மெய் வழியே மெய் இன்பம் காண மெய்மையாய் மையல் கொண்டான் என் காதலன்… அவனே என் கனவின் காவலன்…”. (சொந்த கவிதை பிடித்தவர்கள் Comment sectionல் தெரிவிக்கவும்- மகா ஆனந்த்)
மதி, தன் தலை வரைப் போர்த்தி இருந்த போர்வையை மெதுவாக விலக்கி எட்டிப் பார்த்தாள்.
ரகு அசையாது ஒரே இடத்தில் நின்று அவளையே பார்த்துக் கொண்டு இருப்பது தெரிய
அவனிடம், “இங்க வாங்க” என்று மெல்லிய குரலில் கூறினாள். அவனும் வேகமாக அவள் அருகே வந்து நின்றான்.
மீண்டும் “இங்க வாங்க” என்று மெத்தையின் மறுபுறத்தை காட்ட, கட்டிலின் மறுபுறம் சென்று அவள் அருகே படுத்துக்கொண்டான்.
அவன் அருகே வந்து படுத்ததும், தான் போர்த்தி இருந்த போர்வையை அவனுக்கும் சேர்த்து தலை வரைப் போர்த்தி விட்டாள் மதி.
இப்போது இருவரும் போர்வைக்கு அடியே, ஒருவரை ஒருவர் பார்த்தபடி மௌன மொழி பேசிக் கொண்டு இருந்தனர். இருவரின் மனமும் கை விரல்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கிடந்தது.
சில நொடி மௌனங்களுக்கு பிறகு மதி பேச ஆரம்பித்தாள், “ரகு நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்”
“சொல்லு”.
“கல்யாணத்துக்கு முன்னாடி நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொன்னேன்ல. கல்யாணம் ஆனாலும் என் தங்கச்சிங்கல நான் பாத்துப்பேன். அதில் நீங்க தலையிடக்கூடாதுன்னு.
பட் இப்ப என்ன தோணுது தெரியுமா? நான் இல்லன்னா கூட என் தங்கச்சிங்கல நீங்க நல்லா பாத்துப்பீங்கன்னு தோணுது” என்று அவள் கூற, ரகு புன்னகையோடு அவளை பார்த்துக் கொண்டிருந்தவன், அதே புன்னகையோடு,
“கண்டிப்பா நீ இல்லனா, நான் அவங்களை பார்த்துக்க மாட்டேன்” என்றான்.
அவன் விளையாட்டுக்காக தான் கூறுகிறான் என்ற எண்ணத்தில் மதி அவனை செல்லமாக கிள்ளிவிட்டு, “ஏன்?” என்று கோபம் போல் கேட்க,
“நான் சீரியஸா தான் சொல்றேன். நெஜமாவே நீ இல்லன்னா அவங்கள நான் பாத்துக்க மாட்டேன். ஏன் தெரியுமா நீ இல்லன்னா நானும் இருக்க மாட்டேன். அப்புறம் எப்படி நான் பார்த்துக்க முடியும்”, என்று கூறினான்.
அதைக்கேட்ட மதி, “டைரக்டர் சார் உங்க ஹீரோக்கு டயலாக் எழுதுற மாதிரி என்கிட்ட பேசக்கூடாது” என்று வேகமாகவும் கோபமாகவும் கூறினாள்.
“அச்சச்சோ ரகு பையனுக்கு கோபம் வந்துருச்சா? சரி.. சரி.. சமாதானம் ஆகிடலாம். நானும் அப்படி பேசமாட்டேன் நீயும் பேசப்படாது.. ஓகேவா?” என்று அவனை செல்லம் கொஞ்ச,
அதற்கு மேல் அந்த கணவனவனுக்கு எங்கே கோபம் இருக்கப் போகிறது. நான் சமாதானம் ஆகி விட்டேன் என்பதை அவள் கை விரல்களில் மென்மையாக முத்தமிட்டு காண்பித்தான்.
மீண்டும் சில நிமிடங்கள் அங்கு மௌன மொழி தொடர, அவன் முகத்தை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்த மதி, ஏதோ நினைவு தோன்ற மெதுமெதுவாக புன்னகை மறைய, முகத்தில் சோகத்தை அப்பிக் கொண்டாள்.
அவள் முகத்தில் மெல்லியதாய் மாற்றம் தோன்றும் போதே கண்டு கொண்டவன், அவளை பார்த்த வண்ணமே இருந்தான். முகம் முழுதும் சோகம் அப்பிக் கொண்டதும் அவளிடம்,
“என்னாச்சு மதி?”என்று மென்மையாக கேட்டான். அவள் அவனுக்கு எந்த பதிலும் அளிக்காமல், இணைந்த கைகளை சற்றும் விலக்கிடாமல் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.
