அத்தியாயம்  – 36

வீட்டினர் அனைவருக்குமே அப்போது பவஸ்ரீ பிரச்சனை தான் பெரிதாய் இருந்தது. அவள் தனுஜாவை அண்ணி என்று சொன்னதை யாரும் அத்தனை பெரிதாய் எண்ணிக்கொள்ளவில்லை. அத்தனை ஏன் அர்ச்சனாவே அதனை தவறாய் நினைக்கவில்லை.

இருந்தும் அவளது அந்த அழைப்பு என்னவோ மனதினில் ஒரு சிறு உறுத்தல் கொடுத்தது நிஜம். அச்சுதனின் இந்த அன்பு தனக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கையில், அவனது கடந்த காலத்தை, அதுவும் அவன் தனுஜாவிற்காக, அவளின் நிலைக்காக என்று அவனது வாழ்வை கூட அவன் பெரிதாய் நினைக்கவில்லை தானே.

அப்படியிருக்க, அதனை நினைவு படுத்தும் விதமாய், பவஸ்ரீ பேசியது அர்ச்சனாவிற்கு இருக்க, மனது கொஞ்சம் சங்கடப்பட்டது தான். ஆனாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. மனதின் ஓரத்தில், ஒரு பக்கம் தள்ளி வைத்துக்கொண்டாள்.

அச்சுதனோ “சித்தப்பா, நாளைக்கு நீங்க ஸ்கூல்ல போய் கம்ப்ளைன்ட் பண்ணுங்க…” என,

பவஸ்ரீயோ “ஐயோ அண்ணா.. அதெல்லாம் வேணாம்..” என்றாள் வேகமாய்.

“ஏன்.. ஏன் வேணாம்?” என்று அர்ஜூன் குதித்துக்கொண்டு வர,

“அ.. அது.. தீபா என்னோட சண்டை போடுவா.. அவ என்னோட பிரண்ட்..” என்று சொல்ல,

“அப்போ அவளுக்கும் இதெல்லாம் தெரியுமா?” என்று சுமிதா கேட்க,

“இல்லம்மா.. தெரியாது…” என்றாள் வேகமாய்.

அர்ச்சனாவிற்கோ இப்படி அனைவரும் அவளை நிற்கவைத்துக்கொண்டு பேசுவது எப்படியோ இருக்க, அச்சுதனிடம் “அச்சத்தான்.. இப்படி நிக்க வச்சு பேசுறது சரியில்லை…” என்று சொல்ல, அவனும் அதைத்தான் எண்ணினான் போல.

“சரிடா.. எங்கக்கிட்ட சொல்லிட்ட தானே. நீ ப்ரீயா விடு. ஸ்கூல்ல சொல்லலை. நீ எப்பவும் போல போயிட்டு வா ஓகே..” என்றவன், சுமிதாவிடம் கண் ஜாடை காட்டிவிட,

“சரி வா பவி. தூங்கு வந்து. லேட்டாச்சு…” என்று அவர் மகளை அழைத்துக்கொண்டு செல்ல, பவஸ்ரீயோ திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு செல்ல,

அர்ச்சனாவோ அவளிடம் சென்று “நீ பயந்துக்காத. ரிலாக்ஸா தூங்கு.. இனி அவன் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டான்…” என்று தைரியம் சொல்லி அனுப்பினாள்.

சின்ன பெண். ஒன்பதாம் வகுப்பு இப்போது தான் ஆரம்பித்து இருக்கிறது. காதல், அதனோடு சேர்ந்து மிரட்டல் வேறு. நினைக்கையில் யாருக்குமே கோபம் வரத்தான் செய்யும்.

தாமோதரனோ “எடுத்தோம் கவுத்தோம்னு எதுவும் செய்யக் கூடாது. அர்ஜூன், பிரசாந்த் ரெண்டு பேரும் அமைதியா இருக்கணும்…” என்று சொல்ல,

அச்சுதனோ நேரம் பார்க்காது தனுஜாவின் அப்பா, மகேந்திரனுக்கு அழைக்க “என்ன அச்சுதன் இந்த நேரத்துல?” என்றார் அவரும்.

