Advertisement

எந்தன் காதல் நீதானே 

அத்தியாயம் 9 

அன்று எல்லோருமே மிகவும் களைத்துப் போனதால்… இரவு உணவு உண்டதுமே, “எல்லாம் போய்ப் படுங்க. காலையில பேசலாம்.” என்றார் அமுதா. 


அகல்யாவும் ராதிகாவும் கீழே இருக்கும் இரண்டு படுக்கை அறைகளில் ஒன்றில் தான் உறங்குவார்கள். அவர்கள் இருவரும் அறைக்குள் சென்றதும், வெண்ணிலாவிடம் பால் எடுத்துக் கொண்டு அறைக்குச் செல்லும்படி அமுதா சொல்ல, அவளும் பாலை எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்றாள். 

அவள் அறைக்குச் சென்றபோது, ஜெய் உடைமாற்றிப் படுக்கத் தயாரானவன், “எனக்குக் கீழே படுத்தா தான் தூக்கம் வரும். நீ மேல படுத்துக்கோ.” என்றவன், அவனது படுக்கையை விரித்துப் படுத்தும் கொண்டான். 

வெண்ணிலா இன்னும் பட்டுப் புடவையில் தான் இருந்தாள். அவளின் சாமான்கள் அறையின் ஓரத்தில் இருக்க, அதில் நைட்டி இருந்த பையைத் தேடி எடுத்து, குளியல் அறைக்குள் சென்று உடைமாற்றி வந்தவள், அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழட்டி அங்கிருந்த அலமாரியில் பத்திரபடுத்தினாள். 

அறையில் விளக்கு எரிந்ததால் ஜெய் தன் கைக் கொண்டு கண்ணை மறைத்தபடி படுத்திருந்தான். அதைப் பார்த்ததும் விளக்கணைக்கச் சென்றவள், பிறகே எடுத்து வந்த பாலைக் கவனித்தாள். 

“அத்தான், அத்தை பால் கொடுத்து விட்டாங்க. சொல்ல மறந்திட்டேன்.” என்றாள். 

“நீயே குடி.” என்றான். 

“உங்களுக்குப் பால் பிடிக்காதா.. நேத்தும் நான்தான் குடிச்சேன். நாளைக்கு அத்தைகிட்ட எனக்கு மட்டும் கொடுக்கச் சொல்றேன்.” என்றதும், பட்டென்று எழுந்து அமர்ந்தவன், “அம்மா தாயே, அப்படி எதாவது உளறி வைக்காத. கொடு அந்தப் பாலை.” என்றான். 

வெண்ணிலா எடுத்து வந்து கொடுத்துவிட்டு கீழே அமர்ந்து கொண்டாள். அவன் அண்ணாந்து மடமடவெனக் குடிக்க… வெண்ணிலா அவனையே பார்த்துக் கொண்டிருக்க… 

“இந்தா உன்னோட பங்கு.” என மீதி இருந்த பாலைக் அவளிடம் கொடுக்க… வாங்கிக் கொண்டவள், நிதானமாக அருந்த ஆரம்பித்தாள். 

ஜெய் சென்று வாய் கொப்பளித்து மண்பானையில் இருந்த தண்ணீரை எடுத்து அருந்தியவன், மீண்டும் படுக்கச் செல்ல… 

“அத்தான், இந்த நெக்லஸ் கொஞ்சம் கழட்டி விடுங்களேன். கழட்ட வரலை… போட்டுட்டு தூங்க முடியாது கழுத்தை அழுத்தும்.” என்றவள், திரும்பி உட்கார்ந்து கொண்டு, கூந்தலை எடுத்து முன்புறம் போட்டுக் கொண்டாள். 

நெக்லஸில் அவளது தலை முடி சுற்றியிருந்தது. அதனால் தான் அவளுக்குக் கழட்ட வரவில்லை. 

ஜெய் சிக்கியிருந்த கூந்தலை மெதுவாக எடுத்தான். மனைவியின் அருகாமையும், அவள் கூந்தலில் இருந்த மல்லிகையின் மனமும் அவனைக் கிறங்க செய்யப் போதுமானதாக இருக்க… மனதை அடக்குவது மிகவும் சிரமமாக இருந்தது. 

