Advertisement

அரிவை விளங்க அறிவை விலக்கு – 08
இந்த பத்து நாட்களில், நங்கை சும்மா இருந்த நாட்கள் குறைவு. அவள் வாய்ச்சொல் வீரராய் இருப்பவளல்ல, என அவளுக்கே அவளுக்கு நிருப்பித்தாக வேண்டிய கட்டாயமும் கூட.. மற்றவர்களிடம் சவடால் விட்டிருந்தாலும் பரவாயில்லை, கட்டிய கணவனிடம் சவாலாயிற்றே? அத்தனை சுலபமாய் விட்டுவிடுவாளா என்ன? இவள் எதற்கும் லாயக்கில்லை என்று அவன்  எண்ணத்தை உடைத்தெரிய வேண்டுமே? சுய கவுரவமாயிற்றே?
த்ரிவிக்ரமன் அந்தபக்கம் அலுவலகம் சென்றதும், நங்கை வெளியே கிளம்புவாள், கூட தீக்ஷா-வின் தாயாரையும் உடனழைத்துக் கொண்டு, அக்கம் பக்கத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், அருகில் இருக்கும் மழலையர் விடுதிகள், அவற்றின் தரம், பாதுகாப்பு பற்றிய தகவல்களை சேகரித்தாள். கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அனைத்து குடியிருப்புக்களையும் ஆராய்ந்திருந்தாள் , அதில் உள்ள வேலைக்கு போகும் பெண்கள், வீட்டில் சுய தொழில் செய்வோர், அவர்களின் குழந்தைகள், பள்ளி செல்வோர், செல்லாதோர், மழலையர் விடுதிக்கு செல்லும் குழந்தைகள், முந்தைய தலைமுறைகளால் கவனிக்கப்படும் பிள்ளைகள்,  என தனித்தனி பட்டியல் தயாரித்தாள்.
இவளுக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கும்? என்பதை அறிய இத்தனை மெனக்கெடல் தேவைப்பட்டது. எந்த ஒரு வியாபாரத்திற்கும் /சேவைத்துறைக்கும் ஆரம்பம் அமர்க்களமாய் இருப்பதாக காண்பித்து விட்டாலே போதும், பின் அதன் சக்கரங்கள் தானாய் சுழலும்.
தீக்ஷா-வின் அம்மாவை அவளது காரியதரிசியாய் வேலைக்கு சேர்த்திருந்தாள், கள ஆய்வு செய்து துவங்கப்பட வேண்டிய விஷயமாகையால், மொழி ஒரு பிரச்சனையாய் இருக்கக் கூடாதென்று நினைத்து அவரை வேலைக்கு அழைத்தாள். அவரும் இவளிடம் அரைமணி நேரம் கலந்து பேசியதில், க்ரீச் அமைப்பதில் இவளின் தீவிரத்தை புரிந்துகொண்டு ஒப்புக்கொண்டார்.
சென்னையில் தொழில் துறையில் கோலோச்சும் குடும்பத்தை சேர்ந்த கோடீஸ்வரி.. டெல்லியில் மழலையர்  விடுதி துவங்கி நடத்தப் போகிறாள்.
இவள் விடுதி குறித்து நோட்டீஸ் தயாரித்து வீடு வீடாக விநியோகம் செய்வித்தாள்.
கட்டணத்தில் ஆகட்டும்.. பாதுகாப்புக்கு செக்யூரிட்டி நியமித்ததிலாகட்டும்.. மதிய உணவுக்கான அட்டவணையை தயாரிப்பதில் ஆகட்டும் எல்லாவற்றிலும் தெளிவான திட்டமிடுதல் இருந்தது அவளிடத்தில். தவிர தொழில் முனைதல் என்பது இவளது இரத்தத்தில் ஊறி கலந்து இருந்தது. துவக்கத்தில் தற்காலிக ஏற்பாடாக அவளது வீட்டிலிருந்து மூன்று பிளாக்குகள் தள்ளி இருந்த தரைதளத்தில் 2 வீட்டினை வாடகைக்கு எடுத்திருந்தாள்.
