Advertisement

இதயக் கூட்டில் அவள் 

அத்தியாயம் 4

பதினோரு மணி பேருந்து என்பதால்… நிதானமாகக் கிளம்ப முடிந்தது. பிரயாணத்திற்குத் தோதாக ஆதிரை சுடிதார் அணிந்திருந்தாள். வீட்டை ஒதுங்க வைத்து, வீட்டு காவலுக்கு ஆள் வைத்து எனக் கிளம்பும் வரை வேலை சரியாக இருந்தது. வேலைக்கு நடுவே இரவு உணவையும் முடித்தனர். 


விக்ரம் குடும்பம் வீட்டில் இருந்து காரில் கிளம்பி வழியில் இவர்களையும் ஏற்றிக் கொண்டு பேருந்து நிலையம் சென்றனர். பேருந்து கிளம்பும் நேரத்திற்கு வந்ததால்… இவர்கள் ஏறி அமரவும் பேருந்தை எடுக்கவும் சரியாக இருந்தது. 

படுக்கை வசதி கொண்ட ஏசி பேருந்து என்பதால்… வண்டி கிளம்பியதுமே ஆதிரை படுத்து உறங்கி விட்டாள். காலையில் இருந்து வேலை செய்த அலுப்பு. 
சுற்றுலா செல்வதால் குஷியில் அருணும் சுஜியும் உறங்க மறுத்து, “நாங்க இப்படியே உட்கார்ந்து வேடிக்கை பார்த்திட்டு வரப் போறோம்.” என்றனர். 

“இப்ப இருட்டில ஒன்னும் தெரியாது பேசாம படுங்க.” என இருவரையும் இழுத்து படுக்க வைப்பதே பெரும் பாடாக இருந்தது. 

நடுவில் பேருந்து ஒரு இடத்தில் சில நிமிடங்கள் நிற்க, ஆதிரை உறக்கத்தில் இருந்து விழித்தவள், ஓய்வறைக்குச் செல்ல நினைத்தாள். அவள் எதிர் இருக்கையில் படுத்திருந்த வெற்றியைப் பார்க்க, அவன் நல்ல உறக்கத்தில் இருந்தான். அதற்குப் பின் இருக்கையில் இருந்த விக்ரம் பேருந்து நின்றதால் விழித்திருந்தான். 

ஆதிரை வனிதாவை அழைக்க, மகளோடு படுத்திருந்தவளோ அரைகுறை உறக்கத்தில், “நான் வரலைக்கா நீங்க போயிட்டு வாங்க.” என்றாள். 

“சரி அருணைப் பார்த்துக்கோ.” எனச் சொல்லிவிட்டு ஆதிரை செல்ல, 

“நைட் நேரம் நீ துணைக்குப் போகக்கூடாது.” என வனிதாவை கடிந்து கொண்ட விக்ரம், அவன் எழுந்து சென்று பேருந்தின் வெளியே நின்று கொண்டான். 

ஆதிரை திரும்ப வந்து பேருந்தில் ஏறியதும், விக்ரம் ஓய்வறைக்குச் சென்று விட, வெற்றி விழித்து அருணைப் பார்த்துக் கொண்டு இருந்தான். வனிதா உறங்கி இருந்தாள். 

“இவளை நம்பி குழந்தையை விட்டுட்டு போனா… எப்படித் தூங்கிட்டு இருக்காப் பாரு.” என நினைத்த ஆதிரை, “பஸ் நிற்கும்போதே நீங்க பாத்ரூம் போயிட்டு வந்திடுங்க.” எனச் சொல்ல, வெற்றியும் எழுந்து சென்றான். 

சிறிது நேரம் சென்று வந்த வெற்றியின் கையில் மனைவிக்குப் பாதாம் பால் இருக்க, அதை அவளிடம் கொடுத்தவன், மீண்டும் கீழே இறங்கி சென்றான். 

வெற்றி விக்ரம் இருவரும் நின்று டீ குடித்துவிட்டு பேருந்து எடுக்கும் நேரம்தான் உள்ளே வந்தனர். ஆதிரை இன்னும் பால் குடித்துக் கொண்டிருக்க, விக்ரம் அவன் இருக்கையில் சென்று படுத்து விட, வெற்றி மனைவி குடித்து முடிக்கும் வரை உட்கார்ந்து இருந்தான். 

