அவையறிதல்
அவை, மன்றம், கழகம் என்பன ஒரு பொருள் தரும் சொற்கள். அவை என்பது ஒரு கருத்தை மற்றவர்க்குச் சொல்லும் இடம். அது பெரும் மக்கள் திரள் கொண்ட ஒரு திடலாகவோ சில நூறுபேர் மட்டுமே கொண்ட மாநாட்டு அரங்கமாகவோ அல்லது கருத்தரங்கு நடக்கும் சிறிய அறையாகவோ இருக்கலாம். வணிக நிறுவன ஆட்சிமன்றக் கூட்டமும் ஓர் அவைதான். மாணவர்களும் ஆசிரியரும் கூடும் வகுப்பறையையும் ஒரு அவையாகக் கருதலாம்.
அறிஞர் அவை, பொதுமக்கள் அவை, தொழிலாளர் அவை, புலவர் அவை என அவைகள் பெரும்பான்மையினர் பற்றிப் பல வகைப்படும். இவ்வதிகாரத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்படுவன புல்லவை, தம்கணத்தார் அல்லாதார் கோட்டி, ஒள்ளியார் அவை, முதுவர் அவை என்றிவை. மற்ற வகையினர் வேறுவிதமாகக் குறிக்கப் பெறுகின்றன.
இவ்வதிகாரத்தில் அவையில் பேசச்செல்வோருக்குச் சிறந்த நடைமுறைக் குறிப்புகள் தரப்படுகின்றன:
யாருக்குச் சொல்கின்றோம் என்று ஆராயாமல் பேசுவது கூடாது; பேசும்போது சொற்களின் தொகை, வகை, நடை அறிந்து ஆளவேண்டும்; மன்றத்தின் செவ்வியை -பொருத்தமான நேரத்தை- நன்றாக உணர்ந்த பிறகே பேச வேண்டும்; அறிவு மிக்கவர்களின் கூட்டத்தில் தாம் அவர்களினும் அறிவு மிகுந்தவர்களாக அறியப்படுமாறு பேச வேண்டும்; அறிவு குறைந்தவர்களின் ஒன்றும் அறியாதவர்கள் போல் இருக்கவேண்டும்; தம்மைவிட முதிர்ந்தவர்களின் கூட்டத்தில் முற்பட்டுப் பேசாமல் அடக்கமாக இருக்க வேண்டும்; பேச்சு வன்மை மிக்க அறிஞர்களின் கூட்டத்தில் ஒருவரது கல்வி விளக்கம் பெறும்; சொல்வதை உடனே புரிந்துகொள்பவர்கள் அவையில் பேசுவது, தனக்கு நல்ல ஊட்டமாக அமையும்; இழிவானர்கள் கூட்டத்தை அறவே தவிர்க; தம்மோடு ஒத்த உணர்வு இல்லாதவர் அவையில் சென்று உரைப்பது பயனில்லை.