Advertisement

AVAV – 11 (1)
நேற்று முன்தினம், அந்த இரவில் நங்கையிடம் பேசிய திரிவிக்கிரமன், மறுநாள் அல்லது அதற்கு மறுநாளாவது அவள் பதிலுரைப்பாள் என்று,  நங்கையின் முகத்தை முகத்தை பார்த்திருந்தான். இதை ஓரிருமுறை கவனித்த நங்கை, அமைதியாய் கடக்க,  மீண்டும் அவனது பார்வை தொடர சற்று அசவுகரியமாய் உணர்ந்தாள்.
என்றோ ஒருநாள் த்ரிவிக் இவளைக் குறைத்து மதிப்பிட்டதால், பெரும் முதலீடு செய்ததோடு மட்டுமல்லாமல்,  பலரை வேலைக்கும் அமர்த்தியிருந்தாள். “என் தவறென்ன? ஏன் கோபம்?”, எனக் கேட்கும் கணவனோடு பேசுவதில் அவளுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால், ஒரு வேளை … இருவரும் மனம் விட்டுப் பேசுவதால் இவர்கள் பிணக்குகள் தீர்ந்து, “அதுதான் நமக்குள் பிரச்சனையில்லையே?, எதற்கு இந்த தொழில் ஆரம்பிக்கிறாய்?”, என்று த்ரிவிக் கேட்டு விட்டால்…?.. இவளை நம்பி வேலையை விட்டோர் என்னாவர்? இவள் வாக்கினை நம்பி எதிர்காலத் திட்டம் வகுத்த அவர்கள்…? நம்பியோரை நட்டாற்றில் விடுவாளா என்ன? தவிர… முன் வைத்த காலை பின் வைக்க நங்கையும் தயாராக இல்லை.
த்ரிவிக்ரமன் இன்றெப்படியோ?, ஏதோ ஒன்று இவளிடம் குறைவு என்ற எண்ணம், மனதில் எங்கோ ஓர் மூலையில் தோன்றியதால் தானே அன்று அவனுக்கு அப்படி ஒரு பேச்சு வந்தது?  எண்ணமின்றி வார்த்தையேது? நாளையோ அல்லது நான்கு வருடம் கழித்தோ, மீண்டும் இந்த வார்த்தைகள் வராதென்பதற்கு என்ன உத்திரவாதம்?
எனவே, நங்கை ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தாள். ஒரு மனைவியாய், கணவனின் வார்த்தைகளை மதிக்க…. மீறாதிருக்க…. அவனுக்கான கடமைகள் செய்ய…. தலைப்பட்ட அவள், ஒரு பெண்ணாய் அவளுக்குண்டான தன்மானத்தையும் மரியாதையையும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.
இப்படியான குழப்பங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்க…, இடையே .. த்ரிவிக்ரமனின் ஆராய்ச்சிப் பார்வை வேறு தினப்படி தொடர்ந்துகொண்டே இருக்க….
ஒரு கட்டத்தில் சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்து, “என்ன வேணும் உங்களுக்கு?  என் முகத்துல ஏதாவது எழுதி ஒட்டியிருக்கா? சும்மா சும்மா பார்க்கிறீங்க?,”, என்று கடித்துத் துப்ப….
கடுப்பான அவன், “ம்ம்ம்…. என் பொண்டாட்டி .. நான் பாக்கறேன். உனக்கென்ன பிரச்சினை?”, என்று அவனும் திருப்பிக் கொடுக்க….,
அவனை நேர்ப் பார்வை பார்த்தவள், கோபம் கொண்டிருக்கிறான் எனப் புரிந்து , “ம்ப்ச்…..”,  தன் சிந்தனைகளை ஒரு பக்கம் வைத்து,  “லிஸன்…  . நாம கல்யாணம் பண்ணினதுலேர்ந்து  நீங்க பேசி நான் கேக்கறதுங்கிறது பழகிடுச்சு. இப்போ திடீர்னு பேசு பேசு-ன்னு நீங்க எதிர்பார்த்தால்லாம் வராது. கொஞ்சம் டைம் கொடுங்க. தவிர, நான் நிறைய கமிட் ஆகிட்டேன்…,  எல்லாத்தையும் சரியா பண்ணனும், உங்க கூட பேசறதுக்கு முன்னாடி, நான் கொஞ்சம் யோசிக்கணும், எப்போ நான் தயார்ன்னு எனக்கு தோணுதோ அப்போ கண்டிப்பா பேசுவேன்”, என்றாள் தன்மையாக.
