Advertisement

எந்தன் காதல் நீதானே

அத்தியாயம் 23

மதிய உணவை உண்டுவிட்டுக் கற்பகம் ஹாலில் இருந்த சோபாவில் படுத்துக்கொள்ள, மணமக்கள் எந்த நேரத்திலும் வருவார்கள் என்பதால் வெண்ணிலா வீட்டை ஒதுங்க வைத்து கூட்டி முடித்தவள், தானும் முகம் கழுவி வேறு புடவை மாற்றித் தயாரானாள். 


கற்பகம் இதெல்லாம் பார்த்தபடி தான் படுத்துக் கொண்டு இருந்தார். 

“இப்பத்தானே சாப்பிட்ட கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்காம உடனே ஏன் வேலை பண்ற?” என அவரும் சொல்லித்தான் பார்த்தார். ஆனால் வெண்ணிலா கேட்க வேண்டுமே.

முதலில் விமலா காமாக்ஷி அமுதா மகேஸ்வரி ராதிகா என வீடு வந்தனர். 

மாப்பிள்ளை வீட்டினர் வருவதற்குள் வீட்டை ஒதுங்க வைக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் தான் பெண்கள் முதலில் வந்தனர். ஆனால் வெண்ணிலா அவர்களுக்கு வேலையே இல்லாமல் எல்லாம் செய்து வைத்திருக்க, 
“நீ இல்லைனா நாங்க ரொம்பச் சிரமபட்டிருப்போம்.” என்றார் அமுதா பெருமையாக. 

“இன்னும் கொஞ்ச நேரத்தில பொண்ணு மாப்பிள்ளையை அழைச்சிட்டு மாப்பிள்ளை வீட்டுகாரங்க வந்திடுவாங்க. அதுதான் நாங்க முன்னாடி வந்துட்டோம்.” 

“சரி நீங்க எல்லாம் பார்க்க களைப்பா இருக்கீங்க. அவங்க வர்றதுக்குள்ள முகம் கழுவி தலைவாரிட்டு வாங்க.” என வெண்ணிலா அவர்களை அனுப்பி வைத்தவள்,
மாப்பிள்ளை வீட்டினர் வந்ததும் கொடுப்பதற்கு வசதியாக, மண்டபத்தில் இருந்து வந்திருந்த இனிப்பையும் காரத்தையும் சின்னத் தட்டுகளில் எடுத்து வைத்தாள். 

தயராகி வந்த காமாட்சியும் அமுதாவும் டீக்குத் தண்ணீர் கொதிக்க வைத்து டீ போடும் போதே மாப்பிள்ளை வீட்டினர் வர, தயாராக இருந்த ஆரத்தியை ராதிகா எடுக்க, மணமக்களுடன் உறவினர்களும் வீட்டிற்குள் வந்தனர். 

அவர்களோடு வீட்டின் ஆண்களும் ஜெய்யைத் தவிர மற்றவர்கள் வந்திருந்தனர். ஆண்கள் ஹாலிலும் பெண்கள் அறையிலும் உட்கார்ந்து கொள்ள, வெண்ணிலா எல்லோருக்கும் சிற்றுண்டி கொண்டு வந்து கொடுத்தாள். 

சிறிது நேரம் இருந்துவிட்டு மணமக்களை விட்டு விட்டு மாப்பிள்ளை வீட்டினர் கிளம்பி விட்டனர். அவர்கள் கிளம்பியதும், ராஜகோபால் வெண்ணிலாவின் வளைகாப்புக் குறித்துப் பேசினார். 

“சின்ன மண்டபம் ஒன்னு பிடிச்சு வைப்போமா?” என அவர் சொல், 

“வேண்டாம் மச்சான். வீட்லயே வைப்போம். ரொம்பப் பேரை எல்லாம் அழைக்கலை… வீணா கண்ணு படும். மருமகள் நல்லபடியா குழந்தை பெத்து வரட்டும் அது போதும்.” என்றுவிட்டார் ஜெயராமன். 

மீண்டும் ஒருமுறை மண்டபத்தில் வைப்போமே என ராஜகோபால் வலியுறுத்த, “அப்பா, மாமா சொன்னா சரியாதான் இருக்கும். வீட்லயே வைக்கலாம்.” என்றாள் வெண்ணிலா. 

அவளே சொல்லிவிட்ட பிறகு ராஜகோபாலும் சரி என்றுவிட்டார். வளைகாப்புப் பெண் வீட்டில் செய்வது. செலவிற்காக வீட்டில் வைக்கிறோம் என நினைத்து விடக் கூடாதே என்றுதான் அவரும் நினைத்தார். மகளே சொன்னதும் அவர்கள் விருபத்திற்கே விட்டுவிட்டார். 