இப்போதும் கூட, வைரங்கள் வாங்குவது எல்லாம் அவரிடம் தான். தொழில் முறை பழக்கத்தை எல்லாம் அவன் மாற்றிக்கொள்ளவில்லை. இது அர்ச்சனாவிற்கும் தெரியும். ஆனாலும் இது முற்றிலும் வேறல்லவா?!

அவரிடம், அந்த தீரன் விஷயம் சொல்லி “உங்களுக்கு ரிலேட்டிவ் அப்படின்னு சொல்லிருக்கான்…” என்று கேட்க,

அவருமே யாரென்று சட்டென்று நினைவில் வராமல், பின் யோசனை செய்து “அவங்களா?! அது என்னோட சித்தப்பா வகைல சொந்தம்.  அவங்க இப்போ திருச்சிக்கு வரவும் தான் பழக்கம் அதிகம்…” என்றிட,

“ஓகே அங்கிள். அப்போ இதுல நீங்க நடுவுல வர்ற வாய்ப்பில்லை அப்படிதானே…” என்றவனின் குரலே, இதில் நீங்கள் நடுவில் வரக் கூடாது என்ற கட்டளை தான் இருந்தது.

அவரோ “நான் வேணும்னா பேசி பார்க்கட்டுமா?” என்று தயங்கி கேட்க,

“இல்ல அங்கிள். இது எங்க பிரச்சனை. உங்களுக்கு நாங்களும் வேணும். அவங்களும் வேணும். நான் பார்த்துக்கிறேன்…” என்றவன், அலைபேசியை வைத்துவிட, சுரேந்திரனோ கலக்கமாய் தான் அண்ணன் மகன் முகம் பார்த்தார்.

“பார்த்துக்கலாம் சித்தப்பா.. பவஸ்ரீக்கு தெரியவேணாம்…” என்றவன் ஸ்கூல்ல கூட இப்போ சொல்லிக்க வேண்டாம். நாளைக்கு பேசிட்டு அடுத்து என்னன்னு பார்ப்போம்..” என்றவன், அண்ணன் தம்பிகளுக்கு ஜாடை காட்டிவிட்டான்.

யார் கண்டார்களோ இதை, கணவனின் கண் ஜாடையை அர்ச்சனா கண்டுவிட ‘சரி என்னவோ செய்யப் போகிறார்கள்…’ என்று புரிந்துபோனது.  

தாமோதரனோ “நாளைக்கு அவங்க வீட்டுக்கு போகனுமா?” என்று கேட்க,

“நம்ம ஏன் போகணும்? அவங்களை வரவைப்போம். லவ் அப்படின்னு சொல்லிருந்தா கூட இதெல்லாம் டீன் ஏஜ்ல நார்மல் அப்படின்னு ஸ்கூல்ல சொல்லி டீல் பண்ணிருக்கலாம். ஆனா அவன் பண்ணது வேற. மிரட்டிருக்கான். அவனோட வெளிய வரலைன்னா போட்டோ ரிலீஸ் பண்ணுவேன்னு சொல்லிருக்கான். இதெல்லாம் பெரிய தப்பு.. வயசு கோளாறுன்னு எல்லாம் இதை விட முடியாது சித்தப்பா…” என,

நீலவேணியோ “என்ன செய்யப் போற அச்சுதா…” என்றார்.

“நானுமே இன்னும் யோசிக்கல. ஆனா நம்ம தேடி எல்லாம் போய் பேசப் போறது இல்லை..” என்றுவிட, அவனுக்குத் தெரியும் எப்படியும் தனுஜாவின் அப்பா, அங்கே அழைத்து பேசுவார் என்று.

இதற்குமேல் யாரும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் அண்ணன் தம்பிகள் எல்லாம் உடனே உறங்கப் போகவில்லை. அர்ச்சனா தயங்கி நிற்க “நீ போய் தூங்கு…” என்று அனுப்பிவிட்டான்.

என்னவோ செய்யப் போகிறார்கள் என்பது மட்டும் உறுதியாய் தெரிந்தது.

