“நெஜமா தான் பா சொல்றேன் கன்னம் எப்படி வீங்கி இருந்துச்சி தெரியுமா? அன்னைக்கே உங்ககிட்ட இத சொல்லனும்னு நினைச்சேன் அதுக்குள்ள ஒரு அவசர வேலை. அதான் ஊருக்கு போய்டேன்.”
என்றவனை அவனுக்கு எதிரில் அமர்ந்திருந்த மூவரும் குழப்பமாக பார்த்தனர்.
“அதுமட்டுமில்லை சார் கிட்ட கூட கேட்டேன். அவரு இந்த விஷயம் உனக்கு மட்டும் சொல்றேன் நீ வேற யார்கிட்டயும் சொல்லாதன்னு சொல்லிட்டு தான் எனக்கு விசயத்தையே சொன்னாரு” என்ற கதிரவனிடம் ஜெய்,
“சார் உங்க கிட்ட என்ன சொன்னார் கதிர்” என்றான்.
“சார் இதை பத்தி யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு தான் சொன்னாரு. ஆனா இந்த கேஸ்ல நீங்களும் சம்பந்தப்பட்டு இருக்கீங்க. அண்ட் உங்கள முழுசா நம்பலாம் அந்த நம்பிக்கையில் தான் சொல்றேன். கேளுங்க” என்றவன் தங்களை சுற்றி பார்த்தான்.
அந்த உணவகத்தில் அவர்கள் நால்வரைத் தவிர இரண்டு மேஜைகள் தள்ளி இருவர் அமர்ந்து ஏதோ தீவிரமாக பேசி கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
தங்கள் பேச்சை யாரும் கேட்க போவதில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின் நிதானமாக கூற ஆரம்பித்தான்.
அதைக் கேட்ட மற்ற மூவருக்கும் அந்தச் செய்தி மிகவும் ஆச்சரியமானதாக இருந்தது. முக்கியமாக மதிக்கு. ஏனெனில் இது அவளும் சம்பந்தப்பட்ட செய்தி அல்லவா.
அன்று குழந்தைகளை காப்பாற்றிய பின் ஜெய், ஜெனி, கதிரவன் மற்றும் மதி என நால்வரும் எதாவது ஒரு பொது இடத்தில் சந்தித்துக் கொள்ளலாம் என பேசிக்கொண்டனர்.
அதன் பொருட்டு இன்று அவர்கள் இங்கு இந்த உணவகத்தில் கூடியிருந்தனர்.
அங்கு தான் இந்த பேச்சுவார்த்தைகள் எல்லாம் நிகழ்ந்து கொண்டிருந்தது. குழந்தைகளை காப்பாற்றிய மறுநாள் கதிரவன் காவல் நிலையம் சென்ற போது ஒரு நிகழ்வு நடந்தது.
அதை பார்த்துவிட்டு வந்தவன் இவர்களுக்கு இந்த செய்தியை தெரிவிக்கலாம் என நினைக்கும் முன்பே இவனுக்கு ஊருக்கு செல்லும் ஒரு அவசர வேலை வந்ததால், அங்கு சென்று விட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு இப்போது தான் வந்திருந்தான்.
வந்ததும் இவர்கள் சந்திப்பு நிகழ தான் கண்ட செய்தியை இப்போது பகிர்ந்து கொண்டிருந்தான்.
கதிரவன் குழந்தைகள் கடத்தல் சம்பந்தமாக தான் சேகரித்த ஆதாரங்களை, தேவனிடம் ஒப்படைக்கும் நோக்குடன் அன்று உதவி ஆய்வாளர் அலுவலகம் வரை வந்திருந்தான்.
தேவனுக்காக இவன் வெளியே காத்திருந்த சமயம் உள்ளே இருந்து வேகமாக வெளியே வந்தார் தேவன்.
வந்தவர் காவல் ஆய்வாளர்கள் தவிர்த்து மற்ற அனைவரையும் வெளியேற்றுமாறு கூறியவர், கதிரவனை பார்த்துவிட்டு அவனை மட்டும் இங்கு இருக்குமாறு கூறினார்.
அதன் பிறகு ஐந்து நிமிட இடைவேளையில் வெளியே ஓர் கார் வந்து நிற்கும் ஓசை கேட்க, விறு விறு என வெளியே சென்று யாரையோ அழைத்துக் கொண்டு உள்ளே வந்தார்.
அவருடன் உள்ளே வந்தவன் அங்கிருந்து அனைவரையும் விட சற்று உயரமாக இருந்தான். அவன் கைகுட்டையால் தன் முகத்தை மறைத்திருந்தான்.
கண்களை மறைக்கும் விதமாக ஒரு கருப்பு கண் கண்ணாடியும் தலையில் ஒரு தொப்பியும் அணிந்திருந்தான்.
