அதிகார விளக்கம் :-
அறிவுடைமை
அறிவை வேறுவேறு வகையில் பகுத்து விளக்குவர். பொதுவாக இதை மூன்று பிரிவுகளில் அடக்கலாம். ஒன்று இயற்கை அறிவு அதாவது இயல்பில் அமைந்த அறிவு. இரண்டாவது செயற்கை அறிவு. இதைக் கல்வியறிவு அல்லது நூலறிவு என்றும் சொல்வர். இச்செயற்கை அறிவு கற்றல் மூலமும் கேட்டல் மூலமும் பெறப்படுவது. மூன்றாவது வகை உலக அறிவு. உலக அறிவு இயற்கை அறிவுடன் கூடியதாகவோ அல்லது செயற்கை அறிவுடன் கூடியதாகவோ அல்லது இரண்டும் இணைந்த அறிவுகளுடன் கூடியதாக இருக்கலாம். இயற்கை, செயற்கை அறிவின் பயன்களை முழுதும் உணர வேண்டுமானால் ஒருவருக்கு உலக அறிவு வேண்டும். அறிவுடைமை அதிகாரத்தில் சொல்லப்படும் அறிவு இந்த உலக அறிவுதான். உலகியல்புக்கேற்ப நடந்து கொள்வதை இது குறிக்கும். எவ்வதுறைவது உலகம் உலகத்தோடு அவ்வதுறைவது அறிவு என்பது குறட்பா. 'உலகந்தழீஇயதொட்பம்' அதாவது உலகை அறிந்து நடப்பதே ஒள்ளிய அறிவு அல்லது நுண்ணிய அறிவு என்றும் குறள் கூறும்.
கா சுப்பிரமணியம் பிள்ளை 'இயற்கையாய் மனிதர்க்கு உளதாகிய பகுத்தறிவுடைமையே இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டது' என்பார்.