Advertisement

அத்தியாயம் 13

 

     கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று அய்யர் கூறியவுடன் சுருதியை பார்த்தவாறே அவந்திகாவை நோக்கி மாங்கல்யத்தை கொண்டு சென்ற ஜெயக்குமார் அவள் கழுத்தில் முதல் முடிச்சு போட்டிருந்தான்…

       நடப்பதை வெறித்து நோக்கியவாறு சுருதி இருந்த பொழுது தான் அது நிகழ்ந்தது…

          சுருதி யாரோ தன்னை குலுக்குவதை போல திடிரென்று  ஆட ஆரம்பித்திருந்தாள்… பின்பு மொத்த இடமுமே ஆட ஆரம்பித்திருந்தது….அப்பொழுதுதான் நடப்பதை உணர்ந்த சுருதி  “ஐயோ…பூகம்பம்…பூகம்பம்…எல்லாரும் வெளிய போங்க…வெளிய போங்க…”என்று கத்தினாள்…

       சுருதி   அவ்வாறு  கத்திக்கொண்டிருக்கும் போதே சட்டென்று அவள்  மேல் தண்ணி வந்து விழுந்ததும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து அடித்து பிடித்து எழுந்த சுருதி…தன் முன் அடக்க முடியா சிரிப்புடன் நிற்கும் தன் சின்ன அத்தை மற்றும் தனது தாய் ஜோதியை பார்த்து திருட்டு முழி முழித்து கொண்டிருந்தாள்…(அட கருமமே எல்லாம் கனவா…)

   “அடியே காலங்காத்தால சிரிப்பு காட்டாம வேகமா போய் குளிச்சுட்டு வா…பியூட்டி பார்லர்ல இருந்து ஆள் வரப்போறாங்க…”என்று சுருதியின் சின்ன அத்தை கூறும் பொழுதே அவர் மேல் விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார் ஜோதி…

     “ஜோதிய்ய்ய்ய்ய்ய்ய்….சிரிப்பை குறை…போதும் மா…”என்று ஏற்கனவே காண கூடாத கனவை வேற கண்டு தொலைத்த பயத்தில் இருந்தவள் தன் தாயும் சேர்ந்து சிரித்ததை நினைத்து கடுப்புடன் கூறினாள் சுருதி…

        சுருதி எழுப்ப என்று அடுத்து வந்த லக்ஷ்மியும் தன் தங்கையும் அண்ணியும் விழுந்து விழுந்து சிரிப்பதையும் தன் மருமகள் கொலைவெறியில் நிற்பதையும் பார்த்தவர் ஜோதியிடம் என்னவென்று விசாரித்தார்…ஜோதி நடந்ததை கூறியவுடன் அவரும் அவர்களுடன் சேர்த்து சிரிக்க ஆரம்பித்தார்…

         கோவத்தின் உச்சாணிக்கொம்புக்கே  சென்ற சுருதி மூவரையும் பார்த்து முறைத்து விட்டு குளியலறை நோக்கி சென்றாள்…

         தண்ணியை திறந்து விட்டு கீழே நின்றவளுக்கு தன் கனவை நினைத்து எங்கயாவது முட்டி கொள்ளலாம் போல தோன்றியது…தோன்றியதை செய்தும் இருந்தாள்….

    “கனவா இருந்தாலும் ஒரு நியாயம் தர்மம் வேண்டாமா மானம்கெட்ட மூளையை….இதெல்லாம் வெளிய சொன்ன காறி துப்பிற மாட்டாங்க… இன்னும் இரண்டு மணி நேரத்துல கல்யாணத்தை வைச்சுக்கிட்டு வரவேண்டிய கனவா இது….எப்படி தான் அவங்க ரெண்டு பேரையும் சேர்ந்து இப்படி நினைக்க எனக்கு தோணுச்சோ ….”என்று புலம்பியவரே குளித்து முடித்து உடை மாற்றி வெளியே வந்தவள் அங்கு ஏற்கனவே குளித்து ரெடியாகி நின்ற அவந்திகாவை பார்த்தவளுக்கு தன் கனவு தான் மீண்டும் மீண்டும் கண் முன் படமாக ஓடியது…

     தன் பின்ன தலையில் தட்டியவள் தலையை உலுக்கி கொண்டு அவந்திகாவை பார்த்து சிரித்தாள்…அவந்திகாவும் அவள் செய்வதல்லாம் பார்த்தவள் “இன்னும்…பூகம்பம் மதுரை மாநகரை விட்டு போகலையா…”என்று கேட்டவாறே அங்கிருந்த படுக்கையில் சென்று அமர்ந்தாள்..