அப்பொழுதும் த்ரிவிக் அவளை விடாது பார்க்க…., “இப்போ என்ன?”, ‘வள்’ என்று விழுத்தாள்.
வந்த சிரிப்பை இதழோடு அடக்கி , “இல்ல. யோசிக்கணும்னு சொன்னியா? அதுக்கு மூளைன்னு ஒண்ணு  இருக்கனுமே? இங்கதான் மேல்மாடி காலியாச்சேன்னு நினைச்சேன்.”, என்றான். நிச்சயமாய் குதர்க்கமாகவோ,  கேலியாகவோ சொல்லவில்லை. அது உரையாடலை இலகுவாக்க ஒரு விளையாட்டுப் பேச்சு. அவ்வளவே. ஆனால் எதிராளியின் எண்ணப்போக்கு வேறு மாதிரி இருந்தால்……???
மனம் குழப்பத்திலோ அல்லது தீவிர சிந்தனையிலோ இருக்கும்போது…. அடுத்தவருடன் பேச மெளனமே சிறந்த மொழி, இயலாத பட்சத்தில் மென்னகை.
ஆனால் நங்கை, சிறு பெண்தானே? கடந்து சென்ற நேரமும், வாயிலிருந்து விட்ட வார்த்தையும் மீட்க முடியாதென்பதை அறியாதவளாய்…. சட்டென மூண்ட கோபத்துடன் , ” ஆமா.. எனக்கு மூளையில்லைதான். அதனால் உங்களுக்கு எதுவும் கெட்டுடலயே? உங்களுக்கு வேணுங்கிறதெல்லாம் சரியா தானே நடக்குது? “, என மூக்கு விடைத்து, படபடவென பேச….
அதுவரை இயல்பாய் இருந்த த்ரிவிக், மனைவி பேசியத்தைக் கேட்டு திகைத்தான்.  “தன்மீது இப்படி ஒரு குற்றச்சாட்டா?”, என எண்ணி வெகுண்டான். முகம் விளையாட்டைத் தொலைத்திருக்க , மிகத்  தீவிரமாய் நங்கையைப் பார்த்தவன், “அப்படினா…..என்ன சொல்ல வர்ற நீ?”, என வினவ…
“..…………. ” , நிமிர்ந்து கணவனைப் பார்த்த அவளிடமிருந்து பதிலில்லை.
நங்கையின் பார்வையும் அவனைக் குற்றம் சாட்டுவது போல் தோன்ற, சுறுசுறுவென கோபத்துடன், நங்கையை உறுத்துப் பார்த்தவன், கடித்த பற்களுக்கிடையே, “யூ பிளடி ……”, என்றவன், வேக மூச்சுக்களுடன், ” ஏதாவது ஏடாகூடமா சொல்லிடப் போறேன்…. .இனி நானா உன்னை அப்ரோச் பண்ணினா… என் பேரை மாத்தி வச்சுக்கோ”, என்றவன்… இறுக்கக் கண்களை மூடிக்கொண்டு  இடது கையால் தலை முடியை அளைந்தான். “ச்சே… என்னிக்காவது உன் கன்சென்ட் இல்லாம நான்….. “, தன்னைக் கட்டுப்படுத்த வெகுவாக  முயன்றவனால் .. பேச்சை தொடர முடியவில்லை.