“அண்ணா நீ சொன்னது சரிதான். லவ் அப்படின்னு பின்னாடி சுத்திட்டு இருந்திருந்தா கூட, டீசண்டா டீல் பண்ணிருக்கலாம். ஆனா அவன் மிரட்டி இருக்கான்.. சும்மாவே விடக் கூடாது…” என்று பிரசாந்த் பேச,

பிரகாஷும் “நினைச்சாலே எப்படி இருக்கு? இந்த பசங்களுக்கு எப்படி இத்தனை தைரியம் வருதுன்னு தெரியலை…” என்று சொல்ல,

அத்தனை நேரம் அமைதியாய் இருந்த அச்சுதனோ, அவன் நெற்றி தலும்பினை லேசாய் நீவியபடி  “ரெண்டு நாளைக்கு தூக்கிட்டு போய் வச்சுடலாம்…” என்றான் அசராமல்.

“அண்ணா..!“  என்று மற்ற மூவரும் அதிர்ந்து பார்க்க,

“யோசிச்சேன்டா.. ஸ்கூல்ல போய் பேசலாம் தான். கூப்பிட்டு வார்ன் பண்ணுவாங்க. அடுத்து?! அவன் திருந்தினா சரி. மனசுல பயம் வரலைன்னா, திரும்ப இதையே பண்ணுவான். பார்த்த தானே பவஸ்ரீ எப்படி பயந்தா அப்படின்னு. நல்லவேளை சொல்லிட்டா. இல்லை அவனுக்கு பயந்து அவனோட போயிருந்தா?!

எப்படியும் அவன் வந்து இவளோட பேசுறது எல்லாமே கிளாஸ் முழுக்க தெரிஞ்சு தான் இருக்கும். தீபா அவளோட பிரண்ட்னு சொல்றா இல்லையா. நம்மதான் இதை செஞ்சோம்னே தெரியாம செய்யணும்…” என,

“அதெப்படி ண்ணா.. மகேந்திரன் அங்கிள் கிட்ட வேற பேசினியே இப்போ…” என்று பிரகாஷ் பேச,

“அவர்கிட்டயுமே முழுசா எதையும் சொல்லக் கூடாது…” என்றவன்  

யோசி.. இப்போ என்னவெல்லாமோ நடக்குது தானே. அவனுமே பதினாறு வயசு பையன். ஆனா புத்தி எப்படி போகுது பார்த்த தானே. அவன் மனசுல பயத்தை உண்டு பண்ணனும். இல்லைன்னா இன்னிக்கு நம்ம வீட்டு பொண்ணு, நாளைக்கு இன்னொரு பொண்ணுன்னு அவன் இப்படித்தான் செய்வான். பையன் என்ன செய்றான்னு பெத்தவங்களுக்கு புரியணும். அதோட சீரியஸ்னஸ் புரியணும்…” என்றிட, அண்ணனின் பேச்சு தம்பிகள் அனைவருக்கும் சரியாகவே பட்டது.

பிரசாந்தோ “அவங்க போலீஸ் அப்படின்னு போனா…” என்று கேட்க,

“பிரச்சனை பண்ணிருக்கான்னு இப்போ அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். நாளைக்கு மகனை காணோம் அப்படின்னா, நேரா இங்கதான் வந்து நிப்பாங்க…” என்று அச்சுதன் சொல்ல, அவன் சொன்னது போலத்தான் மறுநாள் நடந்தது.

அன்றைய இரவு யாருக்கும் தூக்கமில்லை.

அர்ச்சனா கூட அச்சுதனிடம் “என்ன ப்ளான்…?” என்று கேட்க,

“ஒரு ப்ளானும் இல்லை.. அவங்களே வரட்டும் பேசிக்கலாம்…” என்றான்.