      “உன்கிட்டையும் சொல்லிட்டாங்களா…”என்று தலையை துவட்டியவாறே கண்ணாடியின் முன் சென்று அமர்ந்தவாறு கேட்டாள் சுருதி…

       “எனக்கு மட்டுமா…நம்ம வாட்சப் குரூப்ல உன்னோட கல்யாண டாபிக்கே ஓவர் டேக் பண்ணிட்டு உன் பூகம்பம் மேட்டர் தான் டாப் ட்ரெண்டிங்ல போயிட்டு இருக்கு…அடுத்து இன்ஸ்டால ட்ரெண்ட் ஆக்கலாமான்னு யோசிச்சுட்டு இருக்காங்க… “என்று கண்ணாடியில் தெரிந்த சுருதியின் பிம்பத்தை பார்த்தவாறு கூறினாள் அவந்திகா….

     “என்னதுஉஉஉஉஉஉ…இவங்களுக்கு வேலையே இல்லையா…தலை மேல கல்யாணத்தை வைச்சுக்கிட்டு என்ன வேலை பாக்குறாங்க…இப்படி பட்ட குடும்பத்தில பிறந்ததை நினைச்சு நான் துக்கபடுறேன் துயரப்படுறேன்…வெக்கபடுறேன்…வேதனைபடுறேன்…..”என்று புலம்பியவாறே திரும்பி  அவந்திகாவை பார்த்தவள் அப்பொழுதுதான் கவனித்தாள் அவள் கண்கள் எல்லாம் சிவந்து தடித்து இருந்தது…

     “ஏய்ய்…என்ன ஆச்சு…கண்ணுல ஏதாவது விழுந்துருச்சா…கண்ணு ஏன் இப்படி சிவந்து இருக்கு…”என்று அவள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து வந்து அவந்திகாவின் அருகில் அமர்ந்து அவள் கண்ணை தொட்டு பார்த்தவாறு கேட்டாள் சுருதி….

    “ஓஒஓ ஒன்னும் இல்லை சுருதி…ஏதாச்சும் விழுந்திருக்கும்…”என்று சுருதியின் கையை எடுத்துவிட்டவாறு கூறினாள் அவந்திகா…

       சுருதி கேட்டவுடன் மனம் முழுவதும் தானும் ஜெயக்குமாரும் பேசியதை நினைத்து மீண்டும் கண்கலங்க ஆரம்பித்தது…

         அவந்திகாவின் கண் கலங்கியவுடன் “வலிக்குதா அவந்தி…”என்று பதறியவாறு கேட்டாள் சுருதி…

        அவள் பாசத்தை நினைத்து தன்னையே கீழாக உணர்ந்தாள் அவந்திகா…நேற்று இருவரும் பேசாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது..

       அவந்திகா அடுத்து மறுமொழி கூற வருவதற்குள் அறைக்குள் அழகுநிலைய பெண்கள் உள் நுழைந்தனர்…

        அடுத்து பேச்சுவார்த்தையை இல்லாமல் எல்லாம் துரித கதியில் நடந்தது…

       மணமகன் அறையிலோ ஜெயக்குமாரின் நண்பர்கள் இணைந்து அவனை ஒரு வழி பண்ணிக்கொண்டிருந்தனர்…

         தலையில் ஏதோ ஜெல்லை தடவி விட்டு அதை மாற்றி மாற்றி ஐவரும் ஜெயக்குமாரின் முடியை சீவி விட்டு கொண்டே இருந்தனர்…ஜெயக்குமாரோ இது எதிலும் கவனத்தை செலுத்தாமல் ஏதோ கனவுலகத்தில் சஞ்சரித்து கொண்டிருந்தான்….மணமகனுக்கே உரிய கல்யாண கனவுகள் கண்களில் தெறிக்க ஒரு புது வித அழகுடன் புன்னகை முகத்துடன் அமர்ந்திருந்தான் ஜெயக்குமார்….

