பாகம்-19(௰௯)

பூபோன்ற கன்னி தேன்

அவள் பேர் சொல்லி

தித்தித்தேன்….அது ஏன் என்று

யோசித்தேன்.. அட நான்

எங்கு சுவாசித்தேன்

காற்றோடு மெளனங்கள்..

இசை வார்க்கின்ற நேரங்கள்..

பசி நீர் தூக்கம் இல்லாமல்..

உயிர் வாழ்கின்ற மாயங்கள்

அலைகடலாய்………………

இருந்த மனம்……..துளி

துளியாய்……….சிதறியதே………. (விழிகளில் அருகினில் வான்ம்- பாடல்).

பாடலில் மூழ்கி இருந்த ரகுவை, “டேய் ரகு, கண்ண தொறந்து பார்த்து தொலைடா” என்று அவனை நன்றாக குலுக்கி சுயநினைவுக்கு மீட்டு வந்தான் ரவி.

அவனிடம் “என்னடா?” என்று எரிச்சலாக ரகு கேட்க,

“என்ன என்னடா?நேத்து எத்தனை தடவை என்கிட்ட சொன்ன காலையில சீக்கிரம் எந்திரீன்னு.  ஆனா நீ விடிஞ்சு பொறுமையா எந்திருச்சு வர.

இத்தனைக்கும் வீட்டு  காம்பவுண்டுக்குள்ள இருக்குற ஆபீஸ்க்கு போறதுக்கு, ‘சீக்கிரம் கிளம்பி வரல, தண்ணில குளிப்பாட்டி தான் எழுப்புவேன்னு’ சொல்லி என்னை பயமுறுத்தி வேகமா கிளம்ப வச்சிட்ட.

எங்க போனாலும் யார் மீட் பண்ணாலும் எப்பயும் டைம்க்கு வந்து நிப்பியேடா.  இன்னைக்கு எட்டு மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய மீட்டிங்க்கு எட்டே காலுக்கு வந்து சேர்ந்திருக்க.

இதுல உன்னை மீட் பண்ணியே ஆகனும்னு சொன்னவேன் மணி  ஒன்பது ஆச்சு இன்னும் காணோம்.  நீ என்னடான்னா.  அதை பத்தி கொஞ்சங்கூட கவலை படாம பாட்டுல மூழ்கிக் கிடக்கிற.

என்னடா நெனச்சிட்டு இருக்குற நீ, 10 மணிக்கு ஷூட்டிங் போகணும்.  ஞாபகம் இருக்கா இல்லையா?”, என்று காலைமில் வேகமாக தன்னை கிளம்ப வைத்த நண்பனிடம் தன் எரிச்சல் மொத்தத்தையும் காண்பித்தான் ரவி.

“கூல் மச்சான் கூல். எதுக்கு இவ்ளோ டென்ஷன்.  பிபி ஏறிட போகுதுடா” என்று அவனிடம் நக்கல் அடித்து கொர்டிருந்தான் அவன்.

“செம கடுப்பாயிடுவேன். இப்ப அவன் நிலவரம் என்ன?”

“ஏண்டா எனக்கு நீதாண்டா அசிஸ்டன்ட்.   நீ தான் அவனுக்கு போன் பண்ணி கேக்கணும். நானா கேட்க முடியும்.  கேளுடா”  என்று அவனிடமே திருப்பிவிட ,

அவனை முறைத்துக் கொண்டே, ரவி மீண்டும் அந்த நபருக்கு அழைக்க, எடுத்தவன், “சார் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவோம் சார்.  கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று போனை வைத்து விட்டான்.

அவன் போனை பட்டென்று வைத்ததும் “டேய் இவங்க நம்மகிட்ட வேணும்னே பண்ற மாதிரி தோணுது” என்றான்.

“விடு மச்சான்.  அவங்க என்ன பண்ணாலும் . ஒன்பதே கால் வரைக்கும் தான் நாம வெயிட் பண்ணுவோம்.  அதுக்கு மேல நாம கிளம்பிடுவோம்.  ஏன்னா நமக்கு ஷுட்டிங் டைம் ஆகுது இல்ல” என்று மீண்டும் பாட்டில் மூழ்கி விட்டான் ரகு.