உள்ளரங்க விளையாட்டுக்கள்.. வெளியே விளையாட ஊஞ்சல்கள்..சறுக்கு மரம்.. குறுக்கு கம்பிகளில் ஏறி விளையாடும் விளையாட்டு அனைத்தையும் தயார் செய்து வைத்திருந்தாள்.
பணம் அவளுக்கு ஒரு பொருட்டல்ல என்றாலும் அளந்தே போட்டாள் இவள் செலவு செய்ததை எடுப்பதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என கணக்கிட்டு இருந்தாள் ஆனால் அவற்றுக்கெல்லாம் அச்சப்படவில்லை இவள். வெற்றி நிச்சயம் எனும்போது முதலீட்டுக்கு பயப்படுவானேன்?
இத்தனை முஸ்தீபுகள் ஒரு பக்கம் இருக்க, வீட்டுடன்அவளது வழமையான ஸ்கைப் பேச்சு தடைபடவில்லை. என்ன.. நேரத்தை மட்டும் மாறறியிருந்தாள். இரவு 7 மணி என்பதை ஏழரைக்கு மாற்றியிருந்தாள், எட்டு மணி சுமார்தானே  திரிவிக்கிரமன் வரும் நேரம்? அவன் வருவது திரையில் தெரியுமாறு பார்த்துக் கொண்டாள். த்ரிவிக் வேலை முடித்து வந்து விட்டதால், பிறகு பேசுவதாக கூறி வைத்துவிடுவாள்.
உடனே அவன் அம்மாவுக்கு போன் செய்து பேசி முடித்து பின்..”இதோ அவரைக் கூப்பிடறேன், பிஸியா இருக்காங்க” என்று இவள் கிட்சன் சென்று மறைய.. த்ரிவிக் அன்னையுடன் பேச்சை தொடர்வான். மொத்தத்தில் இவர்கள் பிரச்சனை யார் காதுக்கும் செல்லாதவாறு பார்த்துக் கொண்டனர்.
த்ரிவிக், முடிந்தவரை வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தான். மனைவி மேல் இருக்கும் கோபம் போகாத போதும்,  அவளின் சன்னமான கொலுசொலியும், கூடத்தில்,  அவள் அமர்ந்த இடத்தில் எழும் அவளது வாசனையும், கிச்சனில் இருந்து வரும் அவளது சமையலின் நறுமணமும், எல்லாவற்றையும் விட இரவின் தனிமையும்…நாமே போய் பேசினால் தான் என்ன என்று தூண்டும், ஆனால் அவனது வீம்பு “விடாது கருப்பு’ பாய் முன்னிற்கும்.
நங்கை தனது சிறுவயது பழக்கமான தலையணையை வைத்துக் கொண்டு தூங்குவதை வாடிக்கையாக்கிக் கொண்டு இருந்தாள். அதில், அவன் கதகதப்பு இல்லாவிட்டாலும்… காலை வேளைகளில் தொழிலில் கவனம் செலுத்துவதால் அந்த அலைச்சலில் எப்படியோ தூங்கிவிடுவாள்.
இப்படியான கண்ணாமூச்சி மேலும் ஒரு பத்து நாட்கள் தொடர்ந்தது. இந்த நாட்களில் அவளது காரை சென்னையில் இருந்து தருவித்து இருந்தாள். ஒருநாள் இவளது காரியதரிசி, த்ரிவிக்கின் அலுவலகத்திற்கு போன் செய்து அவனது அப்பாயின்மென்ட் கேட்டாள். தொலைபேசியை கையில் வைத்துக்கொண்டு நீரஜ் திருதிருவென முழித்து நிற்பதைப் பார்த்த த்ரிவிக் என்னவென்று கேட்டான்.
“சார்,  மேடம் பி.ஏ. லைன்ல இருக்காங்க உங்களோட அப்பாயின்ட்மென்ட் கேக்குறாங்க”, என்றான் ஒருவித குழப்பத்துடன். பின்னே, ஒரே வீட்டில் இருப்பவர்களுக்கு அவர்களது வேலைகள் குறித்து தெரியாதா என்ன என்று அவன் நினைத்தான். தம்பதிகள் கிழக்கு-மேற்குமாய் இருப்பது அவனுக்குத் தெரியுமா என்ன?