        செல்வாவோ தன் அண்ணனை முறைத்து பார்த்தவாறே அமர்ந்திருந்தான்….அவனால் இங்கு நடப்பது அனைத்தையும் ஜீரணிக்கவே முடியவில்லை…

          அந்த அறையில் இருந்த கே கே ஜெயக்குமாரின் நண்பர்கள் செய்யும் சேட்டைகளை பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு திடிரென்று நேற்று பார்த்த சுந்தரம் ட்ராவல்ஸ் வடிவேலு காமெடி ஞாபகம் வந்தது…அப்படத்தில் இப்படி தான் மணமகனை அழகுபடுத்துறோம் என்று முரளியும் வடிவேலுவும் செய்த கூத்தை நினைத்துப்பார்த்தவன் ஜெயகுமாருக்கும் அந்த நிலைமை வரக்கூடாது என்று ஜெயக்குமாரின் நண்பர்களை அதட்டியவன் ஜெயக்குமாரை அவனாகவே  கிளம்ப சொன்னான்…

       அப்பொழுது தான் கனவில் இருந்து வெளியே வந்த ஜெயக்குமார் தன் தலையை பார்த்தவன் அதிர்ந்தான்…”டேய் என்ன டா…பண்ணிதொலைச்சிங்க…”என்று ஐவரையும் பார்த்து முறைத்தவன் குளியலறைக்குள் சென்று சிங்க்ல் தலையை மட்டும் காட்டி  ஷாம்பூ போட்டு அலசி வந்தவன் ஹேர் ட்ரையரால் தலையை காய வைத்தவரே தன் நண்பர்கள் என்றும் பார்க்காமல் அசிங்க அசிங்கமாக திட்டினான்…

  அந்த அறையில் இருந்த அனைவரும் காதை மூடியவாறு இருந்தனர்…அவனின் நண்பர்கள் சிரித்தவாறே தலையை ஆட்டிக்கொண்டிருந்தனர்…

     நிலவரம் இப்படி சென்றுகொண்டிருந்த வேளையில் திருமணத்திற்கு சொந்த பந்தங்கள் எல்லாம் வர ஆரம்பித்திருந்தனர்…வருபவர்களை முத்துவேலின் மொத்த குடும்பமும் அதாவது ஐந்து ஜோடிகளும் முகம்கொள்ளா சிரிப்புடன் வரவேற்று கொண்டிருந்தனர்….

          அப்பொழுது திருமணத்திற்கு வந்த பெண்மணி “எல்லாரும் சேர்ந்து பாக்க அப்படி இருக்கு…அடியே ஜோதி நைட்டு சுத்தி போட்ருடி…கண்ணு பட்டுற்கும்…”என்று கல்கண்டை எடுத்தவாறே ஜோதியிடம் கூறிவிட்டு உள்சென்றார்…

          ஐந்து பெண்களும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டனர்…

 

     மங்கள வாத்தியங்கள் முழங்க…குடும்ப நபர்கள் அனைவரும் மணமேடைக்கு கீழே சுற்றி நின்றிருக்க….ஐயர் சொல்லும் மந்திரங்களை கூறியவாறு இருந்தான் ஜெயக்குமார்…

       பொண்ணை கூட்டிட்டு வாங்க என்று ஐயர் கூறியவுடன் அடர் சிவப்பு நிற பட்டில்… தோழிகள் மற்றும் தன் குடும்ப பெண்களின் புடைசூழ….அழகு என்று வார்த்தைக்கே இவள் தான் பொருள் என்றும் நினைக்கும் அளவிற்கு அழகின் மொத்த உருவாக…தனக்கும் வலிக்காமல் தரைக்கும் வலிக்காமல் அன்ன நடையிட்டு வந்தாள் சுருதி…எல்லாம் சரி தான்…ஆனால் தலை மட்டும் குனிந்து வந்திருக்க வேண்டுமோ…