ரகு எளிதாக கூறிவிட்டு பாட்டில் மூழ்கி விட,  ஆனால் ரவிக்கு தான் ஏதோ தவறாகப்பட்டது.

ஏனெனில் அத்தனை முறை அழைத்து ரகுவுடன் சந்திப்பு நிச்சயம் வேண்டுமென்று கேட்டனர்.

கடைசியாக படத்தின் இறுதி படப்பிடிப்பு காட்சிகள் சென்று கொண்டிருக்கும் இந்நேரத்தில், காலை 8 மணிக்கு மட்டும் தான் நேரம் தர முடியும் என்று அவர்களிடம் உறுதியாக கூறி, இந்த சந்திப்பை உறுதி செய்திருந்தான் ரவி.

ஆனால் அவர்களோ இத்தனை தாமதிப்பது அவனுக்கு நிச்சயம் சரியாக படவில்லை.

“சாரா கார்மெண்ட்ஸ்” தலைமை நிர்வாக அதிகாரி உடனான இந்த சந்திப்பு அவனுக்கு முன்பிருந்தே ஒரு மாதிரி தவறாக தான் தோன்றியது.

ஏனெனில் அந்த கார்மெட்ன்ஸ் எந்த அளவிற்கு இந்தியா முழுக்க பிரபலமோ அதே அளவிற்கு, அதன் CEO ஆன சுகுமாரனும்  மிக பிரபலம்.

முக்கியமாக தலைகனத்துடன் நடந்து கொள்ளும் அவன் குணத்திற்கு.

மற்றவர்களை சிறிது நேரம் காக்க வைத்து அல்லது அவர்கள் அலைய வைத்து காரியம் சாதித்துக் கொள்ளும் சாதாரணமான தலைக்கனம் பிடித்தவர் அல்ல.

தான் நினைத்ததை நடத்திக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்.  அவரின் அந்த நடத்தை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததால் தான்,

அவர் அலுவலகத்தில் இருந்து  பலமுறை வழியுறுத்தியும் அவருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யாமல் இருந்தான் ரவி.

ரகு மற்றவர்களின் அதிகாரத்திற்கு கட்டுப்படுபவன் அல்ல.

அவர் இவனுக்கு பிடிக்காதது போல் ஏதேனும் கூறினால், நிச்சயம் இவனும் அதனை கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டான்.

அவருடன் பிரச்சனை ஏற்படுத்திக் கொள்ளுவான் என்பதனால் தான் அதனை தவிர்த்து வந்தான்.

ரவியின் சிந்தனையை ரகுவின் அலைபேசி இசைத்து தடுத்து நிறுத்தியது.  ரகு அழைப்பை எடுத்து யார் என்று பார்க்க அதிலிருந்த பெயரைக் கண்டதும்,

முகத்தில் இருந்த புன்னகை இன்னும் நன்றாக விரிய, வேகமாக அதை இயக்கி காதில் வைத்தான். எதிர்ப்புறம் பேச ஆரம்பிக்கும் முன்பே,

“சொல்லு மதி”,  என்று வேகமாக கூற, அந்த பக்கம் கூறப்பட்ட செய்தியை கேட்டவன்,

“ஓ அப்படியா?” என்று அங்கிருந்த எதையோ தேட, அவன் கைகளுக்கு ஒரு சிற்றடக்கி கிடைத்தது.

அதனை எடுத்துக்கொண்டு, “ஆமா இந்த ப்ளாக் பென்டிரைவா?”

“……”

“ஓ..நீ எப்படி? நானே வந்து தந்திட்டு போகவா?”

“….”

“ஓகே, நான் உனக்காக வெயிட் பண்றேன். நீ வந்து வாங்கிட்டு போ.  சரி என்ன பண்……..அதுக்குள்ள வச்சுட்டா” என்று கூறிக்கொண்டு அந்த சிற்றடக்கியை பார்த்துக் கொண்டிருந்தான்

ரவி அவனிடம் எதற்கு மதி அழைத்தாள் என்று கேட்க, ரகு அவன் கையில் இருந்த சிற்றடக்கியை காட்டி,

“நேத்து நம்ம சீனியோட பிரண்டு நம்ம கிட்ட அசிஸ்டன்டா சேர வந்தானே.  அவன் ஒரு பென்ட்ரைவ் தந்தான்ல?” என்று கேட்டான்.