“ஓஹ்.. வரணும்னு சொல்லிட்டு இருந்தா நான் பாத்துக்குறேன் கொடுங்க”,  என்று தொலைபேசியை கையில் வாங்கிக் கொண்டான்.
ஆள்காட்டி விரலால் தன் பி.ஏ.வை வெளியே போகச் சொல்லிவிட்டு, “சொல்லு”,  என்று கடுகடுத்தான் தொலைபேசியில்.
மறுபுறம்…நீரஜ் பேசி முடித்தவுடன், “நான் பேசிக்கிறேன் நீங்க டாக்குமெண்ட் காப்பி எடுங்க”, என்று கூறி சுபத்ராவிடமிருந்து [தீக்ஷாவின் அன்னை/காரியதரிசி] நங்கை,  பேசியை வாங்கி தன்வசமாக்கி இருந்தாள்.
கணவனின் கடுகடு “சொல்லு”-வில்,  மூளையை அஃபிஷியல் மோட்-க்கு மாற்றி, “கொஞ்சம் பிசினஸ் பேசணும் நான் உங்க ஆபீஸ்க்கு வரேன் உங்க ஆடிட்டர் இருக்காரான்னு பாத்துட்டு, அவரை ஆஃபிஸ் வரச்சொல்லிட்டு எனக்கு கால் பண்ணுங்க, அன்ட் மிஸ்டர் “.. என்று இடைநிறுத்தி, “பத்து நிமிஷத்துல கால் வரலைன்னா மறுபடியும் நீரஜுக்கு  போன் பண்ணுவேன். இதே வேலைய அவரை செய்ய சொல்லுவேன். ஓகே?”, என்றுவிட்டு, பதிலுக்கு கோபமாக இவன் “ஏய்ய்” எனும்போது டொக் என அவளது தொலைபேசியை வைத்துவிட்டாள்.
” அடியே சொர்ணாக்கா ஒருநாள் என்கிட்ட மாட்டாமலா போய்டுவ?  அப்ப வச்சுக்கிறேன்டி உன்ன”, .. பல்லை நற நறவென கடித்தபடி.. வேறு ஒன்றும் செய்ய இயலாதவனாய் அவனது ஆடிட்டரை அலுவலகத்திற்கு கூப்பிட்டு இருந்தான், நங்கையின் மணாளன்.
அன்று காலை சென்னையிலிருந்து வந்துவிட்டிருந்த அவளது பி.எம்.டபிள்யூ-வில், சொன்னபடி அரைமணியில் நங்கை நல்லாள்  வந்து இறங்க,  அலுவலகம் ‘ஆ’வெனப் பார்த்தது . எளிமையாய்..  கண்ணுக்குத் குளிர்ச்சியான மேக்கப்புடன், வெகு திருத்தமாய் கட்டிய  ப்யூர் காட்டன் சில்க் பிளைன் புடவையில், ஆளுமையுடன் அவள் படியேறி வர, கண்ணாடிக் கதவின் அருகிருந்த செக்யூரிட்டி, தானாய் கதவைத்திறந்து சல்யூட் வைத்தார்.
நங்கை கொணர்ந்த காகிதங்களை பார்த்த ஆடிட்ருக்கு, திருத்தம் செய்யும் வேலையைக் கூட இவள் வைக்கவில்லை, அனைத்தையும் பக்காவாய் தயார் செய்து வைத்திருந்தாள். பெருக்கல் குறி போட்டு த்ரிவிக், கையெழுத்திட வேண்டிய இடத்தை மட்டும் விட்டு வைத்திருந்தாள்.
இவள் உடன்படிக்கையின்படி, இருவருக்கும் சமபங்கு உள்ள ஒரு நிறுவனத்தை இவர்கள் சேர்ந்து ஆரம்பிக்கிறார்கள் என்று இருந்தது.
