Advertisement

அத்தியாயம் -6
     பார்ட்டி சனிக்கிழமை மாலை என்பதால் காலையில் இருந்து நிறைய நேரம் இருந்தது.
     மீண்டும் வாங்கியிருந்த புதிய உடைகளை எல்லாம் வெளியே எடுத்து ஒரு முறை பார்த்தவள் எதை அணிவது என்ற குழப்பத்திலேயே இருந்தாள்.
     முதல் அனுபவம் என்பதால் எல்லோரும் என்ன மாதிரி உடைகள் அணிந்து வருவார்கள் என்று தெரியவில்லை.
     ஆபீசில் அணிவது போலவா அல்லது தோழிகளோடு வெளியே போகும் போது அணியும் உடைகளா அல்லது இன்னும் பார்மல் உடைகளா என்று குழம்பிப்போய் இருந்தாள்.
            போகப் போவதும் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல் என்பதால் அவளால் யூகிக்கவே முடியவில்லை.
     அவள் பார்த்த ஹோட்டல்கள் எல்லாம் பட்ஜெட் ஹோட்டல் தான். அதிக பட்சம் தோசை பூரி பரோட்டா தான். அவள் அப்பா வாங்கும் சம்பளத்துக்கு வருடத்திற்கு ஒரு முறை பிரியாணி வாங்கித் தருவார்.
     இங்கே வந்த பிறகும் சில ஹோட்டல்களுக்கு போயிருக்கிறாள் தான். அவையும் பாஸ்ட் புட் உணவகங்கள் என்பதால் அவளால் உகிக்க முடியவில்லை.
     ஏற்கனவே ஹோட்டலின் பெயர் முகவரி அவர்களின் மெயிலுக்கு வந்திருக்க அதன் பெயரைப் போட்டு பார்த்தவள் அதன் உள்ளிருந்த அலங்காரங்களையும் வசதிகளையும் பார்த்து பிரமித்துப் போய் இருந்தாள்.
     ஏற்கனவே அவள் கூட ப்ரொஜெக்டில் இருந்தவள் பேச்சுவாக்கில் சொன்னதும் வேறு நினைவுக்கு வந்தது.
     “இங்கலாம் சொந்த செலவுல சாப்புட போனா ஒரு மாச சம்பளம் கூட பத்தாது. அதனால் இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கும்போது யூஸ் பண்ணிக்கணும்.”
     எல்லாம் சேர்ந்து அவளுக்கு ஒரு மிரட்சியைக் கொடுக்க பார்த்துப் பார்த்து அவளுக்கு தெரிந்தவரை தன்னை அலங்கரித்துக் கொண்டு கிளம்பினாள்.
            வெளிர் நீல நிற குர்தியும் நேவி ப்ளு ஜீன்ஸும் அணிந்து அதற்கு பொருத்தமாக நீல நிற பொட்டும் தலையில் வெளிர் நீல களிப்பும் அணிந்து கூந்தலை விரித்து விட்டிருந்தாள்.
     ராம்குமாரோடு போய் வாங்கிய மேக்கப் கிட் வைத்து மை தீட்டி பவுடர் மட்டும் போட்டவள் அதில் இருந்த லிப்ஸ்டிக் போட்டுப் பார்க்க அன்று நன்றாக இருந்தது இன்று கலர் அடிப்பது போல இருக்க அழித்து விட்டாள். மஸ்காராவும் போட்டது அதிகப்படியாக இருந்ததால் அதையும் எடுத்து விட்டாள்.
     மறுபடி முகம் கழுவி எளிமையாக கிளம்பி என்று நேரம் ஓடியது.
     காலில் வெளிர் நீல சாண்டல்ஸ். மாட்டியிருந்த டோட் பேகும் அதே நிறத்தில். சுஜியிடம் கடன் வாங்கியது.
     ஊருக்கு முன் ஏழு மணிக்கு போவதற்கு ஐந்து மணிக்கே கிளம்பி லாவண்யாவுக்கு தன் செல்பியை அனுப்பி வைக்க அவள் உடனே அழைத்து வஞ்சுவின் தோற்றத்தை வெகுவாக பாராட்டி சொல்லவும் வஞ்சுவின் தன்னம்பிக்கை கூடியது.
     சுஜி அவளைப் பார்த்து லேசாக சிரித்துக் கொண்டது போல தோன்றினாலும் “நைஸ் டி!” என்றதே திருப்தியாக இருக்க வஞ்சு துணிந்து தன் செல்பியை ‘ரெடி டு பார்ட்டி’ என்று வாய் கொள்ளாமல் சிரிக்கும் ஸ்மைலியோடு ராம்குமாருக்கு அனுப்பி வைத்தாள்.