“ஆமா, இந்த பென்ட்ரைவ் தான்.  அவன் எடுத்த சாட் ஃபிலிம்ஸ் இருக்கு.  பாருங்கன்னு சொல்லிக் கொடுத்தான். அதுக்கு என்ன டா?”

“இல்ல இது மதியோட பென்டிரைவ். மதியோட பென்ட்ரைவ்வும் அவன் குடுத்ததும்  ஒரே மாதிரி இருக்கவும்.  மதி அவசரமா கிளம்பும்போது மாத்தி எடுத்துட்டு போய்ட்டா.

அங்க போய் போட்டு பார்த்து தான் தெரிஞ்சு இருக்கு.  இந்த பக்கமா ஒரு வேலையா வராலாம்.  அதான் அவளே வந்து வாங்கிட்டு போறேன்னு சொன்னா.

சரி நம்ம ஒரு 9.30 வரைக்கும் வெயிட் பண்ணுவோம். மீட்டிங் வரேன்னு சொன்னவனுக்கு ஒரு பத்து நிமிஷம் எக்ஸ்ட்ரா டைம் கிடைச்சிருக்கு” என்று கூறிக்கொண்டு,

அதனை கீழே வைத்துவிட்டு, மீண்டும் பாட்டில் மூழ்கும் நேரம், மீண்டும் அலை பேசி அழைத்தது.

அலைபேசியின் தொடுதுறையை பார்த்த ரகுவிற்கு இப்போது புன்னகையுடன் யோசனையும் வந்தது.

அதனை இயக்கி காதில் வைத்தவன், “சொல்லு ஜீவா இப்பதானே பேசின.  கிளாசுக்கு போகலையா?” என்று கேட்க,

“பஸ்ட் பீரியட் கேன்சல் ஆகிடுச்சு அத்து‌.  அதனாலதான் அக்கா கிட்ட பேசிட்டு இருந்தேன்.  அப்பதான் அக்கா சொன்னா, அவ பென்டிரைவ் உங்ககிட்ட மாத்தி கொடுத்துட்டு வந்துட்டாலாமே.

ஆக்ச்சுவலா அது என்னோட பென்ட்ரைவ்.  அதை நான் கல்யாணத்துக்கு வந்தபோ விட்டுட்டு வந்துட்டேன்.  அக்கா ஏதோ அவசர வேளைக்கு அதை யூஸ் பண்ணிருக்கா. இப்ப மாத்தி வச்சிட்டு போய்ட்டா.

அதை நீங்க ஓபன் பணண்னும். அதுல உங்களுக்காகவே ஒரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு. என்ன தெரியுமா?

“cloud’s atrocities”ன்னு ஒரு தனி ஃபோல்டர் போட்டு, நிறைய வீடியோஸ் அதுல சேவ் பண்ணி வச்சிருக்கேன்.

அதை எடுத்து பொறுமையா ஒன்னு ஒன்னா பாருங்க.  அவ்வளவு இருக்கு ஒருநாள்ல உங்களால பார்க்க முடியாது.

அத சொல்ல தான் கால் பண்ணேன். சரி எனக்கு நெக்ஸ்ட் கிளாஸ் ஸ்டார்ட் ஆயிடும், அப்புறம் பேசுறேன் பாய்” என்று படப்படவென பட்டாசாக பேசிவிட்டு வைத்தாள் ஜீவா.

அலைப்பேசியை கீழே வைத்த ரகு, எதை பற்றியும் யோசிக்காமல் சட்டென்று தன் மடிக்கணிணியை இயக்கி, அதில் அந்த சிற்றடக்கியை சொருகி, அவள் கூறிய cloud’s atrocities கோப்புறையைத் தேடினான்.

அதில் இருந்த காணொளிகளின் நகலை தன் மடிக்கணினியில் சேகரிக்க ஆரம்பித்தான்.

பொதுவாக ஜீவாவுக்கு ஒரு பழக்கம் இருந்தது. அவள் குடும்ப நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்று விடாமல் அலைபேசியில் காணொளியாக பதிவு செய்து கொள்வாள்.

அதனை தன் சிற்றடக்கியில் சேகரித்து வைத்துக் கொள்ளுவாள்.