இடையே கிடைத்த தனிமையான நேரத்தில், திரிவிக்ரமன் நங்கையிடம் கேட்ட முதல் கேள்வி, ” இது என்ன டிராமா?”, என்பதுதான்.
“ரொம்ப சிம்பிள். நான் தான் இத பண்றேன்னு சொன்னா எங்க அப்பா விட மாட்டார். அடுத்த பிளைட் பிடிச்சு வந்து என்ன பிரச்சனைன்னு கேப்பாரு.  இதுவே நீங்க பண்றீங்கன்னு சொன்னா..உங்களுக்கு நான் சப்போர்ட் பண்றேன் ன்னு சந்தோஷப்படுவார். காட் இட்?”, பட்டென முடித்தாள்.
“இதெல்லாம் தேவையில்லை சும்மா வெட்டி வீம்புக்காக பண்ணாதே”, சொன்னவன் குரல் பாதியாய்த்தான் ஒலித்தது. காரணம், நங்கை அத்தனை முன்னேற்பாடுகள் செய்திருந்தாள், அவளிடம் உழைப்பும் இருந்தது புத்திசாலித்தனமும் இருந்தது.
அடுத்து வந்த அரை மணி நேரத்தில் கையெழுத்து எல்லாம் முடித்து கிளம்பி இருந்தாள்.  நல்ல நேரம் பார்த்தே வந்திருந்ததால், எந்த விஷயமும் தடைப்படவில்லை. அவள் அருகாமையும், விட்டுச் சென்ற வாசமும்,  அறை முழுவதும் இருக்க, த்ரிவிக்கிற்கு மனைவியின் அரவணைப்பு மிகவும் தேவையான ஒன்றானது.
அன்று இரவு ஸ்கைப்பில் த்ரிவிக்கினது அன்னை கிடைக்கவில்லை. அலைபேசியில் பிடித்து பேசியபோது, தொடர்ந்து பத்து நாட்கள் விடுமுறை இருந்ததால், கணவன் மனைவி இருவரும் சுற்றுலா செல்லத் தீர்மானித்து சென்றுகொண்டு இருப்பதாகச் சொன்னார்.  இது அவர்கள் வழமையாய் செய்வதுதான். சின்ன விடுமுறை கிடைத்தாலும் சுற்றிலும் உள்ள கோவில்களுக்கு செல்வது அவர்கள் பொழுதுபோக்கு. எனவே அதை பெரிதாக எண்ணிக் கொள்ளாமல் விட்டு விட்டான்.
அலைபேசியை கீழே வைத்துவிட்டு, நங்கையோடு வெளியே சென்று எத்தனை நாட்கள் ஆகிவிட்டது என்று நினைத்தான். அவனை அறியாமல் சன்னமான பெருமூச்சு ஒன்று கிளம்பியது. நங்கைநல்லாள் எப்பொழுதோ தூங்கச் சென்று இருந்தாள். இவனோ டிவி ரிமோட்டை கையில் வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி இலக்கில்லாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
எத்தனை நேரம் போனதோ தெரியாது, திடீரென வாசலில் அழைப்பு மணி அடிக்க, யாரது இந்த நேரத்தில் என்ற யோசனையோடு சென்று கதவை திறந்தான். பார்த்தால் அங்கே அவனது அன்னை.. “வாவ் மாம்” , என்று கத்தியவன், சந்தோஷ  மிகுதியில், அவரை தூக்கி தட்டாமாலை சுற்றி ‘லவ் யூ மா’ என்றான்.
“எப்படிடா எங்க சர்ப்ப்ரைஸ்?” என்று சிரித்தார் அன்னை..
” ஓ !! ஸோ கைன்ட் ஆஃப் யூ மாம், அப்பா எங்க?”, என்றான்.
“அவர் கீழே டாக்ஸிக்கு செட்டில் பண்ணிட்டு வருவார். எனக்கு பாத்ரூம் போனும்.  அதான் சீக்கிரமா வந்துட்டேன். நைட் நேரம் நங்கைய எழுப்பாத காலைல பாத்து பேசிக்கலாம்.  இப்போ நீ தூங்கு போ”, என்றுவிட்டு அவர் பாத்ரூம் சென்றார்.