என்ன டா இது சோதனை. நாமே அடங்கி இருந்தாலும் இவ இருக்க விட மாட்டா போலவே என நினைத்தாலும், இந்த நேரத்தில் தன்னை விட்டால், அவள் வேறு யாரிடம் கேட்க முடியும் என நினைத்தவன், முதலில் நெக்லசில் இருந்து அவளது கூந்தலை பிரித்து எடுத்தான். 

பிறகு அவளது கழுத்தணியைக் கழட்ட… வெண்ணிலாவுக்கு எதிலிருந்தோ விடு பட்ட உணர்வு. கழுத்தை தேய்த்து விட்டவள், கனமான தாலி சங்கிலியை தூக்கி நெற்றியில் வைத்துக் கொண்டாள். 

பார்த்த ஜெய்க்கு அவளது கஷ்டம் புரிந்தது. நகை என்பது பெண்களுக்கு அழகு தான். ஆனால் அதுவும் சில நேரம் தொல்லைதான். 

நகையை அலமாரியில் சென்று வைத்தவன், வெண்ணிலா மிகவும் களைத்திருப்பதைப் பார்த்து, ஒரு துண்டை நனைத்து வந்து அவளின் பின்னங் கழுத்தில் வைத்து அழுத்தி விட… அவளுக்கு இதமாக இருக்க, அவன் கையில் இருந்து வாங்கி அவளே கழுத்தை துடைத்துக் கொண்டாள். 

இதற்கு மேலும் இங்கிருந்தால்… வேறு எதாவது செய்து விடுவோமோ என்ற அச்சத்தில் எழுந்த ஜெய், “நீ படு. நான் கொஞ்ச நேரத்தில் வரேன்.” என்றவன், அறையின் இன்னொரு கதவை திறந்து மாடியில் சென்று நின்று கொண்டான். 

இப்போது தான் வளர்பிறையின் ஆரம்பம் என்பதால்… வானில் நிலவு இன்னும் முழுதாக வரைந்து முடிக்காமல் இருக்க… காற்று வேறு சிலுசிலுவென அடிக்க… வீட்டிற்குள் இருந்த வெண்ணிலவோ, வீசிய காற்றில் சுகமாகத் தரையில் படுத்தே உறங்கி இருந்தாள். 

சிறிது நேரம் சென்று அறைக்கு வந்த ஜெய்க்கு, இப்போது தான் எங்கே படுப்பது எனக் குழப்பம். இவ மனசில என்ன இருக்குன்னே தெரியலையே… என நொந்து கொண்டவன், அவளைத் தட்டி எழுப்பினான். 

யாரோ எழுப்புவது போல இருந்தாலும், வெண்ணிலாவுக்கு எழும்பவே முடியவில்லை. 

“வெண்ணிலா…” என ஜெய்யின் குரல் கேட்டதும், மெல்ல விழித்துப் பார்த்தாள். 

“வெறும் தரையில படுத்திருக்க… நைட் ரொம்பக் குளிரும். எழுந்து கட்டில்ல படு.” என்றதும், இதற்குத்தானா? என்பது போலப் பார்த்தவள், மீண்டும் உறக்கத்தைத் தொடர.. 

“சரி நான் உன்னைத் தூக்கி தான் கட்டில்ல படுக்க வைக்கணும்.” என்றதும், பட்டென்று எழுந்து கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள். 

“அந்தப் பயம் இருக்கட்டும்.” என்ற ஜெய்க்குச் சிரிப்பு வர… அவன் கீழே படுக்கத் தயாராக…அதைப் பார்த்தவள், 

“நேத்தெல்லாம் எங்க வீட்ல கட்டில்ல படுத்து நல்லாத்தான் தூங்கினீங்க.” என்றவள், உடனே உறங்கியும் போனாள். 

அவன் படுக்க இடம் விட்டுத் தள்ளித்தான் படுத்திருந்தாள். ஒரு நொடி யோசித்தவன், அவளே தானே சொல்கிறாள் எனக் கட்டிலில் அவள் அருகிலேயே படுத்துக் கொண்டான். 

அருகில் புத்தும் புது மனைவியை வைத்துக் கொண்டு, ஒன்றும் செய்யாமல் இருப்பது, எவ்வளவு கஷ்டம் என மனதிற்குள் புலம்பியவன், வெகு நேரம் சென்றே உறங்கினான். 

