அவளுடைய ஒவ்வொரு நாள் விடியலும் சரி,  அன்றைய நாள் முடிவும் சரி, வினித், முகேஷ் இருவரின் அன்பினால் சந்தோஷமாகவே நாட்கள் சென்றது.

     சில நாட்கள் தன்னை நினைத்து அவளுக்கு பரிதாபம் வந்தாலும், ‘இருப்பதை வைத்து சந்தோஷமாக இருப்போம்., இப்ப மாம்ஸ் ரெண்டு பேரும் என் கூட அன்பா இருக்காங்க., அது போதும் எனக்கு, அந்த ஹேப்பினஸ்ஸோட நான் என்னோட படிப்பை முடிக்கணும்’, என்று மட்டுமே நினைத்து இருந்தாள்.

    முதல் செமஸ்டர் ரிசல்ட் வந்த போது இவளுக்கு முதன்முதலாக அந்த கிரீட்டிங் கார்டு வந்தது, கஸ்டமைஸ் செய்யப்பட்ட அழகான கார்டு போஸ்டில் வந்து சேர்ந்தது.

    வெளியே தர்ஷனா என்று போட்டிருந்தாலும்,  உள்ளே அதில் எழுதி இருந்த எழுத்துக்கள் அழகான கையெழுத்தாக இருந்தது.

     அதில் டியர் கண்மணி என்று தொடங்கி சில வாசகங்களுக்குப் பிறகு,

வித் லவ் யுவர் மாம்ஸ் என்று போட்டிருந்தது.

    அனைத்துமே ஆங்கிலத்தில் தான் எழுதியிருந்தது.

அதில் எழுதி இருந்த விஷயங்கள், இவள் நல்ல மதிப்பெண் பெற்று பாஸ் செய்ததை வாழ்த்தியும், உனக்கான ஜீவன் உன்னை பார்த்துக் கொண்டே இருக்கிறது, என்றும் எழுதியிருந்தது.,

     இவளோ “வினித் மாம்ஸ் முகேஷ் மாம்ஸ் ரெண்டும் சேர்ந்து வேணும் னே என்னை கலாய்க்குறதுக்கு தான் இந்த வேலையை பார்க்கிறாங்க”, என்று கார்டை எடுத்துக் கொண்டு அவன் வீட்டு காலிங் பெல்லை சென்று அடித்திருந்தாள்.

    கதவைத் திறந்து வர அவர்களுடைய தோழமைகளும் அங்கே இருப்பதை பார்த்தவள்,

    “மாம்ஸ் ரெண்டு பேரும் கொஞ்சம் என் கூட வாங்க”, என்று  இருவரையும் தனியே அழைத்து வந்தாள்,

    அவள் வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு,

      “ஏன் மாம்ஸ் விஷ் பண்ணுறத நேரில் பண்ண மாட்டிங்களா”, என்றாள்.

    “என்ன சொல்ற” என்று இருவரும் கேட்டனர்.

    கார்டை காட்டினாள்.

    இருவரும் கார்டை வாங்கி பார்க்க அதில்,  ‘டியர் கண்மணி’ என்று இருந்த வாசகமும், கீழே இருந்த வாசகங்களையும் வாசித்து விட்டு., ‘வித் லவ் யூவர் மாம்ஸ்’ என்று இருப்பதை பார்த்தவர்கள்,

      “ஏய் இந்த கார்டு லாம் நாங்க அனுப்பல”, என்று சொன்னார்கள்.

    “பின்ன எந்த மாமா அனுப்புனது”, என்று கேட்டாள்.

   அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு,  “யாரு” என்றனர் அவளிடம்.,

     “யாருன்னு என்கிட்ட கேக்குற, எனக்கு எப்படி தெரியும்”, என்றாள்.

     “உன் காலேஜ்ல ஏதும் பசங்களா இருக்குமோ”, என்று கேட்டு முடிக்கும் முன்பே,

   “ஒரு புண்ணாக்கும் இருக்காது, நான் யாரிடமும் பேசவே மாட்டேன்”, என்றாள்.

      பின்பு தான் ஞாபகம் வந்தவனாக முகேஷ் வினித்திடம்,

   “பாப்பா ஃபர்ஸ்ட் நாள் காலேஜ்  போய்ட்டு வந்த அன்னைக்கி பாப்பாக்கு ஒரு கேக் வந்துச்சுல்ல.,  அதுலயும் யுவர் மாம்ஸ்னு தான போட்டிருந்தது., பஸ்ட் நாளே எப்படி அவளுக்கு காலேஜ்ல யாரையும் தெரியும்”, என்று கேட்டான்.

   இருவரும் ஒரு நிமிஷம் பதறி தான் போயினர்.,  ‘யாரோ இவளை கண்காணிக்கின்றனர்’ என்று அவர்களுக்குள் ஒரு பயம் வந்தது.

