Advertisement

அவள் நான் பயணம் – 10

உன் இதழ் உரசும்

பனிச்சாரல்

நானடி…

மோதிய துளியில்

மோட்சம்

அடைந்தேனடி…

அருகாமை இனிக்கையில் அக்னி ஆகிறாய் பெண்ணே, தூரம் கடக்கையில் தோள் சாய்கிறாய், பாதை நேராய் செல்கையில் பக்கம் நீ இருக்கிறாய், பாதாளம் விழுங்குதடி பதுமையே, பார்வையில் புதிர் போட்டாய், பழங்கதை விடை என்றாய்…

முழுதும் தொலைத்தவன் புதிதாய் பிறக்கிறேன், இன்னுமோர் வரம் பெற்றேன்… மீண்டும் புதிதாய் காதல் கொள்ள…

“சிஸ்டர் பல்ஸ் பாருங்க”

“இப்பவும் நார்மலா தான் இருக்கு டாக்டர்”

“பிபி செக் பண்ணீங்களா”

“எல்லாமே நார்மல் தான் டாக்டர்”

“தென் வாட் இஸ் தி ப்ராப்ளம்…. இர்ரெஸ்பான்ஸிபில் இடியட்… ”

டாக்டரே பொறுமையை இழந்துட்டார் போல, ஒரு உயிரை காப்பாத்தீரணும் அப்படீங்கிற அவருடைய கடமை உணர்ச்சியுடைய வெளிப்பாடு இது, இப்படி சொல்றதை விட கண்ணுமுன்னாடி எல்லாம் சரியா இருந்து பிழைக்காத உயிரா என்னைப்பாக்குறார் அந்த டாக்டர், அப்படி சொல்லலாமா…

எப்படி சொன்னாலும் உண்மை என்னவோ நான் இன்னும் கண் திறக்கல, இந்த உலகத்தோட இயக்கத்துக்கு மாறாக இந்த மாறன் மட்டும் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமேன்னு படுத்திருக்கிற காலை நேரத்து தூக்கமா தான் இந்த நேரத்தை பாக்குறேன்….

எப்ப தான் மாறா கண்ணை திறக்க போற… மூளை கேக்குது… அதுக்கு மனசு சொல்லுது…

நான் தேடுற கண்கள்ல நான் தெரியனும், நான் கண்கள் திறக்கும் போது அவ முகம் மலரணும்… நான் அடைஞ்சி கிடக்க அவ நெஞ்சாங்கூடு வேணும், என் தலை கோத அவ விரல் வேணும்,…. இன்னும் நெறைய இருக்கு… மொத்தத்துல என் சக்தி இருக்கணும்…

அவளுக்கு எப்படி தெரியும் யார் சொல்லுவாங்க, எப்போ இங்க வருவா எனக்கு தெரியாது…. அவ வருவா அது மட்டும் தெரியும்….

ஹிப்னாட்டிசமா, இல்ல கொறளிவித்தைய்யா… அப்படியெல்லாம் கேட்கக்கூடாது. அதெல்லாம் இல்லை, உண்மையான அன்புக்கும் காதலுக்கும் உள்ள பவர் அது… வேலை தேடிப்போன பையன் சாப்பிட்டானோ இல்லையோன்னு அம்மா நெனக்கும் போது ஊட்டிவிடும்மான்னு பையன் வந்து நிப்பானே அந்த மாதிரியான ஒரு அன்பு…

”ஒரு புத்தகத்தின் பக்கங்கள் புரட்டப்படுகையில், வாழ்க்கையின் பக்கங்கள் அர்த்தமுள்ளதாக ஆகும், அது உன்னையும் சில நேரங்களில் புரட்டிப்போடும்” இப்படி எதாவது ஒரு அறிஞர் சொல்லியிருக்காரான்னு தெரியலை ஆனா நான் இதைத் தான் சொல்றேன்…

அந்த டைரியோடு பக்கங்களைக் கடக்கும் போது, என் வாழ்க்கையோடு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகிட்டு இருக்கேன்னு புரிஞ்சுது. நாம் வேணும்னு நெனக்கிற எல்லாமே வாழ்க்கையா அமையுறது இல்லையே….

