Advertisement

கன்னியவள்

காதல்

காதலனை

நிலைதடுமாறச் செய்ததாக

கூறியது  வரலாறு…

ஆனால்

என்னவளின்

குறும்புச் செய்கை

என்னை

அவள் முன்

கோழையாக்கியதை

எழுதுமா

இந்த வரலாறு???

 

ப்ரீதாவின் திருமணத்திற்கு இரு நாட்கள் முன்னதாகவே வந்திறங்கினர் ராதா தவிர்ந்த மற்ற அனைவரும்.. விடுமுறை கிடைக்காத காரணத்தால் இவர்கள் திருமணத்திற்கு இருநாட்கள் முன் வர ராதாவோ சொல்லியது போல் ஒரு வாரம் இருக்கையிலே ஊரிற்கு வந்து தன் தமக்கைக்கு துணையாய்  இருந்தார்..

வந்திறங்கியதும் வழக்கம் போல் அவளது சேட்டையும் தொடர்ந்தது… இந்த முறை அவளது நண்பர் பட்டாளத்திற்கு பதிலாக அவளுடன் கூட்டமைத்தது அவளது சமவயது உறவினர் பட்டாளம்… வீட்டில் உள்ள அனைவரையும் வம்பிழுத்து வாங்கிக்கட்டிக்கொண்டு சலித்த பின் அந்த படை மணமகன் ஹரி தங்கியிருந்த வீட்டிற்கு படையெடுத்தது…

ஶ்ரீயை பற்றி நன்கு அறிந்த ராதா அவர்கள் செல்வதற்கு தடை சொல்ல அதனை முறியடித்துவிட்டு தன் படையுடன் கிளம்பினாள் ஶ்ரீ…

அப்போதுதான் ஹரியின் வீட்டை வந்தடைந்திருந்தான் ரிஷி…. ரிஷினை கட்டியணைத்து உள்ளே அழைத்து செல்ல முயன்ற ஹரியின் நடையை தடை செய்தது ஶ்ரீயின் குரல்…

“ஹலோ யாருப்பா இங்க மாப்பிள்ளை…??? பொண்ணுவீட்டுல இருந்து வந்துருக்கோம்… வரச்சொல்லுங்க மாப்பிள்ளையை….” என ஏலம் போட ஹரியும் ரிஷியும் ஒரு சேர திரும்பிப்பார்த்தனர்…. ரிஷியை கண்டதும்

“ஹலோ சார்… நீங்க எப்படி இங்க??? ஓ மாப்பிள்ளை சார் பிரண்டா நீங்க??? என்ன மாமா இப்படி பார்த்துட்டு இருக்கீங்க… வீட்டுக்கு வந்தவங்களை வாங்கனு கூப்பிட மாட்டீங்களா?? இது மட்டும் ப்ரீதா அக்காவுக்கு தெரிஞ்சது… அவ்வளவு தான்…” என்று வழமைபோல் தன் அதிரடியை தொடங்க ரிஷியும் ஹரியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்….

அப்போது ஶ்ரீயின் படையில் இருந்து ஒரு பையன் முன்னே வந்து அவர்களை அறிமுகப்படுத்தினான்..

“அண்ணா இது ஶ்ரீ அக்கா… ப்ரீதா அக்காவோட சித்தி பொண்ணு… உங்களை பார்க்கனும்னு சொன்னாங்க அதான் அழைச்சிட்டு வந்தோம்… ஶ்ரீ அக்கா இவர் தான் ஹரி அண்ணா… ப்ரீதா அக்காவை கல்யாணம் பண்ணிக்க போறவரு….” என்று அவர்களை அறிமுகப்படுத்த ஶ்ரீயோ

“அது எனக்கு ஆல்ரெடி தெரியும்…”

“உனக்கு எப்படி அக்கா தெரியும்??”

“மாமா பக்கத்தில் இருப்பவரை எனக்கு தெரியும்… அதுனால எனக்கு தெரியும்”என்று தன் புதிர் வேட்டையை தொடங்க ரிஷி தவிர மற்றைய அனைவரும் என்னவென்று புரியாது நின்றனர்.. அப்போது ரிஷி திடீரென்று சிரிக்க அனைவரது கவனமும் அவன் புறம் திரும்பியது…அனைவரது கவனமும் தன்புறம் திரும்பியதை உணர்ந்த ரிஷி அவளது புதிரை விளக்கத்தொடங்கினான்…