     ராம்குமாரிடம் இருந்து உடனேயே “என்ஜாய்“ என்று தம்ப்ஸ் அப் ஸ்மைலியோடு குறுஞ்செய்தி வந்திருக்க அதுவே அவளுக்கு உற்சாகம் தந்தது.
     ஏற்கனவே ப்ரீத்தி அவளை வந்து அழைத்துப் போவதாக சொல்லி இருந்ததால் வஞ்சு ஆறரைக்கே வெளியே வந்து காத்திருந்தாள்.
     ஆனால் அவள் சந்தோஷமான மனநிலை அது வரை மட்டுமே நீடித்தது. அவளை அழைக்க வந்த ப்ரீத்தியை பார்த்தே வஞ்சுவிற்கு அதிர்ச்சி.
     அலுவலகத்திற்கு அடக்கவொடுக்கமாக சல்வார் குர்தி என்று வருபவள் இன்று மினி ஸ்கர்டில் வந்திருந்தாள்.
கருப்பு நிற மினி ஸ்கர்ட் வெள்ளை ஷர்ட், கருப்பில் பான்சி டை, காதில் பெரிய வளையம் உதட்டில் நல்ல சிவப்பில் லிப்ஸ்டிக், தோள் வரை விரித்து விட்ட கூந்தல் நெற்றியில் புரள வந்திருந்த ப்ரீத்தியை பார்த்து வஞ்சு அப்படியே திகைத்து நின்று விட்டாள்.
     முட்டிக்கு சற்று மேலே இருந்து கால் முழுதும் வெள்ளை வெளேரென்று இருக்க கருப்பு நிற கூர்முனை குதிகால் செருப்பு (Stiletto Heels.)   அவள் பாதத்தை மட்டுமே மறைத்தது.
     ப்ரீத்தி அவளுடைய ஸ்கூட்டி பெப்பில் வந்திருந்தாள். இப்போது தான் கொஞ்சம் தேறியிருந்த வஞ்சுவிற்கு மறுபடி அவளுடைய முதலாம் ஆண்டு நினைவு வர தாழ்வு மனப்பான்மை மறுபடி தலைதூக்கியது.
     ப்ரீத்தி அவளை ஒரு நொடி கூட பார்க்கவில்லை.
     “ஹாப் இன் யா!”
     என்று பபிள்கம் மென்று கொண்டு வீதியைப் பார்க்க வஞ்சு வாடிய முகத்துடன் அவள் பின்னால் அமர்ந்து கொண்டாள்.
     அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் உள்ளே வண்டி நுழைய நெட்டில் பார்த்ததை விட பிரம்மாண்டமாகத் தெரிந்த அந்த ஹோட்டல் அவள் தன்னம்பிக்கையை இன்னும் குறைத்து விட வஞ்சு தயங்கிக் கொண்டே தான் இறங்கினாள்.
     என்னவோ அந்த நிமிடமே வீட்டுக்குத் திரும்பி விட்டால் தேவலை போல தோன்றி விட ப்ரீத்தியின் பேச்சு அதற்கு சற்றும் உதவுவதாக இல்லை.
     ராம்குமார் ஊரோடு ஒத்துப்போக பழக வேண்டும் என்று முன்பே கண்டித்து சொன்னது மட்டுமே அவளை மேலே நடக்கத் தூண்டியது.
     அப்போது ஆரம்பித்த சோதனை பார்ட்டி முடிவடையும் போது கிட்டத்தட்ட வஞ்சு அழுது விடும் நிலைக்கே கொண்டு வந்து விட்டது.
     ப்ரீத்தி இவள் ஒருத்தி கூட இருப்பதையே கண்டுகொள்ளாமல் செல்லில் பேசுவதும் செல் கமெராவில் தன் முகத்தை சரி பார்ப்பதுமாக இருக்க வஞ்சு அமைதியாக கூட நடந்தாள்.
     அந்த நேரத்தில் லாவண்யா கூட இருந்தால் எவ்வளவு ஆறுதலாக இருக்கும் என்று மனம் ஏங்கியது.
     கல்லூரியில் இருந்த போது அவளாவது இருந்தாள். இப்போது அவளும் இல்லாமல் போக அதே நேரம் அந்த சூழலில் ஒன்றவும் முடியாமல் வஞ்சுவின் அவஸ்தை இந்த பார்டிக்கு வந்ததில் கூடிப் போனது.