வனிதா அரைகுறை உறக்கத்தில் இருந்தவள், அடிக்கடி விழித்து என்ன நடக்கிறது எனப் பார்ப்பதும் உறங்குவதுமாக இருந்தாள். கணவன் தனக்கு எதுவும் வாங்கி வரவில்லை என நினைத்தாள்.  

மகனும் தானும் இருந்த படுக்கையே பெரிதாக இருக்க, “நீங்களும் எங்களோட படுங்க.” என ஆதிரை சொல்ல, வெற்றியும் மனைவியின் அருகே சென்று படுத்துக்கொள்ள, மீண்டும் இருவரும் நன்றாக உறங்கி விட்டார்கள். 

ஐந்து மணி போல விக்ரமை எழுப்பிய வனிதா, “எனக்குப் பாத்ரூம் போகணும்.” என்றாள். 

“நிற்கும் போது போயிருக்கனும். நாம சொல்ற இடத்தில எல்லாம் அவன் நிறுத்த மாட்டான். அவன் ரோட்டு ஓரமா வேணா நிறுத்துவான். நீ அங்க போவியா இல்லையில்லை, பேசாம படு.” என்றவன், மீண்டும் படுத்து உறங்கி விட… வனிதா தூங்க முடியாமல் விழித்தே இருந்தாள். அப்போது செல்ல சோம்பேறி பட்டுக் கொண்டு செல்லவில்லை. ஆனால் கோபமோ விக்ரமின் மீதுதான்.

சிறிது நேரம் சென்று விக்ரம் பார்த்த போது வனிதா உறங்காமல் இருக்க, வேறுவழியில்லாமல் எழுந்து சென்று அவன் ஓட்டுனரிடம் கேட்க, ஓட்டுனர் சரி சார் பார்க்கிறேன் என்றான். ஆனால் பேருந்தை நிறுத்தவே இல்லை.

எழு மணிக்குத்தான் பஸ் தேனிக்குச் சென்றது. பேருந்து நிலையத்தில் இவர்களுக்கான வண்டி காத்திருந்தது. அதில் ஏறி அருகில் இருந்த ஹோட்டலுக்குச் சென்று குளித்து உடைமாற்றிக் காலை உணவை முடித்துக் கொண்டு மூணாறு செல்லக் கிளம்பினர். 

மூணாறு செல்லும் வழியில் இருக்கும் சுற்றுலாத்தலங்களை எல்லாம் பார்த்துக்கொண்டே சென்றனர். ஜீப்பில் மலை பயணம் புது அனுபவமாக இருக்க, வண்டி ஓட்டுனருக்கு எல்லாம் இடங்களும் அதைப் பற்றித் தகவல்களும் அத்துப்படி. அதனால் ஒரு இடம் விடாமல் பார்த்துக்கொண்டே சென்றனர். 

ஒரு இடத்தில் மதிய உணவையும் முடித்துக் கொண்டவர்கள், இன்னும் சில இடங்களைப் பார்த்துவிட்டு நான்கு மணி போலத்தான், அவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்குச் சென்றனர். 

பெரிய ஹோட்டலில்தான் ஆதிரை அறைகள் முன்பதிவு செய்திருந்தாள். அன்று முழுவதும் சுற்றிய களைப்பில் சிறிது நேரம் படுத்து ஒய்வு எடுத்தனர். 

ஆறு மணி போலக் கிளம்பி ஹோட்டலில் இருந்த விளையாட்டுப் பகுதியில் பிள்ளைகளை விளையாட விட்டு பார்த்துக் கொண்டு இருந்தனர். 

விக்ரமும் வெற்றியும் மசாஜ் செய்துகொள்வதாகச் சொல்லி சென்றனர். ஆனால் வெற்றி மட்டும் உடனே திரும்பி வந்துவிட்டான். 

“ஏன் நீங்க பண்ணலை?” ஆதிரை கேட்க, 

“அவன் ரொம்ப ருபாய் கேட்கிறான்.” என்றான். ஆதிரை அவனை நம்பாமல் பார்க்க, வெற்றி அப்போதைக்கு எதுவும் சொல்வதாக இல்லை. அதைப் புரிந்த மனைவியும் அமைதியாக் இருந்தாள். 

தனியாக அவர்கள் இருவரும் இருக்கும்போது, “மசாஜ் பண்ணி விடுறது பொண்ணுங்கலாம். தெரிஞ்சா நீ என்னைக் கொல்ல மாட்ட, அதுதான் திரும்ப வந்திட்டேன்.” என்றான் வெற்றி. 

