பொருள் செயல்வகை என்பது செல்வம் சேர்த்தலின் திறம் எனப் பொருள்படும். பொருள் தேடுதலின் வகை, அதன் சிறப்பு அதன் பயன் கொள்ளும் முறை ஆகியன கூறப்படுகின்றன. இத்தொகுதியிலுள்ள பாடற் கருத்துக்கள் தனிமனிதர்க்கும் அரசுக்கும் பொருந்துவனவாக உள்ளன. அறநெறியில் செல்வம் ஈட்டப்பட வேண்டும் என்பது வலியுயுறுத்தப் பெறுகிறது.
இவ்வதிகாரம் 'செய்க பொருளை' எனப் பணிக்கிறது. பொருள் மதிப்பு உண்டாக்குவது; சிறப்புச் செய்ய வைப்பது; பகையை வெல்லச் செய்வது; பகைவரின் செருக்கை அறுக்கவல்லது; அரசு, தன் குடிமக்கள் விரும்பிக் கொடுக்காத செல்வத்தையும் ஏற்காது கழித்து விட வேண்டும், நாட்டில் அருளாட்சி பொருளாலேயே உண்டு- இவை அதிகாரத்துள் காணப்படும் செய்திகள்; பொருள் மிகுதியாகத் தொகுப்பவர்க்கு அறவாழ்க்கையும் இன்பநிறைந்த வாழ்வும் எளிது எனவும் சொல்லப்படுகிறது.