Advertisement

அத்தியாயம்….1 
மழை சோ  என்று பொழிய,  நேரம் இது தான் என்று  கணிக்க முடியாத அளவுக்கு வானம் இருண்டு , இன்னும் மழை அடிக்க கூடும் என்ற  சூழ்நிலையிலும், ஆளுக்கு ஒரு குடை பிடித்த வாரே அந்த புதை குழியில் இறக்கிய   சந்திரசேகரின் பூத உடலின் மேல், ஆளுக்கு ஒரு கைய் பிடி மண் எடுத்து அள்ளி போட்டனர்.
மண் அள்ளி  போடாத நம் கதையின் நாயகன்  உதயேந்திரனை பார்த்து, அவன் அண்ணன் கஜெந்திரன் “ போடு…” என்று சொல்ல,  அவனோ கள் போல் நின்றுக் கொண்டு இருந்தான்.
அந்த  தோற்றமும்,  இறுக்கமும் அக்கா கணவர் இறந்ததாலா…? இல்லை அவர் இறந்ததால் தனக்கு தெரிய வந்த  விசயத்தாலா…? என்று தெரியவில்லை.
ஆனால்  ஒன்றும் பேசவில்லை. அழவும் இல்லை. தன் இருபக்கமும் அக்கா பிள்ளைகளை   நிறுத்தி கொண்டவன். அவர்கள் தோள் மீது போட்ட கை எடுக்காது அப்படியே நின்றுக் கொண்டு இருந்தான்.
இரண்டு தடவை சொன்ன கஜெந்திரன்,  இதற்க்கு மேல் சொன்னால், அனைவரும் என்ன…?  ஏது…? என்று இவர்களை கவனிக்க தோன்றும். இப்போதே தங்களை ஒன்று,  இரண்டு பேர் திரும்பி பார்ப்பது போல் தெரிந்ததில்,
 அவனை  விட்டு தன் சகோதரியின் அருகில்  நின்றவர். அவர் காதில் ஏதோ கிசு கிசுத்ததில்,திரும்பி தன் சகோதரனை பார்த்த ஜெய்சக்தியின் கண்கள் அழுதழுது   கோவை பழம் போல் சிவந்து இருந்தது. கன்னமும் அதற்க்கு ஈடு கொடுப்பது போல் தான் சிவந்து காணப்பட்டது.
அந்த சிவப்பு அழுததால் வந்தது இல்லை. ஜெய்சக்தியின் கன்னம் எப்போதும் சிவந்து தான் இருக்கும். இதோ இந்த சோக தோற்றத்திலும்,  அவர் பொலிவில் எந்த குறையும் இல்லாது ஒரு கம்பீரத்தோடு தான் காணப்பட்டார்.
அந்த கம்பீரம் பரம்பரை பணக்காரத்தனம்  கொடுத்ததா…? தெரியவில்லை. கம்பீரமும், அழகும் ஒன்று சேர முடியுமா…? முடியும் என்பதற்க்கு ஜெய்சக்தியே  ஒரு உதாரணம்.
தன் சகோதரி தன்னை  பார்க்கும் போது, உதயேந்திரனின் மனதில் இது தான் ஓடிக் கொண்டு இருந்தது. இந்த நிலையிலும் இவ்வளவு அழகோடு  இருக்கும் இவளுக்கு என்ன தலையெழுத்து…? இப்படி பட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுக்க.
நேற்று  தான் மாமா இறந்து விட்டார் என்ற செய்தி அவனுக்கு கிடைத்தது. ஜெர்மனி   தான் அவன் வாசம். அப்போதே தன் பி.ஏ வின் மூலம் ப்ளைட் டிக்கெட் புக் செய்து  விட்டு, இதோ காலையில் தான் இந்தியா வந்தடைந்தான்.
ப்ளைட்டில் ஏறியதும் தன் அண்ணன் கஜெந்திரனுக்கு அழைப்பு விடுத்து… “ எப்படி…?”  தன் மாமா இறப்பு கேள்வி பட்டதும், என்ன ஏது என்று அப்போது எதுவும் கேட்காது, விரைவாக இந்தியா வருவதற்க்கு உண்டான காரியத்தில் தான் இறங்கினான்.
அவனின்  தொழிலின்  இருப்பிடம் ஜெர்மனி தான். தொழிலில் அடுத்து, அடுத்து,   செய்ய வேண்டியதை தன் பி.ஏவுக்கு தெரிவித்து சரியான நேரத்துக்கு ப்ளைட் ஏறும் வரை  அவனுக்கு மூச்சு முட்ட வேலை.
