Advertisement

AVAV – 09(2)
வீட்டிலிருந்து கிளம்பிய முக்கால் மணி நேரத்தில், நங்கையை அலைபேசியில் அழைத்தான். அது அவர்களது அறையிலேயே இருந்ததால், நங்கைக்கு கேட்கவில்லை. ரிங் டோனை இரண்டு பாயிண்டில் மட்டுமே எப்போதும் வைத்துருப்பாள், அதிக சப்தம் கூடாது என்பதோடல்லாமல், கைபேசி என்பது அவளது இன்னொரு கைபோல, எப்போதும் கூடவே இருக்கும் என்பதாலும்.
நங்கை அழைப்பை ஏற்காததில், சற்று மனம் சுணங்கியவன், வீட்டின் தொலைபேசிக்கு அழைத்தான். இதை கண்டிப்பாய் எடுத்து பேசித்தானே ஆகவேண்டும்? கூட வைதேகி வேறு இருக்கிறாரே?
அழைத்தவரின் எண் திரையில் தெரியும்படி இருந்த தொலை பேசி அது. ஹாலுக்கு சென்று போனை எடுத்த நங்கைக்கு,  பார்த்ததுமே யாரென தெரிந்து, “ஹலோ… சொல்லுங்க” என்றாள். குரலால் கூட ஒருவரை தள்ளி நிறுத்த முடியும் என்பதை த்ரிவிக்,இன்று உணர்ந்தான், அவன் மனைவியின் பதிலில் அப்படியொரு மரத்துப்போன த்வனி.
“இந்த பொம்பளைங்க மனசுல என்ன ஓடுதுன்னு கண்டுபிடிக்க ஒரு டிவைஸ் கண்டுபிடிக்க மாட்டேங்கிறாங்களே”, என்று மனதுக்குள் அங்கலாய்த்து, இன்னமும் மிடுக்காக,
“நம்ம பார்ட்னர்ஸ் ரெண்டு பேரும் ஃபேமிலி கெட் டு கெதர் பிளான் பண்ணிருக்காங்க. உடனே நீங்க எல்லாம் கிளம்பி தயாரா இருங்க, மதியம் சமைக்க வேண்டாம், இங்க எனக்கு மீட்டிங் ஆரம்பிச்சு சரியா… அரைமணி நேரத்துல முடிஞ்சுடும், இன்னமும் எந்த இடம், எந்த ஹோட்டல்-ன்னு முடிவாகலை.”
“என் பாட்னர் தம்பி ப்ரஜன், கோவிந்தபுரி-ல இருந்து வர்றான். நம்ம லஜ்பத் நகர் தாண்டித்தான் வரனும். அதனால அவன்கிட்ட பேசி, உங்களை பிக்கப் பண்ணிக்க சொல்லி இருக்கேன். நாம லஞ்ச் முடிச்சு அப்படியே தாஜ் போயிட்டு, அப்பம்மாவை டிராப் பண்ணிட்டு வீட்டுக்கு வந்துடலாம்”.
” அப்பறம் ..  அம்மா ரொம்ப சிம்பிளா டிரஸ் பண்ணுவாங்க கொஞ்சம் கிராண்டா வர சொல்லு, இங்க எல்லாரும் கொஞ்சம் ரிச்சாத்தான் வருவாங்க. நீயும் தான். மாக்ஸிமம் சீக்கிரம் ரெடியாகி இருங்க. ஓகே?”, அனைத்தையும் முடிவு செய்து தகவல் சொல்பவனிடம் மறுத்தா பேச முடியும் சரியென்பதைத் தவிர? அதையே செய்தாள் நங்கை நல்லாள்.
அவன் பேசி முடித்ததும், “அத்த, அத்த..”, வைதேகியை கூப்பிட்டு விபரம் சொன்னவள், “ம்ம்.. இன்னிக்கு சன்னா சோளே மசாலா
கிடையாது”, என்ற மாமியாரின் வருத்தமான பதிலைக் கேட்டு திகைப்புற அவரைப்பார்க்க, அவரோ கண்களில் சிரிப்போடு , “ஆஹா… விடுதலை விடுதலை.. கிச்சன் வேலைலேர்ந்து நமக்கு விடுதலை”, என்று வந்த அவரின் அடுத்த பதிலில், இலகுவானாள்.