அவள் என்ன நினைக்கிறாள் என்று அறியாத போதும், அவளுக்கு தற்போது தான்தான் தேவை என உணர்ந்து கொண்ட ரகு, மெல்ல அவளை தன் தோளோடு அணைத்துக்கொண்டு இன்னொரு கையால் அவளுடைய முடியை கொதிய வண்ணம் இருந்தான்.
இத்தனைக்கும் இடையிலும் தாங்கள் போர்த்தி இருந்த போர்வையை மட்டும் விலக்காமல், அதன் உள்ளேயே இருவரும் தங்களை ஒளித்துக் கொண்டு இருந்தனர்.
மதி “ரகு” என்று கூப்பிட, அவன், “ம்ம்” என்று மட்டும் கூறினான். அவள் மனதில் இருப்பதை பேசட்டும் என்ற எண்ணத்தில் வேறு எதுவும் பேசாமல் அவள் கூறுவதை கேட்க தயாரானான்.
“ரகு என் மனசுல ஒரு ரகசியம் இருக்கு. அதை சொல்லக்கூடாதுனுலா இல்ல. என்னால சொல்ல முடியல. முத என் தங்கச்சிங்க கிட்ட இதை மறச்சேன். இப்போ உங்ககிட்ட இருந்து மறைக்கிறேன்.
இதில இருந்து நான் மீண்டு வந்துவிடுவேன்னு நம்பிக்கை எனக்கு இருக்கு. ஆனா அந்த நம்பிக்கை இப்ப கொஞ்ச காலமா கொறஞ்சிட்டே வருது. என்னைக்கு அந்த நம்பிக்கை மொத்தமா என்னை விட்டுப் போகுதோ அன்னைக்கு உங்ககிட்ட சொல்லிடுறேன்.
நீங்க தான் என்னை அதுல இருந்து மீட்டுக் கொடுக்கணும். அதுவரைக்கும் என்கிட்ட எதுவும் கேட்கக்கூடாது. சரியா?” என்று அவன் முகம் பார்த்தாள்.
அவனும், “சரி.. ஆனா உன்கிட்ட நான் எப்பவும் சொல்ற விஷயம் தான் இப்பவும் சொல்றேன் கேட்டுக்கோ. உன் உயிர் எனக்கு சொந்தமானது. அதுல எந்த ரிஸ்க்கும் நீ எடுக்க கூடாது” என்று கண்டிப்பான குரலில் கூறினான்.
அவள் அதற்கு எதுவும் கூறாமல் தன் இன்னொரு கையை அவன் கழுத்தில் போட்டு கொண்டு மீண்டும் அவன் தோள் சாய்ந்து கண்டாள்.
“நீ பதில் சொல்லாததுலேயே எனக்கு புரியுது மதி. ஏதோ பெருசா இருக்குன்னு. ஆனா அது என்னன்னு உன்கிட்ட நானா கேட்க மாட்டேன். அதை தேடியும் நானா போக மாட்டேன். ஆனால் அதுவா எனக்கு தெரிய வந்ததுனா உன்கிட்ட வந்து தான் கேட்பேன். நீ அப்ப சொல்லித்தான் ஆகனும்” என்று ரகு பேச பேச மதி கண்கள் கலங்கினாள்.
மேலே போட்டிருந்த இரவு ஆடையைத் தாண்டி அவன் நெஞ்சில் அவள் கண்ணீர் சுட, உடனே அவளை நிமிர்த்தி அவள் கண்ணீரை துடைத்து விட்டவன், “எதுக்கு அழற? எதுனாலும் என்கிட்ட சொல்லு. சரியா? இப்படி உனக்குள்ளேயே வச்சுக்கணும்னு எந்த அவசியமும் கிடையாது”
அவன் கண்ணீரை துடைத்து விட்டதுமே தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள், அவனை நேராக பார்த்து புன்னகையுடன், “நீ என்னை லவ் பண்றியா ரகு?” என்று கேட்டாள்.
அவள் முகத்தில் தோன்றிய புன்னகையில் மகிழ்ச்சி அடைந்தவன், “இப்போ இங்க இந்த போர்வைக்குள்ள என்னை ப்ரொபோஸ் பண்ண சொல்றியா?”, என்று அவனும் அதே புன்னகையுடன் கேட்டான்.
அவன் அப்படி கூறியதும் அவனைப் பார்த்து இன்னும் நன்றாக சிரித்தவள், சில நொடிகள் மௌனமாய் அவனைப் பார்த்துக் கொண்டே சிறிதும் தயக்கம் இன்றி தன் மனதை கூறிவிட்டாள்.
“ஐ லவ் யூ ரகு”
அவள் வார்த்தைகளில் இருந்த ஆழம், அவனை எதுவும் பேசவிடாமல் செய்ய, அவள் கண்கள் இரண்டையும் பார்த்த வண்ணம் மெய் மறந்த நிலையில் இருந்தான்.