உள்ளே வந்தவன் கதிரவனை கண்டு ஒரு நொடி நிற்கவும், தேவன் அவனிடம் “இவரு கதிரவன் ரொம்ப நம்பிக்கையானவர் தான். இந்த விஷயம் எந்த காரணத்துக்காகவும் வெளிய போகாது. நீங்க வாங்க நம்ம போலாம்” என்று கூறினார்.
அவர் கூறியதை கேட்டவன் கதிரவனை பார்த்தவாறே தலையை மட்டும் அசைத்து விட்டு, தேவனுடன் அங்கிருந்த கைதிகளை அடைத்து வைக்கும் அந்த சிறை கம்பிகள் பொருந்திய அறை நோக்கி சென்றான்.
உள்ளே சென்றவர்கள் இவன் பார்வையில் இருந்து மறைந்து விட்டனர். என்ன நடக்கிறது என்று தெர்ந்து கொள்ளும் ஆர்வம் கதிரவனிடம்.
ஆனால் அந்த அறைகள் கதிரவன் நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தூரம் இருக்கவும், உள்ளே என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ள நினைக்க, ஒரு சின்ன சத்தம் கூட அவனுக்கு கேட்கவில்லை. ஆனால் பத்து நிமிட இடைவெளிக்கு பின் ஏதோ கீழே விழுந்து உடையும் சத்தம் மட்டும் கேட்டது.
சத்தம் கேட்ட மறு நொடி அந்த முகமூடி அணிந்த நபரை தேவன் கைப்பற்றி வழுக்கட்டாயமாக இழுத்து வருவது தெரிந்தது.
வெளியே வந்தவன், தேவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் ஏதோ கூறிவிட்டு, விறு விறு என அங்கிருந்து வெளியேறி காரில் பறந்து விட்டான்.
அவன் சென்றதும் தேவன் கதிரவனை உள்ளே அழைத்துச் சென்று சில விஷயங்களை கூற அவற்றை கேட்டு ஆச்சரியம் அடைந்தான் கதிரவன்.
அங்கு வந்து சென்ற நபர் யார் என்றும் அவன் எதற்காக இங்கு வந்து சென்றான் என்றும் கேட்டு தான் அவனுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது.
இப்போது அந்த உணவகத்தில் அமர்ந்து இவர்கள் மூவரிடமும் அதைத்தான் உரைத்துக் கொண்டிருந்தான்.
“அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன் வந்துட்டு போனது யாருன்னு எனக்கு தெரியல. ஆனா அவர் யாருன்னு தேவன் என்கிட்ட சொன்னாரு” என்றவன், ஒரு நொடி நிறுத்தி,
“அவரு வேற யாரும் இல்ல தி ஃபேமஸ் டைரக்டர் ரகுநந்தன்.
அது மட்டும் இல்ல அவர் எதுக்காக அன்னைக்கு அங்க வந்தாருன்னு தெரியுமா.”
என கதிரவன் உரைத்ததுமே, ஜெய் அவனிடம் “எதுக்கு வந்தாராம்?”என கேள்வி எழுப்பினான்.
“நானும் தேவன் சார் கிட்ட கேட்டேன். ரகு சாருக்கு தெரிஞ்ச ஒருத்தங்களோட குழந்தையும் அவங்க கடத்தி வைச்சிருந்து இருக்காங்க. அதுக்காக பர்சனலா அவன வந்து அடிக்கனும்னே அங்க வந்தாராம்”, எனறவன் சில நொடிகள் யோசனைக்குப் பின்,
“ஆனா இது நம்பற மாதிரியே இல்லல்ல. இது உண்மைதான்னு தெரிஞ்சுக்கணும் எனக்கு தோணுது. தெரிஞ்சுக்கலாமா?” என்றான்.
மூவரும் அவனை சட்டென்று நிமிர்ந்து பார்த்திட, மதி, ” தேவன் சார் தான் இதை சீக்ரெட்டா வச்சுக்கோங்கன்னு சொல்லி இருக்காருல்ல. அதனால நம்ம இந்த விஷயத்தை பத்தி மேற்கொண்டு பேச வேண்டாம்ன்னு நினைக்கிறேன். இதை அப்படியே விட்டுடலாம்”, என்றாள்.
“நீங்க சொல்றதும் சரியா மதி மேடம் நமக்கு எதுக்கு அந்த வேண்டாத வேலை. ஆனா மேடம் அவன் கன்னம் வீங்கி இருந்தத பாத்து எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்தது தெரியுமா. எத்தனை பேர்கிட்ட இருந்து குழந்தைங்களை பிரிச்சிருப்பான்”, என்றான்.