“அவங்களே எப்படி வருவாங்க?!” என்று அவள் கேட்க,

“வருவாங்க…” என்றவன் “எதையும் யோசிக்காம தூங்கு…” என்று அவளை அணைத்தபடியே உறங்க,

மகேந்திரன் உடனே எல்லாம் தீரன் வீட்டில் பேசவில்லை. ஆனால் மறுநாள் காலையில், அவனது அப்பாவிடம் “பையனை கண்டிச்சு வைப்பா. பெரிய இடத்துல எல்லாம் வம்பு பண்ணிட்டு இருக்கான் போல…” என்று பேச,

“ண்ணா என்ன அண்ணா?!” என்று அவரும் பதறித்தான் போனார்.

அப்பர் மிடில் கிளாஸ் குடும்பம் தான். அப்பாவின் சம்பாத்தியத்தில் மகன் ஆடிக்கொண்டு இருக்கிறான். அதை தவிர, ஆள் பலமெல்லாம் அவர்களுக்கு இல்லை. மகன் மீது பல கனவுகள் வைத்திருக்கும் பெற்றோர் தான்.

“என்னவோ.. காதுக்கு பல விசயம் வருது.. பார்த்து…” என்று மகேந்திரன் எச்சரிக்க, தீரன் அன்று பள்ளிக்கு கிளம்பியவன், மாலை வீடு வரவும் இல்லை. காலையில் பள்ளிக்குச் செல்லவும் இல்லை.

பவஸ்ரீக்கு மனதினில் பயமிருந்தாலும், அவள் பள்ளிக்கு வந்திருக்க, தீபா எப்போதும் போலத்தான் அவளோடு பேச, மனதினில் கொஞ்சம் ஆசுவாசம்.

ஆனால் வீட்டிலோ “அந்த தீபாவோட பிரண்ட்ஷிப் எல்லாம் வேணாம்.. குறைச்சுக்கோ..” என்று சொல்லியிருக்க, இவள் தான் சரியாய் பேசவில்லை.

தீபாவும் அதனை கண்டுகொள்ளவில்லை.

அன்று மாலை வீடு திரும்பிய தீபா, அண்ணனை பள்ளியில் காணவே இல்லை என்று சொல்லவும் தான், என்னவோ விபரீதமாய் நடந்திருக்கிறது என்றே புரிந்தது. மகேந்திரன் சொன்னபோது கூட, தீபாவின் அப்பா அதனை அத்தனை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. மகன் வரவும் பேசிக்கொள்வோம் என்று இருக்க, இப்போது மகனே காணவில்லை எனில் என்ன செய்வார்கள்.

அடுத்தது உடனே மகேந்திரனுக்கு அழைத்து “அவன் ஸ்கூலுக்கும் போகலை.. வீட்டுக்கும் வரலை…” என்று பேச,

இதற்கு இடையில் அச்சுதன், அவர்களின் மிக நெருங்கிய மற்றும் பல வருட வாடிக்கையாளருமான, காவல்துறையில்  உயர் பதவியில் இருக்கும் ஒருவருக்கு அழைத்துப் பேச “கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் தானே அச்சுதா…” என்றார்.

“இல்ல சார்.. சின்ன பையன்.. போலீஸ் அது இதுன்னு போனா ரிஸ்க் தான். அவனுக்கு மனசுல பயமில்லை. பயம் வந்துட்டா போதும். எந்த பொண்ணு பின்னாடியும் இப்படி சுத்தமாட்டான்.. ஒருவேளை அவங்க சைட் இருந்து கம்பளைன்ட் அது இதுன்னு ஏதாவது வந்தா, கொஞ்சம் பாருங்க.. ரெண்டு நாள்ல அவன் வீட்டுக்கு போயிடுவான்…” என்று பேச,

“இது எந்த ஆளவுக்கு சரின்னு தெரியலயே…” என்றார் அவரும்.

“இது உங்கக்கிட்ட சொல்லாமயே செஞ்சிருப்போம்.. ஆனா நாளைக்கு பிரச்னை எப்படி மாறவும் சான்ஸ் இருக்கு. ஆனா பையன் பாதுகாப்புக்கு நான் கேரண்டி..” என்று அச்சுதன் பேச,

“ரெண்டு நாள்ல பையன் வீட்டுக்கு போயிடுவான் தானே…” என்று அவர் திரும்பக் கேட்க,

“என்னை உங்களுக்குத் தெரியாதா?” என்றான் அச்சுதன்.

