“ஜெய் மணி 6:15 வந்துருவான்ல? அஞ்சு அரை மணியிலிருந்து இங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம் டா. அவன் மட்டும் வராமல் இருக்கட்டும் உனக்கு இருக்கு.” என ஜெனி புலம்பிக் கொண்டிருக்க, மதி அமைதியாக அங்கு நடக்கும் சூழலை அவதானித்துக் கொண்டிருந்தாள்.
“ஹே ஜெனி எனக்கு தகவல் கொடுத்த ஆளு ரொம்ப நம்பிக்கையானவன். அவன் சொல்லி ஒரு விஷயம் கூட இதுவரைக்கும் தப்பா போனது கிடையாது. அவன் கண்டிப்பா வருவான். தலையே அமைதியா வெயிட் பண்ணுது. உனக்கு என்ன? பேசாம இரு.”
என மூச்சு வாங்க பதில் சொல்லிக் கொண்டிருந்தான் ஜெய்.
“ஜெனி ஜெய் அமைதியா இருங்க. நம்மள சுத்தி யாரும் இல்ல. நம்ம பேசுறது பக்கத்துல யார் வந்தாலும் தெளிவா கேட்கும்”, என மதி அவர்கள் இருவருக்கும் சொல்லிக் கொண்டிருந்தாள்.
இவர்கள் மூவரும் ஒரு அண்புலனத்தின்(Bluetooth) வழி இணைந்து இருந்தனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத அந்த கடற்கரையின் மூன்று திசையில் மூவரும் பதுங்கி இருக்க, அவர்கள் யாருக்காக காத்திருந்தனரோ அந்த நபர் மெதுவோட்டத்தில்(Jogging) வந்து கொண்டிருந்தான்.
அவன் கையில் ஒரு தண்ணீர் குவளை(water bottle) இருந்தது. காதில் ஒரு அண்புலனி செவிபொறியை(earphone) மாட்டிக் கொண்டு அங்கேயே ஒரு இரண்டு சுற்றுகள் மெது ஓட்டத்தில் சுற்றிக் வந்தான்.
மூன்றாவது சுற்றி ஆரம்பிக்க சரியாக அந்த சமயம், இன்னொரு நபர் அதேபோல மெதுவான ஓட்டத்தோடு வந்து கொண்டிருந்தான்.
இரண்டாவதாக வந்தவன் கையிலும் முதலாமவன் கையில் இருந்தது போலாவே ஒரு தண்ணீர் குவளை இருக்க, இருவரும் மிக அருகில் சந்திக்கும் வேளையில் அந்த தண்ணீர் குவளைகளை கீழே போட்டுவிட்டு அதை மாற்றி எடுத்துக் கொண்டனர்.
அது இவர்கள் மூவர் கண்களுக்கும் தெளிவாக தெரிந்தது. அதன் பின் அவர்கள் எதிர் திசை நோக்கி மெதுவான ஓட்டத்துடனே ஓடி மறைந்தனர்.
மூவரும் அவர்கள் சென்ற உடனே வெளியேறாமல் ஐந்து நிமிடங்கள் பொறுத்து ஒவ்வொருவராக மெதுவாக வெளியேறி வந்தனர்.
அந்த கடற்கரையில் இருந்து வெளியேறி மூவரும் தங்கள் இருசக்கர வாகனத்தின் உதவியுடன் தங்கள் அலுவலகம் வந்து சேர்ந்தனர்.
அங்கே சென்றதும் ஜெனி பொறுக்க முடியாமல், ” ஜெய், எதுக்காக பத்மாவே இந்த சின்ன விஷயத்துக்கு இறங்கி வந்து வேலை பார்க்கணும்? எதுவுமே புரியலையே? மண்டைய குழம்புது. மதி அக்கா நீங்களாது சொல்லுங்களேன், என்ன விஷயம்?”, என்று புலம்ப ஆரம்பித்தாள்.
“ஜெனி உனக்கு என்ன தெரியுமோ அதுதான் எனக்கும் தெரியும். எனக்கும் இந்த பத்மா எதுக்காக நேரடியா இந்த விஷயத்துல இறங்கினானு புரியல தான். ஆனா இறங்கியிருக்கானா கண்டிப்பா எதாவது விஷயம் இருக்கணும்.”