 ப்ளைட்டில் அமர்ந்த பின் தான்…” என்ன விவரம்…?  என்று தன் அண்ணனை கூப்பிட்டு விசாரித்ததில் தெரிந்துக் கொண்டது இது தான். மனஅழுத்தம். அதிகப்படியான மன அழுத்தத்திற்காக  சிகிச்சையில் இருந்தார் என்பதே.
‘எதற்க்காக இந்த மனஅழுத்தம்…?’ அப்பொழுது   என்ன யோசித்தும் தெரியாதது. வீட்டிற்க்கு வந்ததும் தெரிந்ததில், என்ன மாதிரி உணர்ந்தான் என்று  அவனுக்கே தெரியவில்லை.
 அதுவும்   அண்ணி சொன்ன “ அவங்க வரனும்.” என்ற வார்த்தையில் திரும்பி  தன் தந்தை பரமேஸ்வரனை தான் பார்த்தான். இவனின் பார்வையை தவிர்த்த  அவர் மருமகளிடம்…
 “ அவங்க வர மாட்டாங்க.  நீங்க இங்க ஆக வேண்டியதை பாருங்க.”   சொன்ன பரமேஸ்வரரின் வயது எழுபத்தியெட்டு. இந்த வயதிலும் சிங்கம் போல் உட்கார்ந்த இடத்திலேயே வேலை வாங்குவதை பார்த்தாலே தெரிந்து விடும் அவரின் ஆளுமை பற்றி. பின் சும்மாவா S.P க்ரூப்பின் சேர்மேனாக இருந்தவர் ஆயிற்றே…
 தன்  சகோதரி திருமணத்தின் போது தன் தந்தை  தான் சேர்மேனாக இருந்தது. தன் சகோதரியை திருமணம் செய்து கொள்பவர் தந்தையின் பி.ஏ தான் என்று கேள்வி பட்ட போது …
“ ஓ லவ்வா…?  அவ்வளவு தான் அவன் நினைத்தது.  ஆம் தன் சகோதரியின் திருமணத்தை அவன் கேள்வி தான் பட்டான். ஐந்து வயதிலேயே குழந்தை இல்லாத  தன் சித்தப்பாவோடு ஜெர்மனிக்கு வந்தவன். பின் படிப்பு, தொழில் என்று அங்கேயே குடியுரிமை பெற்று    தன் தொழிலையும் நிலைநாட்டி விட்டான்.
இந்தியா என்பது அவனுக்கு  வந்து போகும் இடம் மட்டுமே. அது போல் தான் அவனுடைய பன்னிரெண்டாம் வயதில் தன் சகோதரியின் திருமணத்துக்கு  இந்தியா வந்து போனான். 
திருமணமேடையில் தன் அக்காவின் பக்கத்தில்  சந்திரசேகரை பார்க்கும் போது… வாய் தன்னால் “ அரவிந்த்சாமி” என்று முனு முனுக்க. 
அவன் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த அவன் சித்தப்பா கூட… “ போன வாரம்  நான் பார்த்த தமிழ் படத்தில் நடித்தவன் போலவே மாப்பிள்ளை இருக்கான்டா.” என்ற சொல்.
சந்திரசேகரின் மற்றைய தகுதி பின்னுக்கு தள்ளப்பட்டு, பரவாயில்ல  நம் அக்காவுக்கு ஏற்றவர் என்று தான் நினைக்க வைத்தது. அப்போது அதற்க்கு மேல் ஆராயும் வயதும் இல்லையே அவனுக்கு. சகோதரி திருமணம் முடிந்த மறு நாளே ஜெர்மனிக்கு  பறந்து விட்டான்.
பின் தன் தாய் இறப்புக்கு வந்த  போது… “ உன் சித்தப்பா கூட இப்போ இல்ல. நீ இங்கயே இருந்துடேன்.”  என்று தந்தை கேட்கும் போது உதயேந்திரனுக்கு வயது இருபத்திரெண்டு .
அந்த வயதிலேயே லிவிங் டுகெதரில்,  இரு பெண்களோடு பழகி. ப்ரேக்கப் ஆகி இருந்தது. மூன்றாவதாய் தன் தாய் இறப்பதற்க்கு மூன்று  நாட்கள் முன் தான் ஒரு மாடல் அழகி…
“ மேரி மீ திரன்.” தன் தோள் பற்றி கொஞ்சுயவளின் இதழை சுவைத்துக் கொண்டே… “ நோ பேபி. ஒன்லி லிவிங் டுகெதர். ஒகே.” என்று கேட்டு  அவளை ஒகே செய்த வேளயில் தான் தன் தாயின் இறப்புக்கு இந்தியா வந்தது.