தொடர்ந்து, “நீங்க ஏன் சமைக்க ஆள் வச்சுக்கல அத்த?”, என்றும் கேட்டாள்.
“எங்க முடிஞ்சது? இவன் ஆறாவது படிக்கற வரைக்கும், நாங்க வாடகை வீட்ல இருந்தோம், உங்க மாமா, அவங்க பேரன்ட்ஸ்க்கும் பணம் அனுப்பியாக வேண்டிய நிலமை. உடம்பு சரியில்லாததால இருந்த வயக்காட்ட பாக்கறதுக்கு விக்கியோட தாத்தாவால முடியல.”
” சில குத்தகைக்காரங்க அந்த பணத்தையும் ஏமாத்த ஆரம்பிச்சாங்க அதை பார்த்த நாங்க இப்படி அரையும் குறையுமாக வர்றதுக்கு மொத்தமா வித்துட்டு, வர்ற பணத்தை பேங்க்ல போட சொன்னோம். அவங்க, பிள்ளைகளுக்கும் தனக்கும்-ன்னும் பங்குபிரிச்சிட்டாங்க அதை அட்வான்ஸா கட்டி இப்போ சென்னைல இருக்கிற இந்த வீடு வாங்கினோம்.”
“விக்ரமனுக்கு எங்க சம்பாதிப்பிற்கு மீறின ஸ்கூல், படிப்பு. அதுல மட்டும் மாமா compromise பண்ணவே இல்ல. அப்புறம் இவன் வளந்தான்,  கருத்தா எங்க கஷ்டம் தெரிஞ்சு படிச்சான். கேம்பஸ் இன்டர்வியூ செலக்ட் ஆனான், சும்மா சொல்லக்கூடாது சம்பாதிக்க ஆரம்பிச்சதே லட்ச கணக்குலதான்.  டெல்லி வந்துட்டான்”,
“விக்கி ஒரு முறை சென்னை வந்தபோது , ரெண்டு பேருக்கு எதுக்குடா வேலையாளுனு நாங்க சொல்ல சொல்ல கேக்காம, அவன்தான் மேல் வேலை,  சுத்து வேலைக்கு ஆள் வச்சான் ஆனா சமையல் மட்டும் நீ தான் செய்யணும்னு ஆர்டர் போட்டுட்டான்.  என்ன செய்யறது சொல்லு?”, ஹாலில் இருந்த இவர்களின் திருமண போட்டோ ஒன்றை பார்த்தவாறே தொடர்ந்தார்..
“எப்போவாவது ரொம்ப அரிதா ட்ரிங்க்ஸ், ஸ்மோக் பண்ணுவான்,  ஆனா அதிகமா செலவெல்லாம் பண்ணமாட்டான், ஏன்னா எப்படி காசை செலவு பண்ணனும்-னு தெரியாது, எனக்கு அனுப்பிடுவான். இப்போ கொஞ்சமா அவசர தேவைக்கு தவிர, எல்லாத்தையும் அவன் பேர்லயே சொத்தா மாத்திட்டேன். இதோ இந்த வீடு கூட …. ” என அவர் பேசிக்கொண்டே செல்ல …. இவரை விட்டால், மகன் புராணத்தை விடிய விடிய பேசுவார் என்பதை அறிந்த நங்கை…..
“ஐய்யயோ அத்த.. நாம கிளம்பனும், நம்மள க்ராண்டா வேற வர சொல்லி இருக்காரு, வாங்க முதல்ல டிரஸ் செலக்ட் பண்ணலாம்.”, மாமியாரை அவளது வார்ட் ரோபின் முன் நிறுத்தினாள்.
“என் டிரஸ் பெட்டில இருக்கும்மா”, வைதேகி.
“நோ நோ, புடவை-ல உங்களை பாத்து பாத்து போர் அடிக்குதத்தை, இன்னிக்கு சுடிதார் ட்ரை பண்ணுங்க.”, என….
