Advertisement

இதயக் கூட்டில் அவள் 

அத்தியாயம் 9 


ஆனந்தி முதலில் வனிதாவிற்காக வருவது போலத் தெரிந்தாலும், பிறகு தன்னை உயர்த்திக் காட்ட தோழியையே மட்டம் தட்ட முனைந்தாள். அதுவும் விக்ரம் மற்றும் வீட்டினரின் முன்பு. 

“என்ன இவ்வளவு நேரம் ஆச்சு, நீ இன்னும் சமைக்கலையா? என்னதான் அப்படிப் பண்ணுவியோ? சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குவியா?” 

“இது பண்ண இவ்வளவு நேரமா?” 

“என்கிட்டே எல்லாம் இந்த மாதிரி வீட்டைக் கொடுத்தா எப்படி வச்சிருப்பேன் தெரியுமா? நீயும் வச்சிருக்கியே.” 

பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல…. தோழியின் எண்ணம் வனிதாவுக்குப் புரிய ஆரம்பித்தது. தீட்டியவனையே பதம் பார்க்கும் கத்தி போல ஆனந்தியும் இருந்தாள். 

வனிதா ஆனந்தியை தனியாகக் கூப்பிட்டு முதலில் பேசி பார்த்தாள். 

“நீ செய்றது சரியில்லை ஆனந்தி. நீ வேலைக்குத்தான வந்த, வந்த வேலையை மட்டும் பாரு.” 

“நான் என் வேலையை மட்டும் தான் பார்க்கிறேன்.” 

“என் புருஷனை கவனிக்கிறது, பிள்ளையைக் கவனிக்கிறது என் மாமனார் மாமியாருக்கு ஐஸ் வைக்கிறது எல்லாம் தான் உன் வேலையா?” 

“உன் புருஷனே எதுவும் சொல்லலை பிறகு நீ ஏன் சொல்ற?” 

“அவர் என்ன சொல்லணும். அதுதான் நான் சொல்றேன் இல்லை… ஒழுங்கா ஒதுங்கி போயிடு.” 

“உன்னைத்தான் இங்க யாருக்கும் பிடிக்கலை இல்லை. நீ வேணா ஒதுங்கி போயிடு.” 

ஆனந்தி சொன்னதைக் கேட்டு வனிதா அதிர்ந்து போனாள். 

“அடிப்பாவி என் வீட்டுக்குள்ள வந்து என்னையே விரட்ட பார்க்கிறியா?” 

“சரி நீயும் இருந்திட்டு போ.. நானும் இருந்திட்டு போறேன்.” 

“என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு. விளக்காமாறு பிஞ்சிடும்.” 

“புருஷனையும் பிள்ளையும் ஒழுங்கா கவனிக்கத் துப்பு இல்லை. என்னைச் சொல்ல வந்திட்டா.” 

“இரு அவர்கிட்ட சொல்லி உன்னை வேலையை விட்டு தூக்கிறேன்.” 

“வேண்டாம் வனிதா, அப்புறம் நீ காலேஜ் படிக்கும் போது சுத்தினியே சுரேஷ் அவனைப் பத்தி விக்ரம்கிட்ட சொல்லிடுவேன். அப்புறம் அவரே உன்னை விரட்டிடுவார். எப்படி வசதி?” என்றதும், வனிதா அரண்டு போனாள். 

கல்லூரி படிக்கும்போது சுரேஷ் என்பவனைக் காதலித்தது என்னவோ உண்மை. ஆனால் தவறு ஏதும் செய்யவில்லை. ஆனால் விக்ரம் அதை நம்ப வேண்டும் அல்லவா? 

முதலில் மிரட்டிய வனிதா பின்பு தன் வாழ்க்கைக்காகக் கெஞ்ச ஆரம்பித்தாள். 

“ப்ளீஸ் ஆனந்தி……அவர்கிட்ட எதுவும் சொல்லிடாத.” 

“அவர்கிட்ட நான் எதுவும் சொல்லக் கூடாதுன்னா… நீ என் விஷயத்தில தலையிடாத.” 

“அது எப்படி விட முடியும்? உனக்குக் கல்யாணம் ஆகாத யாரும் கிடைக்கலையா… என் புருஷன் தான் கிடைச்சாரா?”