“சீனியர் நேத்து ஸ்டீபன் என்கிட்ட பத்மாவே நேரடியா ஒரு டீலிங்கில இறங்கபோறானு சொன்னபோ, எனக்கே ஆச்சரியமா இருந்துச்சு. ஏதாவது பெருசா இருக்கும்னு நினைச்சேன். பார்த்தா வெறும் வாட்டர் பாட்டில்ல தான் எதையோ மாத்திட்டு போனானுங்க.
அந்த வாட்டர் பாட்டில்ல தான் ஏதோ இருக்குன்னு நமக்கும் தெரியுது. இருந்தாலும் எதுக்கு இந்த சின்ன விஷயத்துக்காக இவன் வரணும். ஒரு வேளை அதுல வேற ஏதாவது பெருசா இருக்கோ”
தொடர்ந்து “ஜெனி இந்த பீச்ல இன்னும் கொஞ்ச நேரம் ஆனா கூட்டம் வந்துரும். அது மட்டும் இல்லாம அங்க பக்கத்திலேயே போலீஸ் போஸ்ட் கூட இருக்கு. இங்கேயே இவனுங்க எதையோ ஈசியா கைமாத்திட்டு போறாங்கன்னா இன்னும் என்னென்ன எல்லாம் பண்ணுவாங்க யோசி”, என்று சொல்ல,
அதற்கு மதி அவனிடம், “ஜெய் சி நேரம் யாரும் இல்லாத இடத்தில தப்பு பண்ணும் போது தான் மத்தவங்களுக்கு சந்தேகம் வரும். இந்த மாதிரி இடங்கள்ல பண்ணும் போது யாருக்கும் சந்தேகம் வராது. இவங்க இப்படி யோசிக்கிறது எல்லாம் பெரிய விஷயமே இல்ல.
இவ்ளோ பெரிய பிசினஸ் பண்ற இவனுங்க இதெல்லாம் யோசிக்காமலா இருப்பாங்க? சரி, அதை விடு. இப்ப எனக்கு ஒரு விஷயம் பண்ணு. உடனே நம்ம கான்ஸ்டபிள் முத்தையாவுக்கு கால் பண்ணி அவுங்க ஸ்டேசன்ல் பீச் கிட்ட ஏதாவது சரக்கு பிடிச்சாங்களான்னு விசாரி”, என்றாள்.
சரி என்று அவனும் அவள் கூறியதை செய்வதற்காக அலைபேசியை கையில் எடுத்து முத்தையாவின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.
அழைப்பு விடுத்த நொடி, “என்ன அண்ணே காலைல புதுசா ஏதோ கேஸ் மாட்டிருக்கு போல சொல்லவே இல்ல?” என்று எதார்த்தமாக கேட்பது போல் கேட்க, அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ சரியாக 15 நொடிகளிலேயே அந்த அழைப்பை துண்டித்து விட்டு மதி பக்கம் திரும்பினான்.
“சீனியர், நீங்கதான் அவன போட்டு கொடுத்தேன் மட்டும் சொல்லிடாதீங்க”, என்று ஜெய் கேட்க, அதற்கு மதி, “நான் தான் ஜெய் போட்டு கொடுத்தேன்”, என புன்னகையுடன் கூறினாள்.
“ஏன் சீனியர்? ஆனா எப்படி ?” என்று புரியாமல் அவன் கேள்வி எழுப்ப, மதி ஒரு நாற்காலியை இழுத்து போட்டு சவுகரியமாக அமர்ந்து கொண்டாள்.
“ஆமா, எப்படி எங்க கூட தான் இருந்தீங்க?” என்று ஜெனியும் கேள்வி எழுப்பினாள்
மற்ற இருவரும் அவள் என்ன செய்தாள் என கேட்கும் ஆர்வத்தில் அவரவருக்கு ஒரு நாற்காலியை எடுத்து போட்டா அவள் அருகே அமர்ந்து கொள்ள,
மதி மிகவும் சாவகாசமாக, “இதெல்லாம் ஒரு விஷயமா? நீங்க ரெண்டு பேரும் கிளம்பி முன்னாடி பைக் எடுத்துட்டு போன அந்த கேப்ல தான் போட்டு கொடுத்தேன்” என்றாள்.