இவன் இப்படி பேசிக் கொண்டிருக்க, அங்கு ஜெனியும் ஜெய்யும் நமட்டு சிரிப்புடன் மதியை பார்த்துவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களை கண்களாலேயே முறைத்த மதி பேச்சை வேறு திசைக்கு மாற்றி விட்டாள். இவர்களின் பேச்சு வேறு திசையில் இருந்த போதும் மதியின் மனம் அவன் ஒருவனிடம் மட்டும் இருந்தது.
அன்று தன் வீங்கி இருந்த கன்னத்தை பார்த்து பதறியது, அத்தனை கோபத்தில் இழுத்து செல்லும் போதும் தன்னவள் சரியாக படிக்கட்டில் கால்களை வைக்கின்றாளா என பார்த்துக் கொண்டே சென்றது.
அதன் பின் அவர்களுக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தைகள் என ஒவ்வொன்றாக கண்களில் விரிந்து அவள் முகத்தில் புன்னகையை தோற்று வித்தது.
அன்று மட்டுமல்லாது அடுத்து வந்த இரண்டு நாட்களும் பெரும்பான்மையான நேரத்தை மதியுடனே செலவழித்து அவளை நன்றாக பார்த்துக் கொண்டான்.
காலையில் படப்பிடிப்புக்கு செல்பவன் எத்தனை விரைவில் முடிக்க முடியுமோ அத்தனை விரைவில் தன் வேலையை முடித்துவிட்டு வீடு நோக்கி வந்து விடுவான்.
இரண்டு நாட்களும் அவளை அதிகம் பேசவிடாமல், கடந்து சென்ற ஒரு வாரத்தில் தான் அவளுடன் பார்க்காமல் பேசாமல் இருந்ததற்கு சேர்த்து வைத்து இவன் பேசினான்.
அத்தனை கவனித்து அவளை பார்த்துவிட்டு, இன்று அவள் வேலைக்கு கிளம்பும் போது அவன் அவளிடம் கூறியது ஒன்றே ஒன்றுதான்.
“இங்க பாரு மதிமா. உன் உயிர் எனக்கு சொந்தமானது. அதை எங்கேயும் நீ பணயம் வச்சு விளையாட கூடாது. இதை எப்பவும் மறக்க மாட்டேன் நம்புறேன்”, என்று கடினமான குரலில் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
இப்படி தன் சிந்தனையில் இருந்தவளை, மீண்டும் அவர்களின் பேச்சு நிகழ்வுக்கு கொண்டு வர, அவர்களுடன் தன் உணவை முடித்துக் கொண்டாள்.
அதன் பின் நால்வரும் அங்கிருந்து கிளம்பி அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.
அவர்களிடமிருந்து விடைபெற்ற மதி நேராகச் சென்றது தரன் கார்மென்ட்ஸ்க்கு தான்.
உள்ளே சென்ற மதி அங்கிருந்து வரவேற்பாளரிடம் தான் பத்திரிகையில் இருந்து வந்திருப்பதாகவும் கௌதமி தன்னை சந்திக்க தன்னை இங்கே அழைத்து இருந்ததாகவும் கூறினாள்.
அந்த வரவேற்பாளரும் தொலைபேசி வழி கௌதமியிடம் அந்த தகவலை உறுதி செய்துவிட்டு, அவர் இருக்கும் அறைக்கு அவளை அனுப்பி வைத்தாள்.
வரவேற்பாளர் சொன்ன அறைக்கு முன்னே வந்து நின்ற மதி அங்கு பொறிக்கப்பட்டிருந்த “CEO” என்ற எழுத்துக்களை ஒரு நொடி படித்துவிட்டு மரியாதை நிமித்தமாக கதவை தட்ட உள்ளிருந்து, “எஸ் கமின்”, என்ற குரல் கேட்டது.
உள்ளே சென்றவள் அங்கிருந்த நபர்களை கண்டு ஆச்சரியம் கொண்டாள். Bharath Raj CEO என எழுத்துக்கள் பொருந்திய அந்த பலகை மேஜையின் மேல் இருக்க, அதற்கு முன்பாக பரத் அமர்ந்திருந்தான்.
அவனுக்கு அருகே கௌதமி அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிரில் அவர்களின் குடும்ப வக்கீல் அமர்ந்திருந்தார். அங்கிருந்து சற்று தள்ளி அமைந்திருந்த அந்த நீள் இருக்கையில் ரவியும் ரகுவும் அமர்ந்திருந்தனர்.
ரகுவை கண்டதும் பகலவனை கண்ட தாமரையாக மதியின் முகம் மலர்ந்திட, அவன் செய்தவற்றை பற்றி நண்பன் வழி கேட்ட செய்தி அவள் நினைவுக்குள் புகுந்து கொள்ள, மேலும் அவள் முகம் பிரகாசத்தை தத்தெடுத்தது.