வனிதா கேட்டதற்கு அலட்சியமாகப் பார்த்துவிட்டு ஆனந்தி சென்றுவிட, தன் வாழ்க்கை தன் கையை விட்டு போய் விடுமோ என வனிதாவுக்கு அச்சமாக இருந்தது. 


ஆனந்தி தன் வாழ்க்கையைப் பரித்துக்கொள்வாளோ என்ற பயம் மற்றும் பதட்டத்தில், விக்ரமிடம் எதையும் தெளிவாகச் சொல்லாமல், சொல்லவும் முடியாமல், ஆனந்தியை வேலையை விட்டு நிறுத்தும்படி சண்டையிட்டாள். 

“ஏய் நீ வேலையில சேருன்னா சேர்க்கணும், நீ வேண்டாம்னு சொன்னா நிறுத்தணுமா? அவளை ஏன் நிறுத்தணும்? அதுக்குக் காரணம் சொல்லு. வேலையை அவ ஒழுங்காதான பார்க்கிறா?” 

“அவ வேலையை மட்டுமா பார்க்கிறா? என் வேலையையும் பார்க்கனும்ன்னு நினைக்கிறா?” 

“உன் வேலையை நீ ஒழுங்கா பார்த்திருந்தா அவ ஏன் பார்க்கணும்னு நினைக்கப் போறா.” எனச் சொல்லிவிட்டு விக்ரம் சென்றுவிட… வனிதாவுக்கு அவன் எதைச் சொல்கிறான் எனப் புரியவில்லை. விக்ரமும் ஆனந்தியின் செயலுக்கு உடந்தையா எனச் சந்தேகம் எழுந்தது. 

இதை யாரிடம் போய்ச் சொல்வது? மாமனார் மாமியாருக்கு இவளிடம் மரியாதையும் இல்லை. நம்பிக்கையும் இல்லை. இவள் சொன்னாள் நம்பவும் மாட்டார்கள். இவளைத்தான் குறை சொல்வார்கள். 

அவள் பிறந்த வீட்டை பற்றிக் கேட்கவே வேண்டாம். இதுதான் சாக்கென்று அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்றே பார்ப்பார்கள். 

என்ன செய்வது? எதைச் செய்து தன் வாழ்க்கையைக் காப்பாற்றுவது எனப் புரியவில்லை. யோசித்தபடியே மதியம் வரை படுத்தே கிடந்தாள். குளிக்கவில்லை, சாப்பிடவில்லை, வீட்டில் ஒரு வேலையும் பார்க்கவில்லை. 

விழிகளை மூடி படுத்திருந்தவளுக்கு, இருட்டில் சிறு வெளிச்சம் போல ஆதிரையின் முகம் நினைவுக்கு வர… சட்டென்று எழுந்தவளுக்கு என்ன செய்யவேண்டும் எனப் புலப்பட்டது. தன் வாழ்க்கையின் மீது சிறு நம்பிக்கையும் ஏற்பட்டது. 

உடனே ஆதிரையைச் சென்று பார்க்க வேண்டும் என்றுதான் நினைத்தாள். ஆனால் இருந்த வேலைகள் மற்றும் மகள் பள்ளியில் இருந்து வருவாள் என்பது நினைவுக்கு வர… மடமடவென்று வீட்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள். 

வனிதா குளித்துவிட்டு சமைத்துக் கொண்டிருந்த போது, சுஜி பள்ளியில் இருந்து வந்துவிட்டாள். 

ஆனந்தி மதிய உணவுக்கு வீட்டிற்குச் செல்வது வழக்கம். சென்றுவிட்டுத் திரும்பும்போது அன்றும் இங்கே வந்தவள், சுஜி உனக்குப் பிடிச்ச உருளைக்கிழங்கு வறுவல் கொண்டு வந்திருக்கேன்.” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தட்டில் உணவுடன் வந்த வனிதா, “சுஜி இங்க வா…” என்றவள், மகளுக்குத் தான் கொண்டு வந்த உணவை ஊட்ட ஆரம்பிக்க.. 

“சுஜி இந்தா இதையும் எடுத்துக்கோ.” என ஆனந்தி சொல்ல.. 