            சுருதியை பார்த்தவன் கண்சிமிட்ட கூட மறந்து அவளையே பார்த்தவாறு இருந்தான்…”அடியே குள்ள கொரங்கு…நீ இவ்வளவு அழகா…இது தெரியாம இத்தனை நாள் வேஸ்ட் ஆகிட்டோமே…”என்று நினைத்தவாறு அவளை பார்த்தான்…

        “இவன் ஏன் இப்படி பாக்குறான்… நொண்டி குமாரு கண்ணை நோண்டனும்…”என்று அவனை பார்த்து உதடு சுளித்தவாறு முறைத்தாள் சுருதி…

       சுளித்த சிவந்த உதடும் அதற்கு போட்டியாக மின்னும் சிவப்பு நிற மூக்குத்தியும் பார்த்தவன் மனதுக்குள் A செர்டிபிகேட் குடுக்கும் அளவுக்கு எண்ணங்கள்…தன் மனம் போகும் போக்கை நினைத்து பயந்து விட்டான்…

       அவன் அருகில் வந்து சுருதி அமர்ந்த பிறகு தான் முன்னாடி திரும்பிய ஜெயக்குமார் பார்வையில் விழுந்தது தனக்கு எதிரே இப்பயோ அப்பயோ என்று விழுக தயாராக இருக்கும் கண்ணீர் மிதக்கும் கண்களுடன் நின்றிருந்த அவந்திகாவை தான்..அவளை நினைத்து பாவமாக தான் இருந்தது…ஆனால் தன்னால் என்ன செய்ய முடியும்…

       கெட்டிமேளம் கெட்டி மேளம் என்று ஐயர் கூறியவுடன் மங்கள நாணை தன் அருகில் தலை குனிந்து அமர்ந்திருந்த சுருதியின் நகைகளால் நிரம்பிருந்த  கழுத்தில் மூன்று முடிச்சையும் அவனே போட்டு பலமாக சுருதியுடன் தன் உறவை பிணைத்துக்கொண்டான்….

      அடுத்து மாங்கல்யத்தில் குங்குமம் வைக்க மாங்கல்யத்தை கையால் சிறிதாக உயர்த்தி பிடித்திருந்தாள் சுருதி…ஜெயக்குமாரின் இடது  கரம் அவள் பிடித்திருந்த கரத்துடன் அழுந்தி இன்னொரு கரத்தால் குங்குமம் வைத்துவிட்டான்…அவன் வைத்தவுடன் ஒரு துளி கண்ணீர் துளி  அவன் வைத்த குங்குமத்தில் சரியாக வந்து விழுந்தது…

      கண்ணீர் துளி விழுந்தவுடன் நம்ம என்ன அழுகுறோம்னு தெரியாமலேவா அழுகுறோம் என்று நினைத்தவாறு நிமிர்ந்த சுருதி கண்டது ஜெயக்குமாரின் சிரிப்புடன் கூடிய  கலங்கிய விழிகள் தான்…இவள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே இன்னொரு கண்ணீர் துளி இவள் மாங்கல்யத்தில் விழுந்தது…

    “டேய் கதை படி நான் தானே டா அனந்த கண்ணீர் வடிக்கணும்…”என்று நினைத்தவாறே சுற்றி பார்த்தாள்…ஜெயக்குமாரை போலவே ஜோதி…முத்துவேல் …கே கே…அவந்திகா…என்று அனைவரும் முகம் கொள்ளா சிரிப்புடன் கண்கள் கலங்க நின்றிருந்தனர்…

        

   ஜெயக்குமார்க்கு தான் இத்தனை வருடம் காத்திருந்ததே இதற்காக…இவளுக்காக போல தான் என்று ஒரு எண்ணம்  அவள் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டியவுடன் தோன்றியது…தன்னை அறியாமல் கண்களுக்கும் கலங்கின…இப்பொழுதே அவளை அணைத்து தன் சந்தோசத்தை வெளியிட வேண்டும் போன்று ஒரு உந்துதல்…சுருதியை திரும்பி பார்த்தான்…அவளோ சுற்றி சுற்றி பார்த்து முழித்து கொண்டிருந்தாள்…