“ஓ எனக்காக வந்துட்டீங்க இல்லைனா பண்ணி இருப்பீங்க.” 

“உனக்குப் பிடிக்காதுன்னுதான் வந்திட்டேன். இல்லைனா பண்ணி இருப்பேனே..”

அவன் வீம்புக்குப் பேசுகிறான் எனப் புரிந்து ஆதிரை அமைதியாக இருந்தாள். 


“நான் ஏன் யார்கிட்டையோ பண்ணிக்கணும். நீ உன் புருஷனுக்கு மசாஜ் பண்ணி விட மாட்ட?” 

“குப்புற போட்டு ஏறி நின்னு நங்கு நங்குன்னு வேணா மிதிக்கிறேன்.” ஆதிரை சொல்ல, 

“எதோ ஒன்னு பண்ணி விடு.” என்றான் வெற்றி சிரிப்பை வாயிக்குள் அடக்கியபடி. 

விக்ரம் ஒரு மணி நேரம் சென்று வர, “பள பளன்னு இருக்கியே டா… நானும் பண்ணி இருக்கலாமோ…” மனைவியை ஓரப்பார்வை பார்த்துக்கொண்டு வெற்றி சொல்ல, 

அதற்குள் இருந்த உள்குத்துப் புரியாமல், “எப்போவோ ஒரு தடவைதான் இது போல வரோம். வந்த இடத்தில காசுக்காகப் பார்த்திட்டு இருக்காம, நீங்களும் பண்ணி இருக்கலாம்.” என்றாள் வனிதா. 

“நாளைக்கு ஒருநாள் இருக்கு இல்ல பார்க்கலாம்.” வெற்றி சொல்ல, ஆதிரை அவனை முறைக்க, “மசாஜ் பண்ணி விட ஆம்பிளைங்களும் இருக்காங்க. இன்னைக்கு இல்லை அவ்வளவுதான். நாளைக்கு இருப்பாங்கன்னு சொன்னாங்க.” என்றான் மனைவிக்கு மட்டும் கேட்கும்படி. 

வெற்றி சொல்லி இருக்கவில்லை என்றால் ஆதிரைக்கும் வனிதா போலத் தெரிந்து இருக்காது. ஆனால் வெற்றியால் அப்படி மனைவிக்குத் தெரியாமல் ஒரு விஷயத்தைச் செய்ய முடியாது. எல்லோரும் அங்கிருந்த உணவகத்தை நோக்கி சென்றனர். 

வெற்றியும் விக்ரமும் மனைவி பிள்ளைகளைத்தான் உண்ண வைத்தனரே தவிர, அவர்கள் இருவரும் லேசாகக் கொரித்தர்கள் அவ்வளவே. உணவு முடித்து அவரவர் அறைக்குத் திரும்பினார்கள். 

அருண் டிவியில் கார்ட்டூன் பார்க்க உட்கார்ந்து விட, வெற்றி மனைவியை தனியே அழைத்து சென்று பேசினான். 

“நான் விக்ரமோட பாருக்கு போயிட்டு வரேன்.” 

“அதுதானே பார்த்தேன். இங்க வர திட்டம் போட்டதே இதுக்குதான் இல்லையா?” 

“இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனா இதுக்காக மட்டும் வரலை.” 

“அப்படி என்ன அவசியம் இங்க வந்து குடிக்கணும்னு.” 

“என்னைக்கோ ஒருநாள் ஜஸ்ட் ரிலாக்ஸ் பண்ணிக்க, இங்க வந்த இடத்தில ஒருநாள் தானே… ப்ளீஸ் ஆதி.” 

“பல குடும்பம் சிதற இந்தக் குடிதான் காரணம் தெரியுமா?” 

“ஆமாம் டி என்னைக்கோ ஒரு நாள் குடிக்கிற என்னை, எதோ மொடா குடிகாரன் ரேஞ்சுக்கு பேசுற. வந்த இடத்தில கொஞ்சம் என்ஜாய் பண்ண விடு.” 
“நான் சொன்னா கேட்கவா போறீங்க. ஆனா நீங்க வர்றதுக்குள்ள நான் தூங்கிடுவேன்.” என் ஆதிரை தனது மிரட்டலை தொடங்க. 

“அதெல்லாம் நீ தூங்க மாட்ட.” என்றான் வெற்றி மனைவியைப் பற்றித் தெரிந்தவனாக. 

“நான் தூங்கலைனாலும் நீங்க குடிச்சிட்டு வந்தா, நமக்குள்ள எதுவும் நடக்காது.” 