முக்கியமாக தன் அக்காள்கள் செய்யும் சேட்டைகள் குறும்புகள் என்று அனைத்தையும் ஒன்று விடாமல் காணொளியாக பதிவு செய்து, அதனை தனித்தனி கோப்புரைகளில் வைத்திருந்தாள்.

அதில் இருக்கும் மதியின் கோப்புரையை தான் பார்க்குமாறு ரகுவிற்கு வலியுறுத்தினாள்.

பிறந்தநாள் போன்ற சிறப்பு நாட்கள் வரும்போது அந்த காணொளிகளை குடும்பமாக அனைவருக்கும் போட்டு காண்பிப்பதை வழக்கமாக வைத்திருந்தாள்.

ஆனால் அவள் மொத்தமாக வைத்திருக்கும் எந்த காணொளியையும் இதுவரை குடும்பத்தில் இருக்கும் மற்ற நபர்களிடம் கூட காண்பித்தது கிடையாது.

அந்த சிற்றடக்கியை எப்போதும் தன்னுடன் தான் வைத்திருப்பாள்.   திருமணத்திற்கு இங்கு வந்தபோது இங்கேயே வைத்துவிட்டு சென்றுவிட, அதனை தன் அக்காவிடம் சொல்லி எடுத்து வைக்க சொல்லி இருந்தாள்.

இப்போது அது ரகுவிடம் இருக்கிறது என்று தெரிந்ததும், தன் அக்கா செய்த குறும்புகள் அனைத்தையும் தன் அத்துவுக்கு தெரியப்படுத்தி விடவேண்டும் என்று எண்ணியே இந்த அழைப்பு.

ரகு மடிக்கணினியில் தனக்கு தேவையான அனைத்தையும் சேமித்துவிட்டு நிமிர,  ரவி தன்  அலைபேசியில் ஏதோ பேசிக் கொண்டிருந்தவன் அதனை நிறுத்திவிட்டு ரகுவிடம், “சுகுமாரன் வந்தாச்சு”, என்றான்.

ரவி எழுந்து சென்று கதவின் அருகே நிற்கும் சில நொடிகளில் சுகுமாரன் உள்ளே நுழைந்தார்.

ரவி அவரிடம் “வெல்கம் சார்” என்று வரவேற்றபோது, அலட்சியமாக ஒரு பார்வை அவனை பார்த்துவிட்டு உள்ளே நடந்து வந்தார்.

ரகு அவருடைய அலட்சிய பாவத்தை பார்த்துக் கொண்டே, தான் அமர்ந்திருந்த அந்த நீள் இருக்கையிலிருந்து மெதுவாக எழுந்து அவரை வரவேற்கும் விதமாக,  “ஹலோ சார்”, என்று கூற,

அவரும் “ஹலோ ரகு” என்று கூறிவிட்டு அவர்கள் அவரை அமர சொல்லும் முன்பாகவே தானே அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

சுகுமார் ஐம்பதுகளின் தொடக்கத்தில் இருப்பவர்.  சாரா கார்மெட்ன்ஸ்ன் தலைமை நிர்வாகியாக பணிபுரியும் இவர், அதன் சேர்மன் சாரா தேவியின் கணவர்.

சாராதேவி தன் தந்தைக்கு ஒற்றைப் பெண் வாரிசு.  அவருடைய சாரா கார்மெண்ட்ஸ் மொத்தமும் சாராதேவிக்கு உரியதாக,  அவரை காதல் திருமணம் செய்து கொண்ட சுகுமாருக்கு அதனை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.

சாரா கார்மெண்ட்ஸ் இவர்கள் முதன்மைத் தொழிலாக இருந்தாலும் தரண் குழுமம் போல இவர்களும் பல தொழில்களை கொண்ட ஒரு பெரும்புள்ளி தான்.

பொறுப்பு சுகுமார் கையில் இருந்த போதும் இன்னும் அது அனைத்திற்கும் உரிமையானவர் சாரா தேவி தான்.

சாராதேவி தொழிலில் சிறு சிறு தவறுகள் நடந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வார். அது சட்டத்திற்கு புறமானதாக இருந்தாலும் பெரிய அளவில் மற்றவர்களுக்கு பாதிப்பு அளிக்காது எனும் போது அதில் தலையிட மாட்டார்.