“அட ராமா, ஏன்மா உனக்கு இந்த கொலைவெறி? இந்த வயசுல நான் போய் சுடி போடறதா? உங்க மாமா ஓடி போயிடுவாருடீ”, வைதேகி தன்னைத்தானே கிண்டல் செய்து சிரித்தார். இவர் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது போல.
“கரெக்ட், உங்களோடதானே ?”, என அதற்கும் கவுண்டர் கொடுத்து அவரை வாரி…. ஒரு  லைட் மெஜந்தா கலரில் இருந்த, கண்ணை உறுத்தும் வேலைப்பாடுகள் அற்ற, பன்னீர் ரோஜா கலரில் … கழுத்திலும்,  3/4 கைகளிலும் மட்டும்  மெசின் எம்பிராய்டரி செய்த புது உடையை எடுத்துக் கொடுத்தாள். “அத்தை, எனக்கு இது கொஞ்சம் லூஸா இருந்தது, ரொம்ப பிளாங்க்-ஆ, கொஞ்சம் வயசானா மாதிரி தோணுச்சு. அதனால போடவேயில்லை. இது உங்களுக்கு பர்ஃபெக்ட்டா இருக்கும் பாருங்க  “
“இது சரியா வருமாடா?”
“இத மொதல்ல போட்டு பாருங்க., சரியில்லைன்னா நான் அட்ஜஸ்ட் பண்ணித்தர்றேன் அத்தை,”, என்றுவிட்டு இவள் வெளியேற, சற்று சங்கோஜத்துடனே அணிந்தார். அளவு மிகச்சரியாய் இருக்க…, வெளியே வந்தார்.
எப்போதும் ஹாலில் தொலைக்காட்சி செய்தி சானல்களில் மூழ்கி, பொதுவில்  அமைதியாய் இருக்கும் அவர் கணவர், இவரை புதுவித கெட்டப்பில் கண்டதும், “பாட்டு பாடவா? பார்த்து பேசவா? பாடம் சொல்லவா? பறந்து செல்லவா?”, என்று ஏ.எம். ராஜா குரலில் இளநகையுடன் சன்னமாய் பாட…. வைதேகி அழகாய் வெட்கப்பட்டார்.
அவளது அறையில் இருந்து வந்த நங்கையைக் கண்டதும் இன்னமும் குஷியானார், காரணம், அவளும் லைட் மெஜந்தாவில், லெஹெங்கா அணிந்து அதற்கேற்ற ஆபரணங்களுடன் வந்தவாறே, “ஹ ஹ .. என்ன அத்த ? மாமா பறந்து வா-ன்னு பாடறாரு? ” என்று விட்டு, “மாமாக்கு இவ்ளோ அருமையான வாய்ஸ்ன்னு தெரியாம போச்சே?”, என அவரையும் வம்பிழுக்க  … இவர்களின் சிரிப்பில் வீடு களை கட்டியது.
பேச்சோடு வேலையாக, மாமாவையும் ஸ்மார்ட்-ஆக தயாராகுமாறு, பணித்தவளை, அவர் மினிஸ்டர் வைட் சட்டையிலும், கருப்பு பேண்ட்டிலும் வந்து அசர வைத்தார். அடுத்த பத்து நிமிடத்தில், வீட்டின் அழைப்பு மணி அடித்தது. வேலையாள் சென்று திறக்க, அங்கே அக்மார்க் வடஇந்திய சாயலுடன் ப்ரஜன் வந்திருந்தான். பார்க்க ஹ்ரித்திக் ரோஷனையும், அபிஷேக் பச்சனையும் சேர்த்து செய்த கலவை போலிருந்தான். சிலர் கோபமானால் முகம் சிவக்கும், இவனுக்கோ வேகமாய் பேசினால் கூட சிவக்குமோ என்று எண்ண வைக்கும் வண்ணத்தில் இருந்தான்.
“மிஸ்ஸர்ஸ்.த்ரிவிக் அன்ட் ஃபேமிலி  ??”, சித் ஸ்ரீராம் வாய்ஸ் வந்தது, அவனிடமிருந்துதான்.