இன்னும் பத்துநாட்களில் வெண்ணிலாவுக்கு ஒன்பது மாதம் தொடங்க இருப்பதால், ஒன்பதாம் மாதத்தில் இருந்த முதல் நல்ல நாளிலேயே வலைகாப்பிற்கு நாள் குறித்துவிட்டு, ராஜகோபால் கிளம்ப உடன் கற்பகமும் யுவராஜும் சென்றனர். 

ஜெய் வீட்டிற்கு வரும்போது, ஏழு மணி. மண்டபத்தில் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து விட்டு வந்திருந்தான். 

அவன் குளித்துவிட்டு வர, மாப்பிள்ளைக்கு இரவு உணவு தயார் செய்து கொண்டிருந்தனர். ஒரு பக்கம் மணமக்களுடன் இளைய பட்டாளாம் அரட்டையில் இருக்க, வெண்ணிலாவின் அருகில் இருந்த ராதிகாவை எழுப்பி விட்டு ஜெய் உட்கார்ந்து கொண்டான். 

“என்ன டா மாப்பிள்ளை எப்படி உன்னை நல்லா கவனிக்கிறாங்களா?” என ஜெய் நண்பனை விசாரிக்க, புகழ் பதிலுக்குச் சிரிக்க, 

“கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்தான். பிறகு எல்லாம் நாமும் பத்துல ஒண்ணுதான்.” 

“இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க. எங்க வீட்ல உங்களை இப்ப ஒழுங்கா கவனிக்கிறது இல்லைனா?” என வெண்ணிலா கணவனை மடக்க, 

“நான் அப்படிச் சொன்னேனா, நான் சாதரணமா தான் சொன்னேன்.” என்றான். 

“ஆமாமா நீங்க அப்படியே எங்க வீட்டுக்கு வந்திடுறீங்க பாருங்க, உங்களைக் கவனிக்கலைன்னு சொல்ல.” 

“அம்மா தாயே புல் பார்மல இருக்கப் போல… என்னை ஆளை விடு.” என்றான் ஜெய். 

“அண்ணனுக்குத் தான் ரொம்ப வேலை.” என அகல்யா ஜெய் களைத்திருப்பதைப் பார்த்து சொல்ல, 

“இதெல்லாம் ஒரு வேலையா?” என்றான் ஜெய். 

“என்னோட கல்யாணத்துல அண்ணனுக்கு நான் இவ்வளவு வேலை எல்லாம் வைக்க மாட்டேன்.” என ராதிகா சொல்ல,

“வேலையே வைக்க மாட்டேனா புரியலையே?” எனப் புகழ் சொல்ல, 


“அது தானே இவ எந்த அர்த்தத்தில சொல்றா?” என யஸ்வந்தும், 

“அம்மா தாயே இதெல்லாம் ஒரு வேலையே இல்லை. உங்களைப் புருஷன் வீட்டுக்கு துரத்திட்டு நாங்க நிம்மதியா இருப்போம்.” என்றான் சத்யா. 

“பாருங்க அண்ணா எப்படிச் சொல்றான்னு. நான் கல்யாணத்துக்குப் பிறகும் இங்கதான் இருப்பேன்.” என ராதிகா சொல்ல, இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த காமாக்ஷி, “இங்க இருந்தா வேலையே பார்க்காம ஓட்டிடலாம்ன்னு பார்க்கிறா?” 

“இவளுக்கு ஏதாவது வெளிநாட்டில, தூரமா மாப்பிள்ளை பாரு. இவளை பக்கத்துல வச்சிட்டு யாரு மல்லு கட்டுறது? இவளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறது உன்னோட பொறுப்பு” என்றதும், ஜெய்யும் ஆமோதிக்க, மற்றவர்கள் ராதிகாவை கேலி செய்து சிரித்தனர். 

இரவு உணவுக்கு இட்லி சப்பாத்தி கோழிக் குழம்பு எனச் செய்திருந்தனர். அதோடு பிரியாணியும் மீதம் இருக்க, புகழ் அகல்யாவோடு வீட்டின் இளையபட்டாலமும் சேர்ந்து உண்டது. 

“அண்ணி புண்ணியத்துல நைட்டுக்கும் நமக்குப் பிரயாணி கிடைச்சிருக்கு.” என ராதிகா பிரயாணியை வைத்து கட்ட, அகல்யாவும் பிரியாணி தான் வேண்டும் என்றாள். வெண்ணிலா அகல்யாவுக்குப் பரிமாறிவிட்டு தனக்கும் பிரியாணியே போட்டுக் கொண்டு உண்ண, 

“டிபன் சாப்பிடலையா?” எனப் புகழ் கேட்க, 

“உனக்குத் தெரியாது இவளுங்களைப் பத்தி. யஸ்வந்தை வெள்ளிக்கிழமை கோயம்புத்தூர்ல இருந்து பிரியாணி வாங்கிட்டு வர சொல்லி, அவன் நடு ராத்திரி வந்தாலும், அந்நேரம் உட்கார்ந்து மூன்னு பேரும் மூக்கு பிடிக்க அமுக்குவாளுங்க.” என ஜெய் சொல்லும் போதே வெண்ணிலா கணவனின் கையை நறுக்கென்று கிள்ளினாள். 