இரண்டு பக்கத்திலேயே நான்னு யோசிச்சுகிட்டு இருந்தவன் நாங்கன்னு யோசிக்க ஆரம்பிச்சேன், இளமாறன் மட்டுமில்ல எழில் மாறனும் இருந்திருக்கான், என்னோட பிறந்திருக்கான், நாங்க ஒண்ணா வளர்ந்திருக்கோம், இப்ப அவன் எங்க, அது தான் என்னோட தேடலா இருந்துச்சு, அதோட சக்திய பத்தின என்னோட அபிப்ராயமும் மாற ஆரம்பிச்சுது…. மாறன்னு பேர் வச்சது ஒரு குத்தமாய்யா… மாறாதது எதுவுமே இல்லையா…

அடுத்தடுத்த பக்கங்களில நான் அதைத்தான் தேடிகிட்டு இருந்தேன்…

கொஞ்ச நாளா என்னோட இந்த டைரி காணாம போயிடுச்சு,… நானும் வீடு முழுக்க தேடுனேன், கிடைக்கவே இல்லை… முழுசா அஞ்சு வருசமாச்சு…. அம்மா இப்படி பண்ணுவாங்கன்னு நினைக்கவே இல்லை… இங்கயே இருந்தா இப்படியே அழுதுகிட்டு கற்பனைல மாறன்ஸ் கிட்ட பேசிகிட்டு பைத்தியம் ஆயிடுவேன்னு பயமாயிடுச்சாம்,.. அதுக்கு என் டைரிய ஒளிச்சு வச்சிட்டு என்னையும் ஹாஸ்டல்ல கொண்டு போய் விட்டுட்டாங்க…

அதனாலயே நானும் அம்மாகிட்ட அதையெல்லாம் பத்தி பேசுறதை விட்டுட்டேன். பொங்கலுக்கு வீடெல்லாம் சுத்தம் பண்ணும்போது இன்னிக்கு இந்த டைரிய நானே கண்டு பிடிச்சிட்டேன்,,,

ரொம்ப நாள் கழிச்சு என்னோட மாறன்ஸ்யே மீட் பண்ண மாதிரி இருக்கு… அன்னிக்கு நடந்த விசயங்கள் என் மனசுல பசுமரத்தாணி போல பதிஞ்சு போயிடுச்சு… இன்னும் எத்தனை வருசமானாலும் அது மறக்காது…

எப்ப பார்த்தாலும் நாங்க மூணு பேரும் ஒண்ணா தான் திரிவோம். தூங்கின அப்புறம் எங்கள பிரிச்சு அவங்க அவங்க வீட்டில படுக்க வைப்பாங்க, அதுவும் பல நாள் நடக்காது… நிறைய சண்டை நிறைய சந்தோஷம் அடிச்சுக்குவோம் அடுத்த நிமிசமே ஒண்ணா சேர்ந்துக்குவோம்…

எங்களோட அம்மா அப்பாவே எங்களை பார்த்து ஆச்சர்ய பட்டிருப்பாங்க… எப்பயும் எழில் எனக்கு சப்போர்ட் பண்ணிகிட்டே இருப்பான். அதுனாலயே அவனுக்கும் இளாவுக்கும் சண்டை வரும்… இளா எப்பயும் கொஞ்சம் முசுடு, என்னடி என்னடி சொல்லி தலையில தட்டுவான், தலைய கலைச்சு விடுவான், கன்னத்திலயே கடிச்சு வைப்பான். என்னை எப்ப பாரு அழுக வச்சிகிட்டே இருப்பான்.

ஆனா அதுக்காக நான் அவன விட்டு போகலாம் மாட்டேன்… எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும். எழில் சாக்லேட்டா இருந்தாலும் சாப்பாடா இருந்தாலும் என்னைய விட்டுட்டு சாப்பிடவே மாட்டான். எனக்கு ஹோம்வொர்க் சொல்லி தருவான். நான் தூங்கியே விழுந்துடுவேன் அப்படி சொல்லி தருவான். தூங்கீட்டா அவனே எழுதியும் வச்சிடுவான்.. சமத்து குட்டி…

சாயங்காலம் ஸ்கூல்ல இருந்து எல்லாரும் ஒண்ணா தான் கிளம்புவோம். எங்க அப்பா இல்லைன்னா, மாறன்ஸ் அப்பா அதான் மாமா வந்து கூட்டிட்டு போவாங்க, பைக் ல எப்பயும் நான் தான் முன்னாடி… ஜாலியா இருக்கும்…

வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி ஐஸ்கிரீம் சாப்பிடுவோம்… அன்னிக்கு ஸ்கூல்ல இருந்து எல்லாரும் கிளம்பீட்டாங்க… எங்களை கூப்பிட மட்டும் யாருமே வரலை… நாங்க விளையாடிகிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல… எங்களுக்கு ரொம்ப பிடிச்ச விளையாட்டுனா அது ஊஞ்சல் தான்.

