Advertisement

எந்தன் காதல் நீதானே

அத்தியாயம் 13 

சனிக்கிழமை காலை உணவை எட்டு மணிக்கே முடித்துக் கொண்டு வெண்ணிலாவின் பிறந்த வீட்டிற்குக் கிளம்பினர். பொளாச்சியில் இருந்து பஸ்சில் தான் சென்றனர். அங்கே கரூரில் இறங்கி ஆட்டோ பிடித்து வீட்டுக்கு சென்று சேரும்போது மதியம் ஆகி இருந்தது. 


மகளைப் பார்த்த மகிழ்ச்சியில் பெற்றோர் இருக்க… “என்ன இப்படிக் கருத்து மெலிஞ்சு போய் வந்திருக்க.” என்ற கற்பகத்தின் பேச்சை யாரும் கண்டு கொள்ளவில்லை.
மகேஸ்வரி மகளைத்தான் கண்ணில் நிரப்பிக் கொண்டு இருந்தார். 

“அவங்களுக்குப் பசிக்கும் சாப்பாடு எடுத்து வை.” என ராஜகோபால் சொன்னதும், மகேஸ்வரி உணவை எடுத்து வைக்கச் செல்ல.. உடன் வெண்ணிலாவும் சென்றாள். 

ஜெய்யுடன் யுவராஜ் பேசிக் கொண்டு இருந்தான். மகேஸ்வரி மதிய உணவை தடபுடலாகச் செய்திருந்தார். 

“எல்லாம் வாங்க சாப்பிடலாம்.” என அவர் அழைக்க, எல்லோரும் எழுந்துகொள்ள, “நீங்க சாப்பிடீங்களா பாட்டி?” என ஜெய் கேட்க, 

“இல்லை…” என்றார் கற்பகம். 

“நீங்களும் எங்களோட சாப்பிட வாங்க.” என ஜெய் அழைக்க, 

“ஆமாம் நீங்களும் வாங்க மா.” என்றார் ராஜகோபால். 

பாட்டியோட நீங்க எப்ப சமரசம் ஆனீங்க என்பது போல வெண்ணிலா கிண்டலாகப் பார்க்க, ஜெய் அவளைப் பார்த்து கண்சிமிட்டி விட்டு கைகழுவ சென்றான். 

எல்லோரும் சேர்ந்து உண்டு பிறகு ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்தனர். முதலில் ராஜகோபால் மதிய உறக்கத்திற்குச் செல்ல, இவர்களையும் சென்று மகேஸ்வரி ஓய்வு எடுக்கச் சொன்னார். 

அறைக்கு வந்து கணவனுக்குத் தேவையானது பார்த்து அவன் படுத்ததும், “நான் அம்மாகிட்ட பேசிட்டு வரேன்.” என வெண்ணிலா வெளியே வந்து விட்டாள். அவள் அம்மாவுடன் பேசட்டும் என ஜெய்யும் உறங்கிப் போனான். 

வெண்ணிலா வாய் ஓயாமல் அவள் அம்மாவுடன் பேசிக்கொண்டு இருக்க, அப்போது வந்த ராஜ், “படத்துக்கு டிக்கெட் புக் பண்றேன். போயிட்டு வர்றீங்களா… உனக்குப் பிடிச்ச விஜய் படம்.” என்றதும், 

“நாங்க அடுத்த வாரம் எல்லோரும் குடும்பத்தோட போறதா இருக்கோம். அகல்யா ராதிகாவுக்கும் விஜய் பிடிக்கும்.” என்றாள். 

“குடும்ப இஸ்திரியாவே மாறிட்ட போல….” 

“டேய், அவளே ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கா, ரெண்டு நாள் நம்மோட இருந்திட்டு போகட்டும்.” என மகேஸ்வரி சொல்ல, வெண்ணிலாவும் ஆமோதிக்க, ராஜ் சரியென்று ஹாலில் சென்று டிவி பார்த்தான். 

உறங்கி எழுந்து வந்த கற்பகம் பேத்தியின் வாயைக் கிளறி, அங்கே என்ன செய்வாள் எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார். 

“நான் ஒன்னும் பெரிசா எல்லாம் வேலைப் பார்க்கிறது இல்லை பாட்டி. அத்தையும் சின்ன அத்தையுமே பண்ணிடுவாங்க. நான் கூடமாட ஒத்தாசைதான் செய்வேன்.” என்று விட்டிருந்தாள். 