     லேசாக திரும்பி அவளை தோளோடு அணைத்து உடனே விடுவித்தும் இருந்தான்…அனைவரும் ஆங் என்ன என்று பார்த்திருந்தனர்…டேய் இவங்களா நொடிக்கொரு தடவை சண்டை போட்டவங்கனு…அடுத்து எல்லாரும் சிரித்திருந்தனர்…

     சுருதியோ தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமலே இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்….ஏதோ கனவில் இருப்பது போலவே இருந்தது…ஜெயக்குமார் அணைத்தவுடன் தன் முட்டைக்கண்களை விரித்து அவனை பார்த்தாள்…

     அவள் பார்ப்பதை பார்த்தவன் மாய கண்ணன்னாக கண்ணை சிமிட்டி சிரித்தான்…சுருதிக்கு மயக்கமே வரும்போல் இருந்தது…அவள் மூளை மீண்டும் மீண்டும் என்னடா நடக்குது இங்கே என்று சொல்லிக்கொண்டே இருந்தது…

  அடுத்து அவன் கையை பிடித்தவாறு அக்னியை சுற்றி வரும் சடங்கில் அவன் விரலை பிடித்தவள் அவனையே முறைத்து பார்த்தாள்…

     அவனோ எதுக்கு டா இவ முறைக்குறா என்று யோசித்தவாறு அவளை முன்னேவிட்டு இவன் அவள் கையை பிடித்தவாறு பின்னே சுற்றினான்…

         அடக்கருமமே…இவன் என்ன இப்படி வளர்ந்து தொலைச்சு இருக்கான்…  அப்படி என்னதான் தான் சாப்டுவாங்களோ இப்படி வளர்ந்து கெட்டு இருக்கானுங்க…இன்னைக்கு ஹை ஹில்ஸ் வேற போட விட மாட்டானுங்க…ரெண்டு பேர் Jodi பொருத்தமும் நல்ல கிங்காங்கும் அந்த படத்துல வர பொண்ணு மாதிரில இருக்கும்…(நிஜமா ஓவர்…இதெல்லாம்…)

ஜெயக்குமாரோ ஒவ்வொரு வினாடியையும் ரசித்து செய்து கொண்டிருந்தான்…

குடும்ப புகைப்படம் எடுக்கிறோம் என்று ஒரு கொடுமை நடந்தது பாருங்களேன் சுருதி நொந்தே விட்டாள்…அவர்கள் குடும்பத்தில் அனைவருமே உயரமானவர்கள்…அனைத்திலும் ஒரு விதிவிலக்கு உண்டல்லவா அதே போல் தான் இந்த குடும்பத்திலும் சுருதியும் அவளின் அப்பத்தாவும் குட்டையானவர்கள்…பள்ளி படிக்கும் அவர்கள் குடும்பத்து வாண்டுகள் கூட அவளை விட உயரமாக இருப்பர்…இவ்வளவு ஏன் சுதாகர் கூட இவளை விட இரண்டு இன்ச் உயரம் அதிகம்…

       மணமக்கள் என்பதால் நடுவில் நிற்க அவளை சுற்றி அவர்கள் குடும்பத்தை சேர்ந்த 19  பேர் கே கே வும் உட்பட சுற்றி நின்றனர்….அந்த  போஸ் பாக்கவே பயங்கர காமெடியாக இருந்தது…அனைவரின் உயரத்தையும் மனதால் சபித்து கொண்டே நின்றிருந்தாள்…

  அடுத்து எல்லா சடங்குகளும் குடும்ப நபர்களின் கேலி கிண்டல்களுக்கு இடையே ஜெக ஜோதியாக நடந்தது…பானைக்குள் மோதிரம் எடுப்பது…தலையில் அப்பளம் உடைப்பது என்று எல்லா சடங்குகளிலும் எப்போதும் போல இருவரும் சண்டை பிடித்து…விளையாடி ஆளுக்கு ஒன்று விதம் வெற்றி பெற்று இருந்தனர்…