“ஏன் டி இந்தக் கொலைவெறி உனக்கு.” 

“எனக்கு அந்த வாசனை பிடிக்காது.” ஆதிரை சொல்ல, வெற்றி அவளை முறைக்க, அப்போது விக்ரம் வேறு கைப்பேசியில் அழைக்க… 

“நான் கொஞ்ச நேரத்தில வந்திடுவேன். நீ அதுக்குள்ளே அருணை தூங்க வை.” என்றவன், ஆதிரையைக் கதவை மூடிக்கொள்ளச் சொல்லிவிட்டுச் சென்றான். 

எப்போதோ ஒருமுறை இது போல வெளி ஊர்களுக்கு வரும்போது, வெற்றி மது அருந்துவான். அதுவும் அளவாகத்தான். வருடத்தில் ஒருமுறையோ அல்லது இருமுறையோ தான் இப்படி வருவது என்பதால் ஆதிரையும் பெரிது படுத்தமாட்டாள். ஆனால் அதைக் கண்டுகொள்ளாமலும் விடமாட்டாள். 

இது போல வெளி ஊர்களுக்கு வரும் போது நன்றாக ஊர் சுற்ற வேண்டும், சாப்பிட வேண்டும், நன்றாக அனுபவிக்க வேண்டும் என எப்போதுமே வெற்றி நினைப்பான். பணத்தைப் பற்றி எல்லாம் பார்ப்பது இல்லை. வருடம் முழுவதும் வீடு, வேலை என்றுதான் ஓடிக் கொண்டிருக்கிறான் அதனால் இது போல வெளி ஊர்களுக்கு வரும் போது கட்டுப்பாடு எல்லாம் வைத்துக்கொள்ள மாட்டான். 

விக்ரம் வனிதாவிடம் வெற்றியோடு வெளியே செல்வதாகச் சொல்லிவிட்டுத்தான் வந்தான். வெற்றி போல விக்ரமிற்குக் கட்டுப்பாடு எல்லாம் இல்லை. ஊரில் இருக்கும் போதும் நினைத்தால் மது அருந்துவான். அதனால் வனிதாவுக்கு ஒன்றும் புதிய விஷயமில்லை. 

அதே விடுதியின் உணவகத்தில் மது அருந்துபவர்களுக்கான தனிப் பகுதி இருக்க, இருவரும் அங்கே சென்று மதுவுக்கும் உணவுக்கும் ஆர்டர் கொடுத்துவிட்டு பேசிக் கொண்டு இருந்தனர். 

நிதானமாக மது அருந்தி நடுநடுவே உணவை கொறித்து என நண்பர்கள் இருவரும் அந்த நேரத்தை அனுபவிக்க, வனிதா விக்ரமை கைபேசியில் அழைத்துக் கொண்டே இருந்தாள். விக்ரமும் அழைப்பை துண்டித்துக் கொண்டிருந்தான். அவன் சத்தமில்லாமல் வைத்திருந்ததால் வெற்றிக்கு தெரியவில்லை. ஒரு மணி நேரம் சென்று இருவரும் அறைக்குத் திரும்பினர்.
விக்ரம் அறைக்கு வந்ததும் வனிதாவிடம் சண்டைக்குச் சென்றான். 

“உன்கிட்ட வெற்றியோட போறேன்னு சொல்லிட்டுத்தானே போனேன். எதுக்கு டி சும்மா போன் பண்ற. வீட்லதான் நொச்சு நொச்சுன்னு இருக்கேனா, வந்த இடத்திலேயாவது நிம்மதியா இருக்க விடுறியா?” 

“வந்த இடத்தில எங்களோட இருக்காம எதுக்கு நீங்க போனீங்க?” 

“எதுக்குப் போனேன்னு உனக்குத் தெரியும்.” 

“நீங்க பாட்டுக்கு அங்கேயே உட்கார்ந்துடீங்கன்னா, அதுக்குத்தான் எப்ப வருவீங்கன்னு கேட்க போன் பண்ணேன்.” 

“நீங்க இங்க தனியா இருப்பீங்கன்னு எனக்குத் தெரியும். அதுவும் வெற்றியோட போயிருக்கேன். அவன் எப்படின்னு உனக்குத் தெறியாதா? அவனே அதிசயமா வெளிய வந்தாத்தான் குடிப்பான். இதுல நீ பத்து தடவை போன் பண்ணது தெரிஞ்சது, என்னை அப்பவே இழுத்திட்டு வந்திருப்பான்.” 