ஜெய் உறக்கத்தில் இர௮உந்து எழுந்ததும், வெண்ணிலா அவனுக்கு சிற்றுண்டி எடுத்துக் கொண்டு அறைக்கே சென்று  கொடுக்க, அவன் ஒரு வடையோடு போதும் என்றுவிட்டான். 

“இவருக்கு எல்லாம் டிபன் பண்ணாதீங்க வேஸ்ட்ன்னு சொன்னேன். உங்க அத்தை தான் கேட்கலை.” 

“மதியம் சாப்பிட்டதே அதிகம். டீ கொண்டு வா… நானே ஹாலுக்கு வரேன்.” என்றவன், எழுந்து ஓய்வறைக்குச் சென்றான். 

டீ குடித்து விட்டு,  வெளியே போய் வருவதாகச் சொல்லி ஜெய் வெளியே சென்று விட்டான். சிறிது நேரம் நடந்து விட்டு ஏழு மணி போலத் தான் வீட்டுக்கு வந்தான். 

வெளியே இருந்து வந்த ராஜ், ஹோட்டலில் இருந்து பிரைட் ரைஸ் நூட்லஸ் என வாங்கி வந்திருக்க.. அதோடு வீட்டில் இருந்ததும் சேர்த்து இரவு உணவை உண்டனர். 

இரவு அறைக்கு வந்த வெண்ணிலா தனது நகைகளைக் கழட்டி  வைத்தபடி, “என்ன பாட்டி மேல பாசம் பொங்கி வழியுது?” எனக் கேட்க, 

“முன்னாடி சொந்தக்காரன் மட்டும் தான். அதுவும் உங்க பாட்டிக்கு எங்களைப் பிடிக்கவும் படிக்காது. அதனால ஒதுங்கி போயிடுவேன். இப்ப இந்த வீட்டு மாப்பிள்ளை. அப்படியிருக்க முடியுமா? அதுவும் அவங்க வயசுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கணும் தானே…” என ஜெய் நீளமாக விளக்க… வெண்ணிலா கேட்டுக் கொண்டாள். 

மறுநாள் மதியம் அவர்கள் சின்ன அத்தையின் வீட்டில் விருந்துக்குச் சென்றனர். கொஞ்சம் தூரம் தான். வெண்ணிலா வீட்டுக் காரில் டிரைவர் போட்டு இருவரையும் அனுப்பி வைத்தனர்.

மதிய உணவு நேரத்திற்குத் தான் சென்றனர். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவர்கள், சாப்பிட அழைக்கவும் உணவ உண்ண சென்றனர். 


விசேஷமான சமையல் தான். ஆனால் வெண்ணிலாவுக்கு வித்யாசம் நன்றாகவே தெரிந்தது. அவர்கள் வீட்டில் சாதாரணமாகவே ஞாயிற்றுக் கிழமை என்றாலே தடபுடலாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது அத்தனை வகைகள் இல்லை. அதோடு முன்பே செய்து வைத்து விட்டது போல ஆறிப் போய் இருந்தது. 

விடுமுறைக்கு இங்கே கரண் வரும் போதெல்லாம் அத்தை எப்படிக் கவனிப்பார் என வெண்ணிலாவுக்குத் தெரியும். 

ஜெய் இவர்கள் வீட்டிற்கு வருவது இப்போது தான் முதல்முறை. அவனுக்கு எங்கே இவர்களைப் பற்றித் தெரியும். 

அவன் நல்ல நாளிலேயே ஒழுங்காக உண்ண மாட்டான். இப்போது இவர்கள் வீட்டில் கேட்கவே வேண்டாம். 

இலையில் என்னென்ன இருக்கிறது என்றாவது பார்த்தானா தெரியவில்லை. டிவி பார்த்துக் கொண்டே உண்டவன், இலையில் பரிமாறியது மட்டும் உண்டு விட்டு எழுந்து விட்டான். 

அதே போல அவர்கள் கிளம்பும் சமயம், இருவருக்கும் உடைகள் வைத்துத் தாம்பூலம் கொடுக்க, குறைவான விலையிலேயே வாங்கி இருப்பது நன்றாகத் தெரிந்தது. 

