அதிகார விளக்கம் :-
இடுக்கணழியாமை என்பது முயற்சியில் பொருளிழப்பு, மெய் வருத்தம், தோல்வி போன்ற துன்பங்கள் வந்த பொழுது, அதற்கு மனங்கலங்காமையைக் குறிக்கும். இடுக்கண் என்ற சொல் துன்பம், இடையூறு என்ற இரு பொருளிலும் ஒன்றுக்கொன்று மாற்றிக் கொள்ளுமாறு இவ்வதிகாரத்தில் ஆளப்பட்டுள்ளதாக உள்ளது. அதிகார முறைமையைப் பார்க்கும்போது இதன் நோக்கம் முயற்சி மேற்கொண்டபோது நேரும் இடுக்கண்களுக்குக் கலங்காமை என்பதாக உள்ளது. ஆனால் ஒருவரது வாழ்க்கையில் உண்டாகும் எல்லாவகையான இடையூறுகளுக்கும் அழியாமை என்பதற்குப் பொருந்தி வருவதால், இன்பம்-துன்பம் ஆகிய உயிர்க்குணங்கள் பற்றிய ஆழ்ந்த கருத்தாடலாக இவ்வதிகாரம் அமைகிறது.