அய்யய்யோ !!!!!!!! “ட்டின்டு டின்ட்டு டுடுன் ட்டின்ட்டின்ட்டின் “…. திரிவிக்கிரமனின் மனதுக்குள் உடுக்கடித்தது.
நங்கை தனியாக வேறு அறையில் அல்லவா உறங்குகிறாள்? பதறி அடித்துக் கொண்டு அவள் படுத்திருந்த அறைக்கு சென்றான். “அடியே, பூட்டி கீட்டி வச்சிருந்த, கொன்னுடுவேண்டி உன்னை “, மனைவிக்கு மனதுக்குள் அர்ச்சனை செய்துகொண்டே கதவைத் திறக்க.. நல்லவேளையாய் அவள் பூட்டியிருக்கவில்லை. உள்ளே நுழைந்தால்..  இரண்டு தலையணைகளை கட்டிப்பிடித்து, ஆனந்தமாய் சயனித்து ஆழந்த உறக்கத்தில் இருந்தாள், நங்கை நல்லாள்.
“அடியே, அங்க ஹால்-ல ஒரு மனுஷன் தூங்க முடியாம கஷ்டப்படறேன், இங்க தலைகானி-யை தலைக்கு ரெண்டு காலுக்கு ரெண்டுன்னு வச்சுக்கிட்டு கும்பகர்ணியா தூங்கிட்டு இருக்கியா?”, சரியான கடுப்பில் [வெறுப்பு வேறு, கோபம் வேறு, கடுப்பு வேறு.. காலங்காலைல அரக்கப்பரக்க நம்ம லேடீஸ் பசங்களுக்கு / வீட்டுக்காரருக்கு டப்பா கட்டிட்டு இருக்கும்போது… நம்மாளு, அதான் வேற யாரு குடும்….பத்…தலைவர், தன்னைச் சுத்திலும் உலகப் பிரளயமே நடந்தாலும் கண்டுக்காம … சாவகாசமா…  பேப்பர் படிச்சிகிட்டு “கண்ணம்மா .. இன்னொரு கப் காஃபிடா”-ன்னு  கேப்பாரு பாருங்க…  அப்போ உள்ளங்கால்லேர்ந்து உச்சந்தலை வரைக்கும் பிச்சுக்கிட்டு வரும்பாருங்க.. அது, உங்க வீட்டுக் கடுப்பு எங்க வீட்டுக் கடுப்பு இல்லைங்கோ … உலகமகா கடுப்பு…  
இதுக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்ன்னு நீங்க கேட்கக்கூடாது, விளக்கம் சொன்னா அனுபவிக்கனும்… ஆராயக் கூடாது ] திட்டித் தீர்த்தான் மனதுக்குள்.
த்ரிவிக் உலுக்கிய உலுக்கில் அடித்துப் பிடித்து எழுந்தவள், அவன் கடித்துத் துப்பிய “ஏய்.. சொர்ணாக்கா.. எங்கம்மா வந்துருக்காங்க.. நம்ம ரூமுக்கு போய் படு.”, என்றது புரியாமல் அலங்கமலங்க விழித்தாள். நங்கைக்கு தான் சொன்னது புரியவில்லை என்பதை அறிந்து, “அடியேய்.. முட்டைக்கண்ணை முழிச்சு பாக்காத. ஊர்லேந்து அம்மா வந்துருக்காங்க..உனக்கு மட்டும்தான் அன்பு அவரைக்காய்; பாசம் பச்சைமிளகாயெல்லாம் இருக்குன்னு நினைச்சுக்காத.. நம்ம விஷயம் ஏதாவது தெரிஞ்சுது … உன்னைக் கொன்றுவேன்”, என்று மிரட்டினான்.