“வேண்டாம் ஆன்டி. அம்மாவும் உருளைக்கிழங்கு வச்சிருக்காங்க. எனக்கு அம்மா பண்ணதுதான் பிடிக்கும்.” என்றாள் சுஜி. 

தெய்வா ஆனந்தியிடம் பேசுவாரே தவிர…அவள் கொண்டு வருவதை எல்லாம் தொடவே மாட்டார். வனிதா ஆனந்தியிடம் பேசவேயில்லை. அதனால் ஆனந்தி தான் கொண்டு வந்ததைத் திருப்பி எடுத்துக் கொண்டு சென்றாள். 

இன்று வனிதாவின் பார்வை ஆனந்திக்குக் குழப்பத்தைத் தர… என்னவாக இருக்கும் என யோசித்துக் கொண்டே சென்றாள். 

ஆதிரை என்னும் சுறாவளி தன்னைத் தூக்கி சுழற்றி அடித்து விடும். ஒரு நொடியில் தான் காணாமல் போகப் போகிறோம் என அவளுக்கு அப்போது தெரியவில்லை. 

மகள் உணவு உண்டதும், வனிதா ஆதிரையைப் பார்க்க சென்றாள். 
மனைவிக்காக வெற்றி சீக்கிரமே மதிய உணவுக்கு வந்திருந்தான். இருவரும் உண்டுவிட்டு ஓய்வாக அமர்ந்திருக்கும்போது தான் வனிதா வந்தாள். 

இவள் எதற்கு வருகிறாள் என்றுதான் வெற்றிக்கு இருந்தது. ஆனால் வனிதாவின் முகத்தைப் பார்த்து எதோ சரியில்லை என உணர்ந்தவன், அவர்கள் இருவரும் பேசட்டும் என வெளியே சென்றுவிட்டான். 

ஆதிரையிடம் வனிதா எல்லாவறையும் தன்னை ஆனந்தி மிரட்டுவது உட்பட அனைத்தையும் சொல்லிவிட்டாள். 

“நான் உங்களை நம்பித்தான் வந்திருக்கேன் அக்கா. நீங்க மட்டும் எதுவும் செய்யலைனா எனக்குச் சாகிறது தவிர வேற வழி இல்லை.” 

“விக்ரம் என்ன சொல்றார்?” 

“அவருக்கு அவ எண்ணம் தெரியுமா தெரியாதா எனக்கு ஒன்னும் புரியலைக்கா. வேலையை விட்டு நிறுத்தட சொன்னா முடியாது சொல்லிட்டார்.” 

“சரி வா…” என்றவள், வனிதாவுடன் மில்லுக்கு உடனே கிளம்பி சென்றாள். 

வெற்றி வெளியே ஹாலில் இருந்தான். “என்னங்க வாங்க மில்லு வரை போயிட்டு வந்திடுவோம்.” என்றதும், வெற்றி எதற்கு என்பது போலப் பார்க்க… 

“வாங்க சொல்றேன்.” என ஒன்றும் சொல்லாமல் அழைத்துச் சென்றாள். விக்ரமோடு எதோ பஞ்சாயத்து என வெற்றிக்குப் புரிந்துதான் இருந்தது.
மில்லின் அலுவல் அறையில் விக்ரம் இருக்க… ஆனந்தியும் அவனோடு எதோ பேசி சிரித்தபடி நின்று கொண்டிருந்தாள். 

முதலில் வெற்றி வர… “வா டா நல்லவனே இன்னைக்குத்தான் உனக்கு மில்லை எட்டிப் பார்க்க நேரம் கிடைச்சுதா?” என விக்ரம் சொல்லும் போதே, ஆதிரையும் வனிதாவும் உள்ளே வர… விக்ரம் அவர்களைக் கேள்வியாகப் பார்த்தான். 

“வாங்க முதலாளியம்மா…” என அவன் ஆதிரையை வரவேற்க… 

“முதலாளின்னு உங்க ப்ரண்ட் வாய்தான் சொல்லுது…” என ஆதிரை வெற்றியிடம் சொல்லும் போதே, விக்ரம் அவன் இருக்கையில் இருந்து எழுந்து இருந்தான். ஆதிரை சென்று அதில் உட்கார்ந்து கொண்டவள், எதிர் இருக்கையை வனிதாவிற்குக் காட்டினாள்.