அதற்கு ஜெய், “ஆனா எதற்கு சீனியர் போட்டு கொடுத்தீங்க? இதுக்கு முன்னாடி கூட இதே மாதிரி நிறைய விஷயம் நடந்திருக்கு. அப்ப எல்லாம் நம்ம இப்படி பண்ணதில்லேயே ஏன் இந்த சின்ன விஷயத்திற்காக போட்டு கொடுத்தீங்க?” என்று அவன் குழப்பமாக கேட்டு வைத்தான்.
மதி அவன் கேள்விக்கு மிகப் பொறுமையாக பதில் கூற ஆரம்பித்தாள்,”ஜெய் ஜெனி இதுக்கு முன்னாடி நம்ம பார்த்த எல்லா டீலிங்குக்கு பின்னாடியும் ஏதாவது சின்ன டீலர்ஸ் இருப்பாங்க.
அவங்களை பிடிக்கிறதுனால நமக்கு எந்த யூசும் இல்லை. ஆனா பத்மா அப்படி கிடையாது. அவன்தான் இந்த சிட்டில நடக்கிற மொத்த நெட்வொர்க்குக்குமான பிக் டீலர்.
நம்மகிட்ட பத்மா தான் இத பண்றாங்கிறதுக்கு ஆதாரம் கிடையாது. ஆனால் அவன் தான் பண்றாங்கிறது நமக்கு நல்லாவே தெரியும். இது போலீஸ் கிட்ட சொல்லியும் எந்த பிரயோஜனமும் கிடையாது.
இதுவரைக்கும் அவன் நேரடியாக எப்படி பண்ணான்னு தெரியாம இருந்தது. இன்னைக்கு பத்மாவே நேரடியா வந்து ஒருத்தனுக்கு சரக்கு சப்ளை பண்ணிட்டு போயிருக்கான். எனக்கு இது இவன் முதல் தடவை பண்ற மாதிரி தெரியலை. யோசிக்கும் போது இவன் இதுக்கு முன்னாடியும் இதே மாதிரி பண்ணிருக்கனும்.
நமக்கு இப்பதான் தகவல் கிடைச்சிருக்கு. இந்த டீலிங் மூலமாக பத்மா தான் இத பண்றாங்கிற விஷயம் போலீசுக்கு கண்டிப்பா தெரிய வரும். பத்மா மூலமா இந்த சிட்டிக்கு ட்ரக்ஸ் கொண்டுவர அந்த ஹெட்டையும் கூட பிடிக்க முடியும்.
ட்ரக்ஸ் கேஸ் இன்வெஸ்டிகேட் பண்றது மட்டும் நம்மளோட வேலை கிடையாது. இதுல இருக்குற மொத்த பேரையும் பிடிக்க வச்சு இங்க டிரஸ் சப்ளை பண்றது நிறுத்துவதும் நம்ம வேலைதான் இது நம்ம கடமையும் கூட.
அதுக்காக தான் இப்ப அவனை போட்டு கொடுத்தேன் இன்னைக்கு பொருள் வாங்கிட்டு போன அந்த கஸ்டமர் தான் போலீஸ்க்கு கிடைக்கப்போற துருப்பிச்சீட்டு. அவன் மூலமா பத்மா. பத்மா மூலமா அந்த ஹெட். அதுக்கப்புறம் கண்டிப்பா இந்த சிட்டிகுள்ள எந்த ட்ரக்ஸ்ம் வராது.”
“அக்கா நீங்க சொல்றது கரெக்ட் தான். ஆனா இப்ப நான் முத்தையா அண்ணனுக்கு போன் பண்ணும் போது அவரு பிரஸ் பீப்பிள் யாருக்கும் இது சொல்ல கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. அதனால நீ இங்க வந்து நிக்காத அப்படின்னு சொன்னாரு.
இப்படி அவங்க சொல்றதுக்கு ரெண்டு பக்கம் இருக்குல்ல. ஒன்னு சீக்ரெட்டா வச்சுக்கணும்னு நினைக்கலாம். இல்ல இத அப்படியே மூடி மறைக்கனும் கூட நினைக்கலாம். பத்மாவ இவுங்க கண்டுபிடிப்பாங்கன்னு எப்படி நம்பிறது?” என்று ஜெய் கேள்வி எழுப்பினான்.