அதேசமயம் அவர் அளவுகோலைத் தாண்டி செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பும் அவரிடமிருந்து கிடைத்ததில்லை.

முக்கியமாக துரோகம் செய்பவர்கள் இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் காணமல் போய்விடுவர்.

அப்படிப்பட்ட சாராதேவியின் கணவரான சுகுமார், தன்னுடைய தலைகனத்தினாலேயே பல தவறுகளை செய்து வைத்திருக்கிறார்.

அது எதுவும் தன் மனைவியின் காதுக்கு செல்லாமல் பார்த்துக் கொண்டும் இதுவரை வந்திருக்கிறார்.

அது மட்டும் இன்றி தன் மனைவிக்கு தெரியாமல் ஒரு பெரிய ரகசியத்தையும் ஒழித்து வைத்திருக்கிறார். அது வெளிவரும்போது சுகுமாரின் நிலை நிச்சயம் சொல்வதற்கு இல்லை.

அதிலும் குறிப்பாக சுகுமார் தன் எதிரிகளின் பலவீனத்தை பயன்படுத்தி அவர்களை தாக்குவதில் மிகுந்த வல்லவராக இருந்தார்.

ஆனால் அவருடைய பலவீனம் மற்றவர்களுக்கு தெரியும் போது, அவர் நிலை என்ன ஆகும் என்பதை அறியாமல் போய்விட்டார்

பணம் கொடுத்த போதையில் தலைகனத்தோடு சுற்றி திரிந்தவரை, இங்கு ஒரு ஆள் அடக்கப்போவது அறியாமல் தெனாவட்டாக அமர்ந்திருந்தார்.

அறையை சுற்றி பார்த்த சுகுமார் “என்ன ரகு ஆபிஸ் ரூம்ம ஆபிஸ் ரூம் மாதிரி வச்சுக்கிற பழக்கம் உங்களுக்கு இல்ல போலயே?” என்று கேட்டார்.

ரகுவின் அலுவலக அறை, மற்ற அலுவலக அறைகள் போல சாதாரணமாக மேஜை, நாற்காலி என்று இல்லாமல்,  வட்டமாக சாய்வு இருக்கைகள் சூழ,  அதற்கு நடுவில் கண்ணாடியில் ஆன ஒரு தேநீர் மேஜை என வடிவமைக்கப் பட்டிருந்தது

அவர் கேள்விக்கு ரகு, “எனக்கு என் ஆபிஸ் இப்படி இருக்கிறது தான் பிடிக்கும்” என்று  கூறிவிட்டு, திரும்பி ரவியை பார்க்க, அவன் மெதுவாக நடந்து ரகுவின் அருகே வந்து அமர்ந்து கொண்டான்.

 அவன் தனக்கு மிகவும் முக்கியமானவன்.  அவனை அலட்சியமாக நடத்த கூடாது என சொல்லாமல் சொல்லியது அந்த செய்கை.

அதனை சுகுமார் உருத்து விழித்து விட்டு, ரகுவிடம், “என்ன ரகு? உங்க ஸ்கெட்யூல் எல்லாம் ரொம்ப டைட்டா இருக்கு போல.   கொஞ்ச நேரம் ஒரு மீட்டிங் கூட அரேஞ்ச் பண்ண முடியாதின்றாரு உங்க பிஏ” என்று கூற,

” ரவி என்னோட பிஏ மட்டும் இல்ல சார்.  என் ஃப்ரெண்டும் கூட.  அவனுக்கு என்ன ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்றதில விருப்பம் இருக்காது.

அண்ட் ஷூட்டிங் முடியற கட்டத்தில இருக்கிறதால ஷெட்யூல் ரொம்ப டைட்டா இருந்தது. அதனாலதான்  உங்களுக்கு என்னால அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்க முடியல.

இருந்தும் இன்னைக்கு நான் உங்களுக்கு எட்டு மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து இருக்கேன்” என்று நேரத்தோடு கூறி, நேரம் தவறி நீ வந்திருக்கிறாய் என சுட்டிக்காட்டினான்.

“நீங்க எட்டு மணிக்கு சொல்லிட்டீங்க ரகு. ஆனா எனக்கு நேரம் இருக்கணும் இல்ல.  ஆக்சுவலா உங்கள நான் 11 மணிக்கு தான் மீட் பண்ணலாம்னு நினைச்சேன்.