“உண்மையைத் தான டி சொல்றேன்.” 

“உங்களை மாதிரி நைட் ஒன்பது மணிக்கு மேல சாப்பிட மாட்டேன். நைட் தண்ணிக் குடிச்ச பிறகு எதுவும் சாப்பிட மாட்டேன்னு எல்லாம் இருக்க எங்களால முடியாது.” 

“ஆமாம் அண்ணி சொல்றது கரெக்ட். உன்னைப் போல எங்களால இருக்க முடியாது. நினைச்சதை சாப்பிட கூட இல்லாம அப்படி என்ன வாழ்க்கை? வாழுறது எதுக்காக.” என ராதிகா தத்துவம் பேச, 

“நீ வாழுறது சாப்பாட்டுக்குத்தான். அது எங்க எல்லாருக்கும் தெரியும்.” என ஜெய் சொன்னதும், புகழ் பக்கென்று சிரித்து விட்டான். 

இளையவர்கள் சேர்ந்து பேசி சிரிப்பது பெரியவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்க, அவர்கள் முகமும் மலர்ந்து கிடந்தது. 

இரவு உணவு முடிந்ததும் ஜெயராமனும் சந்திரனும் கீழே ஹாலில் படுத்து விட, விமலாவும் மகேஸ்வரியும் முதல் தளத்தில் இருந்த அறையை மணமக்களுக்கு முதலிரவுக்காகத் தயார் செய்தனர். 

வெண்ணிலா அவர்கள் அறையில் அகல்யா குளித்துத் தயாராக உதவ, புகழும் ஜெய்யும் வெளியே மாடியில் நின்று பேசிக் கொண்டு இருந்தனர். 

அகல்யா குளித்துத் தயாரானதும், அவளை அறைக்கு அனுப்பி விட்டு, வெண்ணிலா ஜெய்யை ஜாடை காட்டி அழைத்தாள். 

ஒரு நிமிஷம் என நண்பனிடம் சொல்லிவிட்டு ஜெய் வர, 

“அண்ணாவை அவங்க ரூமுக்குப் போகச் சொல்லுங்க.” என, 

“ஹேய், நான் எப்படி டி சொல்லுவேன். அகல்யா எனக்குத் தங்கச்சி.” 

“ம்ம்… அப்ப உங்க தங்கைக்கு எதுக்குக் கல்யாணம் பண்ணீங்க? உங்களை வச்சிட்டு தள்ளுங்க.” என்றவள், அவளே சென்று புகழிடம், “அண்ணா, முதல் மாடியில கடைசி ரூம்ல உங்க பாக் வச்சிருக்கேன்.” என்றதும், புரிந்து கொண்டு சரியெனப் புகழ் செல்ல, அவனை அனுப்பி விட்டு வெண்ணிலா அறையின் கதவை தாழிட, போயிட்டானா என்றபடி ஜெய் குளியல் அறையில் இருந்து வந்தான். 

அவனைப் பார்த்து வெண்ணிலா சிரிக்க, “உனக்கு என்னைப் பார்த்தா சிரிப்பா இருக்கு இல்ல, ஒரு நிமிஷம் இரு ராதிகாவை பார்த்திட்டு வந்து பேசிக்கிறேன்.” எனக் கீழே சென்றான். 

இன்று அவள் பேசியதை வைத்து அவளிடம் ஒரு விசாரணை கமிஷன் வைப்பான் என்பது எதிர்பார்த்தது தான். இவன் மட்டும் லவ் பண்ணலாம் வேறு யாரும் பண்ணிவிடக் கூடாது. என்ன ஒரு நியாயம்.” 

சரியான அராத்து பேர்வழி. ஆனாலும் அவன் செய்யும் ரகளையும் ரசிக்கும்படி தான் இருக்கிறது என நினைத்தவளின் முகத்தில் கணவனை நினைத்து மென்னகை. 

கீழே சென்ற ஜெய், ஹாலில் இருந்த யஸ்வந்திடம் ராதிகா எங்கே எனக் கேட்டபடி அறைக்குள் செல்ல, யஸ்வந்தும் உடன் சென்றான். ராதிகா கட்டிலில் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, ஜெய் அவளது செல்லை தேடி எடுத்தான். 

Advertisement