வெண்ணிலாவுக்குச் சிரிக்கத்தான் தோன்றியது. இவர்கள் மட்டமாக நினைத்தால்… நாம் மட்டமாக ஆகி விடுவோமா என்ன? என நினைத்துக் கொண்டாள். 

ராஜகோபால் சொன்ன மரியாதைக்காக வந்தனர். இனி எதற்கு இங்கே வரப் போகிறார்கள் என நினைத்துக் கொண்டாள். 

இவர்கள் கிளம்பிக் கொண்டிருக்கும் போது, கரண் அவனது சித்தியை கைப்பேசியில் அழைத்து இருந்தான். அம்மாவை சமாதானம் செய்ய.. சித்திக்கு தான் அழைப்பான். வசுமதியும் அவனுக்காகத் தனது அக்காவுடன் சமாதானம் பேசி… இருவரையும் பேச வைத்திருந்தார். 

வெண்ணிலா வந்திருப்பதாக வசுமதி கரணிடம் சொன்னவர், ஒரு நிமிஷம் இரு வரேன் என்றவர், கிளம்பிக் கொண்டிருந்த இருவரையும் வழியனுப்பி விட்டு உள்ளே வந்து பேச்சை தொடர்ந்தார்.

“வெண்ணிலா எப்படி இருக்கா?” 


“இருக்கா…. எப்படி இருந்தாலும் நம்மகிட்ட உண்மையைச் சொல்வாளா என்ன? அங்க ஒன்னும் பெரிய வசதியெல்லாம் இல்லை.” 

“ம்ம்…” எனக் கரண் கேட்டுக் கொண்டவன், 

“அம்மாவுக்குப் போன் பண்ணேன் சித்தி. அவங்க எடுக்கலை. அதுதான் உங்களுக்குப் பண்ணேன்.” 

“உங்க அம்மா நல்லத்தான் இருக்கா… போன்னை எங்காவது போட்டிருப்பா?” 

“ம்ம்..” என்றவன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போன்னை வைத்தான். 
மாலை வெண்ணிலா கிளம்பிக் கொண்டிருக்க அவளிடம் வந்த ராஜ், அவளுக்கு பணம் கொடுக்க முயல… “அண்ணா, நீ போன தடவை கொடுத்ததே… என்கிட்டே அப்படியே இருக்கு.” என்றதும், 
“ஏன் எதுவும் வாங்கலையா?”
“அங்க எனக்கு என்ன செலவு இருக்கு. அதோட நான் பணம் கொடுத்தாலும் அத்தான் கொடுக்க விடமாட்டாங்க.” 
ஊட்டியில் அவனுக்கு  ஆசையாக வெண்ணிலா எதாவது வாங்கலாம் என்றால்… ஜெய் வாங்கவே விடவில்லை.  “அவங்க அப்படியெல்லாம் வாங்கிக்க மாட்டாங்க அண்ணா. அதனால பணம் வேண்டாம்.” என மறுத்து விட்டாள்.   

சின்ன அத்தை கொடுத்த உடைகளை வேண்டுமென்றே அவள் எடுத்துக்கொள்ளவும் இல்லை. ஆனால் கற்பகம் விடவில்லை. அவர் நினைவு படுத்த, “இருக்கட்டும் பாட்டி நிறையப் புதுசு இருக்கு. இப்ப உடனே தேவை இல்லை.” என்றுவிட்டாள். 

தன் மகள் கொடுத்ததை அவள் எடுத்துக்கொள்ளவில்லை எனக் கற்பகத்திற்குக் கோபம் தான். முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார். 

ராஜ் அவர்களைக் காரில் அழைத்துச் சென்று பஸ் ஸ்டாண்டில் விட்டான். இரவு ஒன்பது மணிப்போல வீட்டுக்கு வந்து விட்டனர். 

மகேஸ்வரி மகளிடம் நிறையப் பலகாரங்கள், வீடல் செய்தது கடையில் வாங்கியது என நிறையவே கொடுத்து விட்டிருந்தார். 

அவர்கள் ஊரில் இது போல எல்லாம் கிடைக்காது கிராமம் தானே. எல்லோரும் அப்போதே எடுத்து உண்டனர். அதில் நிறைய விலை உயர்ந்த இனிப்புகளும் இருந்தது. அதை கவனித்து, நாத்தனார் மகளுக்காகக் கொடுத்து விட்டிருப்பார், இங்கே கீழே வைத்தால் அவளுக்குச் சரியாக உண்ணக் கிடைக்காது என நினைத்த அமுதா, “நீ உன் ரூம்ல கொண்டு போய் வச்சுக்கோ வெண்ணிலா.” என, 

அறையில் வைத்தாவது கணவனை உண்ண வைக்கலாம் என்ற எண்ணத்தில் வெண்ணிலாவும் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றாள். 

