“டேய் ரகு, நானும் உன்னை ரொம்ப நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன். நீ காது கேட்காம உக்காந்துட்டு இருக்க என்ன பண்ணிட்டு இருக்க?” என்ன தேவி சற்று சத்தமாக கூப்பிட, ரகு அப்போது தான் தன் கவனத்தை தன் சித்தியின் புறம் திருப்பினான்.
“என்ன சித்தி?” என ரகு கேட்க, “என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கு தான் வேலை முடிச்சிட்டு வந்து ஹால்ல உக்காந்து இருக்க. அப்பவும் ஏன் ஃபோனையே பாத்துட்டு இருக்க அப்படி என்ன தான்டா பண்ணிட்டு இருக்க?” என மீண்டும் தேவி கேள்வி எழுப்பினார்.
ரகு தன் வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு வீடு திரும்பியவன். வந்ததில் இருந்து உடைமாற்றவோ தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளவோ கூட தன் அறைக்கு செல்லாமல், அந்த வரவேற்பறையிலேயே அமர்ந்து தன்னுடைய மனைவிக்கு குறுந்தகவல் அனுப்பிய வண்ணம் இருந்தான்.
ரகுவை வரவேற்பறையில் கண்ட தேவிக்கு சற்று ஆச்சரியமாக இருக்க அவன் அருகே வந்த அமர்ந்தவர், அவன் கவனம் தன் தொலைபேசியிலேயே இருக்க, ஏதோ முக்கியமான வேலையின் இருக்கிறான் என எண்ணி அமைதியாக இருந்தார்.
ஆனால் கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகியும் அவன் தன் கவனத்தை அவர் புறம் திருப்பாமலே இருக்க, சற்று கோபமான தேவி அவனை இரண்டு மூன்று முறை அழைத்துப் பார்த்தார். இருப்பினும் அவன் அவர் புறம் திரும்பாமலே இருக்க சற்று கத்தி அழைத்த பின் தான் அவன் கவனம் இவர் புறம் திரும்பியிருந்தது.
அவர், அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என கேட்க அதற்கு “என் பொண்டாட்டிக்கு மெசேஜ் பண்ணிட்டு இருக்கேன் சித்தி. கொஞ்ச நேரம் அமைதியா இருங்க” என கூறிவிட்டு, மீண்டும் தன் வேலையில் கவனமாக, அதற்கு தேவி, “என்ன மெசேஜ் செய்றியா?அவ ஸ்கூட்டில வந்துட்டு இருப்பாடா. உன் மெசேஜ்க்கு எப்படி ரிப்ளை பண்ணுவா?” என்றார்.
சட்டென்று அவர் புறம் திரும்பி, “ஆமா அவ வண்டியில வரான்னு உங்களுக்கு எப்படி தெரியும்” என்று கேட்டான்.
“அதுவா, நான் தினமும் ஆறு மணி ஆயிடிச்சினாலே அவளுக்கு போன் பண்ணி எப்ப வருவா என்னன்னு கேட்பேன். இன்னைக்கு பண்ணும் போது அவ, நான் சிட்டில இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கேன். இப்பதான் வண்டி எடுத்து கிளம்புறேன். வரதுக்கு ஒரு மணி நேரம் ஆகும்ன்னு சொன்னா”, என்றார்.
அதற்கும் அவன் “ஓ” என்று கூறிட உடனே தேவி,
“ஆமா அவ ஏன் உன்மேல காண்டில இருக்கா?” என்று கேட்க,
“அது எதுக்கு உங்களுக்கு? அது என் பொண்டாட்டிக்கு எனக்கும் நடுவுல இருக்க விஷயம் அதெல்லாம் கேட்க கூடாது” என்று அலட்சியமாக பதில் கூறினான்.
“நீ சொல்லலன்னா போடா. நான் மதி குட்டி கிட்ட கேட்டுக்குறேன்”
“ஓஹோ…அவ உங்ககிட்ட சொல்லிடுவாளா? அவ்வளவு நம்பிக்கையா?”
“என்கிட்டேயே சவாலா? சரி நான் கேட்கிறேன் அவ சொல்லுவா நீ பாக்கிற. சவால்”
“ம்ம்ம்”
இருவரும் தங்கள் கட்டைவிரலை தூக்கிக் காட்டி கொண்டனர்.
மதியின் வருகைக்காக இருவரும் வரவேற்பறையில் காத்திருக்க அடுத்த 10 நிமிட இடைவேளையில் மதி அங்கு வந்து சேர்ந்தாள்.
