Advertisement
“ஆமா டார்லிங். உனக்கும் எனக்கும் தான் கல்யாணம். நீ ஆசைப்பட்ட மாதிரி நாம ரெண்டு பேரும் ஒன்னு சேரப்போறோம்” என்றான் ஆதி.
“என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல. திடீர்னு வந்து கல்யாணம்னு சொல்றீங்க” என்றாள்.
அன்னைக்கு ஜாதகம் பார்க்கப் போனோம் இல்ல. அங்க தான் இப்படி அதிரடியா கல்யாணத்த முடிக்க சொன்னாங்க இசை.
“அதிரடியா கல்யாணமா?” என அதிர்ச்சி அடைந்தாள்.
“நீ ஆசைப்பட்ட வாழ்க்கை தானே இசை. சந்தோசமா உன் மாமன் கிட்ட தாலிய கட்டிக்கோ. இப்போ உனக்கு சந்தோஷம் தானே” என லட்சுமி கூற.
“யார கேட்டு இந்த முடிவை எடுத்திங்க?”
“யார கேட்கணும்?”
“என்னைய கேட்டு இருக்கணும்” என்றாள்.
அதுவரை உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்த வருண் அதிர்ச்சியோடு இசையின் பேச்சை கவனித்தான்.
அனைவருக்கும் இசை சொன்ன அந்த வார்த்தையை கேட்டு அதிர்ச்சியாக இருந்தது.
“இசை நான் விளையாட்டுக்கு அன்னைக்கு அழவச்சதுக்கு பதிலுக்கு நீயும் விளையாடுறியா?” என மாலையை அவர் கழுத்தில் போட வந்தான்.
” நிறுத்து ஆதி” என்றாள்.
“என்னடீ இத்தனை நாளா மாமானு சொன்ன. இப்ப பேர சொல்ற.
“வேற என்ன சொன்னா சந்தோஷப்படுவ?”
“ஐ லவ் யூ மாமானு சொல்லு சந்தோஷப்படுவேன்” என மாலையை அவள் கழுத்தில் போட வந்தான்.
“என் கழுத்தில மாலை போடுற தகுதி உனக்கு இல்லடா” என்றாள்.
அவளின் வார்த்தையில் இருந்த வித்தியாசத்தை கேட்டு ஆதி உட்பட அங்கு இருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது அந்த புது நபருடைய கதிரேசன் அங்கு வந்தார்.
இங்கு நடப்பதை கதிரேசனிடம் கூறி லட்சுமி அவசரமாக கண்கலங்க.
“கதிரேசனும் இது இசையோட வாழ்க்கை. இசையே தான் முடிவு எடுக்கணும். இசை என்ன சொன்னாலும் எனக்கு சம்மதம்தான்” என்றார்.
“சார்” என வந்தவர் அழைக்க.
“கொஞ்ச நேரம் பொறுங்க” என்றார்.
“என் கழுத்துல தாலி கட்ட உனக்கு அருகதை இல்லடா” என அவன் கையில் இருந்த மாலையை வாங்கிக் கொண்டு ஆதியின் கழுத்தில் இருந்த மாலையை கழட்டுடா” என்றாள்.
” இசை என்னடி பண்ணிக்கிட்டு இருக்க. புரிஞ்சுதான் பண்றியா?” என மல்லிகா பதற.
“அம்மா ஒரு நிமிஷம் தயவு செஞ்சு நீங்க அமைதியா இருங்க. இது என்னோட வாழ்க்கை” என்றாள்.
மல்லிகா அப்படியே உறைந்து போய் நின்றாள்.
இசையின் நடவடிக்கையை கண்டு அதிர்ந்து போய் ஆதி கழுத்திலிருந்த மாலையை கழட்டினான்.
மாலையை வெடுக்கென பிடிங்கிக் கொண்டு, தாம்பூலத் தட்டில் இருந்த தாலியை கையில் எடுத்தாள். நேராக வருணிடம் வந்து நின்றாள்.
“இத்தனை நாளும் உங்க அன்பை புரிஞ்சுக்காம இருந்த என்ன மன்னிச்சிடுங்க மாமா. என்ன உங்க பொண்டாட்டியா ஏத்துக்கறிங்களா மாமா. அந்த தகுதி எனக்கு இருக்கா மாமா” என வருணின் காலில் விழுந்து கதறினாள் இசை.
“இதை சற்றும் எதிர்பாரா வருணின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. இசை… இசை.. யோசிச்சு தான் பேசுறியா?” என்றான்.
“நான் நல்லாவே யோசிச்சி தான் இந்த முடிவை எடுத்திருக்கேன் மாமா.”
“இப்ப எதுக்கு இந்த முடிவ எடுத்த இசை. நான் சொல்ல சொல்ல கேட்காம அன்னைக்கு என்னைய சுத்தி சுத்தி வந்த. இப்ப அவன் கால்ல போய் விழற. என்னடீ நினைச்சுட்டு இருக்க உன் மனசுல” என கோபமாக ஆதி கேட்க .