     உள்ளே போனால் கிட்டத்தட்ட அவள் ப்ரொஜெக்டில் இருக்கும் பெண்கள் எல்லாம் ப்ரீத்தியின் உடையில் தான் இருந்தனர்.
     அந்த உடைகள் உடலை மறைத்ததை விட காட்டியது தான் அதிகம். இன்றைய தலைமுறைக்கு தங்கள் வயதொத்தவர்களின் அங்கீகாரம் தான் தேவை என்பது அங்கே நன்றாகத் தெரிந்தது. கொஞ்ச நேரம் கழித்து வந்த ரவி கூட ஜீன்ஸும் ரவுண்டு நெக் டீஷர்ட்டிலும் வந்திருந்தான்.
 
ஓரிருவர் மட்டுமே வஞ்சுவைப் பார்த்து கையசைக்க அவரவர் அங்கங்கே சிறு கும்பலாக பேசி கொண்டிருக்க வஞ்சு மட்டுமே தனித்து நின்றாள்.
     எப்படி யாரும் அழைக்காமல் அவர்களோடு சேர்ந்து கொள்வது?
     மறுபடி ராம்குமார் சொன்னது நினைவு வர முயன்று ப்ரீத்தி இருந்த க்ரூப்பில் சேர்ந்து கொண்டவளுக்கு என்ன முயன்றாலும் அவர்கள் பேச்சில் இணைய முடியவில்லை.
     அவர்கள் பேச்சு முழுக்க புதிதாக வந்த வெப் சீரிஸ்,  ஆங்கில ஆல்பம் என்று வேறு திசையில் பயணிக்க வஞ்சு சில நொடிகளுக்குப் பிறகு வேடிக்கை தான் பார்க்க வேண்டி இருந்தது.
     அவளுக்குப் பிடித்த விஜய்யோ ராஜா பாடல்களையோ பற்றி பேச ஆளில்லை.
அவள் முயற்சியில் உடை மட்டுமே மாறி இருக்க ஆள் அப்படியே தானே இருக்கிறாள்? அதே கருங்குழி கிராமத்துப் பெண் தான் இன்னும் மனதளவில்.
     பேச்சு போரடிக்க கண்களை அறையை சுற்றி ஓட விட்டாள். அந்த ஹோட்டலின் பப் அது. பார்ட்டி ஹாலும் அதுவே தான். சர விளக்கில் அரைகுறை வெளிச்சம் மட்டுமே. ஒரு ஓரத்தில் சைவம் அசைவம் கலந்த பூஃபே.
அந்த ஓட்டலின் பணியாளர்கள் அதை சூடு செய்து கொண்டிருக்க சில சர்வர்கள் ஸ்டார்ட்டர் என்று காலிஃப்ளவர் மன்சூரியன், பிஷ் பிங்கர்  எல்லாம் தட்டில் வைத்து சுற்றி வந்தனர்.
     இங்கு வரும் பரபரப்பில் வஞ்சு மதியம் சரியாக சாப்பிடாமல் வந்திருக்க இப்போது லேசாக பசித்தது.
     கம்பனியில் இருந்து யாரோ வந்த பிறகு தான் உணவு வழங்கப்படும் போல இருக்க வஞ்சு அந்த ஸ்டார்ட்டர் ஒரு ப்ளேட் வாங்கிக் கொண்டாள்.
     இன்னும் சில சர்வர்கள் ஒரு தட்டில் பொன்னிற திரவமும், தண்ணீரும் ஆரஞ்சு ஜூஸ் போலவும் எதோ கொண்டு வந்திருக்க வஞ்சு தண்ணீரை எடுத்தாள்.
     அவள் தண்ணீரை வாய் அருகே கொண்டு போகவும் அதில் இருந்த வாசனை என்னவோ போல இருந்தது. அப்படியும் ஒரு வாய் குடித்து விட ப்ரீத்தி அதை பார்த்து விட்டாள்.
     “ஏய் பாக்க தான் அப்பாவி மாதிரி சீனப் போட்ட? வந்ததுமே டக்கிலாவா? நடத்துமா நடத்து…
     அதுவரை தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டு இருந்தவர்கள் ப்ரீத்தியின் பேச்சைக் கேட்டு வஞ்சுவைப் பார்த்தவர்கள் ஓவென்று சிரித்தனர்.
       அவர்கள் பேசுவது புரியாவிட்டாலும் தான் குடித்தது தண்ணீர் இல்லை என்பது மட்டும் வஞ்சுவிற்கு தெளிவாகப் புரிந்தது.
    

Advertisement