“எஸ், ப்ளீஸ் கம் இன்”, என்ற நங்கை, வைதேகியை கேள்வியாய் பார்க்க .. அவரும் தயாராக உள்ளதாய் பதிலுக்கு தலையசைத்தார். ஸ்ரீராமுலு, அவனிடம் பேச்சை தொடர்ந்தார்.(உரையாடல் ஆங்கிலத்தில்)
” நீங்க மிஸ்டர்.ப்ரஜன்??”, என்று முடிக்காமல் இழுக்க..
“ஆமா நான்தான் ப்ரஜன், இன்னிக்கு என் அண்ணாவோட மூணாவது வெட்டிங் ஆனிவர்சரி, எங்க பேரன்ட்ஸ்-ஸும் வந்திருக்காங்க, அதான் சடனா [sudden] கெட்-டு-கெதர் ஏற்பாடு பண்ணிட்டாங்க. தப்பா எடுத்துக்காதீங்க. என் ப்ரோ, இதை பர்சனலா உங்ககிட்ட சொல்லக் சொன்னான். கூடவே  த்ரிவிக் அண்ணாவும் வழில உங்களை பிக்கப் பண்ணிக்க சொன்னார், அதான் ….”, என்று விளக்க….
கிச்சனில் இருந்து காஃபி, பிஸ்கெட்டுடன் நங்கை வந்தவாறு, “அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல.. நாங்களே வெளில போறதா இருந்தது, இப்போ கொஞ்சம் சீக்கிரம் கிளம்பினோம் அவ்வளவுதான், நீங்க காபி எடுத்துக்கோங்க”, என சகஜமாய் பேச, ஒருவித தோழமையை உணர்ந்தான். அடுத்த பத்து நிமிடத்தில், வைதேகி, ஸ்ரீராமுலு வின் இரண்டு பெட்டிகள் சகிதம் அனைவரும் ப்ரஜனின் காரில் ஏறி இருந்தனர். அங்கிருந்து அப்படியே ‘சார்தாம் யாத்திரை’ செல்வதாக அவர்களது பயணத் திட்டம்.
எங்கே வரவேண்டும் என்பதை அலைபேசியில் கேட்டு தெரிந்து கொண்ட ப்ரஜன், அடுத்த அரை மணி நேரத்தில் அவர்களை ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலின் முன் நிறுத்தினான். உபரித் தகவலாக, மூன்றாம் எண் பார்ட்டி ஹாலை, இவர்களுக்காய் புக் செய்து இருப்பதாக சொன்னான்.
அனைவரும் இறங்கி மின்தூக்கி நோக்கி நடை போட்டனர். அத்தை மாமா இருவரும் முன்செல்ல நங்கை பின்னால் தொடர அவளை நோக்கி ஒரு செக்யூரிட்டி வந்தான்.
“மேம், “, என்று விளித்து ஏதோ ஹிந்தியில் கேட்க, அவள் பின்னால் வந்த பிரஜன் இவளுக்கு பாஷை தெரியாதே என்று யோசித்து, வேகமாய் அருகில் வந்தான். ஆனால் அதற்குள் நங்கை அந்த செக்யூரிட்டியுடன் பேசி அனுப்பி இருந்தாள்.
“உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?”, எனக் கேட்டான்.
“ம்ம்..ரொம்ப சரளமா வராது ஆனா நல்லா புரியும், பேசவும் செய்வேன்”, என பதிலுரைத்து,; லிஃப்ட்-க்கு விரைந்தாள்.
இவர்கள் நால்வரும் பார்டி ஹாலை அடைந்தவுடன், “வெல்கம் வெல்கம்”, என வரவேற்றவாறு நிகிலேஷ் மற்றும் அவன் மனைவி இவர்களை எதிர்கொண்டு அழைத்தனர்.
வைதேகியை சுடிதாரை கண்ட த்ரிவிக், எழுந்தே விட்டான். “ம்மா ..மாம், யு லுக் ஆஸம்”, எனவும்.., “எல்லாம் உன் பொண்டாட்டி வேலை தான்”, என்று புன்னகைத்தார் வைதேகி.