“என் முன்னாடி நிக்க கூட உனக்கு தகுதி கிடையாது டா. ஒழுங்கா ஓரமா போய் நில்லு. எல்லார் முன்னாடியும் உன்ன அசிங்க படுத்த விரும்பல. என்னோட அத்தை மாமாக்காக யோசிக்கிறேன்” என்றாள்.
இசையின் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று புரியாமல் ஆதி திகைத்து போய் நின்றான்.
“என்னைய மன்னிச்சிடுங்க மாமா.
காலமெல்லாம் உங்க காலடியில விழுந்து கிடப்பேன்” என வருணின் காலில் விழுந்து கதறினாள் இசை.
” அம்மா” என வருண் மஞ்சுவை பார்க்க.
மஞ்சு ஓடி வந்து இசையை தூக்கி விட்டாள்.
“என்னம்மா? என்ன ஆச்சு? ஏன் இப்படி பண்ற?” எனக் கேட்க.
“அத்தை ப்ளீஸ். மாமா கிட்ட நீங்க சொல்லுங்க.நீங்க சொன்னா மாமா கேட்பாங்க” என்றாள்.
“மஞ்சு எதுவும் பேச முடியாமல் லட்சுமியையும் தன் கணவரையும் மாற்றி மாற்றி பார்த்தாள். ஜெய்யும், சம்யுக்தாவும் நடப்பது எதுவுமே புரியாமல் பேசாமல் மௌனமாக நின்றனர்.
” மாமா என்னோட மனசுல நான் கெட்டவன் இல்ல. சத்தியமா நான் ஆதிய என் மனசுல நெனச்சத தவிர அவனுடைய சுண்டு விரல் கூட என் மேல பட்டதில்ல. என் மேல நம்பிக்கை வச்சு என்னைய ஏத்துக்கோங்க மாமா. முடியாதுன்னா நேரடியா சொல்லிடுங்க. இப்படியே போய் ஏதோ ஒரு கிணத்துலயோ குளத்துலயோ என் உயிரை விட்டுவிடுவேன்” என்றாள்.
“வருண் இசையின் இதழ்களை தன் விரல்கள் கொண்டு மூடினான். அப்படி சொல்லாத இசை. உன் மேல எனக்கு எப்போதும் நம்பிக்கை இருக்கு. கடவுளே இறங்கி வந்து உன் மேல தப்பு சொன்னாலும் நான் நம்பமாட்டேன் இசை” என்றான்.
ஆதியின் முகத்தை வருண் பார்த்தான். ஆதி என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான்.
“என்ன வருண். அப்படி பாக்குற. நீயும் என் மகன் தாண்டா. அதான் மருமக இம்புட்டு தூரம் சொல்றா இல்ல. மாலையை வாங்கி கழுத்துல போடுப்பா” என கதிரேசன் கூறினார்.
கதிரேசனின் இந்த வார்த்தையை அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை.
“அப்பா!” என அதிர்ச்சியோடு ஆதி கதிரேசனைப் பார்க்க.
“வாய திறந்தா இங்கயே உன்னைய கொன்னுடுவேன்டா. எதுவுமே பேசாத. அமைதியா இரு” என்றவர் “வருண் இசைகிட்ட இருக்க மாலைய வாங்கி பொண்ணு கழுத்துல போடு” என்றார்.
வருண் சற்றும் நினைத்துப் பார்த்திராத திருப்பம். மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. இசையின் கையில் கிடந்த மாலையை வாங்கி அவளது கழுத்தில் போட்டான்.
“இசை மறுகணமே தன் கையில் இருந்த மாலையை வருண் கழுத்தில் போட்டாள்.
ஐயர் மந்திரம் கூற அனைவரும் அதிர்ச்சியில் இருந்து விலகாத போதே கதிரேசன் தாலியை எடுத்துக் கொடுக்க வருண் மங்கல நாணை இசையின் கழுத்தில் பூட்டினான்.
முழுமனதோடு மகிழ்ச்சியுடன் இசை வருணை தன் இதயத்திற்குள் உள்வாங்கிக் கொண்டாள். அந்த கணமே தன் உயிராக நேசிக்கத் தொடங்கி இருந்தாள்.
அனைவரும் அட்சதை தூவ கூட மறந்து இருந்தனர். கதிரேசன் அவர்களை அட்சதை தூவி வாழ்த்தினார்.
லட்சுமி கண்ணீரோடு கணவனைப் பார்க்க.
“உன் புள்ள பண்ணின பாவத்துக்கு என்னைய என்னடி பண்ண சொல்ற. இதெல்லாம் புள்ளையாடீ. இவனை பெத்ததுக்கு அப்பவே நாம செத்து இருக்கலாம்” என்றார்.
“அப்படியெல்லாம் சொல்லாதீங்க சார்” என அங்கிருந்த நபர் கூற.
” இவர் யாருங்க. இது வரைக்கும் நம்ம ஊர்ல பாத்ததே இல்ல. புதுசா இருக்காரு” என லட்சுமி கேட்க.
“இன்னும் கொஞ்ச நேரத்துல தெரியா தான போகுது” என்றார்.