“ஜெய், நீ என்ன நினைக்கிற நான் யாரு கால் பண்ணி இவனை போட்டு கொடுத்து இருப்பேன்?” என்று மதி அவனிடம் கேள்வி எழுப்ப, ஜெய் அதற்கு யோசனையாக, “அந்த ஏரியா இன்ஸ்பெக்டர்க்கு தானே கால் பண்ணிருப்பீங்க?” என்றான்.
“இல்ல நான் கால் பண்ணது தேவா சாருக்கு அவர மட்டும்தான் இந்த கேஸ்ல நாம நம்ப முடியும். அதனால அவருக்குத்தான் இன்ஃபார்ம் பண்ணேன். அப்படி இருக்கும்போது இதை மூடி மறைக்கவே முடியாது கண்டிப்பா பத்மா அவங்ககிட்ட மாட்டிக்குவான்” என்று மதி உறுதியாக கூறினாள்.
இப்போது ஜெனிக்கு ஒரு சந்தேகம் தோன்ற அதை மதி இடம் கேட்டாள். “சீனியர் எனக்கு ஒரு டவுட். நம்ம பத்மா பத்தின விஷயத்தை தேவா சார்கிட்டே டைரக்டா சொல்லலாமே?. எதுக்காக இப்படி சுத்தி வளச்சி தெரியப்படுத்தனும்”
“ஜெனி பத்மா பத்தி நமக்கு இன்ஃபாம் பண்ணது யாரு? நம்மளோட சீக்ரெட் இன்ஃபார்மர்ஸ் அவங்க மூலமா மட்டும்தான், நமக்கு பத்மா பத்தி தெரியும். வேற எந்த ஆதாரமும் நம்மகிட்ட கிடையாது. அப்படி இருக்கும்போது, தேவா சார்கிட்ட நம்ம பத்மா பத்தி சொன்னா கண்டிப்பா அந்த இன்ஃபார்மன்ஸ் பத்தி சொல்ல வேண்டி வரும்.
உனக்கே தெரியும் இன்ஃபார்மர்ஸ் பத்தி நம்மளால போலீஸ் கிட்ட சொல்ல முடியாது. அண்ட் இன்னொரு விஷயம் தேவா சார் என்னதான் நம்மகிட்ட நல்லா பேசினாலும் அவரும் போலீஸ் தான். நாம பத்திரிக்கைக்காரங்க நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல டிஸ்டன்ஸ் இருக்கிறதும் நல்லது தான். அன்ட் நமக்கு தெரிஞ்ச எல்லா விஷயமும் அவங்களுக்கு தெரியப்படுத்தணும்னு அவசியமும் கிடையாது. அது நமக்கு ஆபத்தா முடியலாம்.
உங்களுக்கு இன்னும் கூட நிறைய சந்தேகம் வரும் அதையும் நான் கிளியர் பண்ணிடறேன் கேட்டுக்கோங்க.
இதுக்கு முன்னாடி கூட இந்த மாதிரி நிறைய டீலிங் நடந்திருக்கு அந்த டீலிங் எல்லாம் நமக்கு தெரியும்னு தேவா சாருக்கும் தெரியும். ஆனா நம்ம ஏன் இந்த விஷயத்தை மட்டும் அவர்கிட்ட சொன்னோம், அப்படிங்கற சந்தேகம் கூட அவருக்கு வரும். அதனால இன்னைக்கு டீலிங்கில நடந்த இன்னொரு விசயத்தைப் பத்தி மட்டும் அவர்கிட்ட சொன்னேன்” என்றவள்,
ஒரு நொடி இருவரையும் பார்த்துவிட்டு, “உங்க ரெண்டு பேருக்கும் அந்த கஸ்டமர் யாருன்னு தெரிஞ்சுதா?” என்று கேட்க, இருவரும் முழித்துக் கொண்டிருந்தனர்.
“இட்ஸ் ஓகே. நீங்க ரெண்டு பேரும் தூரமா இருந்தீங்க அதான் தெரிஞ்சிருக்காது. நானே சொல்றேன். அந்த கஸ்டமர் வேற யாரும் கிடையாது அந்த ஏரியால இருக்க அந்த @@@ ஹாஸ்பிடல்ல நடத்திரானே அந்த டாக்டர் தான்.
