Advertisement

          அழகு 33

     தாயின் மடியில் தலை வைத்திருந்தவனின் மொபைல் அடித்துக் கொண்டே இருக்கவும் தாயம்மா தான் , “போன் அடிச்சிட்டே இருக்கு ராசா , நீங்க போய்  என்னனு பாருங்க ,கல்யாணத்த நல்லபடியா முடிச்சிட்டு அம்மாகிட்ட பேசுவீங்களாம்” எனவும் ,

மனமே இல்லாது எழுந்தவன் , ” ம்மா நான் போய்ட்டு வாறேன் .நீங்க கொஞ்ச நேரம்  படுங்க. தாயம்மா பார்த்துக்குங்க” என்றவன் மனைவியைப் பார்க்க அவள் அவனைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவன் பார்வையைப் படித்தவள் , “அத்தை அழாம கொஞ்ச நேரம் தூங்குங்க … நான் இத்தனை நாள் சொன்னது போலவே செய்தேனா. நான் இப்போ வந்துடுறேன்” என்றவள் அரவிந்த் பின் சென்றாள்.

வெளியே வர அவன் போனில் பேசிக் கொண்டு இருக்கவும்  அவனை தொந்தரவு செய்யாது அனன்யாவோடு சென்று அமர்ந்துக் கொண்டாள். அதன் பிறகு வந்தவர்களை வரவேற்று மறுநாள் அதிகாலை முகூர்த்ததிற்கான வேலைகள் செய்யவே  இருவருக்கும் சரியாக இருந்தது.

இரவில் ஜானகியின் அறையில் அமர்ந்து அனன்யாவும் ராதிகாவும் பேசிக் கொண்டு இருந்தனர். அனன்யா ராதிகாவிடம் ஜானகியின் மாற்றத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு இருந்தாள்.

“அனு நான் உன் அண்ணி தானே , நான் வேற உங்கண்ணன் வேற இல்லையே , அம்மாவ குணப்படுத்த உங்கண்ணா முயற்சி செய்தா நன்றி சொல்லுவியா” என்று உரிமையாக கேட்கவும் ,

“ஐயோ அண்ணி சாரி சாரி… இனி நான் தேங்க்ஸ் சொல்ல மாட்டேன்”

” அப்படியே இந்த சாரியையும் விட்டுறு”

மகள் மருமகள் இருவரின் பேச்சை மகிழ்ச்சியாகக் கேட்டுக் கொண்டு இருந்த ஜானகிக்கு பழைய ஞாபகங்கள் வர தலையைப் பிடித்தவர் முன்பு போல் அல்லாது “தாயம்மா தலை வலிக்குது மாத்திரைப் போட்டுட்டு படுத்துக்கிறேன்.” என்றவர் அனுவிடம் , “போம்மா போய் நேரத்தோட படு காலையிலயே எழனும் , அஞ்… ராதிகா நீயும் போம்மா “

“அத்தை நீங்க விரும்பின பெயர்லக் கூப்பிடுங்க … ஆனா இத்தனை நாள் சொன்னதை யோசிச்சு பார்த்துட்டே இருங்க” என்றவள் அனுவோடு கிளம்பினாள்.

” அனு அத்தை நார்மலாகனும்னா நாம இது போல சில விஷயங்களை தாங்கித்தான் ஆகனும். அதனால நீ எதுவும் நினைச்சு கவலைப்படாம, புதுப் பொண்ணா எங்க அண்ணன நினைச்சு கனவு காணு சரியா … நானும் உங்கண்ணனும் அத்தைய நல்லா பார்த்துப்போம்”

“ம்…. சரி அண்ணி , கொஞ்சமா இருந்த கவலைக் கூட இப்ப இல்லாததுப் போலத் தோணுது” பேசிக் கொண்டே அனுவின் அறையை அடைந்தனர்.

“நீ இங்க  டிரஸ் சேன்ஜ் பன்னிட்டு வெய்ட் பன்னு , நானும் அங்கப் போய் மாத்திட்டு வந்துடுறேன். காலையிலயே பியூட்டிசியன் வந்துடுவாங்களாம்” என்று விட்டு அவளறைக்குச் சென்றாள்.

ராதிகா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தது தான் அவளுக்குத் தெரியும். அதன் பிறகு காற்றில் மிதக்கும் உணர்வுதான் அவளுக்கு….வேறு என்னக் காரணம் இருக்க முடியும் , அவள் அந்த அறையில் நுழைந்தாலே அரவிந்த் கையில்தானே இருப்பாள்.