தந்தை இப்படி கேட்டதும்.. “ நோ டாட். இந்தியா எனக்கு செட்டாகாது.” என்று சொல்லி  மறுத்து விட்டான். “ அப்போ இந்தியாவில் இருக்கும் ப்ராப்ர்டீ…?” தந்தை கேட்டதுக்கு,
“ உங்கள் விருப்பம்.” அப்போது அவன் அவ்வளவே பேசியது.
மொத்த தொழிலையும்   தன் பெரிய மகன் கஜெந்திரன்  கையில் கொடுக்க பரமேஸ்வரருக்கு  விருப்பம் இல்லை. தன் மாப்பிள்ளை சொன்னதை  செய்யும் கிளிபிள்ளையாக தான் தன் பெரிய மகன் இருக்கும் போது, எப்படி அவ்வளவு பெரிய சாம்பிராஜ்ஜியத்தை   தூக்கி கொடுப்பார். 
சந்திரசேகர் தோற்றத்தில் மட்டும் அல்லாது,  மூளையிலும் சிறந்தவர் என்பதை அவரிடம் கொடுத்த ஒரு  சில தொழிலில் அவர் காட்டிய வளர்ச்சியை வைத்தே தெரிந்துக் கொண்டார்.
அதன் விளைவு…தன் சொத்தை மூன்றாய் பிரித்து. ஒரு பங்கை தன் பெரிய மகனிடம் கொடுத்தவர், தன் மகளுக்கு சேர வேண்டிய சொத்து முழுவதையும் தன் மருமகன் பெயரில் மாற்றி அவரிடம்  கொடுத்தவர். உதயேந்திரனுக்கு சேரும் பகுதி அவன் பெயரிலேயே தான் இருந்தது. ஆனால் அதை பார்த்துக் கொண்டது சந்திரசேகரன்.  
 தன் பெரிய மகனுக்கு தன்னுடையதை  பார்க்கவே திறமை பத்தாது என்பதனால் தான் இந்த ஏற்பாடு. பரமேஸ்வரரின் எண்ணத்துக்கு ஏற்ப   தான், சந்திரசேகரரிடம் கொடுத்த தொழிலில் ஒரே வருடத்தில் இலாபத்தை இரட்டிப்பாய் காட்டினார்.
 அடுத்து அடுத்து சந்திரசேகர் தொழிலில் காட்டிய வேகம். விவேகத்தை பார்த்து மேற்பார்வை இட்டுக் கொண்டு இருந்த பரமேஸ்வர் முற்றிலும் தொழிலில் இருந்து விலகி விட்டார்.
தன் பெரிய மகன்  தன்னிடம் ஏதாவது கேட்டால் கூட… “   மாப்பிள்ளை கிட்ட கேளுடா…” பரமேஸ்வர் அந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தார் தன் மாப்பிள்ளை மீது.
எல்லாம் நன்றாக தான் போய் கொண்டு இருந்தது ஒரு வருடம் முன் வரை. ஆனால் அந்த நம்பிக்கை இப்போது. பரமேஸ்வருக்கு இன்னும் கூட முழுவிவரமும்  தெரியவில்லை. 
மகள் பொட்டை இழப்பது ஒரு பக்கம் வேதனை என்றால், இன்னும் என்ன குண்டு விழ இருக்குமோ…?அவருடைய அனுபவ அறிவு ஏதோ இருக்கு என்று தான் அவருக்கு உணர்த்தியது.
பரமேஸ்வரருக்கு தன் பெரிய மகன் மீது தான்  நம்பிக்கை இல்லையே தவிர. தன் சின்ன மகன் மீதும், அவனுடைய திறமை  மீதும் அளவுக்கு அதிகமாகவே நம்பிக்கை இருக்கிறது. பிரச்சனை சொன்னால் கண்டிப்பாக அதை தீர்த்து வைத்து விடுவான். ஆனால் பிரச்சனையே என்ன என்று தெரியாத போது அவரும் தான் என்ன செய்வார்…?
இதில் வந்தில் இருந்து தன்னை விரோதி போல் பார்க்கும் சின்ன மகனின் பார்வையில் இருந்து தப்பித்து,  வருவோர் போவோருக்கு பதில் சொல்லி இந்த வயதிலும் மனதில் அவ்வளவு இருந்தும் வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாது தன் மருமகனின் இறுதி யாத்திரைக்கு ஏற்பாடு செய்துக் கொண்டு இருந்தார்.