மிஸ் பண்ணவே மாட்டோம்… அவ்வளவு பிடிக்கும். யார் அதிக ஹைட்டுக்கு போறதுன்னு போட்டியெல்லாம் வச்சு விளையாடுவோம். ஆனா ஸ்கூல்ல இருக்க ஊஞ்சல் ரெண்டு பேர் தான் விளையாட முடியும். அதனால யாரா ஒருத்தர் கீழ வெயிட் பண்ணுவோம்.

அன்னிக்கு நான் கீழ நின்னுட்டு இருந்தேன். மாறன்ஸ் ரெண்டு பேரும் விளையாடிகிட்டு இருந்தாங்க.

வானத்துல நிலா நட்சத்திரம் எல்லாம் வந்துடுச்சு… அப்ப வாட்ச் மேன் அங்கிள் கூப்பிட ஆள் வந்தாச்சு வாங்கன்னு கூப்பிட்டார். எனக்கு சரியா கேக்கலையா அதனால கிட்ட போகலாம்னு ஓடுனேன்.

நான் ஓடவும் செம ஸ்பீடா ஊஞ்சல்ல ஆடிகிட்டு இருந்த எழில் அப்படியே இறங்கீட்டான். இறங்குனவன் அங்க இருந்து நகராம “ ஏய்ய்ய் சக்தி எங்க போற ஓடாத நில்லுனு கத்தினான். நான் திரும்பி பார்த்தேன்.

அதுதான் அவன் கடைசியா பேசுனது… வேகமா ஆடிகிட்டு இருந்த ஊஞ்சல் அவனோட பின் மண்டையில அதே வேகத்துல இடிச்சுடுச்சு… கண்ணை மூடித் திறக்குறதுக்குள்ள… நான் திரும்பி எழில்கிட்ட ஓடி வந்திட்டு இருக்கும் போதே, விழுந்த எழில் தலைய பிடிச்சுகிட்டே திரும்ப எழுந்தான். திரும்ப அந்த ஊஞ்சல் வந்து எழிலோட நெத்தியில அடிச்சிடுச்சு…

அப்படியே எழில் கீழ சரிஞ்சு விழுந்தான். சில நொடிகள் தான் இதை பார்த்த இளாவும் இறங்கி ஓடி வர அந்த ஊஞ்சல் அவனையும் அடிச்சுடுச்சு… இங்க நடக்குறதை பார்த்திட்டு வாட்ச் மேன் அங்கிள் எனக்கு முன்னால வந்து ஊஞ்சலை நிறுத்தீட்டு எழிலை தூக்குனாரு…

எழிலோட மூக்குல காதுல எல்லாம் இரத்தம் கழுத்தெல்லாம் வழிஞ்சு சட்டையெல்லாம் நனைஞ்சு கீழ சொட்ட ஆரம்பிச்சுது… எனக்கு ஒண்ணுமே புரியல… இளாவை பாத்தா அவன் தலைய பிடிச்சுகிட்டே அழுதுகிட்டு இருந்தான்… வாட்ச் மேன் அங்கிள் ஓடுனாரு அவர் பின்னாடியே நானும் இளாவும் ஓடுனோம்…

கொஞ்ச தூரத்திலயே இளாவும் மயங்கி விழுந்துட்டான்… இளா இளா எழுந்திரி இளா எழில் எழில தூக்கீட்டு போறாங்க பாரு… அம்மா… எனக்கும் அழுகையா வந்துச்சி… இளா கண்ணை திறக்கவே இல்லை… இளா கையை மட்டும் தான் என்னால தூக்க முடிஞ்சுது…

இளா எழுந்திரி… அவன் கன்னத்தை தட்டி கண்ணு இமையை தூக்கி எழுந்திரிடான்னு அழுதேன்… அவன் எழுந்துக்கவே இல்லை…. வாட்ச் மேன் அங்கிளையும் காணோம்.