இன்னமும் நின்றால் பேச்சு விபரீதமாகும் என்றுணர்ந்தவன் … அவர்கள் இருந்த அறையை விட்டு விறு விறுவென வெளியேற.. ஹாலைக் கடந்து செல்லும் போது, அவளின் வார்த்தைகள் மனதில் மறு ஒளிபரப்பாக … நின்று திரும்பி மனைவியைப் பார்த்து……. “என்ன சொன்ன? கல்யாணமானதிலேர்ந்து நான் பேசிட்டே இருக்கறது உனக்கு பழகிடுச்சா?”,
“ஒன்னு தெரியுமா ? நீ “உங்களைப்பத்தி சொல்லுங்கத்தான்”-ன்னு ஆசையா கேட்டு நான் என்னப் பத்தி சொல்லலை.. என் வொய்ப்க்கு என்னை பத்தி முழுசா தெரிஞ்சிருக்கணும்னு எனக்கு தோணினதால பேசினேன். என்னிக்காவது உனக்கு அப்படி தோணி இருக்கா? உன்னோட விஷயங்கள் எதையாவது சேர் [share] பண்ணிருக்கியா?  எப்பப்பாரு நான் என்ன பண்ணுவேன், எதுல தப்பு கண்டு பிடிக்கலாம்-ன்னு எதிரியை பாக்கறா மாதிரியே பாத்தா, காலம் பூரா இப்படியே சண்டை போட்டுட்டே இருக்க வேண்டியதுதான். “, பேசியபடி மீண்டும் நங்கை நின்றிருந்த அறையில் நுழைந்தவனுக்கு  சட சடவென வியர்த்திருந்தது.., ஆனாலும் பேச்சு நின்றபாடில்லை.
” அப்பறம் என்ன சொன்ன? வேணுங்கிறதெல்லாம் கிடைக்குதுன்னு …”, என நிறுத்தியவனின் உடல் வெக்கை அதிகமாய் இருக்க… கை அனிச்சையாய் ஏ.சி. ரிமோட்டை எடுத்து அதை உயிர்ப்பித்து, “எஸ். செக்ஸ் தேவைதான். ஒத்துக்கறேன். பட் …  அது ரெண்டுபேருக்குமேதான். தட் ஈஸ் க்குயட் நேச்சுரல். அதுக்காகவும்தான் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க.. ஆனா, அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கு. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிறது, நம்பிக்கை, அன்பு, பாசம், காதல் இன்னும் என்னென்னவோ இருக்கு. அதெல்லாமும்  கிடைச்சாத்தான், லைப். …  நான் இப்படியெல்லாம் என் வொய்ஃபோட பேசவேண்டியிருக்கும்னு நினைச்சது கூட  இல்ல. என்னை ரொம்ப கீழ இறக்கிட்ட நீ.”, கோபம் மேலிட.. கையிருந்த ரிமோட்டை  வீசி ஏறிய.. அது சுவரில் மோதி சுக்கல் சுக்கலானது.
நேரே குளியலறை சென்று கதவை ‘பட்’ டென  அடைத்தவன், ஷவரை முழு வீச்சாய் திறந்து, அணிந்திருந்த ஷார்ட்ஸ், டீ-ஷர்ட்-டைக்கூட களையாமல், சில்லென்ற நீரினடியில் நின்றான். ஆனாலும் அவனுக்கு மனம் ஆறவேயில்லை.
இன்னொரு பக்கம்… த்ரிவிக்-கின் ஆவேசத்தைக் கண்டு மனம் கலங்கிய நங்கை,  மெதுவாய் ரிமோட்டின் சிதறிய பாகங்களை பொறுக்கி எடுத்தாள். அவற்றை  அருகிலிருந்த மேஜையில் வைத்து விட்டு, அந்த அறையை மூடிவிட்டு வெளியே ஹாலுக்கு சென்று சோஃபாவில் அமர்ந்தாள். கண்களில் அவளையறியாது கண்ணீர் வந்தது. நங்கையது மனம் மட்டுமல்ல, அவளது அழுகை கூட இரண்டாம் பேருக்கு தெரியாது. ஆம்… சத்தமில்லா அழுகையாய், தொண்டைக் குழியில் நிற்கும் அவள் துக்கமும்.