 உதயேந்திரனோ தன் தந்தையிடம் தனியாக பேச நேரம் பார்த்துக் கொண்டே,  வருவோர் போவோருக்கு யார் என்று தெரியாது. கை கொடுத்தவர்களுக்கு கை கொடுத்து,  குனிந்த தலை நிமிராது, அடுத்து என்ன…? இது போல் அவன் இருந்ததே இல்லை. 
இதோ  மயானம் என்று சொல்ல முடியாத,  அவர்கள் குடும்பத்தவர் மட்டுமே  அடக்கம் செய்யும் அந்த இடத்தில் வந்தும் அவன் நிமிர்ந்தான் இல்லை. தன் அக்கா மக்களை மட்டும் தன் அருகில் நிறுத்திக் கொண்டான்.
 நாயகன்   உதயேந்திரம் தன்  மாமாவின் ஈமசடங்கில் ஈடுபட்டு இருக்கும் அதே நேரத்தில், நம் நாயகி கிருஷ்ணவேணி  தேனிமாவட்டம் கம்பம் பகுதியில் வீற்றிருக்கும் துர்கைக்கு, எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றி…
 ‘சாமி எப்படியாவது இந்த தேர்வில் நான்  வெற்றி பெறனும்.’ கண் மூடி பிராத்தனை செய்துக் கொண்டு இருப்பவளை, முழுவதும் வேண்டா விடாது…
 “  போதும் வாடி. அது என்ன கவர்மெண்ட்  வேலை மேல் மோகமோ…?” அவள் தலையிலேயே ஒரு  கொட்டு வைத்து பேசிய தன் அத்தை மகன் பவித்ரனை  முறைத்தாள் வேணி.
“ எரும தலையில்  கொட்டாதேன்னு, உனக்கு எத்தன தடவ சொல்றது.” தன் தலையை தடவி கொண்டே சொன்னவளின்,  கலைந்த கேசத்தை சீர் படுத்திய பவித்ரன்.
“ அது என்னவோ தெரியல. ஒரு நாளைக்கு  ஒரு தடவையாவது உன் தலையில கொட்டலேன்னா எனக்கு அந்த நாளே  போகாது போல இருக்கு.” என்று சொல்லியனின் கை பற்றி…
“ அதெல்லாம் விடு பவி. எனக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்குமா…?”  என்று ஒரு எதிர் பார்ப்போடு பவித்ரனை பார்த்து கேட்டாள். 
“ உனக்கு ஏன் அந்த கவர்மெண்ட் வேலை மேல அவ்வளவு ஆசை வேணி. இப்போவும்  டீச் செய்துட்டு தானே இருக்க. கவர்மெண்ட் பள்ளியில் போய் சொல்லி கொடுக்குறது தான் கற்பித்தலா…?” பவித்ரன் கேட்பது நியாயமான கேள்வி தான். 
ஆனால் அரசு பள்ளியில்  படிக்கும் பிள்ளைகளுக்கு,  கற்பித்தால் கிடைக்கும் சலுகையும், வருமானமும், தனியார் பள்ளியில்  படிக்கும் பிள்ளைகளுக்கு கற்பித்தால் கிடைக்குமா…? வேணியின் பதிலிலும் ஒரு நியாயம் இருக்கிறது தானே…
கிருஷ்ணவேணி தமிழில் பி. ஏ. பிஎட். முடித்து விட்டு,   தனியார் பள்ளியில் வேலைக்கு சென்று கொண்டே கூடுதல் தகுதியாக  டீச்சர் ட்ரைனிங்கையும் முடித்து விட்டு இப்போது அரசு வேலைக்கு தேர்வு எழுதிக் கொண்டு இருக்கிறாள். 
“ இப்போ தானே இருபத்திமூனு வயசு ஆகுது.  அடுத்து அடுத்து தேர்வு எழுது கண்டிப்பா வேலை கிடைக்கும்.” என்று சொன்ன பவித்தரனுடைய வயது இருபத்திநான்கு. கிருஷ்ணவேணியை விட பத்து மாதம் தான் பெரியவன்.