“என்னங்க புதுசா விடுகதை எல்லாம் போடுறீங்க” என்று கூற அதிர்ச்சியோடு அவரைப் பார்த்தாள்.
அதே சமயம் ஆதி தாங்க முடியாத ஏமாற்றத்தினால் கோபத்தின் உச்சத்தில் இருந்தான். இதுவரை இவன் மட்டுமே பல பெண்களை ஏமாற்றினான். முதல் முறையாக இவனுக்கு வந்த ஏமாற்றத்தின் வலியை இவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. துடித்து போனான். தாங்க முடியாமல் கொந்தளித்தான்.
“எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்ட இல்லடா வருண். உன்ன சும்மா விட மாட்டேன் டா” என்று கூற.
கதிரேசன் ஆதியை பளாரென என அறைந்தார்.
“வாய மூடுடா நாயே. நம்பிக்கை துரோகம் பண்ணது வருண் இல்லடா. நீ தான். இதுக்கு மேல எதாவது பேசின இங்கயே வெட்டி போட்ருவேன்” என ஆவேசமாக பேசினார் கதிரேசன்.
“அப்பா நீங்களா தம்பிய இப்படி பேசறிங்க. அவனே இசை பண்ண துரோககத்த தாங்க முடியாம வலில இருக்கான். நீங்களும் இப்படி பேசினா “
“ஜெய் அவன பத்தி உனக்கு எதுவும் தெரியாது. நீ கொஞ்சம் அமைதியா இரு” என்றார்.
ஆமா மாமா. நான் இப்படி நடந்துகிட்டேனு உங்களுக்கு மட்டும் காரணம் தெரிஞ்சு இருக்கும். ஆனா இங்க இருக்க யாருக்கும் தெரியாது இல்ல. இப்ப சொல்றேன் கேளுங்க.
நான் ஆதிய லவ் பண்றேன். உயிரா நினைக்கிறேன்னு சொன்னதெல்லாம் உண்மைதான். இல்லன்னு சொல்லல.
“அவர் கீழே விழுந்து அடிபட்டப்போ காய்ச்சல் மாத்திரை கொடுக்கப் போனேன்னு நான் சொன்னேன்ல. அம்மா உங்களுக்கு நினைவிருக்கா?”
“நினைவிருக்கு இசை. அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?”
அன்னைக்கு தான் அவருடைய செல்போன் லாக் போடாம இருந்தது. அப்போ அதுல இருக்கு போட்டோஸ் எல்லாம் பார்த்தேன்.
மாமா ஓட போட்டோ இருந்தா எனக்கு அனுப்பிக்கலாமேனு தான் ஃபோனையே எடுத்தேன். அதுல பார்க்க கூடாத அசிங்கத்தை எல்லாம் நான் பாத்துட்டேன். அழகான பல பெண்களுடன் போட்டோவ அதுல அசிங்கமா வச்சிருக்கான் . சந்தேகம் வந்து வாட்ஸப் மெசேஜ் எடுத்து பார்த்தேன். நிறைய பொண்ணுங்க கிட்ட பேசி ஏமாத்தி இருக்கான். இப்படி ஒரு அசிங்கத்த ஏத்துக்க நான் தயாரா இல்ல. பொறுக்கி ராஸ்கல். அந்த கணமே என் மனசு உடஞ்சி போய்டுச்சி. வாழ்க்கை மொத்தத்துக்கும் சேர்த்து அன்னைக்கே அழுது தீர்த்துட்டேன்.
ஆதி இசை சொன்னதை கேட்டு தலை குணிந்து நின்றான். “ஜெய் ச்ச்சீ” என முறைத்நான்.
அப்புறம் எதுக்கு திரும்ப மாமானு கூப்பிட்டேனு நினைக்கலாம். யாருக்கும் சந்தேகம் வர வேண்டாம்னு தான் எப்போதும் போல நடந்துகிட்டேன்.
அன்னைக்கு நைட்டே நான் மாமாவ கூப்பிட்டு தனியா சொன்னேன். மாமா ரொம்ப வருத்தப்பட்டு அழுதாங்க. இப்படி ஒரு புள்ளைய பெத்துட்டனேனு துடிச்சி போய்ட்டாரு. இப்படி தப்பான ஒருத்தன் உனக்கு வேணாம்மா. உனக்கு நானே நல்ல பையனா பார்த்து கல்யாணத்த முடிச்சு வைக்கிறேன்னு எனக்கு அவர் ஆறுதல் சொன்னாரு.
மாமாவுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுனு யோசிச்சுட்டு நின்னேன். கொஞ்ச நேரம் நாங்க ரெண்டு பேருமே எதுவும் பேசாம கண்ணீரோட மௌனமா நின்னப்போ தான் அத்தையோட அழுகுரல் கேட்டது. நானும் மாமாவும் என்ன ஆச்சுனு கேட்கலாம்னு அங்க போனோம். வருணோட அழுகுரலும் சேர்த்து கேட்டதால அப்படியே நின்னுட்டோம்.
தொடரும்….
Advertisement