“டேய் ஹரி.. ஶ்ரீயிற்கு என்னை நல்லாத்தெரியும்…. எனக்கு மேரேஜ்னா உன் கொழுந்தனாருக்கு இன்விடேஷன் போயிருக்கும்… ஆனா போகல.. அதுனால நீ தான் மாப்பிள்ளைனு என்னை பார்த்ததும் தெரிஞ்சிக்கிட்டாங்களாம்… அதைதான் சொல்றாங்க..” என்ற ரிஷியின் விளக்கத்தை கேட்டு அனைவருக்கும் ஓவென்றிருந்தது…

“பார்த்தீங்களா?? ரிஷி சாருக்கு புரிந்தது கூட என்னோட இவ்வளவு நாள் இருக்கிற உங்களுக்கு புரியல… அப்போ எப்படி மாமாக்கு புரியும்…. மாமா நீங்க ஏதும் கவலைப்படாதீங்க… இன்னும் கொஞ்ச நாளில் உங்களுக்கும் பழகிரும்…” என்ற ஶ்ரீயை பார்த்து முழி பிதுங்கி நின்ற ஹரியிடம் ரிஷி

“என்னடா இப்பவே கண்ணை கட்டுதா… இதெல்லாம் டீசர் தான்… இன்னும் நீ பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு….” என்று மெல்லிய குரலில் ரிஷி கூற

“அங்க என்ன தனியா பேசிக்கிறீங்க… இப்போ நாங்க உள்ள போக வழி விடப்போறீங்களா இல்லையா???” என்ற ஶ்ரீ  அவர்களை கடந்து தன் படையுடன் உள்ளே சென்றாள்…

அங்கு பெரியவர்கள் மட்டும் இருக்க அவர்கள் முன் தம்மைப்போல் உலகில் நல்லவர்கள் யாரும் இல்லை என்ற ரீதியில் மிகப் பவ்வியமாக நடந்துகொண்ட அப்படையை கண்டு ஹரி மற்றும் ரிஷி வாயடைத்து நின்றனர்…

“டேய் ரிஷி என்னடா இதுங்கு இந்த பம்மு பம்முதுங்க…வெளியில் அப்படி ரகளை பண்ணிட்டு இங்க பெரியவங்க முன்னுக்கு என்னமா நடிக்குதுங்க… இதுங்களை எப்படிடா இவங்க வீட்டுல சமாளிக்கிறாங்க.. அதுலயும் இந்த ஶ்ரீயை இன்னும் வீட்டில் வைத்திருக்கும் அவங்க அம்மா அப்பாவுக்கு கோயில் கட்டி கும்பிடனும் டா…என்னமா பேசுறா… யப்பா சாமி… ஒரு நிமிஷம் எனக்கு தலையே சுத்திருச்சி….” என்று ஹரி அங்கலாய்க்க ரிஷி சிரித்தான்…

ஶ்ரீ மற்றும் அவளது படையினர் மதிய உணவை முடித்துவிட்டே அங்கிருந்து கிளம்பினர்… அதற்கிடையில் அங்கிருந்த அனைவரின் பயோடேட்டாவினையும் கலெக்ட் பண்ணியிருந்தாள் ஶ்ரீ… அவரவருக்கு ஏற்ற மாதிரி சம்பாஷித்து  அனைவரையும் கவர்ந்துவிட்டாள்… ஊரைச்சுற்றி பார்க்க ஹரியையும் அழைத்து செல்ல அனுமதி வாங்கிவிட்டாள் ஶ்ரீ.. அப்போதும் வீட்டு பெரியவர்கள் முழுமனதாக அனுமதி கொடுக்காததை அறிந்து

“ உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி நாங்க போகலை பாட்டி… மாமாவுக்கு ஊரை சுற்றி காட்டப்போறோம்னு வீட்டுல ரொம்ப கெத்தா சொல்லிட்டு வந்தோம்… அப்போகூட அம்மா கேட்டாங்க….இரண்டு நாள்ல கல்யாணத்தை வைத்துக்கொண்டு மாமாவை தனியா அனுப்பமாட்டங்கனு… நான் தான் அதெல்லாம் அனுப்புவாங்க…மாமா வீட்டு ஆட்கள் ரொம்ப நல்லவங்க… எங்க ஆசையை புரிஞ்சிப்பாங்கனு சொன்னேன்… பரவாயில்லை பாட்டி உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி வேணாம்.. நாங்க தனியா சுற்றிப்பார்த்துட்டு வாரோம்..” என்று சரியான பிட்டை சரியான ஆளிடம் போட அதுவும் சரியாக வேலை செய்தது..