அனைவரிடமும் ஒரு புன்னகையை சிந்தி விட்டு, வக்கீல் இடம் ஒரு வணக்கத்தை வைக்க, கௌதமி அவளை அமருமாறு கூறினார்.
அவர் கூறியதும் மதி கௌதமிக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமராமல், நேராக அந்த நீள் இருக்கையில் ரகுவிற்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
இந்த செய்கையில் கௌதமி அவளை உற்றுப் பார்க்க, அவள் அதை கண்டு கொள்ளாமல் கௌதமியிடம், “அத்த காலையிலையே என்னை வர சொன்னிங்க. இங்க பாத்தா எல்லாரும் வந்திருக்காங்க. ஏதாவது முக்கியமான விஷயமா?” என வினவினாள்.
அவள் பேசி முடிக்கும் முன்பே ஒரு கண்ணாடி குடுவையில் தண்ணீரை நிரப்பி ரகு அவள் முன் நீட்டினான்.
மதி அவனைப் பார்த்து மெலிதாக ஒரு புன்னகை மட்டும் சிந்திவிட்டு தண்ணிரை வாங்கி குடித்தாள்.
அவர்கள் இருவரின் செயல்களும் இயல்பானதாகவே இருந்தாலும், மற்றவர்களின் கண்கள் அதை ஒரு சிறு வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தது.
கௌதமியும் அவர்களைப் பார்த்தவாறு, அவள் கேள்விக்கு பதில் அளித்தார், “ஆமா மதி ஒரு முக்கியமான வேலை தான். அதுக்கு தான் உன்ன கூப்பிட்டேன். அதுக்கு முன்னாடி நீ சொல்லு ஏதாவது சாப்பிடுறியா?” என கேட்டார்.
“சரிமா” என்றவர், “அப்ப நாம ஆரம்பிக்கலாமா? என வக்கீலைப் பார்த்து கூறினார் கௌதமி.
இங்கு அனைவரும் கூடி இருக்கும் காரணத்தை வக்கீலே அவளிடம் விளக்கினார்.
தரன் குழும்பத்தில் ஒரு பங்குதாரராக மதியையும் சேர்ப்பதற்காகவே அவளை இங்கு அழைத்து இருப்பதாகவும், அது சம்பந்தமான கோப்புகளை தயாராக இருப்பதாகவும், அவற்றில் அவள் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறினார்.
உடனே மதி ரகுவின் பக்கம் திரும்பி அவனை ஒரு நொடி பார்த்துவிட்டு, கௌதமியிடம் திரும்பி மறுப்பாக ஏதோ கூற வர, அதனை தடுக்கும் விதமாக ரகு அவள் கையை பிடித்து அழுத்தினான்.
கௌதமியும் அவளை உணர்ந்து கொண்டு, “இங்க பாருடா மதி. இதை எதையும் மறுத்து பேச கூடாது. உனக்கு முன்னாடி வந்த என் மூத்த மருமகளுக்கு எழுதி வச்சதுதான்.
அதே மாதிரி தான் இப்போ உனக்கும் நான் எழுதி வைக்கிறேன். இதுக்கு அப்புறம் அடுத்து உங்களோட வாரிசுகளுக்கும் எழுதி வைப்போம். அதை யாரும் எதுக்காகவும் தடுக்கக்கூடாது, புரியுதா?” என்றார்.
கௌதமியின் வார்த்தைகளுக்கு முன்பாகவே, ரகுவின் பார்வை இங்கு மறுப்புக்கு இடமில்லை என்பதை அவளுக்கு உணர்த்தி விட, “சரிங்க அத்த”, என்னும் வார்த்தையோடு முடித்துக் கொண்டாள்.
அதற்கு மேல் அங்கு அனைத்து வேலைகளும் வேகமாக முடிந்திருந்தது. மதியை அனைவரும் சரியாக படித்துப் பார்த்தே கையெழுத்து இட சொல்ல, அவளும் அரை மணி நேரம் அந்த தாள்களை முழுதாகப் படித்துவிட்டே கையெழுத்திட்டாள்.
வேலையை முடித்துவிட்டு வக்கீல் அங்கிருந்து கிளம்பி விடும் ரகு, மதி ஒரு புறம் பேசிக் கொண்டிருக்க, ரவி, கௌதமி, பரத் என அவர்கள் ஒருபுறம் பேசிக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் மதி ரகுவிடம் தான் கழிவறை செல்ல வேண்டும் என உரைக்க அவனும் அவளுக்கு வழிகாட்டி விட்டு வந்தான்.
கழிவறை சென்று திரும்பி கொண்டிருந்தவள் காதுகளில் ஒரு குரல் வந்து விழ, அந்த குரல் சொன்ன செய்தி இவளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி அங்கேயே நிறுத்தி இருந்தது.