Update typing late aaguradhaala A small precap for upcoming chapter.
வார்த்தைகள் மரணித்து உணர்ச்சிகள் உச்சானிக்கொம்பில் இருக்க, தச்சன் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் திவ்யா. விழி எதிரில் தந்தை, அன்னை, ஆச்சி என்று அந்த வீட்டுப் பெரியவர்கள் புதிதாய் அண்ணன் என்று சொல்லப்பட்டவனின் அருகே கண்ணீருடன் அமர்ந்து அவன் கரத்தை இறுக்கமாய் பற்றியிருக்க, திவ்யா தச்சன் கரத்தை கெட்டியாக பிடித்திருந்தாள். ராஜராஜன் என்று ஒருவன் தங்களுக்கு முன் பிறந்திருக்கிறான் என்ற செய்தியே அவளுக்கு அதிர்ச்சியாய் இருக்க… சென்ற கணம் வரை பெருந்தச்சன் மட்டுமே உடன்பிறந்து கூடவே வளர்ந்தவன் என்று பதிந்திருந்த அவளது எண்ணத்தில் புதிதாய் ஒருவன் உட்புக அதனை ஆதரவுக்கரம் நீட்டி வரவேற்க முடியவில்லை அவளால்…
“என்னடி இப்படி உட்கார்ந்திருக்க… போய் பேசு.” என்று தச்சன் திவ்யாவை உசுப்ப,
“நீ போய் பேச வேண்டியதுதானே?” என்றவளுக்கு மறுநொடியே ஏதோ மனதில் தோன்ற அவனை நம்பாமல் பார்த்தாள் திவ்யா.
“நீ எப்படி இவ்வளவு ஈசியா எடுத்துக்குற? அதிர்ச்சியா இல்லையா உனக்கு?” என்ற திவ்யாவின் கேள்விக்கு அவனிடம் மெளனம் மட்டுமே…
“என்ன அமைதியாகிட்ட? அப்போ… உனக்கு… ஏற்கனவே தெரியுமா? இப்படி ஒருத்தர் இருக்காருன்னு உனக்கு தெரியும் தானே? இல்லைனா நீ இவ்வளவு அமைதியா இருக்க மாட்ட… ஏதாவது சொல்லி இருப்ப… நீங்க எல்லோரும் சேர்ந்து என்கிட்ட மட்டும் இதை மறைச்சிருக்கீங்க!” திடுமென அவளுக்கு என்னத்தான் ஆனதோ, குரல் உயர்ந்து மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது.
“இப்போ எதுக்கு இவ்ளோ ஸீன் போடுற நீ? ஒன்னுக்கு ரெண்டு அண்ணனுங்க இருக்காங்கன்னு நீ கெத்தா சுத்தலாம்… உன் வீட்டுக்காரரை மிரட்டி வைக்கலாம்.” என்று கேலி போல தச்சன் திவ்யாவிடம் சொன்னாலும் கெத்து என்று சொல்லும் போதே பார்வை தானாய் குந்தவையிடம் சென்று நின்றது. இதற்கும் லெக்ஸர் எடுப்பாளோ என்ற பயம் தான் வேறென்ன…
***
“இப்போ எதுக்கு பக்கத்து ஊர் வரைக்கும் முகத்தை தூக்கி வச்சிட்டு நிக்குற?”
“ஷ்… என் வாயை கிளராத குந்தவை. ஏதாவது திட்டி விட்டுருவேன்…”
“ஓ… சாருக்கு திட்டக் கூட தெரியுமா? எங்க திட்டங்களேன் பார்ப்போம்…” என்று கேலி பேசியவள் அருகில் இருந்த நாற்காலியை இழுத்துப்போட்டு கதை கேட்பது போல அமர, அவனது எரிச்சல் பன்மடங்கானது.
“என்னடி லொள்ளா? என்னை கொஞ்ச நேரம் தொந்தரவு பண்ணாம போய் வேற வேலை இருந்தா பாரு…”
“இன்னைக்கு எனக்கு இதுதான் வேலையே…”
“உன்னை… ஷ்… போடி இம்சை.”
“இம்சையாம்ல இம்சை… போடா டேய்… காஞ்சி போயிருக்கீயே போனால் போகுதுன்னு புடவை கட்டினதும் உன்கிட்ட காண்பிக்க வந்தேன் பாரு என்னை சொல்லணும்…” என்று அவள் கடிந்தபோதும் அவன் அதை கண்டுகொள்ளவில்லை.
வீடு முழுக்க உறவினர்களின் வருகைக்கும் பேச்சுக்கும் பஞ்சமில்லை எனும்போதும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட தச்சனின் கண்கள் நீலா பின்னரே தான் சுற்றியது… நேற்று காலை பேசியது அதன்பின்னர் இப்போது வரை தச்சன் புறம் அவரின் கடைக்கண் பார்வை கூட விழவில்லை. வெகு வருடங்கள் கழித்து வீடுவந்திருக்கும் மூத்தவனை கண்ணுக்குள் நிரப்பி அவனை கவனிப்பதிலேயே அவரின் நேரம் ஓடிவிட, தச்சனுக்குத் தான் பொறுமை கரைந்திருந்தது. அதை யாரிடமும் காட்ட விரும்பாது தனியாய் வந்து நின்றுகொண்டான்.
“ரொம்ப பண்றடா நீ…”
“என்ன பண்ணிட்டேன் இப்போ? உனக்கு என்னை ஏதாவது சொல்லிட்டே இருக்கனும். இல்லைனா சாப்பிட்டது உள்ள இறங்காது… அதுதான் உங்க அம்மா வந்திருக்காங்களே… அவங்களயே போய் கொஞ்சு.”
“நீயும் உங்கம்மாவை கொஞ்சேன்… யார் வேணாம்னு சொல்றா? நிறைய சொந்தக்காரங்க வந்திருக்காங்க படுக்க இடம் பத்தாதுன்னு உன்னை வெளில அனுப்புனத்துக்கு ரொம்பத் தான் சலிச்சுக்குற நீ…”
“அடியேய்… எங்கம்மா என்னை திரும்பிக் கூட பார்க்க மாட்டேங்குது. என்னோட கல்யாண விருந்துன்னு சொல்லிட்டு அவன் பின்னாடி தான் சுத்திட்டு இருக்கு… நான் சாப்பிட்டேன்னான்னு கூட கேட்கல… இதுல கொஞ்சல் ஒன்னு தான் குறைச்சல்..” அவன் சோகம் போல சொல்ல, பக்கென்று சிரித்துவிட்டாள் குந்தவை.
***
Will post epi in a day or two...