நண்பனின் அருகே சென்று நின்று கொண்ட விக்ரம், ஆனந்தியைப் பார்த்து போ என்றான். வனிதா இருக்கத் தான் போவதா என ஆனந்திக்கு இருந்தாலும், மறுத்து சொல்ல முடியாமல் வெளியே சென்றாள். 


“அவங்க இருக்கட்டும்.” என ஆதிரை சொல்ல… 

“என்ன திடிர்ன்னு வந்திருக்கீங்க?” விக்ரம் கேட்க, 

“சொல்றேன். முதல்ல இவங்களை அனுப்பிடலாம்.” என ஆனந்தியை பார்த்து சொன்னவள், அவர்கள் மில்லில் ரொம்ப நாட்களாக இருக்கும் மாணிக்கத்தை அழைத்து, “இவங்களுக்கு இன்னைக்குதான் கடைசி நாள் மாணிக்கம். வேலை நீக்க உத்தரவும், சம்பளம் பாக்கி இருந்தா அதையும் கொடுத்திடுங்க.” எனச் சொல்ல, ஆனந்தி திடுகிட்டு போனாள். 

“நான் ஏன் போகணும்.” ஆனந்தி கேட்க, 

“நான் சொன்னதைத் தயார் பண்ணுங்க.” என மாணிக்கத்தை அனுப்பியவள், 

“உனக்கு விளக்கம் சொல்ல எல்லாம் எனக்கு அவசியம் இல்லை. வேலை இல்லைனா இல்லை அவ்வளவுதான்.” 

“இவ எதாவது சொல்லி இருப்பா… இவளைப் பத்தி.” என ஆனந்தி வனிதாவை காட்டி ஆரம்பிக்க, ஐயோ என்ன சொல்லப்போகிறாளோ என வனிதா பதறும் போதே.. 

“எல்லாம் எனக்குத் தெரியும். நீ ஒன்னும் விளக்க வேண்டாம். உன் வேலையை மட்டும் பார்த்திருந்தா இந்தப் பிரச்சனையை இல்லை. எங்களுக்கு மில்லுல வேலைப்பார்க்கத்தான் ஆளு வேணும். நீங்க வீட்டு வேலையெல்லாம் பார்க்கிறீங்கலாமே… வீட்டு வேலைப் பார்க்க ஆள் வேணுங்கும் போது சொல்லி அனுப்புறோம்.” என ஆதிரை நக்கலாகச் சொல்ல,
வனிதாவிடம் பேசியது போல அதிரையிடம் பேசும் துணிவு ஆனந்திக்கு இல்லை. 

“சார்…என்னை திடிர்ன்னு போகச் சொன்னா. நான் என்ன சார் பண்ணுவேன்.” என ஆனந்தி விக்ரமை பார்க்க… 

“ஆதிரை சொன்னா சொன்னதுதான் ஆனந்தி. வேணா அடுத்த மாச சம்பளமும் சேர்த்து தர சொல்றேன். நீ வேற வேலை தேடிக்கோ.” என்றான் வெற்றி. 

ஆனந்தி இன்னமும் விக்ரமை பார்க்க, அதைக் கவனித்த ஆதியின் கண்கள் நெருப்பை உமிழ… வெற்றியும் வனிதாவும் கூட விக்ரமை பார்க்க… “அதுதான் வெற்றி சொல்லிட்டான் இல்ல… அவன் சொன்னப்பிறகு என்னைப் பார்த்து ஒன்னும் ஆகப்போறது இல்லை.” என்றான் விக்ரம். 

ஆனந்தி வெளியே செல்ல திரும்ப, “அப்புறம் ஒரு நிமிஷம். நான் அவங்ககிட்ட சொல்வேன் இவங்ககிட்ட சொல்வேன்னு எல்லாம் இனி மிரட்டின… எங்க மில்லுல இருந்து பணத்தைத் திருடிட்டேன்னு உன்னை உள்ள வச்சிடுவேன். ஜாக்கிரதை. எனக்கு எல்லாம் தெரியும்… உன் வேலையெல்லாம் இங்க நடக்காது போ.” என்றாள். 

