Advertisement

பகுதி 7

“என்ன ஸ்ரீநாத்  ஒரு பொண்ணால தான் பிர்லா இத்தனை சந்தோஷமா இருக்கான்னு நினைச்சா, நீ பப்பில் பார்த்ததா சொல்ற… ஒரு வேளை கெட்ட பொண்ணா ?” ப்ருந்தா பிர்லாவின் அறிமுகத்தை ஸ்ரீநாத் வாயிலாக கேட்ட போது அத்தனை அசூசையாக இருந்தது பார்வதிதேவிக்கு  அதை அப்படியே ஸ்ரீநாத்திடமும் காட்ட

“இப்போ பாதிக்கு பாதி பொண்ணுங்க இப்படி தான் ஆண்டி ” ‘இதில் நான் என்ன செய்ய முடியும் என நின்றிருந்தான்’ ஸ்ரீநாத்.

அவனை காப்பதற்காகவே வந்தது போல “உன் மகனும் தான் பப்க்கு போறான்  அவனை கெட்டவன்னு சொல்வியா !” அது  வரை அமைதியாய் இருந்த சந்த்ரபோஸ் இடையில் புக

அதில் “ ஸ்ரீ நாத் நீ போ “ என்ற கண் ஜாடையும் இருக்க, ‘உப் ’ என்ற பெரிதான பெருமூச்சுடன் நைஸாக கழன்டு கொண்டவன், பிர்லாவிடம் சொல்ல மறக்கவில்லை

“பப் போறான் நான் இல்லைனு சொல்ல மாட்டேன் , ஆனால் பிர்லாவுக்கு தான் டிரிங்கிங் கேபிட்டே இல்லையே !” ‘அப்பறம் அவன் எப்படி கெட்டவன் ஆவான் ‘ என்ற மறை பொருளும் இருக்க

“டிரிங்கிங் கேபிட் இல்லைனா உன் மகன் ரொம்ப நல்லவன்னு நினைப்போ ” மறை பொருளை உணர்ந்தார் போல் சந்த்ரபோஸூம் பேச

“நிச்சயமா ?டிரிங் பண்ணாதவன் எல்லாம் நல்லவன் தான்” என ஸ்தீரமாய் பார்வதிதேவி சந்த்ரபோஸை பார்க்க

“எனக்கு கூட தான் டிரிங்கிங் கேபிட் கிடையாது  ஆனால் ஒன்னுக்கு இரண்டு பொண்ணுங்களோட  வாழ்க்கையை வீணாக்கிட்டேனே…! இப்போ சொல்லு நான் நல்லவனா ?” என சந்த்ரபோஸ் சொல்ல

இந்த கோணத்திற்கு பேச்சு திரும்பும் என எதிர்பார்க்காத பார்வதிதேவி, ஒரு நொடி அதிர்ந்து போனார்

‘ஆம் இவருக்கு என்ன கெட்ட பழக்கம் இருந்தது  நினைவடுக்கில் தேடியும் பதில் இல்லை பார்வதிதேவியிடம் ’ சந்த்ர போஸின் பார்வை மாற்றத்தை உணர்ந்து  சட்டென தன் பார்வையை திருப்பிக் கொண்டார்.

பார்வதிதேவியினுள் அடங்கி இருக்கும் ‘கெங்கா’ எனும் எரிமலை வெடிக்க மறந்து அடங்கி கிடந்தததற்கு ஒரே காரணம் தன் மகன் ‘பிர்லா’ மட்டுமே.

 தன் கணவன் கெங்கா விசயத்தில் ஏன் இப்படி செய்தார் ? எதற்காக இப்படி செய்தார் ? என பல வருடங்களாய் அவருக்குள்ளும் பல முறை தேடியும், பதில்  கிடைக்காத ஒரே கேள்வி இது தான் .

இனி பதில் தேடியும் உபயோகமில்லாத கேள்வி அது! அதை தேடி போக தேவிக்கு விருப்பமில்லை.  இப்போது அதை பற்றி பேச பிடித்தமும் இல்லை. இப்படி ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களுக்கு இடையில்

“என் பையனோட சந்தோஷம் அந்த பொண்ணுகிட்ட இருந்து தான் ஆரம்பிக்கனும்னு இருந்தால் அதுக்கு நான் ஒரு நாளும் தடையா இருக்க மாட்டேன் அவனுக்காக, அவனோட விருப்பத்துக்காக சப்போர்ட் தான் பண்ணுவேன். நீயும் தடையாய் இருக்காதே. இருக்க கூடாது” என்ற சந்திராவின் வார்த்தைகள் தடைபோட்டது.

“அதெப்படி முடியும்! அவன் என் பையன் அவனோட மேரேஜ் என் இஷ்டபடி தான் நடக்கனும், நடக்கும்“ சாதாரண தாயாய் பதிலுக்கு தேவியும் கோபமாய் பதில் சொல்ல

“அவன் மேரேஜை அவனோட சந்தோஷதுக்காக நடத்து, உன் இஷ்டத்துக்கு நடத்தாதே!”

