Advertisement
“இந்தா இசை இன்னும் ரெண்டு துண்டு மீன் போட்டு நல்லா சாப்பிடு. வளர்ற புள்ள” என மஞ்சு இன்னும் இரண்டு துண்டு மீன்களை அவள் தட்டில் வைக்க.
மஞ்சுவின் பாசத்தை பார்த்த மல்லிகா, ‘ரெண்டு பேருமே இப்படி பாசத்தை கொட்றாங்களே. இதுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேனோ?’ என மனதிற்குள் நினைத்த அதேசமயம் வருணைப் பார்த்தவள், “இந்த பிள்ளைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடு கடவுளே” என மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்.
வருணின் பார்வை மொத்தமும் இசையின் மேலே இருந்தது. அவள் ரசித்து ருசித்து சாப்பிடும் அழகை அவளுக்கே தெரியாமல் ரசித்தான்.
“கள்ளங்கபடம் இல்லாத இந்த இசை தனக்கு கிடைக்க மாட்டார்களா?” என்ற ஏக்கம் கண்களில் தெரிந்தது.
என்ன மாமா அப்படி பாக்குறீங்க?
“சும்மாதான் இசை” என சமாளித்தான்.
அத்தை உங்களுக்கு மீன் வைக்கலையேன்னு நினைக்கிறீங்களா? மாமா.
நான் எப்பவும் அப்படி நினைக்க மாட்டேன் இசை. நீ சாப்பிட்டா எனக்கு சந்தோஷம்தான்.
இசை சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு தட்டை அப்படியே வைத்துவிட்டு எழுந்தாள்.
“இந்த பழக்கத்தை மாத்திக்கோனு நான் பல முறை சொல்லி இருக்கேன் இசை” என மல்லிகா அவளை அதட்டினாள்.
“போங்கம்மா” என இசை அந்த இடத்தை விட்டு நகர்ந்து நிற்க.
“விடு மல்லிகா. நான் பாத்துக்கறேன்” என மஞ்சு கூற.
எல்லாம் நீங்க கொடுக்கிற இடம் தான். இவ இப்படி பண்றா.
“நம்ம வீட்டு புள்ள எப்பவும் சந்தோசமா இருக்கணும் . அவ வேல செய்ய வேண்டிய நேரத்துல தன்னால செய்வா மல்லிகா. நீ வேணா பாரு” என மஞ்சு கூற
பாக்கத்தானே போறேன். அப்புறம் நீங்களும் அண்ணியும் தான் செய்யப் போறீங்க.
“அட செஞ்சா போது விடு” எனக் கூறிவிட்டு மஞ்சு தன் வேலையை பார்க்க.
வருண் தனது அறைக்குச் செல்ல எழுந்தான். அப்போது நிலை தடுமாறி கீழே விழப்போனான்.
“அதை பார்த்த மாமா” என அவனைத் தாங்கிப் பிடித்தாள்.
அவள் இதற்கு முன்னாள் பல முறை தாங்கி பிடித்து இருக்கிறாள். சமீபகாலமாக இசையின் தொடுதலில் அவனுக்குள் ஒரு புத்துணர்வை உணர்ந்தான்.
வருண், “தேங்கஸ் இசை” என கூறினான்.
நான் என்ன வேத்து மனுஷியா. தேங்க்ஸ் சொல்றிங்க. அடி வாங்க போறீங்க.
அப்படி இல்ல இசை.
ஏன் மாமா. எனக்கு உங்கள தாங்கி பிடிக்கற உரிமை இல்லையா?
தாராளமா இருக்கு இசை. உனக்கு இல்லாத உரிமையா.
“இவர்களது உரையாடலை கேட்ட மஞ்சுவும் காலமெல்லாம் தோள் கொடுக்க நீயே வரமாட்டியா இசை” என கேட்க தான் தோன்றியது. ‘இசை மட்டும் எனக்கு மருமகளாக வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்’ என மனதிற்குள் மஞ்சவும் ஆசைப்பட்டாள்.
அப்புறம் எதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க.
இனி சொல்ல மாட்டேன் இசை.
சரி வாங்க. உங்கள ரூமுக்கு கொண்டு வந்து விட்டுட்டு போறேன்.
“வேணாம் இசை. நானே போறேன். குட் நைட் ” என்றான்.
“ஆனாலும் உங்களுக்கு பிடிவாதம் அதிகம் மாமா. குட் நைட்” என கூறிவிட்டு தனது அறைக்கு வந்தாள்.
கதிரேசனை லட்சுமி வெளியே அழைத்து வந்தாள். மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள். ஆனாலும் வார்த்தை தான் வெளியே வரவில்லை.
என்னடீ. ஏதோ பேசணும்னு வெளிய கூட்டிட்டு வந்துட்டு எதுவுமே பேசாம நிக்கிற.
உங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு தாங்க யோசனையா இருக்கு. எப்படி ஆரம்பிக்கனு தெரில.
எப்படியும் சொல்ல தான போற. அப்புறம் என்ன தயக்கம்.
