Advertisement

6

ஆத்திசூடி – தூக்கி வினை செய்

பொருள் – உபாயம் அறிந்த பின் காரியத்தை தொடங்கு.

இரவு வீட்டிற்கு வந்த அகத்தியன் கண்டது முகத்தை தூக்கி வைத்திருக்கும் மகளைத்தான். எப்போதும் கலகலவென்று இருக்கும் மகளின் முகம் வாடியிருப்பது பொறுக்கவில்லை அவருக்கு.

“என்னாச்சு உன் பொண்ணுக்கு??” என்றார் தன் மனைவியினிடத்தில் மெல்ல.

“தெரியலை வந்ததுல இருந்து இப்படித்தான் இருக்கா??”

“கேட்கலை நீ??”

“கேட்டேன் உங்க தம்பி எங்கன்னு கேட்டா?? எங்களை கேட்டா எப்படி தெரியும் ரெண்டு பேரும் ஒண்ணா தானே வேலை பாக்குறீங்கன்னு சொன்னேன். அப்புறம் எதுவும் பேசலை”

“ஓ!!” என்றவர் “ஆமா மாணிக்கம் இன்னும் வீட்டுக்கு வரலையா??”

“இல்லை”

“ஏன்?? நாயகி எதுவும் சொல்லலையா??”

“அவர் போன் பண்ணி சொல்லியிருந்தா தான் அவளே சொல்லி இருப்பாளே…” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மாணிக்கவாசகம் உள்ளே நுழைந்தார்.

மிகுந்த சோர்வுடன் இருந்தார் அவர். அப்படியே ஹாலில் இருந்த சோபாவில் அவர் அமரவும் நாயகி சரியாக உள்ளிருந்து வந்தார். “என்னங்க சோர்வா இருக்கீங்க??”

“கொஞ்சம் அலைச்சல் நாயகி, பாப்பா எங்கே?? வீடே சத்தமில்லாம இருக்கு”

“என்னவோ வந்ததும் உங்களைத்தான் கேட்டா… நீங்க இல்லைன்னு சொல்லவும் ரூமுக்குள்ள போய் அடைஞ்சவ தான் இன்னும் வெளிய வரலை. சாப்பிட கூட வரமாட்டேன்னு இருக்கா உங்க செல்ல பொண்ணு” என்றார் அவர்.

“ஆமா அவளுக்கு இன்னைக்கு வேலை கொடுத்திட்டீங்களா. ஆனாலும் நீங்க புள்ளைய ரொம்ப வேலை வாங்குறீங்க. தினமும் நைட் கண்ணு முழிச்சா என்னாகுறது”

“ஹேய் நான் எங்கடி வேலை வாங்குனேன். பாயிண்ட்ஸ் எடுக்க சொல்லி இருப்பேன், அவளை நைட் முழிச்சு வேலை செய்ன்னு நான் சொன்னதேயில்லை”

“சொன்னாத்தானா வேலை செய்யணும்ன்னு நீங்க சொல்லிட்டாலே அவ தான் தூங்க மாட்டாளே” என்று கணவரின் மேல் மனத்தாங்கலாய் சொன்னார்.

“சரி சரி வந்ததும் நீ வேற ஆரம்பிக்காத. நான் போய் குளிச்சுட்டு வந்து பாப்பாவை பார்க்கறேன்” என்றவர் தன் அண்ணனையும் அண்ணியையும் நோக்கிச் சென்றார்.

“இப்போ தான் நீ வந்தியா அகத்தியா” என்றார் மாணிக்கவாசகம் தன் அண்ணனை பார்த்து. அவர்கள் இருவருக்குள் இடைவெளி குறைவு என்பதால் நண்பர்கள் போல் தான் பேசிக்கொள்வர். பெயர் சொல்லி அழைப்பது உரிமையுடன் டா போட்டு பேசிக்கொள்வது அனைத்தும் அதில் அடங்கும்.

“இல்லைடா ஒரு மணி நேரம் இருக்கும். ஆமா நீ என்ன இன்னைக்கு இவ்வளவு லேட்டு??”

“கிளையன்ட் ஒருத்தரை நேர்ல போய் பார்க்க வேண்டியதா போச்சு. அந்தாளு தண்ணி வண்டி உள்ளே இறக்கிட்டே பேசினா தான் என்னால எல்லாம் சொல்ல முடியும்ன்னு ஒரு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய்ட்டான்”

“அப்புறம் நீ தண்ணி எதுவும்??”

