அதிகார விளக்கம் :-
நிலையாமையாவது தான் என்று நினைத்திருக்கின்ற உடம்பும் தனது என்று நினைத்திருக்கின்ற செல்வமும் நிலை நில்லாமையைக் கூறுவது. ஒருவனது வாழ்நாள், அவ்வாழ்நாளில் அவனது இளமை, செல்வம், யாக்கை எல்லாம் நிலையற்றவை என்பது அறியப்படவேண்டும். செல்வம், யாக்கை, இளமை முதலானவற்றின் நிலையாமை பற்றிய உணர்வு ஒருவரது வாழ்வைப் பயனுடையதாக்கும்
சிந்தித்துப் பார்த்தால், உலக வாழ்வே நாடகம் போல் தோன்றுகின்றது. நாடகக்காட்சி போன்று நிகழ்ச்சிகள் சுழன்று சுழன்று செல்கின்றன. உடைமைகள், பதவிகள், அரசு, எல்லாம் உலகமேடையில் மாறுதல்களை தோற்றுவிக்கின்றன. இரவும் பகலும்போல இன்ப துன்பங்கள் வந்து போகின்றன. தோன்றுவனவெல்லாம் மாறிக்கொண்டேயிருக்கின்றன. காலஓட்டத்தில் குழந்தை, இளைஞன், காதலன், தந்தை, தாத்தா ஆகி கடைசியாக நாச்செத்து, விக்கல் எழ, உடலைப் போட்டுவிட்டு, உயிர் சொல்லாமல் பறந்து எங்கோ மறைந்துவிடுகிறது.
உயிர்கள் ஏன் பிறப்பெடுக்கின்றன, சாவு உண்டானபின் உயிர்க்கு என்ன ஆகிறது என்பனபற்றி மனிதன் காலம் காலமாக ஆய்ந்து வருகிறான். ஆனால் விடை இன்னும் காணமுடியவில்லை. இனிமேலும் காணமுடியாது. அது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த மறையாகவே எக்காலத்தும் இருக்கும். உயிர்கள் பிறப்பிறப்பு உண்டானாலும் உயிரினத் தொடர்ச்சி இருந்துகொண்டே இருக்கும். பொருள்கள் தோன்றி மறையும் தன்மையுடையதெனினும் இயற்கை எனும் ஒன்று நிலையாகவுளது. ஞாயிறு, திங்கள், விண்மீன்கள் தோன்றுவதும் காற்று வீசுவது மழை பொழிதலும் மாறாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கடவுள் படைக்கும் உயிர்களும் மாந்தர் உண்டாக்கும் உடைமைகளும் நிலையற்றன என இவ்வதிகாரப்பாடல்கள் சொல்கின்றன. அவை நிலையற்றவை என்பதால் உயிர்கள் இயங்காமலும் இருக்க முடியாது பொருள்களைச் செய்யாமலும் இருக்கமுடியாது.நிலையாமை உணர்வை மனத்தில் வைத்துக்கொண்டு செயல்படுவது நன்மை பயக்கும் என்பதை வலியுறுத்துவதே இவ்வதிகாரத்தின் நோக்கம்.