அவன் இதயத்துடிப்பு தன் முன்னே இருப்பவளுக்கே கேட்கும் வண்ணம் வேகமாக துடிப்பதை அவனால் உணர முடிந்தது. மதி அவன் நிலையை புரிந்து கொண்டவள், அவனை சற்று நிலைப்படுத்துவதற்காக அவனிடம்,
“என்ன ஐ லவ் யூ சொன்னா திருப்பி சொல்ல மாட்டியா?, என்று விளையாட்டாக பேச முயற்சித்தாள். ஆனால் அவளால் அது முடியாமல் போனது. அவன் தன் பார்வையை மாற்றாது அவளிடமே வைத்திருக்கவும் அவளுக்குள் வெட்கப் பூக்கள். கண் மூடி மெத்தையில் கவிழ்ந்து விட்டாள்.
ரகு இன்னும் தன் நிலை மாறாதவன், அவள் தலை கவிழ்ந்ததும் மல்லாக்க படுத்து கொண்டு, தன் நெஞ்சின் மேல் கை வைத்து மெதுவாக தடவி கொடுக்க ஆரம்பித்தான்.
மெல்ல தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், அவள் புறம் திரும்ப அவள் கவிழ்ந்த தலை நிமிராமல் அப்படியே இருந்தாள்.
அவளைப் பார்த்தவன், அவளை தன் அருகில் இழுத்து மீண்டும் தன் நெஞ்சின் மேல் போட்டு கொண்டான்.
சற்று நேரம் மீண்டும் அங்கு ஒரு அமைதி நிலவ, மதி இப்போது,
“ரகு எனக்கு எல்லாத்தையும் மறக்கணும். என்ன நானே மறக்கணும். மறக்க வைங்க” என்றாள்.
அவள் கூறுவதன் அர்த்தம் புரிந்ததும் அவனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
உண்மையில் அவனும் மனிதன் தானே எத்தனை இன்ப அதிர்ச்சியைதான் ஒரே நேரத்தில் தாங்குவது,
அவளை வேகமாக விலக்கி, “இப்ப நீ என்ன சொன்ன?” என்று கேட்டான். அவள் மிகவும் பொறுமையாக அவனைப் பார்த்துக் கொண்டே,
“நிஜமா தான். எனக்கு என்னை மறக்கணும் ரகு. உங்களுக்கு நான் சொன்னதுக்கான அர்த்தம் புரியும்” என்று கூற, அவள் முகத்தில் இருந்த ஒவ்வொரு உணர்வையும் உன்னிப்பாக கவனித்தவனுக்கு என்ன புரிந்ததோ,
“மறக்க வைக்கணும். அவ்வளவுதானே” என்று நெற்றியில் முத்தம் இட்டு அவர்கள் சங்கமத்திற்கான முதல் சந்தத்தை மீட்டினான்.
சந்தத்தின் இசை இதழில் தொடங்கிய நேரம் தன்னை மறக்க கேட்டவள், அவனுக்குள் தன்னைத் தொலைக்கத் தொடங்கினாள்.
——————————————-
“அடியே சக்தி இப்ப நீ வரப் போறியா இல்லையா? அப்படி என்னடி பண்ணுவ இவ்வளவு நேரம்? சாப்பிட வாடி. உன்னால நானும் முத்தம்மாவும் சாப்பிடாம இருக்கோம்” என்று ஜீவா கோவமாக சக்தியை உணவு உண்ண அழைத்துக் கொண்டிருந்தாள்.
சக்தி தன் மடிக்கணினியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தவள், இதற்கு மேல் இவள் பொறுக்க மாட்டாள் என்று உடனடியாக அதனை மூடி வைத்து, அறையில் இருந்து வெளியேறி உணவு மேஜைக்கு வந்து அமர்ந்தாள்.
“ஏய் ஜீவா முத்தம்மாவை சாப்பிட வச்சுட்டு நீயும் சாப்பிட வேண்டியது தான. எதுக்குடி என்னை போட்டு இந்த பாடு படுத்துற?” என்று சக்தி அவளிடம் குறைபட, அதற்கு ஜீவா,
“இந்த முத்தம்மா அப்படியே நான் சொன்ன உடனே கேட்டு சாப்பிட்றிவாங்க பாரு. முத்தம்மா இருக்காங்களே ஒரு ஆள் சாப்பிடலைனாலும் சாப்பிடாம உக்காந்துட்டு இருக்காங்க.
ஏண்டி நீதான் வேகமா வந்து சாப்டா என்ன? டாக்டருக்கு படிக்கிறவ நீயே இப்டி பண்ணா என்ன அர்த்தம். இனிமே தயவு செய்து சாப்பிட்டு போய் என்னனாலும் பண்ணு” என்று படப் படப்பாகப் பேசி முடித்தாள்.