தேன்மொழி, “அது, இல்ல க்கா… சும்மா” என்று தடுமாற, “இங்க பாரு, காலைல அவனுங்க பேசிக்கிட்டத வச்சு நீ எதுவும் மனசுக்குள்ள உருட்டாத! இன்னைக்கு அடிச்சுப்பாங்க, நாளைக்கு சேர்ந்துப்பாங்க. நீ ஒழுங்கா பரதனை மட்டும் கவனி” என்றாள் நிம்மதி.
“ம்ம்ம்” என்ற தேன்மொழி தயக்கமாகவே அங்கிருந்து சென்றாள்.
***
இரவு மணி பத்தை நெருங்கியது அண்ணாமலை வீட்டை அடைந்தபோது.
கதவை தட்ட அவன் கை வைக்க, தாழிடாத கதவு தன்னால் திறந்துக்கொண்டது. உள்ளே நுழைந்தவன் கண்களில் பாய் விரித்து அதில் அவனுக்கு முதுகு காட்டி படுத்திருந்தவள் தெரிய, “அதுக்குள்ள உறக்கமா?” என கேட்டுக்கொண்டே சட்டையை கழட்டி கொக்கியில் மாட்டினான். பதிலில்லை அவளிடம்.
“இந்தாடி, உன்னத்தான்… நீ தூங்கலைன்னு தெரியும்” என்றவன், லுங்கிக்கு மாறிவிட்டு வர, அவள் அப்படியே தான் இருந்தாள்.
“காலைல விரைச்சுக்கிட்டு போன புருஷன், இருட்டுன பிறகும் வீடு வந்து சேரலையேன்னு எதாவது அக்கறை இருக்கா உனக்கு?” கேட்டுக்கொண்டே விளக்கை அணைத்து மஞ்சள் நிற இரவு விளக்கை எரிய விட்டான்.
“காலைல அம்போன்னு விட்டுட்டு போனோமே பொண்டாட்டிய, அவ இந்நேரம் வர என்ன செஞ்சுட்டு இருப்பாளோன்னு உனக்கு அக்கறை இருந்துச்சா?” படுத்தவாக்கில் வெடுக்கென கேட்டாள்.
அவன் சிரித்துக்கொண்டே அவளை கட்டிக்கொண்டு படுக்க, “ப்ச், தின்னியா இல்லையா?” என்றாள் விருப்பமே இன்றி கேட்பதை போல.
“அதெல்லாம் ஆச்சு!” என்றவன், அவள் முதுகில் முகம் வைத்து நன்றாக மூச்சை இழுத்து விட்டு, “உனக்கு ஒன்னு கொண்டு வந்தேன்” என்றான்.
‘என்ன?’ என்று கேட்க தோன்றினாலும் அப்படியே இருந்தாள். அது என்னவோ அவன் போக்கிற்கு போவதை விட, அவனிடம் முரண்டுப்பிடித்து சிலுப்பிக்கொள்வது ஒருவித வாடிக்கையாகி போனது அவளுக்கு.
“இங்க பாரு!” என்று ஒரு கவரை நீட்டினான். அதை அவள் அந்த வெளிச்சத்தில் பிரித்து உற்றுப்பார்த்து படிக்க, “யோவ்” என அதிர்ந்து திரும்பினாள்.
அவள் திரும்பிய நேரமில்லாமல் அவள் வாயில் ஒரு அடி வைத்தான் அண்ணாமலை.
“ஸ்…” என முனகியவள், உடனே பேச்சை திருத்தி, “என்ன மாமா இது?” என்று கேட்க, “உனக்கு தான் படிக்க தெரியும் ல?” என்றான் அவன்.
மீண்டும் அதை படித்து பார்த்தவள், “ஒரு லட்சம் முன்பணம் கட்டி டாட்டா ஏசிஇ வண்டி புக் பண்ணதுக்கு ரசீது” என்று சொல்ல, “அதே தான். அடுத்த வாரம் ரெஜிஸ்ட்ரேஷன் முடிச்சு வண்டி கைக்கு வந்துடும்” என்று முடித்தான் அவன்.