ப்ளே க்ரொண்ட்ல யாருமே இல்லை. இளா தலையை என் மடியில வச்சிகிட்டு இளா இளா ன்னு அழுதிட்டே இருந்தேன். எவ்வளவு நேரம்னு தெரியல… அப்ப தான் திரும்ப வாட்ச்மேன் அங்கிள் வந்தாரு…

”அம்மணி என்னாச்சுமா… ஏன் அழுதுட்டு இருக்க பயலுக்கு என்னாச்சு…

“அங்கிள் இளாவையும் ஊஞ்சல் அடிச்சிடுச்சு… இளா எழுந்துக்க மாட்டேங்குறான்..”

“பழனிமுருகா புள்ளைங்களை எப்படியாச்சும் காப்பாத்திப்போடு சாமி….”அவரும் கத்திகிட்டே இளாவையும் தூக்கீட்டு ஓடுனாரு…

நானும் பின்னாடியே ஓடுனேன். தேடித் தேடி ஆட்டோ பிடிச்சு… ஹாஸ்பிட்டல் போனோம். அங்க சட்டையெல்லாம் இரத்தத்தோட அப்பா நின்னுகிட்டு இருந்தாங்க… எழிலை படுக்க வைச்சுருந்தாங்க.. எங்கப்பா அந்த டாக்டர்கிட்ட என்னமோ அழுதுகிட்டே கேட்டுட்டு இருந்தாங்க.. என்னன்னு கேக்கலை. இளாவை தூக்கீட்டு போனத பாத்துட்டு அங்க இருந்த நர்ஸ் அவனை தூக்கீட்டு உள்ள போனாங்க. டாக்டரும் போய்டாரு.

எழில் மட்டும் வெளியிலயே ஒரு பெட்ல படுக்க வச்சிருந்தாங்க, எங்கப்பா என்னைய பாத்ததும் ரொம்ப அழுக ஆரம்பிச்சாங்க… நானும் கிட்ட போய் பாத்தேன் எழில் எழில்னு கூப்டேன். ஆனா அவன் எழுந்துக்கவே இல்லை… அப்பா சொன்னாங்க… எழில் இனிமே வரமாட்டான் எழில் இனிமே வரவே மாட்டான் சக்தி… அவங்க அம்மா அப்பாகிட்ட நான் எப்படி சொல்லுவேன்…

பிள்ளைங்களை கூட்டீட்டு வரத்தானே போனீங்க பிள்ளை எங்கேன்னு கேட்டா என்னன்னு சொல்லுவேன். அய்யோ முருகா என்ன கொடுமை இது… ஆசையா விளையாடுன பிள்ளைய அதே ஊஞ்சல்லயே கொன்னுட்டியே… சாகுற வயசா இவனுக்கு…

அழகா ரெட்டை பிள்ளைங்களா இருந்தவங்கள, இப்படி பிரிச்சுட்டியே… உலகத்துல அக்கிரமம் பண்றவனெல்லாம் நல்லாத்தானே இருக்காங்க… இந்த பச்சை மண்ணை இப்படி பண்ணீட்டியே, அதுவும் என்கையிலயா இந்த உசிரு போகணும்…. அய்யோ அய்யோ… எங்கப்பா தலையிலயே அடிச்சுகிட்டு அழுததை என்னால பாக்க மட்டும் தான் முடிஞ்சது.

கொஞ்ச நேரத்துல டாக்டர் வந்து இளாவுக்கு ஒண்ணுமில்லை லேசான மயக்கம் தான்னு சொன்னாரு… அப்ப கரெக்டா அம்மா அத்தை மாமா எல்லாம் வந்தாங்க… எல்லாரும் ஒரே சத்தம் அழுகை என்னால நினைச்சே பாக்க முடியல. இப்ப கண்ணை மூடினாலும் அதெல்லாம் கண்ணுக்குள்ளையே நிக்குது… 

எழிலயும் இளாவையும் கடைசியா பாத்ததும் அப்ப தான்… நாங்க சந்தோசமா இருந்த நினைவுகளை எழுதணும்னு ஒரு வைராக்கியத்தோட தான் இந்த டைரிய கையில எடுத்தேன்.. ஆனா என் அடிமசுல பதிஞ்சிட்ட இந்த கொடுமைய யார்கிட்டயும் என்னால சொல்லி அழுகவும் முடியலை… பேசவும் முடியலை…

“எழில் தான் என்னைய விட்டுட்டு போயிட்டான், நீயும் ஏண்டி என்னைய விட்டு போன” அப்படீன்னு இளா வந்து என் கனவுல கேக்கும் போது நான் என்ன பதில் சொல்றது…

முழுசா போயிட்ட இந்த அஞ்சு வருசத்துல இதெயெல்லாம் மறந்துட்டேன்னு எங்கம்மாவும் அப்பவும் நெனச்சிகிட்டு இருக்காங்க… ஆனா என்னால் எதையும் மறக்க முடியலை… மறக்கவும் மாட்டேன்.