கிருஷ்ணவேணிக்கு பவித்ரன் அத்தை மகன். மாமன் மகன் என்று இருமுறையிலும் உறவு. இந்த இரு உறவோடு,  அவர்களுக்குள் இருக்கும் அந்த நட்பு. அந்த நட்புக்காக பவித்ரன் என்ன என்றாலும் செய்வான் என்பதை ஒவ்வொரு சமயத்திலும் கிருஷ்ணவேணிக்கு பவித்ரன்  உணர்த்தி இருக்கிறான்.
இருவருக்கும்  இருப்பிடம் மட்டும் அல்லாது,  படித்ததும் ஒரே பள்ளி தான். பத்தாம் வகுப்பு வரை வகுப்பும் ஒன்றே. பதினொன்றாம் வகுப்பில் வேணி ஒரு பிரிவு எடுக்க,  பவித்ரன் வேறு பிரிவு என்று பிரிந்தாலும், அவர்களின் நட்பு என்றும் பிரியாது வயது கூட கூட அதுவும் கூடியது எனலாம்.
பவித்ரன்  பெரும்பாலோர் போல் பொறியியல் படித்து விட்டு சென்னையில் ஒரு பெரிய ஐடி கம்பெனியில்,   அரை இலக்கத்தில் இரண்டு வருடமாய் சம்பளம் வாங்குகிறான்.
வேணியோ நோகாமல் நோம்பு கும்பிடும் ரகம். அரசு பள்ளியில் வேலைக்கு போறோம். வாரத்தில் ஐந்து நாள்  பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கிறோம், 
சனி, ஞாயிறு  விடுமுறையோடு,   கால்தேர்வு விடுமுறை, அரைதேர்வு விடுமுறை,  முழுதேர்வு விடுமுறை இப்படி பாதி நாள் வீட்டில் ஜாலியாக  பொழுது போக்கி, தன் வாழ்க்கையை அனுபவிக்க நினைக்கும் ரகம். அதன் தொட்டே  துர்க்கைக்கு பழத்தை பிழியோ…பிழியோ பிழிந்து விளக்கு ஏற்றுவது.
“ எனக்கு இப்போவே வேலை கிடைக்குமான்னு கேட்டா…இன்னும் வயசு இருக்குன்னு சொல்ற. எருமை.” வீதி என்றும் பாராது ஒருவருக்கு ஒருவர் கொட்டிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.
எப்போதும் கூடத்தில்  ஈச்சி சேரில் படுத்து இருக்கும் தன் தாத்தாவை காணாது… “ என்ன வேணி தாத்தாவை  காணும்.” என்று பவித்ரன் கேட்க,வேணிக்கும் அதே கேள்வி மண்டையில் உதித்ததால் உதட்டை பிதிக்கு…
“  என்னன்னு தெரியலையே…” என்று சொல்லும் வேளயில்  அந்தி சாயும் அந்த வேளயில், தலையில் உள்ள ஈரத்தை  துடைத்துக் கொண்டே வந்த நாரயணனை பார்த்து…
“ என்ன தாத்தா இப்போ போய் தலைக்கு குளிச்சி இருக்கிங்க… இன்னும் அந்த சடங்க விடலையா நீங்க.” தன் பேத்தி,  பேரன், தன்னை கடிவதை பார்த்து ஏதோ நினைவில் கண் கலங்கினார் அந்த பெரியவர்.
அவர்கள் வீடு ஐம்பது வருடத்துக்கு முன் கட்டிய முற்றத்து  வீடு. நாந்கு பக்கமும் ஓடால் மூடி இருக்க கூடம் மட்டும் திறந்த வெளியில் எங்கும்  சூரிய வெளிச்சம் படும் படி கட்டிய வீடு.
தாத்தா எப்போதும் அந்த திறந்த வெளியில் ஈச்சி சேரில் அமர்ந்து இருக்கும்  போது, முற்றத்தில் காய வைத்து இருக்கும் வடகம், அப்பளத்தை கொத்த வரும் காகம் தாத்தாவின் ஒளிவட்ட தலையை பார்த்து அது கண்ணுக்கு என்ன தெரியுமோ…
சில சமயம் அவர் தலையை காகம் கொட்டினால்,  உடனே அது எந்த நேரம் ஆனாலும் தலைக்கு தண்ணீர் ஊற்றிய பின் தான் பச்ச தண்ணீரை கூட குடிப்பார். அதை  நினைத்து தான் பவித்ரனும், வேணியும் பேசியது. ஆனால் தாத்தாவின் இந்த கலங்கிய முகம் ஏதோ சரியில்லை என்று அவர்களுக்கு  உணர்த்தியது.