“எதுக்கு மாமா?” புரியாமல் அவள் கேட்க, “தினமும் உனக்கு லோடு அடிக்க வண்டி தேவையா தான் இருக்கு. இன்னும் எத்தனை நாளைக்கு வாடகை வண்டி புடிக்க முடியும்? முன்னாடி தான் வண்டி பத்தி தெரியாது, ஓட்ட தெரியாதுன்னு சொல்லிட்டு இருந்த, இப்போ தான் நான் இருக்கேன்ல? நான் பாத்துக்குறேன்” என்றான்.
“இருந்தாலும், முடியுமா நம்மால? ஏற்கனவே வீடு கட்ட இருக்குற காசெல்லாம் போட்டுட்டேன்” அவள் கலக்கமாய் சொன்னாள். முடிந்தவரை சுபக்கடன் கூட வாங்கக்கூடாது என்று நினைப்பவள் அவள்.
“அதெல்லாம் நீ கவலைப்படாத! நான் இருக்கேன்ல” என்றுவிட்டான். அதற்குமேல் அவள் பேசவில்லை. எழுந்து அந்த ரசீதை பத்திரமாய் பீரோவில் வைத்துவிட்டு வந்து படுத்தாள்.
“இவ்ளோ காசு ஏது?” அவள் கேட்டதும், “ஆடு வித்த காசு” என்றான் அவன். கூடவே எங்கே விற்றேன் என்பதையும் சொல்ல, நிம்மதிக்கு கோவம் தான்.
“அந்த வீரப்பன் அன்னைக்கு எவ்ளோ நக்கல் அடிச்சான் தெரியுமா? நீ மட்டும் அவன் கடைல ஆட்டை வித்துட்டேன்னு தெரிஞ்சா நம்ம வாசலுக்கே வந்து மோளம் வாசிச்சாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல” என்றவள், “ஏன் மாமா இப்படி இருக்க நீ?” என்றாள் ஆயாசமாய்.
ஒரு கையில் தலை தாங்கி ஒருக்களித்து படுத்தபடி அவளை பார்த்தவன், “ரொம்ப மோசமா இருக்கேன்ல?” என்றான்.
“இல்ல… ரொம்ப ரொம்ப” வெடுக்கென சொன்னாள்.
மெல்ல சிரித்தவன் நேரே படுத்து, “ஏன் இப்படி இருக்கேன்னு தான் எனக்கே தெரியல. அப்படி என்ன எனக்கு வீம்பு கேக்குது? இல்ல?” என்று சொல்ல, லேசாக எக்கி அவன் முகத்தை பார்த்தவளோ, “தெளிவா தானே இருக்க? இல்ல குடிச்சுட்டு வந்துட்டியா?” என்றாள்.
“அப்டியே போட்டேன்னு வை… நானே என்னைக்கோ தான் நல்லா பேசுவேன்”
“அதுவேணா உண்மை தான்…” என்றவள், “நீ ஏன் இப்படி இருக்க?” என்று கேட்க, “எப்படி சொல்றது… எல்லாம் ஒரு பிடிமானம் இல்லாதனால! எனக்குன்னு ஒருத்தர் நிலையா இல்லாதனால… எங்கே எனக்கு யாரும் இல்லாம போய்டுவாங்களோங்குற பயத்துனால” அவன் சொல்ல, அவளுக்கு புரிந்தும் புரியாத நிலை.
“உனக்கு அம்மா போனாலும் அப்பான்னு ஒருத்தர் இருக்கார்! எனக்கு அப்படி ரெண்டு பேரும் இல்ல. பாட்டின்னு ஒன்னு இருந்துச்சு, அதுவும் திடீர்ன்னு விட்டுட்டு போய்டுச்சு, அப்போ தனியா நின்னேன் நான்! சாப்பிட்டியா? உடம்பு நல்லா இருக்கா? எதாவது வேணுமா? இப்படி கேட்க ஒருத்தரும் இல்லாம, ராத்திரி தனியா தூங்கி, தனியா முழிச்சு… எனக்கு தனியா இருக்குறதுன்னா பயம்… அதான் அவனுங்க நாலு பேரையும் என்னோடவே வச்சுக்கிட்டேன்.