ஆனா உங்க ஆபீஸ் தாண்டி எனக்கு பத்து மணிக்கு ஒரு மீட்டிங் இருந்துச்சு.  அதனால தான் ஒன்பது மணிக்கு உங்ககிட்ட மீட்டிங் முடிச்சிட்டு கிளம்பலாம்னு வந்தேன்.

சரி நான் வந்த விஷயத்தை சொல்றேன்.  சாரா கார்மெண்ட்ஸ் புதுசா ஒரு புரொடியூக்சன் கம்பெனி ஓபன் பண்ண போறோம்.

அதில முதல் படம் நீங்கதான் பண்ணனும்னு என் வைஃப் விருப்ப படுறாங்க.  அதுக்காக செக் குடுக்க தான் வந்தேன்”,  என்று கூறி தன் உதவியாளரிடம் இருந்து ஒரு காசோளையை வாங்கி,

“இதுல உங்க படத்துக்கு நீங்க எவ்ளோ பணம் வாங்குவீங்களோ அதை ஃபில் பண்ணிக்கோங்க.  அப்புறம் இந்த ஷூட்டிங் முடிஞ்சதுன்னு சொன்னீங்க இல்ல.

இந்த படத்தோட மொத்த வேலையும் முடிஞ்சதும்,  பூஜை போடுவதற்கு தயாராயிடலாம்.

பூஜை என்னைக்கின்னு என் வைஃப் சொல்லுவாங்க. அப்புறம் ப்ரொடக்ஷன் கம்பெனியோட ஓப்பனிங்க்கும் நீங்க வர வேண்டி இருக்கும்.

உங்களையும் இன்வைட் பண்றோம் வந்துடுங்க. சரி என் வேலை முடிஞ்சுது.  நான் கிளம்புறேன்” என்று அவர் கிளம்ப எத்தனிக்க,

ரகு அவரை தடுத்து நிறுத்தி, “ஒரு நிமிஷம் சுகுமார் சார்.   நான் உங்களுக்கு ஓகேவா சொல்லலையே.

எனக்கு அடுத்த ரெண்டு படம் கையில இருக்கு.  என்ன நம்பி ரெண்டு ப்ரொடியூசர்ஸ் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.

அவங்களுக்கான படத்தை முடிச்சு கொடுத்ததுக்கு அப்புறம் தான் அடுத்த படத்தை பத்தி யோசிக்க முடியும்.

நீங்க படம் பத்தி பேசறதா இருந்தா உங்க கிட்ட ரவி ஆல்ரெடி நோ சொல்லிருப்பான்.  ஐ அம் சோ சாரி.  உங்க முதல் படத்துக்கான ஆஃபரை நீங்க வேற ஏதாவது நல்ல டைரக்டர்க்கு குடுங்களேன்” என்று கூறினான்.

“ரகு உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும் அதை மட்டும் சொல்லுங்க சுத்தி வளச்சு பேசாதீங்க” என்று சுகுமார் கூற,

இப்போது ரகுவின் பார்வையில் அலட்சியம் வந்திருந்தது.

“சுகுமார் சார்,  உங்க முதல் படம் நான் பண்ணல.  நான்தான் பண்ணனும்னு உங்க வைஃப் ரொம்ப விரும்புனாங்கன்னா.

என்னோட அடுத்த ரெண்டு படம் முடிச்சு கொடுத்ததுக்கு அப்புறம் தான் பண்ண முடியும்னு உங்க வைஃப் கிட்ட சொல்லிடுங்க”,

மீண்டும் அவர் ஏதோ கூற வர,  “எனக்கு டைம் ஆச்சு” என்று கைக்கடிகாரத்தை திருப்பி பார்த்துவிட்டு அவரை நிமிர்ந்து பார்க்க, அவர் உக்கிரமாக அவனை பார்த்திருந்தார்.

அடுத்த சில நொடிகளிலேயே தன்னை நிலைப்படுத்திக் கொண்ட சுகுமார்,  ரகுவிடம், “ரகு உங்க நிலைமை எனக்கு நல்லாவே தெரியும். இந்த தரன் குழுமம் முழுக்க உங்க அப்பா சம்பாதிச்ச சொத்து.  அவரு உங்க அம்மா மேல வச்ச காதல் பத்தியும் நான் நிறைய கேள்விப்பட்டிருக்கேன்.