“ஏன்டா என் மேல உனக்கு டவுட்டு?? நான் என்னைக்கு அந்த மாதிரி நடந்திருக்கேன்”

“உன் மேல டவுட்டு இல்லை ஆனா விட்டிருக்க மாட்டானுங்களே. சோசியல் ட்ரின்க் அது இதுன்னு எதுவும் பழகி விட்டிற போறானுங்க அதான் கேட்டேன்”

“அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஆனா அந்த ஆளு என்னை சாப்பிட்ட சொல்லி ரொம்பவே கம்பல் பண்ணத்தான் செஞ்சாரு. எப்படியோ அவர்கிட்ட இருந்து தப்பிச்சு வர்றதுக்குள்ள இவ்வளவு நேரமாகிடுச்சு” என்றார்.

அண்ணன் தம்பி இருவரும் பேசிக் கொண்டிருந்ததால் அதுவரை எந்த குறுக்கீடும் செய்யாது நின்றிருந்த சாதனா “சாப்பிடுங்க தம்பி” என்றார்.

“இல்லைண்ணி குளிச்சுட்டு வந்திடறேன். பாப்பா வேற என்னை கேட்டாளாமே போய் பார்க்கணும்” என்றார்.

“அவளுக்கு என்ன உங்ககிட்ட ஏதாச்சும் டவுட்டு கேட்கணும்ன்னு காத்திட்டு இருப்பா அவளை நாளைக்கு பார்த்துக்கலாம். நீங்க குளிச்சுட்டு சாப்பிட வாங்க நாயகி உங்களுக்கு தான் காத்திட்டு இருக்கா”

“நான் மட்டும் தான் காத்திட்டு இருக்கேனா. நீயும் தான் நான் சாப்பிடலைன்னு சாப்பிடாம இருக்கே” என்றார் நாயகி.

“நல்லா இருந்தீங்க போங்க. இருங்க சீக்கிரம் வந்திடறேன்” என்றவாறே மாணிக்கவாசகம் தன் அறைக்கு விரைந்தார்.

“சாதனா”

“என்னங்க??”

“இந்திரா சாப்பிடலைன்னு நீ ஏன் என்கிட்ட சொல்லலை??”

“நாம பேசிட்டு இருக்கும் போதே தம்பி வந்திட்டாரு. இல்லைன்னா சொல்லியிருப்பேன்ங்க”

“போய் அவளை சாப்பிட வரச்சொல்லு. நான் சொன்னேன்னு சொல்லு” என்று சேர்த்து சொன்னார் அவர். சாதனா மகளின் அறைக்கு விரைந்தார். 

“இந்திராம்மா”

“என்னம்மா??”

“சாப்பிட வா…”

“சித்தா வந்த மாதிரி சத்தம் கேட்டுச்சு”

“ஆமா வந்திட்டாங்க”

“ஹ்ம்ம் சரி” என்றவள் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை.

“சாப்பிட வான்னு சொன்னேன்ல”

“இப்போ வேணாம்”


“அப்பா உன்னை வந்து சாப்பிட சொன்னாங்க”

“உடனே அப்பான்னு சொல்லி பயமுறுத்த பார்க்கறியாம்மா??”

“ஆமா நான் பயமுறுத்தி என்னடி சாதிச்சுட்டேன்??”

“இப்போ என்ன வேணும் உனக்கு??”

“சாப்பிட வா”

“வர்றேன்”

“நீ என்னோடவே வா”

“வர்றேன்ம்மா” என்றவள் அவருடன் எழுந்து சென்றாள்.

“கூப்பிட்ட உடனே வர்றதில்லையா. கேள்வி கேட்டுட்டு தான் வருவீங்களா??” என்றார் அகத்தியன் முறைப்போடு.

“வந்திட்டு தானே இருக்கேன்”

“நேரத்துக்கு சாப்பிடணும்ன்னு சொல்லியிருக்கேன் தானே”

“அம்மா சாப்பாடு வைம்மா” என்றாள்.

அவர் வைக்கவும் வேக வேகமாக சாப்பிட்டு எழுந்தவள் அகத்தியனை ஒரு பார்வை பார்த்து அங்கிருந்து நகர்ந்தாள்.

“நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு அவளுக்கு கோபம்”

“என்னை கேட்டா எனக்கென்ன தெரியும், அப்பாவாச்சு பொண்ணாச்சு என்னை ஆளை விடுங்க” என்றார் அவர்.