சட்டென எழுந்தவள், தலையணை போர்வையை வாரி சுருட்டியவாறே அவர்களின் அறைக்கு ஓடியே விட்டாள். “ப்பா செம பாஸ்ட்தான்”, மெச்சியவன், பாத்ரூமில் தண்ணீர் சப்தம் கேட்க, மெத்தையின் மீது புதிய விரிப்பினை விரித்து, இவனது அறைக்கு சென்று படுக்கையை சுத்தம் செய்து, இருவரின் பொதுவான அறைக்கு மின்னலாய் விரைந்தான்.
நங்கை முகத்தில் முள்ளை கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள், உள்ளே வந்த கணவனைப் பார்த்து “அஞ்சு கிலோ இஞ்சியை முழுங்கினா மாதிரி மூஞ்சிய வச்சிக்கிட்டு, நானு உங்களுக்கு சொர்ணாக்காவா?”, என்று கிசுகிசுத்து சண்டையிட துவங்கி.. , “அவங்க எனக்கும் மாமா அத்தைதான், எங்களுக்கும் அவங்க மேல அக்கறை இருக்கு.  முத முதலா வந்தவங்களை வாங்கன்னு சொல்லிட்டு வர்றேன்.” என்று முடித்தாள்.
“ஒன்னும் வேணாம், காலைல பாக்கலாம்னு… “, இவன் பேசியவாறு இருக்க… கேட்க நங்கை இருந்தால் தானே?
” அடங்காப்பிடாரி, சொர்ணாக்கா..” , மனது திட்டினாலும்… உள்ளூர குத்தாட்டம் போட்டது…. த்ரிவிக் மட்டுமே அறிந்த ரகசியம்.
வெளியே கூடத்தில், நங்கை அகமும் முகமும் மலரச் சிரித்து “வாங்கத்தை , வாங்க மாமா”, [அதற்குள் அவரும் மேலே வந்துவிட்டிருந்தார்], என வரவேற்றாள்.
“அவன் எழுப்பினானா உன்ன? நான்தான் டிஸ்டர்ப் பண்ணாதடான்னு சொன்னேனே?”, .. அத்தை.
“சத்தம் கேட்டு நானே முழிச்சிட்டேன் அத்த. குடிக்க பால் ஏதாவது தரட்டுமாத்த?”, வீட்டு மனுஷியாய் விசாரிக்க…
“ஒன்னும் வேணாம்மா.. காலைல லேட்டாத்தான் எந்திரிப்போம். போயி தூங்கு நாளைக்கு ஆற அமர பேசலாம். குட் நைட்”, என்று ஒரு அறைக்கு சென்று படுத்து விட்டார்.
இப்போது கூடத்தில் இருந்தது, நங்கை மட்டுமே. கணவன் இருக்கும் அவர்கள் அறைக்கு செல்ல .. அவளது முதலிரவில் கூட இத்தனை படபடப்பு இல்லாமல் இருந்தவள், தற்போது பந்தயக்குதிரையாய் ஓடும் மனதினை சமன் செய்து, உள்ளே சென்றாள்.
த்ரிவிக் கட்டிலின் அந்தப்பக்க மூலையில், முதுகு காட்டி தூங்கினான்  (??), நங்கை வாயைத் திருப்பி ஒழுங்கு காட்டி, தலையனை அணை கட்டி படுத்தாள். பத்து நிமிட நேர போராட்டத்துக்கு பின், தூக்கம் கண்களை தழுவியது.
ஆனால், அந்தோ பரிதாபம். !! அரைமணித் துளியில், அணையை அவளையறியாமல்  உடைத்து கணவனின் தோளைத் தழுவி இருந்தாள், பெண்.
“ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை”, கொக்கு போல .. அவனுக்கு சாதகமான  நேரத்திற்காக காத்திருந்த  கணவனவன்.. கட்டித்தழுவ, எதிர்க்க இயலாமல் விரைத்தாள்.
“ம்ப்ச்.”, என்ற அவன் ஆட்சேபத்திலும், நிற்காத தேடலிலும் … தானாய் உடல் தளர்ந்து மறுமொழி உரைக்க ஆரம்பிக்க.. அங்கு அறிவுக்கு அம்னீஷியா கொடுத்து… இளமை விழித்திருந்து.
அரிவை அறிவானா?

Advertisement