சொல்லணும் தாங்க.
இந்தா பாரு லட்சுமி. வந்த விஷயத்த சுத்தி வளைக்காம நேரடியா சொல்லிடு. நான் தோட்டத்துக்கு வேற போகணும்.
நம்ம பையன் ஜெய் ஊர்ல இருந்து காலைல வந்துடுவாங்க.
என்னடி சொல்ற. நல்ல விஷயம் தான. ஆனால் அவன் வர பத்து நாள் ஆகுமுன்னு சொன்னியே. இப்ப காலையில வந்துருவான்னு சொல்றவ.
எல்லாம் காரணமாத்தாங்க.
அப்படி என்ன காரணம்? விடுகதை போடாம விஷயத்துக்கு வா லட்சுமி.
நம்ம பையனுக்கு அங்க வேலை போயிடுச்சாங்க.
ஏண்டி. என்ன ஆச்சு?
தெரியலங்க. அவன் வந்த பிறகு தான் கேட்கணும்.
இங்க இம்புட்டு நிலம் கிடக்கு. இத உழுது பயிர் பண்ணாவே போதும். எவன் கிட்டயும் கைகட்டி நிற்க வேண்டிய அவசியம் இல்ல. கழுதை சொன்ன பேச்சைக் கேட்குதா? இதுக்கெல்லாம் பட்டா தான் புத்தி வரும். வரட்டும் இதுக்கு மேலயாவது வயல்ல பாடுபடட்டும்.
அதெல்லாம் சரிதாங்க. இன்னொரு விஷயம் கேட்கச் சொன்னான்.
நல்ல விஷயமா இருந்தா இவ்வளவு தயங்க மாட்டியே. என்ன சொன்னான்னு எரிச்சலை கெளப்பாத சொல்லு.
அது வந்துங்க.. பையன் ஆத்துருல கொஞ்சம் வீட்டுமனை வாங்கி போட்டானில்ல.
ஆமா. அதுக்கென்ன இப்போ?.
அதுக்காக பத்து லட்சம் கடன் வாங்கி இருந்தான்.
ஆமா தெரியும்.
அவனுக்கு இப்ப வேல போய்டுச்சி.
அவன் என்ன செஞ்சானோ. அங்க என்ன நடந்துச்சோ. அதுக்கு இப்ப நான் என்னைய என்ன செய்ய சொல்றவ.
இல்லங்க. அந்த பத்து லட்சத்துக்கு வட்டி கட்டணும். இப்போ அவன் இருக்கிற நிலைமையில வட்டி கட்ட முடியாது.
வாழ்க்கைய கௌரவத்துக்கு வாழ நினைச்சா இப்படித்தான் கஷ்டப்படனும். அன்னைக்கே நான் சொன்னேன். தன்னுடைய தகுதிக்கு மீறி கடன் வாங்கக்கூடாதுனு. என் வார்த்தையை மதிச்சானா? கஷ்டப்படட்டும்.
புள்ளைக்கு அப்பா மாதிரியா பேசறிங்க. எதிராளி மாதிரி பேசறிங்க. அவனுக்கு நாமலே உதவி செய்யலனா என்ன பண்ணுவான்.
இங்க வந்து வயல்ல இறங்கி வேலை செய்ய சொல்லு. மெதுவாக கடனை கட்ட சொல்லு.
அவன் சொன்னா செய்வாங்க. இல்லன்னு சொல்லல. ஆனா…
என்ன ஆனா?
அவன் வந்து வேலைய செஞ்சு, பத்து ரூபாய் வருமானம் வரதுக்குள்ள அந்த பத்து லட்சத்துக்கு வட்டி குட்டி போட்டு தலைக்கு மேலே போய்டுங்க.
அதுக்கு என்னை என்னடீ பண்ண சொல்ற. அவன் வாங்கின நிலத்த வித்து கடனை கட்ட சொல்லு.
அந்த நிலம் இப்போ ரெண்டு மடங்கு அதிகமாக விக்குமாங்க. நல்ல மெயின் ரோட்டில் இருக்குதாம். அதை வித்தா திரும்ப வாங்கவே முடியாதாங்க.
இலட்சுமி என் பொறுமைய சோதிக்காத. இப்ப என்ன செய்யணும்னு சொல்ற.
லட்சுமியின் கண்கள் கலங்கியது.
இவ்வளவு தூரம் சொல்றேன்.
இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா அவ்வளவுதான் சொல்லிட்டேன். அது நமது பூர்வீக சொத்துனு உனக்கு தெரியாதா?
தெரியுங்க.
அதுவும் தவிர நமக்கு அது ராசியான நிலம். அந்த வீடு நமக்கு கோவில் மாதிரினு தெரியாதா?
தெரியுங்க.
தெரிஞ்சுமா வாய் கூசாம இப்படி கேக்குற. பூர்வீக சொத்து முக்கியம் தாங்க. இல்லன்னு சொல்லல. நம்ம பையனா விடவா இந்த அஞ்சு சென்ட் நிலம் பெருசா போய்டுச்சி.