ஏன் இங்கேயே இருந்தால், தன் பிள்ளைகள் எடுத்து உண்டு விடுவார்கள் எனச் சொல்கிறாறோ எனக் காமாட்சிக்கு தோன்றியது. அந்த நாளில் இருந்து, அவர் வேறு மாதிரி நடந்துகொள்ள ஆரம்பித்தார். 

வெண்ணிலா வேலைப் பார்க்காமல் இருக்க மாட்டாள். ஆனால் சில வேலைகள் அவள் வீட்டில் செய்ததே இல்லை. 

வீடு பெருக்கி துடைப்பது, பாத்திரம் தேய்ப்பது எல்லாம் செய்ய மாட்டாள். அவள் வீட்டில் வேலை செய்ய ஆள் உண்டு. அதோடு மகேஸ்வரியும் மகளுக்கு அந்த வேலைகளைக் கொடுக்க மாட்டார். 
அந்தப் பழக்கத்தில் இங்கேயும் அந்த வேலைகளை வெண்ணிலா செய்ய மாட்டாள். அந்த வேலைகளை அமுதாவுமே மருமகளுக்குக் கொடுக்க மாட்டார். அவர்கள் அறையை மட்டுமே வெண்ணிலா சுத்தம் செய்வாள். 

வீடு ஒதுங்க வைப்பது, காய் நறுக்குவது, சில நேரம் அமுதா சொல்ல சொல்ல … சமைத்தும் இருக்கிறாள். முன்பெல்லாம் சமையல் அறையில் சாமான்கள், மளிகை போட்டு வைத்திருக்கும் டப்பாக்கள் எல்லாம் அலங்கோலமாக இருக்கும். வெண்ணிலா அதெல்லாம் சுத்தம் செய்து, ஒரே மாதிரி வரிசையாக அடுக்கி வைத்திருந்தாள். நிதானமாகச் செய்தாலும் நேர்த்தியாகச் செய்வாள். 

அந்த வீட்டில் அகல்யாவும் ராதிகாவும் செய்வது வீடு பெருக்கி துடைப்பது பாத்திரம் தேய்ப்பது தான். அதுவும் இரவு ஒருநேரம் இருவரும் சேர்ந்து விளக்குவார்கள். 

இவள் சொகுசாக இருக்கத் தன் மகள் மட்டும் இந்த வேலைகளைச் செய்ய வேண்டுமா என நினைத்த காமாட்சி,
“நீ போய்ப் படி.” என மகளை இரவு உணவு முடிந்ததும் விரட்டி விடுவார். அகல்யா மட்டுமே நின்று பாத்திரம் தேய்க்க, அமுதாவும் அவளோடு இணைந்து தேய்க்க ஆரம்பித்தார். 

அமுதா குனிந்து நின்று தேய்க்க கஷ்ட்டப்பட, அவர் செய்வதைப் பார்த்து, “நான் பண்றேன் அத்தை நீங்க போங்க.” என வெண்ணிலா செய்ய ஆரம்பித்தாள். 

இரண்டு நாட்கள் செய்தவள், மூன்றாம் நாளில் இருந்து தினமுமே காலையில் எழுந்ததும் தும்மிக் கொண்டிருந்தாள். 

“என்ன ஆச்சு நல்லாத்தானே இருந்த?” என ஜெய் கேட்க, 

“அவளுக்குப் பாத்திரம் தேச்சுப் பழக்கம் இல்லை. தேய்க்காதன்னு சொன்னா கேட்க மாட்டேங்கிறா? தினமும் நைட் அவதான் அகல்யாவோட நின்னு பாத்திரம் தேய்க்கிறா. இனி நீ பாத்திரம் தேய்க்காத.” என அமுதா சொல்ல, வெண்ணிலா மௌனமாக நின்றாள். 