    ஏனென்றால் அந்த கார்டிலும் ‘உன் நாட்கள் என் பார்வையில்’ என்று இருந்தது,  இவளுக்கு புரியாவிட்டாலும் அவர்கள் இருவரும் யோசித்தனர்.

   இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள சரி இத பெருசாக்க வேண்டாம். என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டு.,

   “ஓகே கண்மணி” என்றனர்.

     “மாம்ஸ்”, என்று அதட்டலாக அழைத்தாள்.

     “குட்டி” என்றான் வினீத்,

     இவனும் “பாப்பா” என்றான்.,

“இந்த மாமா யாருன்னு கண்டுபிடிப்போம், அதுவரை இந்த கார்டு எங்க கிட்ட இருக்கட்டுமா”, என்றனர் இருவரும்,

     இவளோ “எனக்கு வேணும் கார்டு ரொம்ப அழகா இருக்கு”, என்று சொன்னாள்.

     “ஆமாடா இந்த கார்டு எல்லாம் அவ்வளவு காஸ்ட்லியா இருக்கும்”, என்று முகேஷ் சொன்னான்.

     “ஏன் மாம்ஸ் எனக்காக இப்படி ஒரு கார்டு கூட கொடுக்க மாட்டியா.,  அவ்வளவு விலையா இருக்கும்”, என்று கேட்டாள்.

    “இந்த கார்டு ஓட ரேட் என்ன இருக்கும் தெரியுமா., இத கஸ்டமைஸ் பண்ணி வாங்கி இருக்காங்க.,  நார்மலா மினிமம் ரேட் 10,000ல இருந்து மேக்சிமம் ரேட் லாக்ஸ் வரைக்கும் போகும்.,  இந்த கார்டு எல்லாம் நல்லாவே காஸ்ட்லியான கார்டு”,  என்று சொன்னான்.

     “சரி அப்போ பத்திரமா வச்சுப்போம். நாளைக்கு நாம யாருக்காவது சேல் பண்ணிடலாம்”,. என்று சொன்னாள்.

    “எது, இந்த உள்ள எழுதியிருக்க கண்மணி மாம்ஸ் இதோடயா”, என்று கேட்டான்.

     “ஒன்னு பண்ணலாம் மாம்ஸ், உங்களுக்கு ஏதாவது லவ் வந்துச்சுன்னா.,  அந்த கேர்ள்ஸ் க்கு இந்த கார்டை கொடுத்துவிடலாம்” என்று சொன்னாள்.

  “அடிப்பாவி” என்று இருவரும் அவளை தலையில் செல்லமாக கொட்டிவிட்டு ., “சரி இனிமேல் வெளியே போனா ஜாக்கிரதையா போ”, என்று சொன்னார்கள்.

  தலையாட்டிக்கொண்டாள், ஆனால் அந்த கார்டை பார்த்து “வாவ் என்ன அழகா இருக்கு”, என்று பாராட்ட தவறவில்லை.

    இருவரும் அவர்கள் வீட்டிற்கு செல்லவும்,  நண்பர்கள் தான்,

    “என்னடா அந்த பொண்ண பொறுப்பேத்துக்கிட்டு, இப்ப எதுக்கெடுத்தாலும் அந்த பொண்ணு உங்களை தான் டிஃபன் பண்ணிட்டு நிக்குது., ஒன்னு ஒண்ணுக்கும் உங்களை கூப்பிடுது., இதெல்லாம் நல்லாவா இருக்கு., இந்த வயசுல ப்ரீயா இருக்கிறதை விட்டுட்டு., ஒரு பொண்ணோட பொறுப்பை எடுத்து வச்சிருக்கீங்களே”, என்று கேட்டனர்.

   இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்த படி உங்களுக்கு தெரியாது.,  அவ  எங்க ரெண்டு பேர் வீட்ல, யாரு வீட்ல வளர்ந்திருந்தாலும் ராணி மாதிரி வளர்ந்து இருக்க வேண்டியவ., ஆனால் ஏதோ ஒரு ஸ்கூல் ஹாஸ்டல்ல இருந்து படிச்சா.,  நாங்க ரெண்டு பேரும் அவளை போய் கூப்பிடும் போது அவ நிஜமா எங்ககிட்ட இந்த அளவு ஒட்டிக்குவான்னு யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க., முதல்ல விலகி விலகி தான் இருந்தா.,

    அப்புறம் நாங்க தான்., அவளை பிடிச்சு கொண்டு வந்து எங்க கூட பழக வச்சு., எங்ககிட்ட அவளை ப்ரீயா பேச வச்சு., எவ்ளோ கஷ்டப்பட்டோம் தெரியுமா.,  எங்களிடம் நார்மலா அவளுக்கு வேணும்றதை கேட்பதற்கு இப்ப வரைக்கும் தயங்கி தான் கேப்பா.,