இனி எனக்கு அவனுங்க, அவனுங்களுக்கு நான்னு இருந்துட்டேன். அவனுங்க எங்க என்னை விட்டு போய்டுவானுங்களோ, மறுபடி நான் தனியாகிடுவேனோனு எப்பவுமே பயம் இருக்கும் எனக்கு. அந்த பயம் தான் அவனுங்க பண்ண சின்ன சின்ன விஷயத்தை கூட பெருசாக்க வைக்குது, அவனுங்க விலகுனா அதை என்னால தாங்க முடியாது, இதே நானா விலகிட்டா மனசை சமாளிப்பேன்னு தோனுச்சு” அவன் சொல்ல,
“இன்னமும் தோணுதா நீ தனியா இருக்கேன்னு?” என்று கேட்டாள் நிம்மதி.
திரும்பி அவள் முகம் பார்த்தவன், இடவலமாய் ‘இல்லை’ என தலையசைக்க, சின்னதாய் ஒரு சிரிப்பு அவளிடம்.
“ஆமா, திருவாரூர்ல போதி மரம் எதுவும் இருக்கா என்ன?” என்றாள் நாவை கன்னத்தில் அதக்கி நக்கலாய்.
“ஏய்…” அவள் மூக்கை நிமிண்டியவன், “இதெல்லாம் எப்பவும் என் மனசுல இருக்கும். அதை வெளில சொல்லக்கூட வீம்பு பாப்பேன். இன்னைக்கு என்னவோ லொட லொடன்னு உளறிட்டேன்” என்றான்.
அவன் நெஞ்சில் தலை வைத்து கட்டிக்கொண்டவள், “உனக்கு நான் இருக்கேன், எனக்கு நீ இருக்க, இன்னும் கொஞ்ச நாள்ல நமக்கு நடுல இன்னொருத்தர் இருப்பாங்க” என்று சொல்லும்போதே, அவளை விருட்டென நகர்த்தியவன், “எவன் அவன்?” என்றான் மூக்கு விடைக்க.
“ஹான்?” முதலில் விழித்தவள், “யோவ்…யோவ்…யோவ்… மண்ணாங்கட்டி… நடுலன்னா… இப்படி…” என்று அவள் வயிற்றை தொட்டு பெரிதாக காட்ட, அவன் புருவங்கள் உயர்ந்தது.
“ஓ…” என்றவன், “வாய்ப்பிருக்கா?” என்றான்.
“நிறைய இருக்கு…” சிறு வெட்கத்தோடு அவள் சொல்ல, இழுத்து தன்னோடு சேர்த்துக்கொண்டான்.
“நமக்குன்னு ஒரு குடும்பம் வர மாறி, அவனுங்களுக்கும் குடும்பம் வரும். என்னை நீ பாக்குற மாறி, நாளைக்கு அவனுங்க பொண்டாட்டிய அவனுங்க பாப்பாங்க. இதுக்கெல்லாம் நம்ம மூஞ்சை இழுத்துக்க முடியாது. சரியா?” என்று அவள் கேட்க, அவன் “ம்ம்ம்” என்றதும் அவளுக்கு ஆச்சர்யமோ ஆச்சர்யம்.
“யோவ்… மாமா? நீதானா இது? என்ன சொன்னாலும் சரிங்குற?” அவள் வியப்பில் எழுந்தே அமர்ந்து விட்டாள்.
“ப்ச்… போடி… ஏதோ நல்ல புத்தில இருக்கேன். இதே எண்ணத்துல இருக்க விடு” என்றவன் மறுபுறம் திரும்பிவிட்டான்.
“இத்தனை நாளும் எத்தனை சொல்லிருப்பேன்? அப்போ எல்லாம் புத்தி புல்லு மேய போயிருந்துச்சோ?” என்று இடக்காக கேட்டாள்.