“எப்பவும் உங்களுக்கு உங்க ப்ரண்ட், அவங்க குடும்பம் தான் முக்கியம். நான் இல்லை.” 

மனைவி சொன்னதற்கு விக்ரம் பொய்யாகக் கூட மறுக்கவில்லை. “ஆமாம் எனக்கு அவங்கதான் முக்கியம்.” என்றான் வனிதாவின் முகத்தில் அடித்தது போல… 

“உங்களுக்கு அவங்கதான் முக்கியம்னா அங்க போக வேண்டியது தானே, இங்கே ஏன் வந்தீங்க?” 

“எனக்கு எங்க போகணும்னு தெரியும். எக்குத்தப்பா பேசினேன்னு வை பல்லை உடைப்பேன்.” என விக்ரம் கையை ஓங்கிக்கொண்டு வர, இதற்கு மேல் பேசினால் அடி விழும் எனத் தெரியும். அதனால் அமைதியாக நின்றாள். 

“இதுதான் டி உன்னோட பிரச்சனை. என்னை எப்பவுமே நிம்மதியா இருக்க விடமாட்ட.” என்ற விக்ரம் திரும்பப் பாருக்கு சென்றுவிட, வனிதா தன் விதியை நொந்தபடி கட்டிலில் படுத்துக் கொண்டாள். 

அங்கே கணவன் வருவதற்குள் துவைக்க வேண்டிய ஆடைகளைத் துவைத்து, வெளியே அதிகப் பனியாக இருந்ததால் அறைக்குள்ளேயே ஒரு ஓரமாக உளற வைத்த ஆதிரை, மகனுக்கும் பால் வரவழைத்துக் கொடுத்து உறங்க வைத்திருந்தாள். 

அறைக்குத் திரும்பிய வெற்றி பத்து நிமிடங்களாகியும் குளியல் அறைக்குள் இருந்து வெளியே வரவில்லை. இரண்டு முறை பல் தேய்த்து, வாயை நன்றாகக் கொப்பளித்துக் கொண்டிருந்தான். வெளியே மகனோடு கட்டிலில் படுத்திருந்த ஆதிரைக்கு நன்றாகக் கேட்டது. 

“தேவையா இதெல்லாம்….” என நினைத்தவளுக்குச் சிரிப்புதான் வந்தது. 

ஒரு வழியாகக் குளியல் அறையில் இருந்து அவன் வரும் சத்தம் கேட்டு, அதிரை கண்களை மூடிக்கொள்ள, வெற்றி உடைமாற்றி வந்தவன், “ஆதி நீ தூங்கலைன்னு எனக்குத் தெரியும். உன்னைத் தூக்கிட்டு போக எல்லாம் என்னால முடியாது, ஒழுங்கா எழுந்து வா…” என்றான். 

உடனே பட்டென்று கண் திறந்தவள், “இல்லை நீங்க தூக்கிட்டுப் போனாத்தான் வருவேன்.” என்றாள் வீம்புக்கு.” 

“சரி கட்டில்ல ஏறி நில்லு தூக்கிறேன்.” 

“சினிமால ஹீரோ ஹீரோயின்ன தூக்கிற மாதிரி ரெண்டு கையில தூக்குங்க.” 

“ம்ம்… அது சினிமா, அவனுங்க கோடி கோடியா பணம் வாங்கிட்டு, வேற வழியில்லாம தம் கட்டி தூக்கிறானுங்க. என்னால முடியாது.” 

ஆதிரை கட்டிலில் ஏறி நிற்க, வெற்றி அவளை அப்படியே கைகளில் அள்ளிக் கொண்டு அங்கிருந்த இன்னொரு கட்டிலுக்குச் சென்றான். 

மனைவியைக் கட்டிலில் விட்டவன், விளக்கணைத்து அங்கிருந்த பால்கனி திரைசீலையை விலக்க, நிலவு வெளிச்சத்தில் சுற்றிலும் இருந்த காபி தோட்டம் கண்ணுக்கு விருந்தாக இருக்க, கணவன் மனைவி இருவரும் நெருங்கி படுத்து பேசிக் கொண்டு இருந்தனர். 

“இந்த ஊரு பிடிச்சிருக்கா?” 

“ம்ம்… இங்கேயே இருந்தா நல்லா இருக்கும்.” 