அதனால கண்டிப்பா அந்த சொத்தை எல்லாம் அவர் மனைவி பேர்ல தான் எழுதி வச்சிருப்பாரு.  அம்மாவுக்கும் உங்களுக்கும் நடுவுல வேற உறவு சரியில்ல.

அதனால கண்டிப்பா அவங்க உங்களுக்கு  எந்த சொத்தும்  குடுக்க போறது கிடையாது.   அதனாலதான இன்னைக்கு வரைக்கும் உங்க அண்ணன் இந்த நிர்வாகத்தை பார்க்க கொடுத்திருக்காங்க.

அப்படி இருக்கும்போது நீங்க ஃபிலிம் இண்டஸ்ட்ரில தான் நிறைய சம்பாதிக்க முடியும்னு இதை சூஸ் பண்ணி இருக்கீங்கன்னு கூட எனக்கு தெரியும்.

இருந்தாலும் என்னை மாதிரி ப்ரொடியூசர நீங்க பகைச்சிக்கிட்டீங்கன்னா அப்புறம் உங்க நிலைமை ரொம்ப மோசமாகிவிடும்.

ஊர் முன்னாடி உங்களோட ஸ்டேட்டஸ நீங்க பாதுகாத்துக்க முடியாம போயிடும். அதனால யோசிச்சு சொல்லுங்க” என்று தனக்கு தெரிந்த சிலவற்றை வைத்து கொண்டு தானாக ஒரு கதை புனைந்து கூறினார்.

கூறி முடித்து ரகுவை பார்த்தவர், அவன் முகத்தில் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் போக,  அடுத்து என்ன என்று யோசிக்க ஆரம்பித்தார்.

அவரின் பழக்கமே அதுதானே தங்கள் எதிரில் இருப்பவர்களின் பலவீனத்தை பயன்படுத்தி அவர்களை வீழ்த்துவது.

ரகுவிற்கு அவன் குடும்பம் தான் பலவீனம் என்று எப்படியோ அறிந்து கொண்டு, அவனுக்கு குடும்பம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பது போல் பேசிக்கொண்டிருந்தார்.

ஆனால் உண்மையில் அவருக்கு தெரியாத ரகசியங்களும் இன்னும் இருக்கிறது என்பது அவருக்கு புரியவில்லை.  அவன் குடும்பத்தை பற்றியும் அவர் முழுதாக அறியவில்லை.

“என்ன ரகு? என்ன முடிவு பண்ணி இருக்கீங்க?” என்று மீண்டும் அவர் கேட்க, ரவி பொறுமை இழந்து பேச எத்தனித்தான்.

“உங்க பணத்தால ரகுநந்தனோட ஸ்டேட்டஸ உருவாக்கவோ உடைக்கவோ முடியாது, மிஸ்டர் சுகுமார்”

என்று கூறியது ரவி அல்ல, மதி.

அந்த அறையில் இருந்த அனைவரும் வாசல் பக்கமாக பார்க்க, அங்கு மதி நின்று கொண்டிருந்தாள்.

சுகுமாரனை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தவள்,  நேராக நடந்து வந்து ரகுவின் மறுபறம் கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாக அமர்ந்துக் கொண்டாள்.

தன் குரல் கேட்டதில் இருந்து, முகத்தில் தானாக ஒட்டிக்கொண்ட புன்னகையுடன், தன்னை பார்த்துக் கொண்டு இருந்த கணவனை திரும்பி பார்த்து ஒரு புன்னகை புரிந்தவள்,

சுகுமாரிடம் திரும்பி, “சொல்லுங்க மிஸ்டர் சுகுமார். ஏதோ ஸ்டேட்டஸ ஒன்னுமில்லாம பண்ணிடுவேன்னு சொன்னீங்களே? என்ன பண்ணுவீங்க. சொல்லுங்க கேட்போம்”, என்று சுவாரசியமாக பேச்சை ஆரம்பித்தாள்.

காவல் புரிவா (ள்)ன்…..

மகா ஆனந்த் ✨