அவன் அமைதியாக இருக்கவே, “எனக்கு தெரியும்… உன் தொம்பிங்க வந்து கெஞ்சி பேசவும் மலை இறங்கிட்ட தானே!?” என்று கேட்டுவிட, அப்படியே முகத்தை மறைத்து குப்புறப்படுத்தவன், “அதெல்லாம் ஒன்னில்ல, கம்முன்னு படுடி” என்றான்.
“ஏய்…ஏய்… நடிக்காத… எனக்கு தெரியாதா உன்னை” என்றவள், அவனை பிரட்டிப்போட முயற்சிக்க, அவன் முகத்தை மறைக்க என அடுத்த நொடிகள் எல்லாம் சிரிப்பாக தான் கழிந்தது.
“தேவையில்லாம ஆடுங்களை வேற வித்துட்ட நீ!?” அவன் தலையிலேயே தட்டினாள் மதி.
அவன் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
“நிஜமா கோவம் போச்சு தானே!? இனி பேசுவ தானே எல்லார்ட்டயும்!?” அவள் கேட்க, “ம்ம்ம்” என்றான்.
“பரதன்? அவன் கூட?” அவள் கேட்க, “ம்ம்ம்” என்றான்.
“அட, சொல்லுய்யா!” அவள் உலுக்கவும், “பேசுவேன் டி… சும்மா நொய் நொய்க்காத” என்றவன் லேசாக கத்தவே, “அஹான், நான் நம்ப மாட்டேன்… நேத்து நைட்டு இறங்கிப்போறேன் இறங்கிப்போறேன்னு சொல்லி காலைல ஆட்டை வண்டில ஏத்துனவன் தானே நீ!?” என்றாள் அவள்.
அவனுக்கு சிரிப்பாக வந்தது. முகத்தை மறைத்துக்கொண்டே, “நம்புடி கிறுக்கி” என்றிட, “உன்னை மட்டும் நம்பவே முடியாதுய்யா!” என்றாள் வலுவாக. அவனுக்கு இன்னமும் தான் சிரிப்பு. பற்களை இறுக கடித்து அடக்கிக்கொண்டான்.
“நம்பனும்ன்னா என்ன பண்ண? இப்போவே கிளம்பி போய் பேசவா?” என்று அவன் கேட்டிட, “வேணாம் வேணாம்” என்று மறுத்தவள், “என் மேல சத்தியம் பண்ணு, அவனுங்க மேல இருந்த கோவம் போச்சு, முன்ன மாறி இனி பேசுவேன்னு!” என்று சொல்ல, உடனே அவள் புறம் திரும்பியவன், அவள் தலையில் அடித்து சத்தியம் செய்தான்.
“ஆ” வாயை பிளந்தவள், “என்ன உடனே பண்ணிட்ட?” என்று கேட்க, சிரிப்பு தான் அவனிடம்.
“அதானே, நான் ஒரு கிறுக்கி. உனக்கு தான் என்னை பிடிக்காதே! அப்போ சத்தியம் எல்லாம் சக்கரை பொங்கல் தான் உனக்கு” முகம் சுருங்க முறுக்கிக்கொண்டவளிடம், “நான் சொன்னேனா? உன்னை பிடிக்காதுன்னு?” என்று கேட்டவனை ஆர்வமாய் நெருங்கியவள்,
“அப்போ பிடிக்குமா என்னை?” என்று கேட்டாள் மதி.
“அது…” அவன் ஆரம்பித்தபோது வாசல் கதவு தட்டப்பட்டது.
‘யாரு?’ என அண்ணாமலை எழும்ப, “அட, சொல்லிட்டு போ, என்னை பிடிக்குமா?” என்று கேட்டாள் அவள்.
மீண்டும் கதவு தட்டப்பட, “இருடி!” என்றவன் கதவை திறக்க, அங்கே வியர்க்க விறுவிறுக்க, மூச்சு வாங்க நின்றிருந்தாள் தேன்மொழி.