“தெரியும் தான். பிரச்சனை பெருசாகாம பார்த்துக்கோங்க. நீங்கதான் பண்ணீங்கன்னு வெளிய எப்பவும் தெரியக் கூடாது. முக்கியமா உங்க தங்கச்சிக்கு கூட…” என, அடுத்தது எல்லாமே அச்சுதனின் திட்டப்படி தான் நடந்தது.

இதோ தீரனின் பெற்றவர்கள், இங்கே இவர்களின் இல்லம் வர, எப்படியும் அவர்கள் வருவார்கள் என்று தெரியும் என்பதால், சுமிதாவோடு பவஸ்ரீயை அவர்களின் பாட்டி வீட்டிற்கு அனுப்பிவிட்டனர்.

தீரனின் பெற்றோர்களோடு, மகேந்திரனும் வந்திருக்க “வாங்க அங்கிள்…” என்றவன், உடன் வந்திருந்தவர்களை கேள்வியாய் பார்க்க, எல்லாமே தாமோதரன் வீட்டில் தான் பேச்சு வார்த்தைகள் நடந்தது.

அர்ச்சனா வந்தமைக்கு கூட “நாங்க பேசிட்டு சொல்றோம் அர்ச்சு…” என்றுவிட்டான்.

“எனக்குத் தெரியாம என்னென்னவோ செய்றீங்க…” என்று அவள் கேட்டபோது கூட,

“நன் தப்பா எதுவும் செய்யலை..” என்றான்.

“அது எனக்குத் தெரியுது.. ஆனாலும்…” என்று அவள் இழுக்க,

நீலவேணியோ “நீ வா அர்ச்சனா…” என்றுவிட்டார்.

அவளுக்கு என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள ஒரு ஆர்வம். அது தடைபட்டுவிட, முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டே செல்ல, இங்கே தாமோதரன் சுரேந்திரன் மற்றும் வீட்டு இளவட்டங்கள் எல்லாம் இருக்க,

“என்ன எல்லாம் ஒண்ணா இருக்கீங்க?” என்றார் மகேந்திரன் பார்வையை செலுத்தி.

“எல்லாம் டிபன் இங்கதான் முடிச்சோம்.. கிளம்பிட்டு இருந்தோம்…” என்று அச்சுதன் பொதுவாய் பேச,

“ஓஹோ..! பவஸ்ரீ எங்க?” என்ற மகேந்திரன் முகமே வாட்டமாய் தான் இருந்தது.

“வீகென்ட் இல்லையா அங்கிள்.. அவங்க பாட்டி வீட்டு சைட் ஒரு விசேசம்.. அவங்க அம்மாவோட போயிருக்கா.. இதோ சித்தப்பா கூட அங்க தான் கிளம்பிட்டு இருக்கார்…” என்று பேச,

சுரேந்திரனும் “எப்படி இருக்கீங்க? போன தடவை நீங்க கொடுத்த டைமண்ட்ஸ் எல்லாம் சூப்பார்…” என்று பேச,

தீரனின் பெற்றோர்களோ “எங்க பையன்…” என்று ஆரம்பித்தனர்.

“ஆமா அங்கிள்.. யார் இவங்க?!” என்றான் பிரசாந்த்.

“அது…” என்று மகேந்திரன் அச்சுதன் முகம் பார்க்க, அவனும் அதே கேள்வி போல் பார்க்க, மகேந்திரன் விபரம் சொல்ல,

“ஓ! நேத்து நான் பேசினேன் இல்லையா.. அவங்களா…” என்றவன் “நானே உங்களை பார்க்கனும்னு இருந்தேன்…” என்றான் தீரனின் அப்பாவிடம்.

“சார்.. எங்க பையன் காணோம்…” என்று அவனின் அம்மா பேச,

“அச்சோ! என்னாச்சு?!” என்றான் அச்சுதன்.