அம்மாதான் சொல்லிவிட்டாரே என ஜெய்யும் மேலும் அந்த விஷயத்தைப் பேசாமல் விட்டு விட்டான். ஆனால் வெண்ணிலா மீண்டும் தும்மலில் கஷ்ட்படுவதைப் பார்த்தவன், “நீ ஏன் செய்யுற?” என்றதும், 

“பாவம் அகல்யா மட்டும் எவ்வளவு பாத்திரம் தேய்பா. அத்தைக்கும் முடியலை. ராதிகாவை பண்ண சின்ன அத்தை விடுறது இல்லை.” என அவர்கள் அறையில் வைத்து சொல்லி விட்டாள். 

மறுநாள் காலை எழுந்து கீழே வந்த ஜெய். “அம்மா, பாத்திரம் தேய்க்க வேணா ஆள் வச்சிடுங்களேன்.” என்றான். அமுதாவும் சரி என்றார். 

“இத்தனை நாள் நாங்க செஞ்ச போது எல்லாம் உனக்குத் தெரியலை. இன்னைக்கு உன் பொண்டாட்டி செஞ்சதும்தான் கண்ணு தெரியுதா?” எனக் காமாட்சி அவனை நேரடியாகவே குற்றம் சாட்ட… 

“நீங்க யாரும் முடியலைன்னு இதுக்கு முன்னாடி சொல்லி இருக்கீங்களா என்ன?” 

“இவ காலையில எழுந்ததுல இருந்து நொச்சு நொச்சுன்னு துமிட்டு இருக்கா. அதோட மாத்திரை வேற போடுறா.” 

“குத்தம் சொல்லனும்னா, அம்மா அப்பாவையும், நீங்க சித்தப்பாவையும் தான் சொல்லணும். என்னை எப்படிச் சொல்வீங்க?” 

“அவங்களை மாதிரியே நான் இருக்கணும்னு எதாவது இருக்கா என்ன?” என ஜெய் கேட்டே விட்டான். 

காமாக்ஷி முகம் கருத்து போனவர், இரவில் அவர் கணவரோடு சண்டை பிடித்தார். 

“நிறையச் சீர் வரிசையோடு வந்த மருமகள்னு உங்க அண்ணனும் அண்ணியும் அவளைத் தலையில வச்சு கொண்டாடுறாங்க. என்னவோ இல்லாத போயண்டட்டியை கட்டிட்டோம்னு உங்க அண்ணன் மகனும் ஆடுறான்.”

“அதெல்லாம் இல்லை. வெண்ணிலா என்ன வெளி ஆளா? எங்க தங்கச்சி பொண்ணு. அவங்க வீட்ல வசதியா இருந்த பொண்ணு. நம்ம வீட்ல வந்து கஷ்டபடக் கூடாதுன்னு நினைக்கிறாங்க.” 

“அதோட நம்ம பொண்ணு போற இடத்தில இப்படி இருக்கணும்னு தானே நாமும் விரும்புவோம்.” என்றார் சந்திரன். 

தன்னால் எதற்குப் பிரச்சனையை என நினைத்த வெண்ணிலா, “அத்தை, வேலைக்கு ஆள் வேண்டாம். நான் நைட் தண்ணியில கை வைக்கலை.” என்றவள், மதியமே உணவு வேலை முடிந்ததும் பாத்திரங்களைக் கழுவி வைத்து விடுவாள். அதனால் இரவு அகல்யாவுக்கு விளக்க சிரமமாக இல்லை. 

காமாட்சி தவறாக நினைக்கிறார் என அமுதாவும் வேலைக்கு ஆள் வைக்கவில்லை. ஆனால் ஜெய் அந்த வார இறுதியில், “ஏன் இன்னும் ஆள் வைக்கவில்லை? எனக் கேட்க, என்ன சொல்வது எனத் தெரியாமல் அமுதா மெளனமாக இருந்தார். 

“ஜெய், நான் ஒன்னு சொல்றேன் கேட்கிறியா? நீ வெண்ணிலாவோடு தனிக் குடித்தனம் போயிடு.” என ஜெயராமன் சொல்ல… வீட்டில் எல்லோருமே அதிர்ந்து போய் நிற்க, ஜெய் மட்டும் தான் உட்கார்ந்திருந்த இருக்கையில் இருந்து கோபமாக எழுந்தான். 
அவன் நின்ற தோற்றமே வெட்டவா குத்தவா என இருக்க… அவன் எதுவும் பேசிவிடக் கூடாதே என வெண்ணிலா, அவன் முன்பு வந்து தவிப்புடன் நின்றாள். 

Advertisement