“இப்போவே என்ன அவன் சந்தோஷமா? அவன் இஷ்டமா? அப்போ அவனை பெத்த என்னோட சந்தோஷம் முக்கியமில்லையா”

“முக்கியம் தான். அதுக்காக அந்த பொண்ணை தூக்கி எறிஞ்சு பேசாதே  பிர்லாக்காக கொஞ்சம் விட்டு கொடுனு சொல்றேன்”

கண்கள் கலங்க தயாரான தேவியின் விழிகளை கண்டு “விட்டு கொடுத்து தான் ஆகனும். நமக்கான ஒரே மகன் அவனோட  சந்தோஷதுக்காக விட்டு கொடுத்தால் தான் என்ன?”

“எனக்கும் அவனோட சந்தோஷம் முக்கியம் தான். ஆனால் சந்தோஷத்தை விட நிம்மதி முக்கியம் எனக்கு என் பையனோட நிம்மதி தான் முக்கியம். ஆனா அவன் நிம்மதியாக இருக்கனும்னா, ஒழுக்கமான பொண்ணை தான் கல்யாணம் பண்ணி வைக்கனும்” கண்ணீரை உள்ளுக்குள் இழுத்து பேச

“கொஞ்சம் புரியற  மாதிரி சொல்றியா!” ஏதோ வில்லங்கமாய் தேவி சொல்ல போகிறார் என அவர் இதயம் மத்தளம் கொட்ட

“ஆம்பளை மாதிரி டிரிங் பண்ற பொண்ணு, ஆம்பளை மாதிரி பிகேவ் பண்ற பொண்ணு, ஆம்பளை மாதிரி அடுத்து ‘வேற வேலை’ பார்க்க மாட்டன்னு என்ன நிச்சயம்?’ அதாவது உங்களை மாதிரி, ஒருத்தர் இருக்கும் போது இன்னொருத்தரை தேடி போய்ட கூடாதே” என தேள் போல் வார்த்தைகளை கொட்ட

சந்த்ரபோஸிற்கு சர்வமும் நடுங்கியே போனது,

‘தன்னை போல் திருமணத்தின் பின் வேறு வாழ்க்கை துணையை தன் மருமகளும் தேர்ந்து எடுத்துவிடுவாளோ என்ற பயம்’

அதுவும் ஒற்றை பெண்ணாய் ஒரு கம்பெனியையே நடத்திய பதேவிக்கு ’ அப்படியே சேரில் அமர்ந்துவிட்டார் சந்த்ரபோஸ்.

தன் மனமகிழ்ச்சிக்காய் தேடிய இரண்டாம் உறவினால் மீண்டும் ஒரு வெடி வெடிக்க போகிறதா ! அதுவும் , தன் வீட்டிற்கு வர போகும் மருகளுக்குமா ! என்ற சிந்தனைகள் அறுபட்டு விழுந்தது

“இனியும் விளக்கி சொல்ல வேண்டிய தேவையிருக்காதுனு நினைக்கிறேன்” என்ற தேவியின் விளக்கத்தில்.

“அன்பை முழுசா காட்டும் போது, வாழ்க்கை துணை தவறான பாதையில் போக சான்ஸே இல்லை!“ ஆழ் மன ஆதங்கம் தானகவே வெளிப்பட்டது சந்த்ரபோஸிடம் .

“ஓ  அப்போ நீங்க பண்ணின தவறில் எனக்கும் பங்கு இருக்குனு சொல்றீங்களா!” பழைய காயத்தை அவர்களே கீறிக்கொண்டனர்.

“பங்கா!” “நீ தான் ஒட்டு மொத்த காரணமும்” என்றவர்

“என்னோட நிலைமைக்கு மட்டுமில்ல  பிர்லாவோட இந்த நிலைக்கும் நீயும் ஒரு காரணம்” “பிர்லா வாழ்க்கையோட விளையாண்ட நமக்கு நம்பளோட சந்தோஷத்தை அவன் வாழ்க்கையில் திணிக்க எந்த ரைட்ஸூம் இல்லை ” கிட்டதட்ட கத்தினார் அவர்

“ஓ… இப்போ எல்லா பழியும் என் மேலேயா…!” “சபாஷ்” என இரண்டு கைதட்டல்களையும் முன்னால் வைக்க

அதன் நக்கலை உணர்ந்து “ஆமாம் நீ தான் காரணம்  உன் அன்பு கிடைக்கும் கிடைக்கும்னு என்னை மாதரி காத்திருந்து காத்திருந்து பிர்லாவும்  ஏமாந்து போய்ட்டான்  எனக்காவது வேற ஒரு வாழ்க்கை அமைஞ்சது  ஆனா பிர்லா இன்னும் வாழ ஆரம்பிக்கவே இல்லை  இப்போ வரை அவனோட இந்த நிலைக்கு நாம தான் காரணம்ன்னு பிர்லா பிளேம் பண்ணவேயில்லை  இனி பண்ண வச்சிடாத அவ்வளவு தான் சொல்வேன்” இனி நடக்கபோவதை கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட

பார்வதிதேவிக்கு மிஞ்சியது என்னவோ அதீதமான மனவலி மட்டுமே !