சின்ன சின்ன கண்ணசைவில்

உன் அடிமை ஆகவா

செல்ல செல்ல முத்தங்களில்

உன் உயிரை வாங்கவா

 லாலி லாலி

நானுன் தூளி தூளி…

எப்போதும் அவன் தூக்கும் போதெல்லாம் அரண்டு விழித்து அவன்  சட்டையை இறுகப் பற்றிக் கொள்ளும் ராதிகா , இன்று கணவனின் கையில் இருக்கிறோம் என்ற நினைவிலும் உரிமையிலும் அவன் கழுத்தைச் சுற்றி மாலையாகப் போட்டுக் கொண்டு , உதட்டோரம் புன்னகைத் தேக்கி , விழிகளில் மையலோடு கணவனைப் பார்த்தாள்.

எப்போதும் போல் அல்லாது இன்று கையில் தவழும் மனைவியின் உடல் மொழி அவனுக்குத் தெரியாது போகுமா … அவள் விழிகளிலயே அனைத்தும் படிப்பவனுக்கு இன்று அவளை முழுதும் படிக்கும் ஆர்வம் பிறந்தது.

கட்டிலில் விடக் கூட மனமில்லாது கையில் வைத்திருந்தவனுக்கு கடமைகள் நினைவு வர , ” இப்படிப் பார்த்தா எப்படி இறக்கி விடுறது…ம்” என்று புருவம் உயர்த்தி கேட்கவும் ,

“ஏன் வெய்ட்டா இருக்கேனா … இறக்கி விட யோசிக்கிறீங்க.. ம்” அவனைப் போலவே புருவம் உயர்த்தி அவளும் கேட்கவும்…,

அந்த அழகில் லயித்தவன் , “காலம் முழுசும் பூவ தூக்கி வச்சுட்டு இருப்பேன் தெரியுமா”

“அப்ப அப்படியே வச்சுருங்க” என்று  ராதிகா புன்னகைக்கவும்,

அவளை அப்படியே மடியில் தாங்கி கட்டிலில் அமர்ந்தவன் ,

” காலையில மீசைய இழுத்தியே அப்படி இழு”

“ஏன் “

“இப்படி பேசுறது என் பொண்டாட்டி தானா , இல்ல கனவு ஏதும் கண்டுட்டு இருக்கேனா அப்படினு தெரிஞ்சுக்கத்தான் “

அவன் சொன்னதும் அவன் காதைப் பிடித்து திருகியவள் “இப்ப சொல்லுங்க கனவா , நிஜமா “

“ஆ…. நிஜம் தான் நிஜம் தான் … ஏன் ஸ்வீட்டி….இந்தக் காத ….. அதாவது ப்யார் , பிரேமம் , லவ் இப்படி எதுவாது என் மேல வந்துருக்கா”

அவன் மடியில் நன்கு அமர்ந்து கொண்ட வளை அணைத்துப் பிடித்துக் கொண்டே கேட்கவும் ,

“இல்லையே”

“அது தான இவ்வளவு நேரம் என் பொண்டாட்டி தானானு டவுட்ல இருந்தேன். இப்ப ஆல்  கிளியர்… அதுவும் கிறிஸ்டல் கிளியர் … ” என அவள் இடையில் கை வைத்துக்கொண்டே இரட்டை அர்த்தத்தில் சொல்லி முறுவலித்தவன் உதட்டில் பட்டென்று கையால் அடித்தவள் , இடையில் இருந்து கையினை விலக்கி விட்டு ,

” இப்படி டபுள் மீனிங்ல அசிங்கமா பேசாதிங்கனு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்”

“இப்படி அடிச்சிட்டே இருந்தா நான் பாவமில்லயா …. உனக்கு ஒரு நாள் அசிங்கமா பேசறதுனா என்னனு கிளாஸ் எடுக்குறேன் பார்…. ஷ் … உதடு வலிக்குது டியர் … உனக்கு அடிக்கனும்னு தோணிச்சுனா , இந்த உதட்டாலயே ஒரு கிஸ் அடிச்சிரு சரியா”

அவன் வலி என்றதும் “சாரி சாரி ரொம்ப வலிக்குதா… “

“இல்ல விடு… சொல்லு என் மேல காதல் வரலயா” என்று கேட்டவனின் கண்களைப் பார்த்துக் கொண்டே ,

‘இல்லை’ என்பது போல் தலையாட்டியவள் ,

“ரொம்ப பிடிச்சிருக்கு …. உங்கள ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு… அதுக்குப் பேர் காதலா தெரியாது … அதுக்கும் மேல … வேற வார்த்தைகள் இருந்தாப் போட்டுக்கோங்க” சொன்னது தான் தாமதம் , ராதிகாவின் இதழோடு இதழ் சேர்த்திருந்தான்.இதழ் விலக்க மனமில்லை , நேரம் ஆக ஆக அவனை கழுத்தோடு இறுக்கிக் கொண்டாள்.

மூச்சுக்கு தவிக்கவும் தான் விட்டான்.அதுவரை கண்களை மூடியிருந்தவள் , அவன் முகம் காண தயங்கி அவன் நெஞ்சிலயே தன் முகம் புதைத்துக் கொண்டாள்.

நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன் , “தேங்க்ஸ் டா … தேங்க்ஸ் ” எனவும் ,

நெஞ்சில் இருந்து முகத்தை எடுத்தவள் , அவன் கையையும் தட்டி விட்டு விட்டு ஒன்றும் பேசாது அங்கிருந்த மர அலமாரியைத் திறந்து மாற்றிக் கொள்ள வேறு உடைகள் எடுத்துக் கொண்டு குளியலறை நோக்கிச் சென்றாள்.

அவள் முன்பு வந்து தடுத்தவன் , மாற்றும் துணிகளையும் வாங்கி கீழே போட்டுவிட்டு ,”ஸ்வீட்டி நான் இப்ப கிளம்பறவரை இந்த புடவைலையே இருடா .. இங்க பாரு உன் சேலைக்கு மேட்சிங்கா ஷர்ட் போட்டுருக்கேன். ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம் .. ” என்றவன் , அவளோடு இனணந்து நிறைய போட்டோக்கள் எடுத்துக் கொண்டான்.

“ஒய் கோபம் டியர் “

முகத்தை திரும்பவும் உம்மென்று வைத்துக் கொண்டு , “இப்ப எதுக்கு தேங்க்ஸ் சொன்னீங்க”

“அது…. அம்மாவோட மாற்றங்களுக்கு , அப்புறம்… இப்ப சொன்னியே காதலுக்கும் மேல ஒரு வார்த்தை இருந்தா போட்டுக்குங்கனு அதுக்கும் தான் “

“ஓ … அப்படியா … தேங்க்ஸ் … என்னைக் கல்யாணம் செய்ததுக்கு தேங்க்ஸ்…. இங்க வீட்ல ஒருத்தியா என்னை நினைக்க வச்சதுக்கு தேங்க்ஸ் ….இந்த டிரஸ்க்கு தேங்க்ஸ் அப்புறம் …..” என்று அடுக்கிக் கொண்டே போனவளின் வாயை திரும்பவும் வாயாலையே அடைத்தவன் ,

“இது தான் கோபமா … இனி தேங்க்ஸ் சொல்ல மாட்டேன் அதுக்கு பதிலா இப்படி சொல்லிடுவேன் ஓகே” என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே அவனின் மொபைல் அடிக்க ஆரம்பித்துவிட்டது.

” பின்ன என்னவாம் , அண்ணன் தங்கச்சி ரெண்டு பேரும் ‘தேங்க்ஸ்’எங்க கிட்ட நிறைய இருக்கு நீ வாங்கிக்கோ அப்படிங்கிற மாதிரி சொல்லிட்டே இருக்கீங்க. இப்பதான் அனுகிட்ட நானும் உங்கண்ணனும் வேற வேறயா.. அவங்களுக்கு இப்படி தான் தேங்க்ஸ் சொல்லுவியானு கேட்டுட்டு வந்தேன். இங்க வந்தா நீங்களும் அப்படியே சொல்றீங்க”

“ஸ்வீட்டி….இப்ப எனக்கு இங்கயிருந்து போகவே மனசில்லடா…. சந்தோஷமா இருக்கு நீ சொல்றத கேட்கும் போது ” என்று இறுக அணைத்துக் கொண்டவன் போன் அடித்துக் கொண்டே இருக்கவும் , ராதிகா மெல்ல அவனிடமிருந்து விடுபட்டுக் கொண்டே ,

“ஃபோன் எடுத்துப் பேசுங்க .. “

அவளை அருகில் இருத்திக் கொண்டே , “ஏன்டா புது மாப்ளயா படுத்தமா, எப்ப விடியும் பட்டு வேட்டிச்சட்டை போட்டோமானு இல்லாம எனக்கு ஃபோன் அடிச்சிட்டுருக்க… “

“டேய்ய்ய் … கூட படிச்சவனல்லாம் வெளிநாட்டுலருந்து வர வச்சு பேச்சிலர் பார்ட்டிக்கு ஏற்பாடு பன்னிட்டு போய்ட்ட … உன் பாசமலர் இன்னும் வீட்டுக்கு வரலயானு போன் மேல போன்.. நீ எப்ப வர “

“இந்தா வந்துட்டேன் மாப்ள … ” என்று ஃபோனை அணைத்துக் கொண்டே , “பேச்சிலர் பார்ட்டிக்கு வரசொல்லி என்னை பேச்சிலர் லிஸ்ட்லயே வச்சிருவான் போலயே ” என்று சலித்துக் கொண்டவனைப் பார்த்து சிரித்தவளை மறுபடி சிறைபிடிக்க செல்ல , ராதிகாவோ அவன் பிடியில் சிக்காமல் கதவருகே சென்று விட்டாள்.

Advertisement