வனிதாவிடம் அவ்வளவு பேசிய ஆனந்தி ஆதிரையிடம் ஒன்றும் பேசாமல் வெளியே செல்லும்படிதான் ஆனது. இன்றே அதுவும் இப்படி வெளியேறுவோம் என அவள் கனவிலும் எதிர்பார்க்காவில்லை. 

“எதுக்கு அந்தப் பெண்ணை வெளிய அனுப்பின? இப்பவாவது சொல்லு.” என வெற்றி கேட்க, 

“சொல்றேன்.” என் ஆதிரை வாயிலைப் பார்க்க, வெற்றி சென்று மாணிக்கத்திடம் யாரும் இந்தப்பக்கம் வர வேண்டாம் எனச் சொல்லி கதவை சாற்றிவிட்டு வந்தான். 

ஆனந்தியின் எண்ணத்தைப் பற்றிச் சொன்னவள், அவள் வனிதாவை மிரட்டியதையும் சொன்னாள். ஆனால் சுரேஷ் விஷயம் சொல்லவில்லை. 

“உங்க ப்ரண்ட் இடம் கொடுக்காமளா அவ இவ்வளவு தூரம் பேசுறா?” ஆதிரை கேட்க, 

“இங்கப் பாரு அவ பேசினதுக்கு நீ எப்படி விக்ரமை காரணம் சொல்லுவா?” என வெற்றி எகிறிக்கொண்டு வர… 

“அப்புறம் அவ எந்தத் தைரியத்துல இந்த மாதிரி பேசினா? என்றாள் ஆதிரை. 

“ஆதி நீ தேவையில்லாதது பேசுற.” என வெற்றி அவளை முறைக்க… 

“இருடா…நான் பேசிக்கிறேன்.” என்ற விக்ரமை தடுத்த வெற்றி, “எனக்கு உன்னைப் பத்தி தெரியும். நீ யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டாம். அப்படிச் சொல்லனும்னா உன் பொண்டாட்டிக்கு சொல்லு… நீ அவளுக்குத்தான் சொல்லணும்.” என்றான் வெற்றி. 

“நீயும் ஆதிரையும் எனக்கு வேற இல்லை… என்னைப் பேச விடு.” என வனிதாவை பார்த்த விக்ரம். “நான் எப்பவுமே ஏமாருவேன்னு நினைச்சியோ?” 

“உன் ப்ரண்ட் பார்வையே சரியில்லைன்னு தான் வெற்றி இங்க வர்றதையே குறைச்சான். அவனுக்குப் புரிஞ்சது எனக்கு மட்டும் புரியாதா என்ன? ஆனா எந்த அளவுக்கு அவளும் போவா…நீயும் போறேன்னு பார்க்கத்தான் சும்மா இருந்தேன்.” 

“உனக்குப் புத்தி வரணும் இல்லை அதுக்குதான். நான் உன் ப்ரண்ட் சரியில்லை வேலைக்கு வேணாம்ன்னு சொல்லியிருந்தா நம்பி இருப்பியா?” 

“இப்ப உனக்கே உண்மை தெரிந்தது இல்ல…” 

“ஆமா ஏன் ஆதிரைகிட்ட போன? எங்க அப்பா அம்மா ஆதிரை பேர இழுத்தா மட்டும் குத்தம். இன்னைக்கு நீ என்ன பண்ணி இருக்க?” 

“ஆதிரையை விட்டா உனக்கு வேற யாரும் இல்லையா? இருந்தும் ஏன் போன?” 

“அது வந்து…” வனிதா சொல்ல முடியாமல் தடுமாற… 

“நான் சொல்லட்டுமா… ஆதிரைகிட்ட போனா உன்னோட பிரச்சனை தீரும்ன்னு நம்பின… அவ கண்டிப்பா உனக்கு நல்லது செய்வான்னு தெரியும்.” 

“ஆமாம்..” 

“உனக்கு ஒண்ணுன்னா ஆதிரைகிட்ட போவ… அதே நாங்க அந்தப் பெண்ணை எதாவது சொன்னா… நீ தப்பா பேசுவ.” 

“அது நான் புரியாம பண்ணிட்டேன்.” 