அவள் இருவருக்கும் பொதுவாக ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு உள்ளே செல்ல எத்தனிக்க, தேவி அவளை பக்கத்தில் அழைத்து, அன்றைக்கு வேலை எப்படி போனது என பொதுவாக கேட்டுக் கொண்டிருந்தார்.
எப்போதும் தான் உடைமாற்றி வந்த பிறகே இது போல் தன்னிடம் பேசுபவர், இன்று இப்படி அமர்த்தி கொண்டு பேசுவது அவளுக்கு அவர் ஏதோ முக்கியமாக பேசவிளைக்கிறார் என தோன்ற வைத்தது.
பொதுவான விசயங்களை கேட்டுக் கொண்டிருந்தவர், “இவன் மேல் நீ கோபமா இருக்கியாமே? உண்மையாவா மதி. உங்க ரெண்டு பேருக்கும் எதாவது சண்டையா?” என்று நேரடியாகவே கேட்டு விட்டிருந்தார்.
“அப்டிலா எதுவும் இல்லமா. இவர் ஏதாவது உங்ககிட்ட பொழுதுபோக்க சொல்லிருப்பாரு” என்று அவள் கூற
“இல்லை நீ அவன் மெசேஜ் கூட ரிப்ளை பண்ணலன்னு சொன்னான். அதான் கேட்டேன்”
“நான் வண்டில வந்துட்டு இருந்தபோ மெசேஜ் பண்ணி இருக்காருமா. இப்பதான் பார்த்தேன் சரி வீட்ல தானே இருப்பாரு. வந்து பேசிக்கலாம்ன்னு விட்டிட்டேன். இதுல அவர் மேல கோபப்பட என்ன இருக்கு? என்று அவள் கேட்க, அதற்கு தேவி,
“ஓ அப்படியா? என்றவர், அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்க,
அதற்குள் மதியும் “சரிமா நான் போய் ரெஃப்ரெஷ் ஆயிட்டு வரேன்” என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டாள்.
உடனே ரகு அவரைப் பார்த்து நக்கலாக சிரித்து விட்டு, “என் மதிகுட்டி என்கிட்ட சொல்லுவா? என்று அவரை போலவே செய்து காட்டிவிட்டு, அவரிடம் அடி வாங்கும் முன் மதி பின்னேயே ஓடி விட்டான்.
வெகு நேரமாக அவர்கள் இருவரின் பேச்சு வார்த்தையையும் சற்று தூரமாக ஒரு இருக்கையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த ரவி, ரகு சென்றவுடன் தேவியிடம்,
“தேவி சித்தி இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நம்ம போனோம், கடைசில நம்ம தான் பல்பு வாங்கணும்”, என்று சிரித்து அவரை மேலும் வெறுப்பேற்றிவிட்டு அங்கிருந்து சென்றான்.
மேலே தன் அறை நோக்கி சென்ற ரகு, கதவைத் திறந்ததும் கண்டது அவன் மனைவி கையை கட்டிக் கொண்டு அவனை கோவமாக முறைத்துக் கொண்டே நிற்கும் காட்சியை தான்.
அவளை சற்று கோபமாக கண்டதும் எச்சிலை முழுங்கியவன், கதவை மெதுவாக சாத்திவிட்டு அவள் அருகே வந்து அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றான்.
“எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை? நேத்து நைட் என்கிட்ட சண்டை போட்டு போனது நீங்க, ஆனா காலைல ரவி கால் பண்ணி என்னமோ நான் தான் உங்ககிட்ட சண்ட போட்ட மாதிரி, உங்க கிட்ட பேசி சமாதானம் ஆகுமான்னு சொல்றாரு.
இங்க வந்தா அத்தையும் என்கிட்ட வந்து என்னமா சண்டையான்னு கேட்கிறாங்க. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? எல்லார் முன்னாடியும் என்னை சண்டைக்காரி ஆக்கிறீங்களா?”
என மதி கோபமாக கேட்க, அதற்கு ரகு “ச்ச ச்ச மதி அப்படிலாம் இல்ல. நான் காலையில உனக்கு மெசேஜ் பண்ணிட்டு இருந்தேன், அப்போ இந்த ரவி பய தான் தேவையில்லாம உனக்கு கால் பண்ணிட்டான்.