“ஒரு வாரம் தான் தாக்கு பிடிப்ப… இங்க மூன்னு மணிக்கே ஆறு மணி போல இருக்கு. நான் மூன்னு மணிக்கே வீட்ல வந்து உட்கார்ந்துக்க முடியுமா?” 

“இங்க இருந்தா அதுக்கு ஏத்த வேலைப் பார்க்கணும்.” 

“வேணா ஒரு டீ எஸ்டேட் வாங்கி இங்கயே செட்டில் ஆகிடுவோமா?” 

“போங்க நடக்கிற கதையா பேசுங்க.” 

“சரி…நாம நடக்கிற வேலையைப் பார்ப்போம்.” என்ற வெற்றி முத்தத்தில் ஆரம்பிக்க, 

அவனை விலகி எழுந்த ஆதிரை தீரைசீலையை நன்றாக இழுத்து விட.. அறையில் துளி வெளிச்சம் இல்லை. 

படுக்கைக்கு வந்த மனைவியை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்ட வெற்றி, “ஏய் ஒண்ணுமே தெரியலை டி…” என்றான் மையலாக. 

“ஏற்கனவே பார்த்தது தான். புதுசா பார்க்க ஒன்னும் இல்லை.” என்றாள்அவன் கைகளில் பாந்தமாக அடங்கியபடி.  

அவள் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டவன், “எனக்கு எப்பவுமே என் பெண்டாட்டி புதுசா தான் தெரிவா?” என்றான். 

“உங்க கண்ணுக்கு மட்டும் அப்படி என்ன தெரியுமோ? நான் நிறம் கூட அப்படி அதிகம் இல்லை.” 

“உன்கிட்ட என்ன டி குறை ? என் அழகு ராஜாத்தி? எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில அளவா இருக்கே…” என்ற கணவனை ஆதிரை நறுக்கென்று கிள்ளி வைக்க, 

“ஆ…” என அலறியவன், “இருடி முழுசா சொல்ல விடு…” என்றான். ஆதிரை கணவனின் வெற்று மார்பில் தலைவைத்து படுக்க, அவளை வாகாக அனைத்துக் கொண்டவன், 

“இது வெறும் அழகு சம்பந்தப்பட்டது மட்டும் இல்லை. உன் குணம் உன் நடத்தை எல்லாமே தான். நிஜமா இப்படி ஒரு பொண்டாட்டி கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்.” என்றான். அவன் பேச்சுக்காகச் சொல்லவில்லை. அவனின் மனதின் ஆழத்தில் இருந்தே அந்த வார்த்தைகள் வந்தது. 

“நீங்க என்னவோ சொல்றீங்க, ஆனா நான் அப்படி என்ன பண்றேன்? வேலைக்குக் கூடப் போகலை.” 

“அடிப்பாவி என்ன டி இப்படிச் சொல்லிட்ட, வேலைக்குப் போறவங்க ஒசத்தி, போகாதவங்க மட்டமா?” 

“வீட்ல மட்டும் உனக்கு வேலை குறைவா என்ன? இல்லை வீட்ல இருக்கிற எல்லோருமே வீட்டு வேலைகளைப் பொறுப்பா பண்ணிடுறாங்களா? நீ வீட்ல பொறுப்பா இருக்கிறதுனாலதான் என்னால நிம்மதியா வேலைப் பார்க்க முடியுது.” 

“இன்னும் கொஞ்ச நாள்ல நீ மில்லுக்கும் வரப்போற, அப்ப அங்கேயும் எனக்கு வேலை குறைஞ்சிடும்.” 

“ம்ம்… ஆனா நான் ஒன்னு சொல்றேன். எல்லாப் பொண்ணுங்களும் என்னை மாதிரி இல்லைனாலும், நிறையப் பேர் இருக்காங்க. ஆனா அவங்க புருஷங்க எல்லாம் அவங்களை உங்களைப் போலக் கொண்டாடுறது இல்லை.” 

“இது உன்னோட வேலை அதைதான் நீ பண்ற, இதுல என்ன இருக்குன்னு தான் நினைக்கிறாங்க. அதனால உங்களை விட நான் தான் கொடுத்து வச்சவ, இப்படிக் கொண்டாடுகிற புருஷன் எல்லோருக்கும் அமையாது.” 

“போதும் டி இப்படிப் பாராட்டிட்டு இருந்தா பொழுதா விடிஞ்சிடும்.” என்றவன், இதனை நேரம் வார்த்தையால் காட்டிய காதலை, இப்போது செயலிலும் காட்ட ஆரம்பித்தான்.

Advertisement