மாணிக்கவாசகத்தை சாப்பிட பிறகு சாதனாவும் நாயகியும் விட அவரும் உணவருந்திய பின்னே மகளின் அறைக்கு சென்றார்.

“பாப்பா” என்ற அவரின் ஒற்றை அழைப்பு அவர் மீது அவளுக்கிருந்த மனத்தாங்கலை அப்படியே குறைத்தது. முகத்தில் மென்னகையும் சேர்ந்து மலர்ந்தது.

அவள் தந்தை கூட அவளை இந்திரா என்று தான் அழைப்பார். மாணிக்கவாசகமும் அந்த வீட்டின் மற்றொரு ஜீவனான முகிலனும் மட்டுமே அவளை பாப்பா என்றழைப்பது.

“உள்ள வாங்க சித்தா” என்று அவள் சொல்லவும் உள்ளே வந்தார்.

“என்ன பாப்பா என்னை தேடுனீங்களாம்??”

“சித்தா எனக்கு உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும். மறைக்காம எனக்கு பதில் சொல்லணும்”

“கேளுங்க பாப்பா”

“இன்னைக்கு அந்த அப…” என்று ஆரம்பித்தவள் நிறுத்திவிட்டாள். அவன் பெயர் சட்டென்று நினைவிற்கு வரவில்லை.

“அந்த ஸ்கூல் விஷயம் தான் சித்தா. இன்னைக்கு அந்த ஆளை நான் கோர்ட்ல பார்த்தேன்” என்றுவிட்டு தன் சித்தப்பாவின் முகத்தையே கூர்ந்து நோக்கினாள்.

அவரிடம் எந்த பதட்டமோ தப்பு செய்த உணர்வோ இல்லவே இல்லை. அதுவே சற்று அவளுக்கு நிம்மதியாக முகத்திலும் அது தெரிந்தது.

“அதுக்கு என்னங்க பாப்பா??”

“அந்த ஆளு ஒரு விஷயம் சொன்னான் சித்தா. அது உண்மையா??”

“பாப்பா யாரா இருந்தாலும் மரியாதையா பேசணும். உங்களுக்கு அதை நான் சொல்லித்தரணும்ன்னு அவசியமில்லை”

“சரி சித்தா இனிமே ஒழுங்க பேசறேன், நீங்க சொல்லுங்க”

“நீ தான் பாப்பா சொல்லணும் அவர் என்ன விஷயம் சொன்னார்ன்னு எனக்கெப்படி தெரியும்”

“அந்த கேஸ் விஷயம்??”

“அது முடிஞ்சு போச்சு பாப்பா”

“அப்படின்னா??”

“உங்களுக்கு என்ன தெரியணும்ன்னு சொல்லுங்க பாப்பா நான் பதில் சொல்றேன். நாம தான் அடுத்தவங்ககிட்ட குறுக்க கேட்கலாம், நமக்குள்ள எதுனாலும் நேரா தான் பேசணும் பாப்பா. நீ என்கிட்ட நேராவே கேளு” என்றார் அவர்.

“சித்தா அவன்… அவர் உங்களை விலைக்கு வாங்கிட்டேன் அப்படிங்கற மாதிரி பேசினார்… நீங்க…” என்றவள் கேட்க முடியாது நிறுத்திவிட்டாள்.

“ஹா ஹா” என்று வாய் விட்டு சிரித்தார் அவர்.

“சித்தப்பா காசு வாங்கிட்டேன்னு நினைச்சுட்டியா”


“இல்லை சித்தா, ஆனா அந்த வீடியோ எல்லாம் அவன்… அவர் கைக்கு எப்படி போச்சு??”

“அவர் என்னைப் பார்க்க சேம்பர்க்கு வந்தார். சுமூகமா பேசி முடிச்சுக்கலாம் பிரச்சனையைன்னு சொன்னார். அதுக்கான ஏற்பாட்டை நான் பண்ணேன். அவங்களுக்குள்ள பேசி தீர்த்துக்கிட்டாங்க”

“ஆப் கோர்ஸ் நம்ம கிளையன்ட் காசு வாங்கிட்டு அந்த வீடியோவை அவங்ககிட்ட கொடுத்திட்டாங்க”

“தப்பில்லையா சித்தா இதெல்லாம்”

“என்ன தப்பு இருக்கு சொல்லு??”