காலை பறவைகளின் கீச் கீச் சத்தத்தில் வெண்ணிலாவுக்கு விழுப்பு வந்துவிட்டது. இரவு நன்றாக உறங்கி இருந்ததால்… விடியல் புத்துணர்ச்சியைக் கொடுக்க… ஜெய்யின் உறக்கம் கலையாமல் மெதுவாகக் கட்டிலில் இருந்து இறங்கியவள், வெளி மாடியின் கதவைத் திறந்து சென்று விடியலை ரசித்தாள். 

அவர்கள் தெருவில் வீடுகள் தள்ளித் தான் இருக்கும். அதுவும் எல்லா வீடுகளிலும் சுற்றிலும் மரங்கள் வைத்து அந்தப் பகுதியே பசுமையாகத்தான் இருக்கும். அதனால் நிறையப் பறவைகளும் இருக்கும். 

பணியில் நனைந்த பூக்கள், செடி கொடிகள், பறவைகள் எனப் பார்த்து ரசித்தவள், மாடியில் இருந்து பக்கவாட்டு வழியாகக் கீழே பார்க்க… அங்கே முற்றத்தில் அகல்யாவும் ராதிகாவும் இருந்தனர். 

வெண்ணிலா அவர்களை இங்கிருந்தே அழைக்க… “ஹாய் எழுந்துட்டியா..இரு வரோம்.” என்றவர்கள். முதல் மாடியின் பால்கனியில் இருந்த இரும்பு ஏணி வழியாக மேலே வந்தனர். மூவரும் சேர்ந்ததும் ஒரே அரட்டை தான். 

வெண்ணிலா அறையின் கதவை மூடி தான் வைத்திருந்தாள். ஆனால் ஜெய்க்கு அவர்களின் பேச்சுச் சத்தம் கேட்க, உறக்கம் களைந்து எழுந்தவன், ஓய்வு அறைக்குச் சென்று பல் துலக்கி முகம் கழுவி கொண்டு வெளியே வந்தான். 

“காலையிலே ஆரம்பிச்சுடீங்களா… மூன்னு பேரும் இங்க நின்னு அரட்டை அடிக்கிறதுக்கு. கீழே போய் எதாவது வேலைப் பார்க்கலாம். அம்மாவும் சித்தியும் தனியா பண்ணிட்டு இருப்பாங்க.” என்றதும், 

தங்கைகள் இருவரும் வந்த வழியே திரும்பி செல்ல… வெண்ணிலாவும் ஜெய்யை முறைத்தபடி குளிக்கச் சென்றாள்.

அவள் வந்ததும், ஜெய்யும் குளித்து விட்டு வந்தான். வெண்ணிலா ஒரு பெட்டியை பிரித்து அதில் இருந்த அவளது நகைகளை எடுத்துக் கட்டிலில் பரப்பி வைத்திருக்க… 


இவ்வளவு நகையா என்பது போலப் பார்த்தவன், “இப்ப எதுக்கு இப்படிக் கடை பரப்பி வச்சிருக்க?” என்றதும், 

“ம்ம்… வேண்டுதல்… பெட்டியிலேயே வச்சிருக்க முடியுமா? அது தான் எங்க வைக்கிறது சொல்லுங்க.” என்றாள். 

“வாயே திறக்க மாட்ட… இப்ப நல்லா பேசுறியே.” என்றவன், “இந்த ரூம்ல வைக்கிறது பாதுகாப்பு இல்லை. உன் மாமாகிட்ட கொடு.” என்றான். எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல… 

வெண்ணிலா நகைகளை ஒரு பையில் அடுக்கியவள், தன்னைக் கண்ணாடியில் ஒருமுறை சரிபார்த்து விட்டு கிளம்ப, ஜெய்யும் மாடிபக்க கதவை பூட்டிவிட்டு அவளுடன் கீழே சென்றான். 

அவர்களைப் பார்த்ததும் அமுதா, “நானே அகல்யாகிட்ட காபி கொடுத்து விடணுன்னு இருந்தேன். நீங்களே வந்துட்டீங்க.” என்றவர், காபி கொண்டு வந்து கொடுக்க… இருவரும் அதை வாங்கிப் பருகினர். 