மனைவியின் உடையிலும் திருப்தியானவன், நங்கையை மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்தான். பின், தன் குடும்பத்தை அறிமுகப்படுத்தினான். பின் இவள் புதிதாய் ஆரம்பிக்கவுள்ள தொழிலைக் குறித்து பேச்சு வர, சளைக்காமல் பதிலுரைத்தாள். உரையாடல் ஆங்கிலத்திலேயே இருந்ததால், வைதேகி, ஸ்ரீராமுலு விற்கும் புரிந்து பதிலுரைக்க ஏதுவாய் இருந்தது.
மதிய உணவிற்கென ஆர்டர் எடுக்க ஹோட்டல் ஆட்கள் வர, மெனு கார்டு  வாங்கிய த்ரிவிக், அவன் விருப்பத்திற்கு உணவினை ஆர்டர் செய்ய… “சோளே மசாலா ஒன்னு சேர்த்துக்கோங்க”, என்று நங்கை குறுக்கிட்டாள்.
த்ரிவிக் அவள் குறுக்கிட்டதற்கு ஆட்சேபமாய் புருவம் சுருக்க, “அத்தைக்கு பிடிக்கும்”, அவனுக்கு மட்டும் கேட்குமாறு முணுமுணுத்தாள். கூடவே அவள் பார்த்த பார்வை.. அவனைக்  குற்றம் சாட்டி, சுற்றி இருப்பவரை பார்க்கச் சொன்ன செய்தி தாங்கியது.  த்ரிவிக் அப்போதுதான் கவனித்தான், இவன் சகாக்கள் இருவரும், அவரவர் குடும்பத்தை கலந்து பேசி உணவினை தெரிவு செய்தனர்.
அவனின் தவறு புரிய , மனைவியிடம் “ஸாரி”, வாயை மட்டும் அசைத்தான், ஏற்றுக்கொண்டதாய் சிறு தலையசைத்து, “எனக்கு எது வேணா ஓகே, ஆனா அவங்களுக்கு எது பிடிக்கும், பிடிக்காதுன்னு நீங்க தெரிஞ்சு வச்சிருந்திருக்கனும்”,என்றாள்.
ஆர்டர்களை வாங்கிக்கொண்டு பணியாள், “இங்க பன்னீர் ஐட்டம்ஸ் ஸ்பெஷல் டேஸ்ட்-ல இருக்கும் மேம், நாங்களே தயாரிக்கிற பன்னீர், அதுலயும் வெந்தயக் கீரையோட ரெடி பண்ற பன்னீர் மேத்தி மசாலா அருமையா இருக்கும். ட்ரை பண்றீங்களா?”, என்று பணிவாய் கேட்டார்.
“அவங்களுக்கு ஹிந்தி தெரியாது”, என்று த்ரிவிக் கூற,
“இல்லையே, நல்லா தெரியுமே, வாசல்ல எங்கிட்டகூட  பேசினாங்களே?”, ப்ரஜன் போட்டுடைக்க….
அனைவரின் பார்வையும், த்ரிவிக்-கை  நோக்கி.. “உன் மனைவியைப் பற்றி இதைக்கூட தெரிந்து கொள்ளாமலா இருக்கிறாய்?”, என்பதைப்போல்.
இவன் முகம் சுருக்கி சங்கடமாக.., அதைப் பொறுக்காத நங்கை…”நான் இதை எவ்ளோ சீக்ரெட்டா வச்சிட்டு இருந்தேன்?, ஒருநாள் இவருக்கு ஷாக்கிங் ஸர்ப்ரைஸா சொல்லலாம்னு இருந்தேன். அதைக் கெடுத்துட்டீங்க பிரஜன்”, எனது அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் சமாளித்தாள்.
நங்கை, தன்னை விட்டுக்கொடுக்காமல் பேசியத்தைக் கண்டு மனதுக்குள் விசிலடித்தான், “ஓஹ் .. ஹோ, சண்டையெல்லாம் நமக்குள்ளதானா?, வெளில விட்டுகுடுக்க மாட்டிங்களோ ? இன்ட்ரெஸ்டிங் பேபி “, நினைத்தவனின் முகம் பளிச்சென்ற சிரிப்புடன் மலர்ந்தது.  இரு கண்கள் இதை கவனித்துக் கொண்டு இருந்தது.
அரிவை அறிவானா?

Advertisement