என்னிக்கு இருந்தாலும் நான் இளா வை பார்ப்பேன்…. நான் உன்னைய விட்டு போகலை இளா… எப்பயும் உன்கூடயே தான் இருப்பேன்னு சொல்லுவேன்… இது கண்டிப்பா நடக்கும்…

அம்மா கூப்புடற மாதிரி இருக்கு… நான் அப்புறமா வரேன் இளா…”

 

அந்த பக்கங்கள் எல்லாமே துளி துளியா கண்ணீர் பட்டு அலைஞ்சிருந்துது… அவளோட அந்த கண்ணீர் இப்ப நான் தொடும் போது ஈரமாவே இருக்கு…

இளா இளான்னு அவ கூப்புட சத்தம் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு…அழுகாத சக்தி இங்க பாரு நான் உன் இளா உன் முன்னாடி இருக்கேன் பாரு… நான் அழுகலை இங்க பாருன்னு அவகிட்ட சொல்லணும்னு துடிக்கிறேன்….

நாக்கெல்லாம் வறண்டு… என்னால வாயை திறக்கவே முடியல… எதோ வாயை அசைக்க முடியாம இறுக்கமா அழுத்துது… மூச்சு விடக் கஷ்டமா இருக்கு… எச்சில் கூட்டி கூட முழுங்க முடியலை….

கையால அந்த இறுக்கத்தை தளர்த்தலாம்னு கையை அசைக்க பாக்குறேன்… சுரீர்னு வலி,… நரம்பெலாம் ஊசி மாதிரி குத்துது… கையெல்லாம் வெயிட்டா இருக்குது… அசைக்கவே முடியல…

இளா இளா இளா இளா விடாம என் காதுல கேட்டுகிட்டே இருக்கு… என்னோட வலிகளையெல்லாம் விட அதிகமான அழுத்தம் அந்த குரல்ல… நான் கண்ணை முழிச்சே ஆகணும் டைரியில விழுந்த கண்ணீர் துளிகள் என் மேலயே விழுகுற மாதிரி இருந்துச்சு…

அப்ப தான் துடைக்க முடியல் இப்ப நான் அதை தடுத்தே ஆகணும்… போதும் இளா எழுந்திரி எழுந்திரி… உள்ள இருந்து அந்த குரல் என்னைய விடவே இல்லை….

நான் வந்துட்டேன் நான் வந்துட்டேன் சக்தி… உன் இளா வந்துட்டேன்… சக்த்த்த்த்த்தீ………….

கொஞ்சம் கொஞ்சமா என்னோட வலிகளை தாண்டி என் கை மேல வந்து என் முகத்தில இருந்த ஆக்ஸிஜன் மாஸ்க்க கழட்டுனேன்… கையெல்லாம் ஒரே ஈரம்…

காலெல்லாம் சுறு சுறுன்னு கொஞ்சம் கொஞ்சமா அசைக்குறேன்… என்னால முடியுது… கண்ணை மட்டும் திறக்க முடியல… நாக்குல வரட்சி இன்னும் அதிகமாகுது…

உள்ள ஏதோ பண்ணுது… அடிவயித்துல இருந்து என்னமோ ஒரு வலி… கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி நெஞ்சு வரைக்கும் வந்து்ச்சு…

இன்னும் கொஞ்சம் தான் அவ்வளவு தான் முழிச்சுடு முழிச்சிடு இளா … ஓயாத அலறல்… என் கண்ணுல தண்ணியா வழிய ஆரம்பிச்சுது…

நெஞ்சுல வந்த வலி ஒரு பெரிய விக்கல் மாதிரி தொண்டை வழியா இழுக்க ஆரம்பிச்சுது…. என் உடம்பே மேல போயி அந்த மூச்சை வாங்குனுச்சு…

அந்த மூச்சோட இளா….. இளாங்குற அந்த சத்தமும் எனக்குள்ள போயிடுச்சு….

Advertisement