எத்தனை நேரம் அங்கே சமைந்திருந்தாளோ அவளுக்கே தெரியாது, காரணம் அழுதழுது அப்படியே ஒரு பக்கமாய் சாய்ந்து தூங்கி இருந்தாள். மெல்ல இருள் கவிழ ஆரம்பிக்க.. பசித்த வயிறு அதன் தேவை நிறைவேற சப்தமிட ஆரம்பித்தது. நிதானமாக விழித்தவள், வீட்டில் த்ரிவிக் இருப்பதற்கான அறிகுறி இல்லாததால், இலக்கின்றி வெறித்தாள். பின் ‘விண் விண்’ னென்று வலித்த நெற்றிப்பொட்டை பிடித்துக் கொண்டே எழுந்தாள்.
எதிரில் சுவரில் தொங்கிய கடிகாரம் கண்ணில் பட அவளையறியாது , “அவருக்கு என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணறத  விட சுவத்துல தொங்கற கடிகாரம் முக்கியமா போச்சு. சாப்பிட்டேனா இல்லையான்னு யோசிக்க மாட்டார், என் சமையல் எப்படி இருக்கும் – ன்னு தெரிஞ்சுக்க நினைக்காம, வந்த முத நாளே வெளில வாங்கி சாப்பிட நின்ன ஆளு அவரு.  இன்னிக்கு வரைக்கும் எப்படி சமைக்கிறேன்னு ஒரு வார்த்தை சொன்னதே இல்லை. இதுல பாட்[fat] இருக்கு, அதுல கொலஸ்ட்ரால் இருக்குன்னு க்ளாஸ் எடுக்க மட்டும் தெரியும். போதாததுக்கு அவங்க ஸ்டாஃப் மாதிரி வேலை செய்ய முடியாதுன்னு ஒரு கம்பேரிஸன்.”, பேச ஆரம்பித்தாள்.
” என் முகத்துல எண்ணெய் வழியுதுன்னு தான கிரீம்ஸ், லோஷன்ஸ் வாங்கினார் ? அப்போ என் முகம் பாக்க நல்லா இல்லன்னு தான அர்த்தம்? எனக்கு  ஏன் வராது எதிரிங்கிற நினைப்பு? ஹன்பண்ட் -ன்னு எப்படி வரும் பீலிங்ஸ்? கொடுக்கறதே இதைச் செய் அதைச் செய் ன்னு ஆர்டர்ஸ் தான்… இதுல ஏன் பேசலைன்னு கேள்வி வேற? பெரிசா பேசறார் ….”, ஆற்றாமை தனக்குத்தானே பேச வைத்தது.
நேரே சமயலறைக்குச் சென்றவள், காபி மேக்கரை ஆன் செய்து காஃபி தயாரித்தாள். தலைவலி மண்டையைப் பிளக்க… தைலம் எடுக்கவென , படுக்கையறையில் நுழைந்தவள்… படுக்கையில் த்ரிவிக் குப்புறப்படுத்து ஆழ்ந்து தூங்குவதைக் கண்டு சற்றே அதிர்ந்து, பின் நிதானமாய் சப்தமின்றி அவள் தேடியதை எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள். சிறிது நேரத்தில் காரியதரிசி  அலைபேசியில்  அழைக்க… மறுநாளுக்கான வேலைகளை திட்டமிட  ஆரம்பித்தாள்.
கிட்டத்தட்ட ஒன்னரை மணி நேரம் கழித்து எழுந்த த்ரிவிக், முகம், கை, கால் கழுவி வெளியே வந்தவன், நேரே டைனிங் ரூமிற்கு சென்றான். அங்கே டேபிளில் எதுவுமில்லாமல்  சுத்தமாய் இருக்க… “எனக்கு பசிக்கிது, சாப்பிட என்ன ரெடியா  இருக்கு?”, என்று இரைந்தான்.
அவன் குரல் கேட்டவளுக்கு… பசி மிகுந்திருக்கிறான், என்பது புரிய..  ஏற்கனவே  தயார் செய்து வைத்திருந்த இரண்டு வெஜ் பிரெட் சான்விச்களை மளமளவென  அவனில் [oven] சூடாக்கி டேபிளில் வைத்தாள். நொடியும் தாமதிக்காது சாப்பிட ஆரம்பித்தவன், “இது பத்தாது, ரெடியாகு வெளில சாப்பிட்டுக்கலாம்”, என்றான். குரலில் பசி இருந்ததே ஒழிய, துளிக்கோபம் இல்லை.   என்னடா ஆச்சு இவனுக்கு? என்பதைப்போல கண்டும் காணாமல் அவனை ஆராய்ச்சியாய் பார்த்திருந்தாள் நங்கை.