அவனை பத்தி நமக்கு நல்லாவே தெரியும். அவன் கைக்கு ட்ரக்ஸ் போகுதினா அது கண்டிப்பா நல்ல விஷயமா இருக்காது. அதனாலதான் ஒரு டாக்டர் கையில இந்த மாதிரி விஷயம் போகுதுன்னு நான் தேவா சரக்கு தகவல் சொன்னேன்.
இப்போ நான் டாக்டர் பத்தி சொன்னதுனால அவருக்கு பெருசா நம்ம மேல சந்தேகம் வராது. சோ, மத்தவங்கள பொருத்தவரை நமக்கு இதுவரைக்கும் பத்மா பத்தி தெரியாது. புரிஞ்சுதா?”என்று கேட்க, இருவரும் தலையும் ஆம் என்று ஆடியது. மதி மெதுவாக நாற்காலியில் இருந்து எழுந்து மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
“இனிமேதான் நம்மளோட உண்மையான கேம் ஆரம்பிக்க போது. இதுவரைக்கும் நம்ம பண்ண இன்வெஸ்டிகேசன் எல்லாமே ரொம்ப சாதாரணம். இனிமேதான் மெயினான விஷயமே இருக்கு. பீ ரெடி காய்ஸ்”.
ரகு மிகவும் பரபரப்பாக சுற்றிக் கொண்டிருந்தான். படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்ட பணிகளை அவன் அடுத்த வாரம் தொடங்க வேண்டி இருந்தது. அதனால் இவ்வாரமே படத்திற்கான இறுதிக்காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தன.
உட்கார நேரம் இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறான். இருப்பினும் அவனுக்கு இடைவெளிகள் கிடைக்கும்போதெல்லாம் தன் மனைவிக்கு குறுந்தகவல் அனுப்புவதை மட்டும் விட்டுவிடவில்லை.
காலையில் அவன் மனைவியிடம் இருந்து கிடைத்த தகவலுக்குப்பின் அவளிடமிருந்து அவனின் எந்த குறுஞ்செய்திக்கும் பதில் கிடைக்கவில்லை. அவள் கோபம் அதிலேயே அவனுக்கு புரிந்தது. அதனால் கிடைக்கும் இடைவெளிகளில் எல்லாம் அதிலேயே கவனத்தை வைத்திருந்தான்.
அச்சமயம் தான் ரவி தங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் இருந்த சில வேலைகளை முடித்துக் கொண்டு மதியம் போல வந்தவன், ரகு இடைவெளிகள் எல்லாம் கைபேசியிலேயே தன் வனத்தை வைத்திருப்பதை கண்டு கொண்டான்.
ரகு பொதுவாக படப்பிடிப்பு நடக்கும் வேலைகளில் அலைபேசியை பயன்படுத்துவதில்லை. இப்படி அவன் பயன்படுத்துகிறான் என்றால் அதன் இயல்புக்கு மாறானது தான்.
ரவி இந்த கொஞ்ச நாட்களில் கண்டுக் கொண்ட ஒரு விசயம், ரகு இயல்புக்கு மாறாக ஒரு செயல் செய்கிறான் என்றால் நிச்சயமாக தன் மனைவியின் விஷயமாகத்தான் இருக்கும் என்பதை தான்.
உடனடியாக மதிக்கு அலைபேசியில் அழைத்தான். அவளிடம் அவன் ரகு இப்படி அலைபேசிகளை நேரத்தை செலவழிப்பதை கூறிவிட்டான். உடனே மதி ரகுவிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்,
“மொத கவனத்தை உங்க வேலையில வைங்க. இன்னொரு தடவை மெசேஜ் பண்ணீங்க அவ்வளவுதான்”.
அதைப் பார்த்தும் ரகு சட்டென்று நிமிர்ந்து ரவி எங்கிருக்கிறான் என்று தேடி அவனைப் பார்க்க அவன் எதுவும் தெரியாதபோல் திரும்பிக் கொண்டான்.
அவனை முறைத்து விட்டு, மதிக்கு “ஓகே” என ஒரு குறுந்தகவல் அனுப்பி விட்டு கூடவே சோகமாக இருக்கும் ஒரு மஞ்சள் பொம்மையையும்(emoji) அனுப்பி வைத்துபின் தன் வேலையை முழு கவனத்துடன் செய்ய புறப்பட்டான்.