ஆமாடீ. எனக்கு அந்த நிலம் பெருசுதான். ஒழுக்கமாக நிக்காம போய்டு. அதான் உனக்கு நல்லது.
ஒரு முறை யோசிச்சி பாருங்களேன். அவன் எப்படி கடன் கட்டுவான்.
இதை பத்தி ஒரு வார்த்தை கூட பேசாத லட்சுமி.
அந்த பூமியில இருக்க ஒவ்வொரு காசும் எங்கய்யா கஷ்டப்பட்டு மாடா உழைத்து சேர்த்து எனக்காக வாங்கி கொடுத்த நிலம். அத விக்க சொல்ல உனக்கு எப்படி மனசு வருது. இவ்வளவு தான் நீ என்னை புரிஞ்சுக்கிட்டதா? அது என் உசுருடீ. அந்த நிலத்துல எங்க அப்பாவ பாக்குறேன். அதை போய் விக்கனும்னு சொல்ற.
“சரிங்க. அதை விக்க வேண்டாம். அதுக்கு பதிலா காட்டுல ஏதாவது ஒரு மூலைய” என ஆரம்பிக்க.
கதிரேசனின் கோபம் உச்சத்தை தொட மனைவி லட்சுமியை “பளாரென” அறைந்தார்.
அவன் பண்ண தப்புக்கு பணத்துக்காக நிலத்துல ஒரு மூலைய விக்க சொல்ற. நாளைக்கு இன்னும் கடன் வாங்கிட்டு வந்து நிப்பான். அதுக்கு மொத்தத்தையும் விக்க சொல்லுவியா?
“நான் அப்படி சொல்லலங்க” என லட்சமி வார்த்தை தடுமாறி கண்களில் கண்ணீர் கொட்டியது.
இந்த சொத்து அவனுக்கு மட்டும் சொந்தமில்ல. வித்து தின்னுட்டு போறதுக்கு. சின்னவனுக்குவனுக்கு என்ன பதில் சொல்றது. சின்னவன என்ன பண்ணலாம்.
அவனுக்கு சொல்லி புரிய வச்சா ஆதி கேட்டுப்பாங்க.
“ஓஹோ. அப்போ என் தங்கச்சிக்கும் இதுல பங்கு இருக்குது. அத மறந்துடாத. இவங்களுக்கு தர வேண்டாமா?
நான் கனவில் கூட இத விக்கனும்னு நினைச்சதில்லங்க. இப்போதைக்கு பையனோட கஷ்டத்த குறைக்கலாமேன்னு தான்.
அந்த பேச்சுக்கே இடம் இல்ல. இத மறந்துட்டு போயி நீ தூங்கு. இதைப்பத்தி இனி என்கிட்ட பேசாத.
“அவன் கடன் வாங்காதடானு சொல்லியும் வாங்கினான். தகுதிக்கு மீறி ஆசைப்பட்டான். இப்ப அவன்தான் கஷ்டப்படனும்” எனக் கூறிவிட்டு லட்சுமியின் முகத்தை கூட பார்க்காமல் கதிரேசன் விடுவிடுவென நடந்தார்.
“பையன் நாளைக்கு வந்து கேட்டா அவனுக்கு நான் என்ன பதில் சொல்லப் போறேன்” என யோசனையோடு லட்சுமி வீட்டிற்குள் சென்று படுத்தாள்.
கண்களை இறுக மூடினாலும் கதிரேசனின் ஒவ்வொரு வார்த்தையும் முள்ளாய் குத்தியது. உறக்கம் பிடிபடாமல் துன்பப்பட்டாள்.
“ஒருபுறம் பேரப்பிள்ளைகளின் வருகையை எண்ணி மகிழ்ச்சி அடைவதா? மகனுக்கு என்ன பதில் சொல்லப் போகிறேன்னு நினைச்சி துன்பப்படுவதானு தெரியலையே” என உறங்க முயற்சி செய்து தோற்றுப் போனாள்.
பெங்களூரில் சம்யுக்தா வேறுவழியின்றி பொருட்களை பேக் பண்ணத் தொடங்கினாள்.
ஜெய் பொருட்களை ஏற்றிச்செல்ல வண்டியை பிடித்து வந்து பொருட்களை ஏற்றத் தொடங்கினான். சற்று நேரத்தில் பொருட்களை ஏற்றி முடித்தார்கள்.
ஹவுஸ் ஓனர் அங்கு வந்து சேர. அவரிடம் சாவியை ஒப்படைத்தான்.
அவர் அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுக்க, அதை வாங்கிக்கொண்டு அவரிடம் விடை பெற்று கிளம்பினார்கள்.
ஜெய்யின் முகத்தில் ஒரு நிம்மதியும், குழந்தைகள் முகத்தில் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சியும், சம்யுக்தாவின் முகத்தில் கவலையும் தென்பட்டது.
வண்டி தங்களது கிராமத்தை நோக்கி மெதுவாக நகரத் தொடங்கியது..
மெல்லிசை தொடரும்…
Advertisement