“என்ன தப்பு இல்லைன்னு நீங்க சொல்லுங்க. காசு வாங்கிட்டு எதுவுமே நடக்கலைன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம் சித்தா. இதுக்கு எதுக்காக அவர் நம்மகிட்ட வரணும். நேரா அந்த ஸ்கூல்க்கே போயிருக்கலாமே”

“நீ நினைக்கிற மாதிரி இல்லை பாப்பா. நம்மோட கிளையன்ட் கடைசி வரை இதுக்கு ஒத்துக்கவே இல்லை, அபராஜிதன் தான் அவர்கிட்ட பேசுறதைவிட்டு நம்மோ கிளையன்ட்டோட மகன்கிட்டயும் மருமககிட்டையும் பேசினார்”

“அவங்க காம்ப்ரோமைஸ் ஆகிட்டாங்க. இதுக்கு மேல நாம என்ன பண்ண முடியும்”

“நானும் அவர்கிட்ட ஒரு உதவி கேட்டேன். செய்யறேன்னு சொல்லியிருக்கார்”

“உதவியா என்ன உதவி சித்தா??”

“எனக்கு தெரிஞ்ச ரெண்டு பசங்களுக்கு அவர் ஸ்கூல்ல அட்மிஷனுக்கு கேட்டேன். பசங்களுக்கு நானே பீஸ் கட்டுறேன்னு சொன்னேன். அதெல்லாம் வேண்டாம் நானே பார்த்துக்கறேன்னு சொல்லிட்டார். அதை தான் நான் பீஸா வாங்கியிருக்கேன்”

“ஏன் சித்தா அந்தாளுக்கிட்ட எல்லாம் இதை நீங்க கேட்டீங்க. அவன் என்கிட்ட நீங்க காசு வாங்கிட்டீங்க அப்படிங்கற மாதிரி பேசினான். உங்க சீனியர் விலை போயிட்டார்ன்னு அவன் சொன்னப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா”

“பாப்பா அன்னைக்கு நீ அவரை ரொம்ப பேசிட்ட போல. பதிலுக்கு அவரும் பேசிட்டார். அந்த கோபத்தை மனசுல வைச்சுட்டு உன்கிட்ட கொஞ்சம் ஏத்தி இறக்கி சொல்லியிருப்பார். அதெல்லாம் பெரிசு படுத்தாத பாப்பா” என்றார் அவர்.

“சித்தா நீங்க அவர்கிட்ட எந்த உதவியும் கேட்டிருக்க கூடாது”

“ஏன்??”

“எனக்கு பிடிக்கலை வேணாம்ன்னு சொல்லிடுங்க”

“பாப்பா!!” என்றவரின் குரலில் கண்டிப்பு தெரிய அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

“அங்க தான் எல்லாமே தப்பா இருக்கே சித்தா அப்புறம் ஏன்??”

“பாப்பா நீங்க நினைக்கிறது தப்பு. யாரோ ஒருத்தர் அவங்க ஸ்கூல்ல தப்பு பண்ணிட்டாங்க, அதுக்காக எல்லாரையும் தப்பு சொல்றது சரியில்லை. நான் நல்லாவே விசாரிச்சுட்டேன் அந்த ஸ்கூல்ல இதுவரைக்கும் டொனேஷன் வாங்கினதே இல்லை”

“அப்புறம் எப்படி அந்த தப்பு நடந்துச்சாம்”

“ஆபிசியலா அது தப்பு தான். மேனேஜ்மெண்ட்டுக்கே தெரியாம அது நடந்திருக்கு. தவிர அந்த பிரின்சிபால் எல்லார்கிட்டயும் டொனேஷன் கேட்கலை. யாரெல்லாம் கொடுக்க முடியும்ன்னு பார்த்து செலெக்டிவ்வா தான் கேட்டிருக்கார்”

“நீங்க என்ன சொன்னாலும் எனக்கு பிடிக்கலை” என்றவளின் முகத்தில் அப்பட்டமான பிடித்தமின்மை தெரிந்தது.

“நான் சொல்றதை சொல்லிட்டேன் பாப்பா அப்புறம் உன்னிஷ்டம்” என்றவர் எழுந்துவிட்டார். 

அவர் கோபமாய் இருக்கிறார் என்பது அவர் எழுந்து செல்கையிலேயே அவளுக்கு புரிந்தது. அவள் அவரை தடுக்கவில்லை, அவளும் கோபமாயிருக்கிறாள் தானே அவர் மீது. ஏனோ அவளால் எதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

Advertisement