சித்தி கிட்ட வேற ஒரு விஷயம் பேசிட்டு இருந்தேன். அவங்கதான் இப்படி பிளேட்ட மாத்தி போட்டாங்க உண்மையாவே நான் எதுவுமே பண்ணல”
“நீங்க எதுவுமே பண்ணல அப்புறம் எதுக்கு சித்தி என்கிட்ட கேட்கும் போது சிரிச்சிட்டு இருந்தீங்க”
“நீ நல்லா என்னை நோட் பண்ணி இருக்கணும். நான் உன்னை பாத்து சிரிக்கல சித்திய பாத்து தான் சிரிச்சிட்டு இருந்தேன்”
“ஓஹோ அப்ப என்ன பாத்து நீங்க சிரிக்கல. இத நான் நம்பனும்?”
“மதி, நீ நேத்து நான் உன்கிட்ட கோவமா பேசினதை மனசுல வச்சுட்டு என்கிட்ட சண்டை போட ட்ரை பண்ற”
“அப்ப என்ன நீங்க சண்டைக்காரின்னு சொன்னது உண்மைதான?”
“ஐயோ மதி, இல்ல. மறுபடியும் முதல இருந்து ஆரம்பிக்காத மதி” என்று ரகு பதற,
அதற்கு மதி, “போதும் போதும் நிறுத்துங்க. இனிமேலாம் நான் உங்களை நம்ப மாட்டேன். வந்ததுல இருந்து ஃப்ரஷ் கூட ஆகாம அப்படியே உக்காந்து இருக்கீங்க.
நான் போய் ஃப்ரஷ் ஆகிட்டு வருவேன். அதுக்குள்ள நீங்களும் பக்கத்து roomக்கு போய் ஃப்ரஷ் ஆகிட்டு வரனும். டின்னர் முடிச்சிட்டு வந்து உங்ககிட்ட நான் பேசிக்கிறேன்” என்று அவள் கோபமாக குளியலறை நோக்கி செல்ல,
அவள் பின்னாலேயே “மதி மதி” என துரத்தி வந்து கொண்டிருந்தான் ரகு.
உள்ளே சென்றவள் சட்டென்று குளியல் அறையின் கதவை அடித்து சாற்றிவிட, ரகு வெளியே நின்று முனுமுனுப்பாக, “போடி”,என்று விட்டு அவள் சொன்னது போலவே பக்கத்து அறைக்கு சென்று ரெஃப்ரெஷ் ஆகி வந்தான்.
இருவரும் ரெஃப்ரெஷ் ஆகி வந்ததும், ரகு அவளை பாவமாக முகத்தை வைத்து பார்த்துக் கொண்டிருக்க, அவள் அவனை கண்டுகொள்ளாமல் மெதுவாக கீழே இறங்கி வரவேற்பறைக்கு சென்றாள்.
அவள் பின்னேயே ரகுவும் உடன் வந்தான். கீழே கௌதமி பரத் இருவரும் வந்துவிட, அனைவரும் அங்கு கூடியிருந்தனர்.
சிறிது நேரம் அவர்களுக்கு நடுவே அமர்ந்து பேச ஆரம்பித்தாள் மதி. ரகுவும் ரவியுடன் அடுத்த நாள் வேலைகள் குறித்து பேசுவது போல் மதியை பார்த்துக் கொண்டு இருக்க, ஆனால் அவனை கண்டுக் கொள்ளவில்லை. அதில் ரகுவிற்கு கோபம் வந்து விட்டது.
இவனும் அவளை கண்டுகொள்ளாமல் இருக்கும் முயற்சியில் தீவிரமாக ரவியுடன் பேச ஆரம்பித்தான்.
இருந்தும் அவன் பார்வை அவள்புறமே இருந்தது. மதியும் அவனை ஒரப்பார்வை பார்த்து வண்ணம் இருந்தாள். இப்படியே இருவரும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில் இரவு உணவு தயாராகிவிட, அதனை முடித்துக் கொண்டு அவரவர் அறைக்கு செல்ல புறப்பட்டனர்.
கௌதமியும் இவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டே இருந்தவர், மற்றவர்களை அங்கிருந்து வேகமாக அப்புறப்படுத்திவிட்டு, அவர்களை பெயருக்கு, “தூங்கு போங்க” என்று கூறிவிட்டு அவரும் உள்ளே சென்றுவிட்டார்.
இப்போது அங்கு இவர்கள் இருவரும் மட்டும் தனியாக அமர்ந்திருக்க மதி இப்போதும் தன் அலைபேசியிலேயே தன் பார்வையை வைத்திருந்தாள்.