       நடப்பது எதையும் நம்ப முடியாமல் இருந்தாலும்…அதற்கு அத்தாட்சியாக தன் கழுத்தில் தொங்கும் மாங்கல்யத்தை பத்து பதினைந்து தடவைக்கும் மேல் தொட்டு தொட்டு பார்த்திருந்தாள் சுருதி…காலையில் போல் இதுவும் கனவோ என்று தான் அவளுக்கு உள்மனதில் தோன்றியது…ஆனால் எதுவும் கனவு இல்லை என்று ஒவ்வொரு தடவையும் அவள் கழுத்தை தொட்டு பார்க்கும் போதும் இருந்த மாங்கல்யம் சொன்னது இது நினைவு தான் என்று…

    மதியம் போல் மண்டபத்தில் இருந்து அனைவரும் ஜெயக்குமாரின் வீட்டுக்கு சென்றனர்…முதலில் மணமகன் வீட்டுக்கு தான் செல்ல வேண்டும்…அதனால் தான் அனைவரும் அங்கு சென்றனர்…இவர்கள் இங்கு வருவதற்கு முன்பே அங்கிருந்து சென்ற லட்சுமி அனைத்து ஏற்பாடுகளும் செய்து மணமக்களை ஆரத்தி எடுக்க அவந்திகாவை நிற்பாட்டி இருந்தார்…அவந்திகாவும் சோகங்கள் அனைத்தும் நெஞ்சோடு இருந்தாலும் முகத்தில் சிரிப்பை படரவிட்டு மணமக்களை ஆரத்தி எடுத்தாள்…

          வலதுகாலை எடுத்துவைத்து சுருதி இத்தனை நாளாக தன் அத்தை வீடாக மட்டுமே தனக்கு  இருந்த வீட்டை தன் புகுந்தவீடாக மாற்றினாள்…

              அடுத்து பால் பழம் வழங்கும் சடங்கு…மணமகனின் அண்ணி தான் இந்த சடங்கை செய்ய வேண்டும்…அவனுக்கு உடன் பிறந்த அண்ணன் இல்லாதால் தூரத்து சொந்தமான அண்ணி முறை ஆகவேண்டிய ஒரு பெண்மணி வந்து செய்தார்…அனைத்தும் முடிந்து இருவரும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருந்தனர்…அவர்களை சுற்றி அவர்களது குடும்பம்…முக்கிய உறவினர்கள்…ஜெயக்குமாரின் நண்பர்கள் என்று அனைவரும் இருந்தனர்…

           அப்பொழுது தான் அங்கே ஜெயக்குமாரின் நண்பனான பாலாவின் மடியில் இருந்த அவனின் நான்கு வயது குழந்தை எழுந்திருந்து..ஜெயக்குமாரின் அருகில் வந்து நின்றது…

        “சுசி குட்டி என்ன டா செல்லம்…”என்று கொஞ்சியவாறே மடியில் தூக்கி உட்கார வைத்தான்….

      “இவங்க யாரு மாமா…”என்று கொஞ்சும் குரலில் கேட்டது பாப்பா…

        “இது உங்க அத்தை சுருதி டா…எங்கே ஹாய் சொல்லு பார்ப்போம் அத்தைக்கு…”என்று கூறினான் ஜெயக்குமார்…

       குழந்தை அருகில் வந்ததுமே அக்குழந்தையை தான் சிரித்தவாறு பார்த்திருந்தாள் சுருதி….

          முட்டைக்கண்களை விரித்து சுருதியை பார்த்த குழந்தை தன் தந்தையை நோக்கி திரும்பி “இந்த அத்தை தான் மாமாவோட ஜெர்ரியா பா…”என்று இமை தட்டி அவ்வளவு அழகாக கேட்ட குழந்தை….ஜெயக்குமாரை பார்த்து”அப்பறம் ஏன் சண்டை போடாம இப்படி இருக்கீங்க…டாம் அண்ட் ஜெர்ரி நல்லா சண்டை போதும்ல…”என்று கேட்டது குழந்தை…

             திடிரென்று கேட்டவுடன் என்ன சொல்லவேதென்று தெரியாத பாலா தான் இருக்கும் சூழலை மறந்து “அப்டியே அம்மா மாதிரி…யார்ட்ட சொல்ல கூடாதுனு சொல்றோமோ அப்டியே அவங்ககிட்ட சொல்றது….இங்கே வா சுஷி…”என்றான் பாருங்களேன்…ஏற்கனவே அந்த பாப்பா சொல்லியதை நினைத்து சிரித்தவர்கள்…அவன் மனைவியை பற்றி தான் அனைவர்க்கும் தெரியுமே…வந்து அடிக்க போகிறாள் என்று இன்னும் சிரித்தனர்….