“உன் குறையைத் திருத்திக்கப் பார்க்கலை… மத்தவங்க மேல வீண் பழியைப் போட்ட…” 

“உன்னால மில்லுக்கு வர வேண்டிய ஆதிரை மில்லுக்கு வரலை… ஆனா அந்த இடத்துக்கு நீ உன் ப்ரண்டை அனுப்பி வச்ச.” 

“நீ சொன்னதை உன் ப்ரண்ட் மூலமா உண்மையாக்க என்னால முடியாதா… இருந்தும் ஏன் பண்ணலைனா? எனக்குன்னு ஒரு தகுதி இருக்கு, மரியாதை இருக்கு. அதையெல்லாம் விட என் பொண்ணுக்காகத்தான். உனக்காக இல்லை. அதை நல்லா நினைவு வச்சுக்கோ.” என்றான். 

இதை விட ஒரு மனைவிக்குப் பெரிய அவமானம் கிடையாது. இருந்தாலும் ரோஷமாகக் கணவனை விட்டுவிட்டுச் செல்வதெல்லாம் வனிதாவால் முடியாது. 

“இனிமே அப்படிப் பண்ண மாட்டேங்க.” என்றாள். ஆனால் ஆதிரைக்கு அப்படிக் கோபம் வந்தது. 

“பொண்டாட்டிக்காகப் பார்க்க மாட்டார், ஆனா பொண்ணுக்காகப் பார்ப்பாராமா… பொண்டாட்டி இல்லாம பொண்ணு மட்டும் எங்க இருந்து வந்தா?” எனக் கேட்டாள். 

அவள் விக்ரமிடம் நேராக ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அதை விக்ரம் கவனித்தே இருந்தான். 

“வீட்ல பொண்டாட்டி ஒழுங்கா இல்லைனா அப்படித்தான் சொல்வாங்க.” என வெற்றி வாய்விட… 

“ஓ.. பொண்டாட்டி தப்புச் செஞ்சா சொல்லி திருத்த மாட்டீங்க.. வேற பொண்டாட்டி பார்த்துபீங்க அப்படியா?” ஆதிரை அவனை முறைக்க,

“நீ வளைச்சு வளைச்சுக் கேள்வி கேட்ப அதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. போடி.” என்றான் வெற்றி. 


“என் பேர் வந்ததுனால சொல்றேன். ஒருத்தர் மாதிரி எல்லோரும் இருக்க முடியாது. எனக்கே என்னை வேற யாரோடவோ ஒப்பிட்டுப் பேசினா பிடிக்காது.” 

“உங்க பிரண்ட் கல்யாணத்துக்கு முன்னாடி வனிதாவை லவ் பண்ணார். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் இல்லை. ஏன் பொண்டாட்டியை லவ் பண்ணா கவுரவக் குறைச்சலா?” 

“அவர்தானே லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு வந்தார். அப்ப அந்தப் பெண்கிட்ட எதாவது குறையே இருந்தாலும், இவர் தானே பேசி சரி பண்ணனும். வனிதாவை மட்டும் குறை சொல்றதை நான் ஒத்துக்க மாட்டேன்.” 

“கணவன் மனைவி உண்மையான அன்பு வச்சிருக்கும் பட்சத்தில் இது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. இனிமேயாவது ரெண்டு பேரும் மனம் விட்டு பேசி நல்லபடியா குடும்பம் நடத்துங்க. நான் அவ்வளவுதான் சொல்வேன்.” 

“எனக்கு ரொம்பக் களைப்பா இருக்கு வீட்ல விடுங்க.” என ஆதிரை சொல்ல… நிறைமாத கர்ப்பிணியை அலைய வைத்துவிட்டோமே என விக்ரமும் வனிதாவும் நினைக்க… 

“எனக்கு ஒன்னும் இல்லை நான் நல்லாத்தான் இருக்கேன்.” என்றாள் ஆதிரை. 

அப்போதும் அவளுக்கு இளநீர் வரவழைத்து கொடுத்த பிறகே விக்ரம் அவர்களைச் செல்ல விட்டான்.

வெற்றியும் ஆதிரையும் அவர்கள் வீட்டிற்குச் செல்ல… வனிதாவை அழைத்துக் கொண்டு விக்ரம் தங்கள் வீடு நோக்கி சென்றான். இனியாவது அவர்கள் வாழ்வில் மாற்றம் வருமா?

Advertisement