அவ்வளவுதான் அத்தனை நேரம் பொறுமையாக இருந்த ரகு இப்போது பொங்கி விட்டான். உடனே விறுவிறுவென அவள் அருகே சென்றவன் சட்டென்று அவளை கையில் ஏந்திக் கொண்டான்.
அவள் திமிற திமிற தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றவன், அறையின் உள்ளே இறக்கிவிட்டு வேகமாக கதவை சாத்தினான்.
“மதி, என்ன ஓவரா போயிட்டு இருக்க. நேத்து ஏதோ கோவமா பேசிட்டேன். அதுக்குன்னு கண்டுக்காம இருப்பியா? சண்டை போட்ட கூட பரவால்ல. கண்டுக்காம இருக்க என்ன நெனச்சிட்டு இருக்க?” என்று கோவமாக பேச,
மதி அவனைப் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டே, “நீங்க கோபமே படலன்னு பச்சையா தெரியுது. ரொம்ப ஓவரா நடிக்காதீங்க ரகு”, என்று கூற, சட்டென அமைதியான ரகு,
“ஆமா எப்படி கண்டுபிடிச்ச?” என கேட்டான்.
“அதலாம் ரொம்ப ரொம்ப சிம்பிள். நீங்க கோவமா இருக்கும்போது என்னை மதின்னு கூப்பிட மாட்டிங்க. மதிமான்னு கூப்பிடுவீங்க”
ரகு சற்று பலமாக மூச்சை இழுத்து விட்டவன் “சாரி மதி”, என்று தீவிரமாக கூறினான்.
அதைக் கேட்டதும் மதியும் சற்று இலகுவாகி, அவனிடம் “எதுக்கு அப்டி கோபப்படுறீங்க?” என்று கேட்டாள்.
“மதி ப்ளீஸ் இந்த விஷயம் பேச வேண்டாம். நேத்தே நான் சொன்னே இல்ல, அந்த விஷயத்தை பேசுறதுக்கு என்னால முடியல.
அதான் உன் மேல கோபத்தை காட்டிட்டேன். யாராவது அன்னைக்கு இன்சிடண்ட் பத்தி பேசுனா, நான் அங்க இருக்க மாட்டேன். ஆனா நீ பேசும் போதும் அப்படி என்னால நகந்து போக முடியல” என்று கூறினான்.
மதியும் அதற்கு மேல் அதைப்பற்றி பேசவில்லை. ஆனால் அவனை இலகுவாக்கும் பொருட்டு, “சரி, அது என்ன கோபம் வந்தா மட்டும் “மதி மா” நீங்க என்னை மட்டும் “மா” போட்டு கூப்பிடுற மாதிரி தெரியலையே. இதே மாதிரி தான அன்னைக்கு உங்க அசிஸ்டன்ட்யும் கூப்பிட்டீங்க . அது என்ன பழக்கம்? என்று அவள் கேட்க,
ரகு உடனே, “அது அப்பா சொல்லிக் கொடுத்தது. அம்மா மேல கோவமா இருக்கும்போது அப்பா அப்படித்தான் கூப்பிடுவாரு. எனக்கு அதைப் பார்த்து எல்லாம் வரல. அவர் என்கிட்ட இப்படித்தான் நீ பேசணும் கோவம் இருந்ததுனா அந்த சமயத்துல நீ கடுமையா பேசவே கூடாதுன்னு, உட்கார வைச்சு சொல்லிக் கொடுப்பாரு. அப்ப இருந்து இப்ப வரைக்கும் அது பழகிடுச்சு. அவ்வளவுதான்”, என்றவன்.
“அது சரி, நான் என் அசிஸ்டன்ட்ட திட்டினதை நீ எப்ப பார்த்த”, என்று அவன் கேட்க, அதற்கு அவள்,
“அன்னைக்கு இன்டர்வியூ எடுக்க வந்த அப்போ பார்த்தேன். அன்னைக்கு நான் என் செயின் கீழே விழுந்துச்சுன்னு திரும்பி வந்தேன். அப்பதான் உங்க அசிஸ்டன்ட்ட நீங்க திட்டிக்கிட்டு இருந்தீங்க” என்றாள்.
“ஓ…ஆமா அந்த பொண்ண, நான் “மா” சொன்னா உனக்கு என்ன? பொஷசிவ்வா? என்று கேட்டான்.
“ஆமா, இப்ப என்ன? என் புருஷன் என்ன “மா” சொல்லி கூப்பிடும் போது, அவளையும் கூப்பிட்டா எனக்கு கோவம் வரதான் செய்யும்”