     அதற்கு பிறகு தான் உணர்ந்த பாலா ஐய்யயோ அவளுக்கு தெரிஞ்சு செத்தேன் நான்…என்று சுற்றி சுற்றி பார்த்தான் அவளை காணவில்லை ….

அப்பாடா என்று அவன் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் சமையல் அறையில் லட்சுமி அம்மாவுடன் இருந்த பாலாவின் மனைவி தீபா ஒரு கையில் செல்பேசியுடனும் இன்னொரு கையில் பூரி கட்டையுடனும் கொலைவெறியுடனும் வந்து நின்றாள்…

          அவளை பார்த்தவுடனே திரும்பி தன் நண்பர்கள் ஐவரையும் பார்த்தான்…இவனை கண்டுகொள்ளாமல் அனைவரது விழிகளும் சுசி பாப்பாவின் மேலே வைத்து கொண்டு நமட்டு சிரிப்பு சிரித்தனர்…அவள் அருகில் வரவும் “நீ என்னை அடி மா…அது கூட பிரச்னை இல்லை…ஆனால் யாரு என்கூட இருந்துகிட்டே உனக்கு உடனுக்கு உடனடியா தகவல் குடுக்குறாங்கனு மட்டும் சொல்லு மா…அது போதும்…”என்று தன் நண்பர்களை முறைத்தவாறு தன் மனைவியிடம் கேட்டான்…

       அவளோ “அவங்க என்ன பொய்யா சொல்லறாங்க…உங்க லட்சணத்தை தானே சொல்லறாங்க…உங்களே திட்டுறதெல்லாம் வேஸ்ட்…இன்னைக்கு நைட் நீங்க தான் பாத்திரம் விளக்கிட்டு…பாப்பாவை தூங்க வைக்குறிங்க…”என்று கூறிவிட்டு மீண்டும் சமயலறைக்குள் நுழைந்து கொண்டாள்…

       பாலாவோ கெஞ்சிய படியே அவள் பின்னாடியே சென்றான்…அனைவரும் அதை பார்த்து சிரித்தனர்…அவன் மகளும் கிலுக்கி சிரித்தாள்…

பாலாவோ தன் நண்பர்களை பார்த்து “டேய்…இது மித்திர துரோகம் டா…இதெல்லாம் அந்நியன் பார்த்துட்டே இருப்பாரு டா…உங்களுக்கு கருணை புராணம் படி தண்டனை குடுப்பாருடா…”

     “லூசு பயலே அது கருட புராணம் டா…போடா போ…”என்று அவன் நண்பர்கள் கோரஸாக கூறினர்…

அவன் அதை கேட்கவெல்லாம் அங்கே நிற்க வில்லை அவன் மனைவியை சமாதான படுத்த சென்றிருந்தான் …

              அனைவரும் சிரித்து முடித்தவுடன் ஜெயக்குமார் அந்த சுசி பாப்பாவிடம்”நாங்க டாம் அண்ட் ஜெர்ரி இல்லை சுசி குட்டி… நானும் உங்க அத்தையும் உனக்கு பிடிச்ச ரஜினிமுருகன் படத்துல வர சிவாவும்…கீர்த்தியும் டா”என்று கூறியவாறே சுருதியை பார்த்து கண்சிமிட்டினான்…

         அவன் சிமிட்டியவுடன் சுருதிக்கு படபடவென்றே வந்துவிட்டது…கோவமாக அவனின் அருகில் தள்ளி அமர்ந்தவள் இப்பொழுதும் அவனை குனியுமாறு சைகை செய்தாள்…