“ தாத்தா என்ன ஆச்சு…?” என்று தன்னிடம் கேட்ட    பவித்ரனுக்கு பதில் அளிக்காது, கிருஷ்ணவேணியை பார்த்து…
”  நீயும் தலை முழுகிட்டு வாம்மா…” 
“ இப்போ தான் தாத்தா கோயிலில் இருந்து வர்றேன்.” கோயிலில்  இருந்து வந்த உடன் குளிக்க கூடாது என்று வீட்டில் சொல்வார்கள்.  அதை தன் தாத்தாவிடம் தெரியப்படுத்திக் கொண்டு இருக்கும் போது குடும்ப உறுப்பினர் அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக அவர் அவர் அறையில் இருந்து வந்தனர். 
சொல்லி வைத்தது போல் அனைவரும் தலை முழுகி இருக்க…ஏதோ விளங்குவது போல் தன் அன்னை புனிதாவை  பார்த்த கிருஷ்ணவேணி அவர் நெற்றி வெறுமையில் என்ன உணர்ந்தாள் என்று அவளாளேயே உணர முடியாது சிலை போல் நின்று விட்டாள்.
**********************************************************************************
சந்திரசேகர் இறந்து  பதினைந்தாம் நாள் காரியமும் நடந்து முடிந்து விட்டது. ஆனால்  உதயேந்திரனால் “ எப்படி…? எதற்க்கு…? இந்த கேள்விக்கு இப்போது வரை தன் தந்தையிடம்  இருந்து பதில் கிடைக்க வில்லை.
“ பொறு உதயா இன்னும் இருக்கு. மொத்தமா தெரிஞ்சிப்ப.” 
தந்தை சொன்னது போல் அவர்களின் குடும்ப வக்கீலும்,  சந்திரசேகரின் நண்பருமான ராஜசேகர் கையில் உயிலோடு வந்து அமர்ந்ததும் அந்த இடமே அமைதியாகி விட்டது.
“ உயிலை படிக்கலாமா…?” ராகசேகர் பரமேஸ்வரரை பார்த்து  கேட்க, அவரோ ராஜசேகரை ஒரு பார்வை பார்த்து விட்டு, பின் “ படி…” என்பது போல்  சைகை காட்டினார்.
இருபத்திரெண்டு வருடமாய் ராஜசேகர் தான்  இக்குடும்பத்தில் வக்கீல். தொழிலையும் தான்டி  குடும்ப உறுப்பினர் அனைவரும் அவரை உறவாய் தான் நினைப்பர். அதற்க்கு காரணாம் தான் இந்த வீட்டின் மாப்பிள்ளையின் உயிர் நண்பன் என்பதையும் அவர் அறிவார்.
யாரால் இக்குடும்பத்தில் தனக்கு மதிப்பு கிட்டியதோ, அவராலேயே தன் மதிப்பு இழந்து போக போகிறோம்  என்று அவர் நினைத்து பார்த்து இருக்க மாட்டார்.
இதோ தன் கையில் இருக்கும் உயிலை மட்டும் படித்தால், இவர்கள் அனைவரும் தன்னை பார்க்கும் பார்வையை நினைத்து கண்ணை இறுக்கி மூடிக் கொண்டார்.
“ பூனை கண்ணை மூடிட்டா பூலோகம் இருண்டு போயிடாது. சீக்கிரம்  உயிலை படிங்க.” இப்படி சொன்னது உதயேந்திரனே…
உதயேந்திரன் இந்தியா வந்தால் இது வரை இத்தனை நாள்  தங்கியது கிடையாது. தன் மாமாவின் இறப்பு மட்டும் அவனை இவ்வளவு  நாள் நிறுத்தி வைக்கவில்லை.
மாமா பார்த்துக் கொண்ட தொழிலை பார்த்த போது, தனக்கு கொடுக்க பட்ட சொத்தின் பகுதி தன் பேரில்  ஷேராகவோ, சொத்தாகவோ அப்படியே தான் இருந்தது.
ஆனால் இத்தனை ஆண்டில் அதை வைத்து வந்த லாபம். அது எங்கு போனது…? தனது மட்டும் இல்லாது, தன்  அக்காவுக்கு கொடுத்த சொத்தின் மதிப்பும் அப்படியே தான் இருந்தது. அதன் லாபம்.
இப்படி ஏகப்பட்ட கேள்விக்கான  விடை . வக்கீலின் கையில் இருக்கும் காகிதம் தெரிவித்து விடும். பார்க்கலாம் என்ன என்று…?
 

Advertisement