அவளுக்கு தெரியாது,  கோபமாக குளித்து முடித்து வெளியே வந்த த்ரிவிக்ரமன், அழுதழுது வீங்கிய முகத்துடன், உக்கார்ந்த நிலையிலேயே தூங்கிப் போன மனைவியைக் கண்டு… அவன் கோபம் பனி போல கரைந்ததும் , கூடவே அவன் மனம்,  நங்கையைப் பற்றி அவள் அப்பா சொன்னதை நினைத்ததுவும். “தாய் இல்லாததாலோ என்னவோ நங்கை வாய் திறந்து இது வேண்டும் என்று கேட்பவளில்லை, மனதையும் சீக்கிரத்தில் வெளிப்படுத்தும் பெண்ணும் இல்லை”, என்றல்லவா கூறினார்?. அவர் வார்த்தைகளை யோசித்தவனுக்கு, பத்து வயதில் இருந்து தாயின் அரவணைப்பின்றி வளர்ந்த மனைவியை புரிந்து கொள்ள, தானும் இதுவரை ஏதும் செய்ததில்லை என்பதும் புரிந்தது.
அவள் பேசியது தவறுதான், என அவன் அறிவு சுட்டியது, கூடவே நியாயமாக … அன்று அவளை நிறுவன சிப்பந்திகளுடன் ஈடு வைத்து த்ரிவிக் பேசிய பேச்சும் தவறுதான் எனவும் இடித்துரைத்தது.
அறிவு சொல்வதைக் காட்டிலும், நங்கை நல்லாளின் சூழலை, அவளாய் நின்று பார்க்க த்ரிவிக்ரமனின் மனம் எத்தனித்தது. வாழ்வதோ வீழ்வதோ இவளுடன்தான் என்றானபின், எந்தக் கணவனுக்கும் மனைவியை நேசிப்பது கடினமான காரியம் அல்லவே? த்ரிவிக்ரமனின் மாற்றத்தின் காரணம் இது.
அதன்பின் வந்த நாட்களில் தம்பதிகள் இருவருமே இயல்பாய் இருந்தனர் அல்லது இருப்பதைப்போல காண்பித்துக் கொண்டனர். பேசுவதில், வார்த்தைகளைக் கோர்ப்பதில் இருவரும் கவனமாக இருந்தனர். அந்நாளைய அலுவலக நிகழ்வுகள் , வியாபாரப் பேச்சுகள் முதலானவற்றை த்ரிவிக் , நங்கையிடம் தினமும் பகிர்வதை வழமையாக்க… நங்கையும் அவளது தொழில் முறைத் திட்டங்கள், முன்னேற்பாடுகள், வேலையாட்கள் குறித்து விவரிப்பாள். அவளது பேச்சின் மூலம் அவளை, அடுத்தவர் மீதான அவளது எண்ணங்களை, பிடித்தங்களை, சமூகத்தின் மீதான அவளது பார்வைகளை புரிந்து கொள்ள ஆரம்பித்தான்.
இருவரும் ஒரே அறையில், ஒரே கட்டிலில் உறங்கினாலும்.. ஒருவரை ஒருவர் நாடவில்லை. நங்கை மனம் திறந்து பேசும் வரை, கணவனாய் அவளை தீண்டுவதில்லை என்பதில் த்ரிவிக் மிகத் தெளிவாக இருந்தான்.
பாரதியின்,”இந்தத் தேகம் பொய் யென்றுணர் தீரரையென்
செய்வாய்!-மாயையே!” என்ற வரிகளுணர்ந்தவனானான்.
மனம் கட்டுக்குள் இருப்பவனுக்கு … நங்கையென்ன? உலக அழகியே ஆனாலும் எந்த மங்கையும் மயக்கம் தருவாளா என்ன?
இனி … அரிவை அறிவான்…

Advertisement