            அவள் குனிய சொன்னவுடன் ஜெர்க் ஆகியவன் “ஆத்தாடி…கண் அடிச்சதுக்கு கன்னத்துல அடிப்பா போலயே…”என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு அந்த குழந்தையை தூக்கியவாறு அந்த இடத்தை காலி செய்திருந்தான்…

         வாவ்…சுருதி…நம்ம குனிய சொன்னதுக்கே இப்படி பயந்து ஓடுறானே…நல்ல குடும்ப தலைவி ஆகுறதுக்கு எல்லா தகுதியும் நமக்கு வந்திருச்சு போலயே…எதுக்கும் பை பாஸ் அண்ணாவோட wifeட்ட கிளாஸ் போகணும்…என்று நினைத்தவாறு அமர்ந்திருந்தாள்…

            அடுத்து அனைவரும் மணமகள் வீடான சுருதியின் வீட்டுக்கு சென்றனர்…அங்கயும் பால் பழம் குடுக்கும் சடங்கு இருக்கிறது…அதையும் முடித்தனர்…அதற்குள் மாலை 4  மணி ஆகிருந்தது…

            மாலை 6 மணி போல சீர் கொடுக்கும் சடங்கு மற்றும் வீடு பார்க்கும் சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது…

         அதாவது என்னவென்றால் தங்கள் மகள் வாழப்போகும் வீட்டை சென்று பார்த்து…அவள் தேவைக்காக பெண் வீட்டார் வாங்கிய சீர் பொருள்கள் கட்டிலிருந்து கரண்டி வரை அனைத்தும் சொந்தபந்தங்களின் பார்வைக்கு வைக்கபடும்…சில சமூகத்தில் பெண்ணுக்கு அவர்கள் என்ன என்ன துணிகள் கொடுத்து விடுகின்றனர் என்பது வரை பார்வைக்கு வைக்கப்படும்…இதுவும் ஒரு விதத்தில் கெத்தை காம்மிக்கிற சடங்கு தான்….காலையில் சாம்பார் சாதம் போட்டு திருமணத்தை முடித்தபடியால் இரவில் கறிசோறு போட்டு கடமையை முடிப்பர்…

 

   அதை சொல்லி சுருதியை கிளம்ப சொன்னவுடன் அவளும் நல்ல பிள்ளையாக குளிக்க சென்றாள்…குளித்து வெளிவந்து மேக்கப் பண்ணி கிளம்புவதற்கு ஆறு மணி ஆகிவிட்டது…

          பிறகு சொந்தபந்தங்கள் புடைசூழ வேனில் ஜெயக்குமாரின் அருகில் அமர்ந்தாள்…அவனோ இவளை திரும்பி கூட பார்க்கவில்லை…அடுத்து போகப்போகும் இடம் அப்படி…தெரிந்தால் தன்னை கடித்தே தின்று விடுவாள்…அதனால் மனதுக்குள் பயம் இருந்தாலும் வெளியே காட்டாமல் ஜன்னலை பார்த்தவாறு வந்தான்…

              “என்ன அத்தை வீட்டுக்கு போக இவ்வளவு நேரமா ஆகுது…நொண்டிக்குமார் ட்ட கேக்கலாம்னு நினைச்சா இவன் என்னமோ ஜன்னலையை பார்த்துட்டு வர்ரான்…என்னமோ பா…”என்று எப்பொழுதும் போல் மனதுக்குள் புலம்பியவாறு வந்தாள்…

          மேலும் சில மணித்துளிகள் எடுத்துக்கொண்டு வண்டி நின்றவுடன் அனைவரும் இறங்க கடைசியாக இருவரும் இறங்கினர்…இறங்கிய இடத்தை பார்த்தவள் அதிர்ந்து நின்றிருந்தாள்…

   

 

ஏன் அவளையே

நினைத்து கொண்டிருக்கிறாய்…

உலகத்தில் வேறு பெண்களே இல்லையா…

என்று கேட்கிறார்கள்….

இருக்கிறார்கள் லட்சம் கோடி பெண்கள்….

அவள் விமோச்சனம்…

 

        ஆதிக்கம் தொடரும்…

                      

         

         

     

  

 

Advertisement