ஜெயராமன் வெளியே செல்லக் கிளம்புவதைப் பார்த்த வெண்ணிலா, “மாமா, இதுல நகை எல்லாம் இருக்கு.” எனப் பையைக் கொடுக்க… அகல்யாவும் ராதிகாவும், “காட்டு என்னென்ன டிசைன் வச்சிருக்கப் பார்க்கலாம்.” என வாங்கிப் பார்த்தனர். 

இருவரும் ஒவ்வொரு டப்பாவாக எடுத்து திறந்து அடுக்கியவர்கள், “எல்லாமே நல்லா இருக்கு இல்ல..” என அவர்களுக்குள் பேசிக் கொள்ள… 

“எல்லாத்தையும் இங்க எடுத்திட்டு வந்துட்டியா… உங்க வீட்ல கொஞ்சம் வச்சிட்டு வந்திருக்கலாமே… அங்க போகும் போது போட்டுக்க.” என அமுதா சொல்ல… 

“அங்க கொஞ்சம் இருக்கு அத்தை.” என வெண்ணிலா எல்லோரையும் திகைக்க வைக்க… 

“உனக்குத் தேவையானது மட்டும் வீட்ல வச்சிட்டு மிச்சத்தை, பேங்க் லாக்கர்ல வச்சிடலாம்.” என்ற ஜெயராமன். 

“நீயும் மருமகளும் ஒருநாள் போய்ப் பாங்க்ல வச்சிட்டு வந்திடுங்க. வீட்ல இவ்வளவு நகை வைக்கிறது பாதுக்காப்பு இல்லை.” என்றதும், 

வீட்டில் வைக்கச் சிலது, லாக்கரில் வைக்க என வெண்ணிலா பிரித்துக் கொடுக்க, அதை வாங்கிச் சென்ற ஜெயராமன், அதைப் பீரோவில் இல்லாமல், வேறு யாரும் கணிக்க முடியாத மற்றும் எளிதில் அணுக முடியாத இடத்தில் பத்திரப் படுத்தினார். 

அன்று எல்லோரும் வீட்டில் இருந்ததால்… ஆற்று மீன் குழம்பு, வறுவல் என அமர்க்களப்பட… ஆளுக்கு ஒரு வேலை பேசிக்கொண்டே செய்தனர். 

மறுநாள் காலை உணவில் ஆரம்பித்தது, ஒரே நாளில் அவர்கள் ஊரில் இருந்த உறவினர்கள் வீட்டிற்கு எல்லாம் ஜெய் வெண்ணிலாவை அழைத்துச் சென்று வந்தான். இருவரும் அவன் பைக்கில் தான் சென்றனர். 

காலை உணவு, மதியம் விருந்து, மாலை பலகாரம் என ஒவ்வொரு வீட்டில் உண்டனர். நடுநடுவே வழியில் இருந்த மற்ற உறவினர்கள் வீட்டிலும் தலையைக் காட்டி விட்டு சென்றனர். வெண்ணிலா மிகவும் களைத்துப் போனாள். 

“ஏன் அத்தான் ஒரே நாள்ல எல்லார் வீட்டுக்கும் போறோம். இன்னொரு நாள் போகலாமே?” 

“உனக்கு இங்க இருக்கப் பழக்கம் தெரியாது. ஒருநாள் ஒரு வீட்டுக்கு போனா… காலையில டிபினுக்கே வர வச்சு… சாயங்கலாம் பலகாரம் கொடுத்துதான் விடுவாங்க. ஒருநாள் முழுக்க இருக்க வேண்டியது வரும். இப்படி ஒரே நாள்ல எல்லார் வீட்டுக்கும் போனாதான் தான் தப்பிக்க முடியும்.” 

“ஓ… இதில் இவ்வளவு இருக்கா?” என நினைத்தவள், அவன் சொல்வதும் சரிதான் என நினைத்தாள். 

அன்று வேறு எதுவும் உணவு அருந்தாமல் பாலும் பழமும் மட்டும் உண்டு, இருவரும் இரவு உணவை முடித்துக் கொண்டனர். 