அவனின் சித்தப்பாக்களோ “என்னங்க நீங்க பையனை காணோம்னு இங்க வந்து நிதானமா பேசிட்டு இருக்கீங்க. முதல்ல கம்ப்ளைன்ட் கொடுத்தீங்களா இல்லையா?” என்று பேச,

“இல்ல.. அது..” என்றவர்களுக்கு என்ன சொல்வது என்று கூட தெரியவில்லை.

அந்த அம்மாவோ “எங்க பையன் என்ன தப்பு செஞ்சிருந்தாலும், நாங்க கண்டிச்சு வைக்கிறோம். அவனை மட்டும் எங்களுக்கு திருப்பி குடுங்க…” என்று பேச,

“ஐயோ! என்ன பேச்சுங்க இது? நாங்களே உங்களை பார்க்கனும்னு நினைச்சிட்டு இருந்தப்போ தான். சரி எதுக்கு சங்கடம்னு மகேந்திரன் அங்கிள் கிட்ட பேசினதே. நீங்க இங்க வந்து பேசுறதுல அர்த்தமே இல்லை. முதல்ல பையனை தேடுங்க. வீட்டுக்கு வந்தா என்ன ஏதுன்னு விசாரிச்சு கண்டிச்சு வைங்க…” என்று அனைவரும் இதே புள்ளியில் தான் நின்றனர்.

வந்தவர்கள் என்ன கேட்டும், யார் வாயில் இருந்தும் எந்த பதிலும் இல்லை. அச்சுதன் சொன்னதையே தான் சொன்னான் “எங்களுக்குத் தெரியாது.. வேண்டுமானால் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுங்கள்…” என்று.

மகேந்திரன் கூட, அவனது பேச்சை நம்பித்தான் போனார்.

“நேத்து ஒரு கோபத்துல பேசினேன் தான் அங்கிள்.. ஆனா யோசிச்சேன்.. சின்ன பையன் தானே.. ஸ்கூல்ல சொல்லிக்கலாம்னு இருந்தோம்.. இப்போ இவங்க காணோம்னு சொல்றாங்க.. எங்களுக்கு இதுதான் வேலையா?!” என்று பேச,

“இல்ல அச்சுதா அது…” என்று தயங்கினார்.

“என்ன அங்கிள் எங்களை தெரியாதா உங்களுக்கு?” என்று அச்சுதன் பேச, அவருக்கும் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

“வேற அவன் பிரண்ட்ஸ் கிட்ட விசாரிக்கலாம்…” என்று அவர்களை அழைத்துக்கொண்டு செல்ல, அச்சுதன் காவல் அதிகாரியிடம் சொன்னதுபோல, அடுத்து இரண்டாம் காலையில், அந்த தீரன் அவனின் வீட்டினில் இருந்தான்.

முகமே பயத்தினில், வெளிறி அரண்டு போய் இருந்தது.

வீட்டில் யார் கேட்ட கேள்விக்கும் பதிலே இல்லை.

குடும்பத்தினருக்கோ மகன் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வீடு வந்தது நிம்மதி தான். ஆனாலும் அவன் என்னவோ தவறு செய்திருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது. யாரோ பாதிக்கப்பட்டவர்கள் தான் ஏதேனும் செய்திருக்கவேண்டும் என்று புரிந்தது. என்ன புரிந்தும் அவர்களால் என்ன செய்ய முடியும்.

முதலில் அவனை இயல்பு நிலைக்கு கொண்டு வரவே அவர்கள் முயற்சி செய்ய, அவனுக்கு தான் கடத்தப்பட்டு இரண்டு நாட்களாய் இருட்டறையில் இருந்ததை இப்போது எண்ணினாலும் பயம் தான். அந்த பயத்தில் எங்கே அவன் பெண்கள் பக்கமெல்லாம் பார்வையை திருப்ப..

பள்ளிக்கு திரும்பச் செல்லவே அவனுக்கு இன்னும் தைரியம் வரவில்லை.

இங்கே நம்பெருமாள் குடும்பத்திலோ, அவரவர் வேலையை வழக்கம் போல தொடர, இதோ அனிதாவையும் அர்த்தியையும் அழைத்துக்கொண்டு வர தேதி குறித்துவிட்டனர்.