 ‘பார்வதிதேவி  பினான்ஸ் , போஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி என வேறு வேறு இடங்களில் இருந்த இரண்டிற்குமான நிர்வாகம் ஒரே பில்டிங்கில், கீழ்தளம் சந்த்ரபோஸூக்கும், மேல் தளம் பார்வதிதேவிக்கும் என ஒதுக்கப்பட்டு, பிர்லா என்னும் ஒருவனால் ஒன்றாய் இணைக்கப்பட்டது அவர்களின் தொழில் நிறுவனம்

ஆம் பிர்லா தான் அதற்கு முக்கிய காரணம்  படிப்பு முடிந்து தொழிலில் பங்கெடுக்க வந்தவனுக்குள் பெரும் குழப்பம்.  அன்னையா? தந்தையா? யாருடன் இணையவேண்டும்! என

தான் யாராவது ஒருவருடன் இணைந்தால் மற்றவரின் மன நிம்மதி போகும் என நினைத்தவன் முதலில் தன் பெற்றோர்களின் தொழிலை ஒரீடத்தில் இணைத்து பின் அவர்களுடன்  தானும் ஒன்றாய் இணைந்தான்  பிர்லாவோ கீழ் தளம் மற்றும் மேல் தளம் என இரண்டிலேயும் இரு வேறு பொறுப்புகளில் தன் பொறுப்பை ஏற்று நடத்தினான்.

ஆம் பொறுப்பை மட்டுமே ஏற்று நடத்தினான் மற்றபடி சந்தரபோஸ், பார்வதிதேவியின் நிர்வாக திறனை எண்ணி வியக்காத நாட்களில்லை. வயது ஏறியது அவர்களது உடலளவில் மட்டுமே மனதளவில் துடிதுடிப்பான இளைஞர்கள்போலவே இருந்தது பிர்லாவிற்கு,.

இருவரின் வாழ்க்கையும் தண்டவாளங்களாய் பிரிந்து கிடந்தாலும் இருவரின் நிர்வாகமோ தொய்வில்லா பயணமாய் நீண்டு கொண்டே இருந்தது.

பிர்லா வந்ததற்கு பிறகு மேலும் கல்லூரியை விரிவு படுத்தி அவனது நிர்வாக திறனை நிறுபித்தான் பிர்லா

“என்ன டாட், ஸ்ரீநிவாஸோட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்த மாதிரி இருந்தது.?”

“இல்ல இந்த தடவையும் ஸ்டேசனரி அப்பறம் கேன்டீன் இரண்டு டென்டருமே சீனிவாஸ்க்கு தான் கிடைக்க போகுது னு பேசிட்டு இருந்தேன் .”

“இந்த தடவையும்னா ! ஒவ்வொரு வருசமும் இவங்களுக்கு தான் டென்டர் கிடைக்குதா ?”

“ஆமாம்?” என சந்த்ரபோஸ் சொல்லும் முன்பு

“ஆமாம் சார் எப்படியும் எடுக்காமல் விட மாட்டேன் ” என சீனிவாஸ் பிர்லாவிற்கு பதில் சொல்ல

“அப்பறம் ஏன் சார் இன்னும் டென்டர் சப்மிட் பண்ணலை ?”

“அதுக்கு தான் டைம் இருக்கே சார் !” என

“ம்  சரி சரி  நீங்க பாருங்க ” என ஸ்ரீநிவாஸிடம் கூறியவன்

“டாட் இந்த முறை கொட்டேசன் எல்லாம் என்கைக்கு வர மாதிரி பார்த்துகோங்க  இனி நான் கேண்டில் பண்ணிகிறேன் ” என அவன் சொல்ல

‘சந்திரா சார் இருக்கும் போது இவன் ஏன் டென்டரை பார்த்துகிறேனு சொல்றான்?’ என மண்டைக்குள் மணி அடித்தது சீனிவாஸ்க்கு  ஆனால் அதை வெளி காட்டவில்லை அவன். அவன் சென்றதும்

“பிர்லா என்ன எதுவும் பிரச்சனையா ? இரண்டு பேரோட முகமும் சரி, பேச்சும் சரி எதுவுமே சரியில்லை  அதுவும் சீனிவாஸ் நம்பளோட நம்பிக்கையான ஆளுடா  நீ எதுவும் தேவையில்லாமல் பிரச்சனையை இழுத்து வச்சுக்காதடா ” என பிர்லாவை அலார்ட் செய்ய

“நானா  பிரச்சனையா ?  போக போக உங்களுக்கே தெரியும் டாட்  எது பிரச்சனைனு.” ஒற்றை கண்ணை சிமிட்டி சிரித்தான் பிர்லா

Advertisement