ஐந்தாம் நாள் காலை வெண்ணிலா எழுந்து கொண்ட போதே ஜெய் வீட்டில் இல்லை. அவன் அலுவலகத்திற்குப் பத்து நாள் விடுப்பு என அவளுக்குத் தெரியும். பிறகு வேறு எங்குச் சென்றான் என நினைத்தவள், எழுந்து அவள் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள். 

அன்று பள்ளிக் கல்லூரி என இளவட்டங்கள் சென்றிருக்க… வெண்ணிலா வீட்டில் போர் அடித்துப் போய் இருக்க, அப்போது வந்த கவிதாவை அவள் ஆவலாகவே வரவேற்க, கவிதாவோ முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றாள். 

முதலில் அவளின் கோபம் வெண்ணிலாவுக்குப் புரியவே இல்லை. பிறகே அவளை ஜெய்க்குத் திருமணம் செய்ய நினைத்திருந்தது நினைவு வந்தது. 

“அவளுக்கு அத்தானை மிகவும் பிடிக்கும் போல… தன்னால்தான் அவர்கள் திருமணம் நடக்கவில்லை.” என்பது வெண்ணிலாவுக்கு மன வருத்தத்தைக் கொடுக்க… அதை அன்று இரவு அவர்கள் அறையில் வைத்து ஜெய்யிடம் கேட்டும் விட்டாள். 

“அத்தான், நீங்க கவிதாவை தானே கல்யாணம் செய்துக்கிறதா இருந்தது. அப்புறம் ஏன் அத்தான் இப்படிப் பண்ணீங்க? பாவம் கவிதாவுக்கு ரொம்பக் கஷ்டமா இருந்திருக்கும் இல்லை. என்னோட பேசவே இல்லை.” என்றதும், ஜெய்க்கு அப்படியொரு கோபம் வந்தது. 

“அவளுக்கு என்னைக் கல்யாணம் பண்ணலைன்னு கஷ்டமா? இல்லை இவனைப் போய்க் கல்யாணம் பண்ணிட்டோமேன்னு உனக்குக் கஷ்டமா?” என்றவன், 

“ஏய் என்னைப் பத்தி என்ன நினைச்சிட்டு இருக்க? எனக்கு உன்னைப் பிடிக்கும்ன்னு நான் சொல்லலை…” 

“உன்னையும் விரும்பிட்டு, அவளையும் ரூட் விட்டேன்னு நினைச்சியா?” 

“அவங்க வீட்ல கேட்டாங்க, நாங்க யாரும் சரின்னு சொல்லலை… அதை முதல்ல தெரிஞ்சிக்கோ… நான் சித்திக்காக அமைதியா இருந்தேன் அவ்வளவுதான்.” 

“ஒருத்தரை மனசுல வச்சிட்டு இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்கிற ஆளு நான் இல்லை.” ஜெய் சொன்னது தன்னைக் குத்திக் காட்டுவது போல இருக்க… 

“அப்ப நான் அப்படின்னு நீங்க சொல்றீங்களா?” என வெண்ணிலா திருப்பிக் கேட்க, 

ஜெய் வாயில் சனி தாண்டவம் ஆடியதோ என்னவோ, “எனக்கு அது தெரியாது. நீதான் சொல்லணும்.” என்றான். 

“அப்படி நினைகிறவர் என்னைக் கல்யாணம் பண்ணியிருக்கக் கூடாது.” என்றாள். 

“நான் உங்களைப் பத்தி ரொம்ப உயர்வா நினைச்சேன் அத்தான்.” 

தான் பேசியது தவறு என ஜெய்யும் உணர்ந்து இருந்தான். 

“நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. எனக்கு உன்னோட வாழ்க்கையில முன்னாடி நடந்தது பத்தி ஒன்னும் இல்லை. இனி நாம வாழப்போற வாழ்க்கையைப் பார்க்கலாம்.” 

“இனி நீயும் கவிதாவை இழுக்காத. நானும் அப்படிப் பேச மாட்டேன். தூங்கலாமா?” என்றதும், வெண்ணிலா அவனை முறைத்தபடி சென்று படுத்துக் கொண்டாள். 

அதன் பிறகு வெண்ணிலா அவனுடன் பேசவும் இல்லை. ஜெய்யும் வீட்டில் இல்லை. காலையிலேயே செல்பவன் மாலையில் தான் திரும்பி வருவான்.

Advertisement