டும் அவன் புறம் திரும்பி,
“இந்த பென்ட்ரைவ போட்டு பாத்தீங்களா?” என்று கேட்க,
“சே..சே.. இல்லையே” என்று சமாளிப்பாக கூறினான்.
அவள் அவனை சந்தேகமாக பார்த்துவிட்டு “சரி ஓகே” என்று அங்கிருந்து கிளம்பினாள்.
அவள் சென்றதும் நன்றாகவே சிரித்தவன், “உன்னோட எல்லா சீக்ரெட்ஸையும் நான் எப்படி கண்டுபிடிக்கிறேன்னு பாரு. இப்ப டைம் ஆச்சு. சாயந்திரம் வந்து ஒன்னு ஒன்னா போட்டு பாத்துடறேன்”, என்று கூறிவிட்டு அதே சிரிப்புடன் அங்கிருந்து கிளம்பினான் ரகு.