       ஆனா அவளுக்கு நாங்க சொல்லி வச்சிருக்கோம்., எங்க கிட்ட கேக்குறதுக்குனு உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.,  அன்புக்காக ஏங்கினவ டா.,  இப்ப நாங்க ரெண்டு பேரும் அன்பா இருக்கோம்னு., எங்கள மட்டுமே அவ சார்ந்து இருக்கா, தப்பு இல்லையே எத்தனை நாள் உறவுக்காக ஏங்கி இருப்பா யோசிச்சு பாரு.,

    நம்ம எல்லாம் அம்மா அப்பா என்று உறவுகளோட வாழ்ந்துட்டு இருக்கோம்., அந்த மாதிரி எதுவுமே இல்லாத ஒரு பொண்ணுக்கு., இந்தா நாங்க ரெண்டு பேரும் உனக்காக இருக்கோம்., அப்படின்னு கைய கொடுக்கும் போது அதை பிடிச்சுக்க தாண்டா தோணும்., ஒதுங்கி போக தோணாது.,

     அவளும் அப்படித்தான்., அவ காசு பணம் ன்னு எங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கல., எங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறது, அன்பை மட்டும் தான்., அந்த அன்பை தாராளமா எங்களால கொடுக்க முடியும்”,என்றனர்.

    “எப்ப வரைக்கும் டா, அவளும் இன்னொரு வீட்டுக்கு கல்யாணம் ஆகி போக வேண்டிய பொண்ணு தானே டா”, என்றான் நண்பன்.

    “கடைசி வரைக்கும் நாங்க மூணு பேரும் இப்படித்தான் இருப்போம் ன்னு, எங்களுக்கு ஒரு நம்பிக்கை”, என்றவன்,

  “எங்க வீட்ல வளர்ந்து இருந்தா னா., எங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் தான் கல்யாணம் பண்ணி இருந்திருப்போம்., ஆனால் இப்போ அந்த மாதிரி ஒரு மைண்ட் செட் யாருக்குமே இல்ல., ஒரு வேளை அப்படி ஒரு சூழ்நிலை வந்துச்சுன்னா., ரெண்டு பேர்ல யாராவது கல்யாணம் பண்ணிக்குவோம்”., என்று சொல்லிவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர்  பார்த்துக்கொண்டனர்.

    ப்ரண்டோ, “ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தரா, ஆனால்  இரண்டு பேரும் பயங்கர பாசமா இருக்கீங்களே”, என்று கேட்டான்.

    “சொல்ல முடியாது, ரெண்டு பேரும் சேர்ந்து கூட கல்யாணம் பண்ணிக்கலாம்”, என்று சொல்லி சிரித்தனர்.

    ஆனாலும் அவர்கள் மனதில் எந்த கள்ளமும் இல்லை என்பதை நண்பர்களும் அறிவர், அவர்களுக்கும் தெரியும், தங்கள் மனதில் இருப்பது தூய்மையான அன்பு தான், அவள் மனதில் இருப்பதும் அப்படிப்பட்ட ஒரு அன்பு தான் என்பதும்.

     அதன் பின்பு இவளுடைய 18 வது வயது நிறைவின் போது.,  அவளுக்கு அழகான ஒரு புடவையும்., அதே போல ஒரு கார்டும் வர.,  அப்போது சற்று பயந்து தான் போனார்கள்.

        ஆனாலும் அதில் ப்ரம் அட்ரஸ் இல்லாததால்., திருப்பி அனுப்ப முடியவில்லை.

    வினித் முகேஷ் இருவரும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்வோம் என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.

    மீண்டும் கார்டுகள் அவ்வப்போது வந்தாலும்., எடுத்து ஓரமாக வைக்கத் துவங்கியிருந்தாள்.,  ஆனால் அந்த கார்டுகள் சொல்லி செய்யப்பட்டிருப்பது அத்தனை தெளிவாக தெரிந்தது.

     ஒவ்வொரு கார்டுகளிலும் நுணுக்கமான கலை வேலைபாடு நிறைந்ததாக இருந்தது., அதில் இருக்கும் அந்த கையெழுத்து மட்டும் இவளுக்கு உறுதி கொண்டே இருந்தது.

     ஒரு நாள், “மாம்ஸ் நீங்க ரெண்டு பேரும் டியர் கண்மணி ன்னு எழுதுங்க”, என்று சொன்னாள்.

    “ஹேய் எங்களை சந்தேகப்படுறீயா”, என்று கேட்டனர்.

    அப்போது இருவரும் பிஜி செய்து கொண்டிருந்தனர்.

     “சந்தேகம் எல்லாம் படல, பட் ஹேண்ட் ரைட்டிங் செக் பண்ணனும்”, என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள்.