“அப்படியா ராசாத்தி சொன்ன… பாரு புள்ள ரொம்ப கவலைப்படுது… ராசா நீ இதுங்க கூட போயிட்டு வா…. உன்னோட கூட்டாளி புள்ளையையும் துணைக்கு கூட்டிட்டு போ… இருட்டுறதுக்கு மொத வீடு வந்து சேர்ந்திரனும்… சரியா??” என்று அனுமதியளிக்க ஶ்ரீ ரிஷி மற்றும் ஹரியை தன்னுடன் அழைத்து சென்றாள்… வீட்டை விட்டு வெளியே வந்ததும்

“மாமா நீங்க வயலுக்கு அந்த பக்கம் இருக்க ஆலமரத்துக்கிட்ட வெயிட் பண்ணுங்க…ஒரு சின்ன வேலை இருக்கு … அதை முடிச்சிட்டு பத்து நிமிஷத்தில் வந்துர்றேன்…வேறு எங்கேயும் போகாதீங்க… அங்கேயே இருங்க.. நாங்க வந்துர்றோம்..” என்றுவிட்டு தன் படையுடன் கிளம்ப ஹரியும் ரிஷியும்  வயலை நோக்கி நடக்கத்தொடங்கினர்.

“என்னடா… வாவானு கூப்பிட்டுட்டு நீங்க போங்க வாரோம்னு சொல்லிட்டு கிளம்பிட்டா?? இவளை நம்பி வந்திருக்க கூடாதோ…. ஒன்று சொல்லுறேன் ரிஷி… இந்த ஶ்ரீ ஜகலாலக் கில்லாடிடா…. எல்லாரையும் சொடக்கு போடுற நேரத்துல மடக்கிட்டாடா… என் பாட்டி அமிர்தவல்லியையே மடக்கிட்டானா பார்த்துக்கோயேன்….”

“ஹாஹா… அவளுக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்லடா… அவ பேச்சுக்கு எல்லாரும் சரண்டர்… “

“அது சரி… உனக்கு எப்படி ஶ்ரீயை தெரியும்… அவ என்னமோ உன்னை பல வருஷம் தெரிஞ்சவ மாதிரி சொல்லுறா… நீயும் ஆமா போடுற.. என்ன சங்கதி??”

“ அவளை லாஸ்ட் வீக் தான் மீட் பண்ணேன்…. அவ ரித்வியோட காலேஜ் ஜூனியர்..”  என்று அவளை சந்தத்து முதற்கொண்டு அனைத்தையும் கூறினான்…

“பார்டா… என் நண்பனையே கலங்கடிச்சிருக்காளே..ஆனா அவளோட ஆட்டிட்யூட் தான் எல்லோரையும் அவ பக்கம் இழுக்குது…ஆனா செம்ம சுட்டிடா… அவ என்ன செய்வா ஏது செய்வானு கொஞ்சம் கூட கெஸ் பண்ணவே முடியலடா…..”

“என்னடா உன் மச்சினிச்சிக்கு இப்படி பயப்படுற?? அதுவும் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் அவளை பார்த்த…அதுக்குள்ளேயே இப்படியா???”

“என்னடா பண்ண??? இந்த கொஞ்ச நேரத்துல அவ பண்ண விஷயங்கள் கொஞ்சமா நஞ்சமா??” என்ற அவர்களது உரையாடலை தடைசெய்தது ஶ்ரீயின் குரல்…

“என்ன மாமா என்னை பற்றி ரொம்ப புகழ்கின்ற மாதிரி இருக்கு….??” என்று பின்னாலிருந்து கேட்ட அவளது குரலில் ரிஷி மற்றும் ஹரி திரும்ப அங்கு ஶ்ரீயுடன் ப்ரீதா நின்றுக்கொண்டிருந்தாள்… ஶ்ரீயுடன் இன்னொரு பெண்ணை பார்த்தும் என்னவென்று புரியாது ரிஷி ஹரியை பார்க்க அவனோ பல நாட்கள் காணக்கிடைக்காதா என ஏங்கி நின்ற ஏதோவொன்றை பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்தான்… அவனது பார்வையே அது ப்ரீதா என்று ரிஷிக்கு அறிவிக்க அவனது கண்கள் மெச்சுதலாய் ஶ்ரீயை பார்த்தது… இவ்வாறு பார்வை மாற்றங்கள் தொடர ஶ்ரீயே அங்கு நிலவிய அமைதியை கலைத்தாள்..

“அக்கா நீ கேட்ட மாதிரி நான் மாமாவை கூட்டிட்டு வந்துட்டேன்..இனி நீயாச்சு…. அவராச்சு… உங்களுக்கு வன் ஹவர் தான் டைம் அதுக்குள்ள என்ன பேசனுமோ பேசிக்கோங்க… இதுக்கு பிறகு உங்களுக்கு இப்படி பேச டைம் கிடைக்காது…. சோ என்ன பேசனுமோ பேசிக்கோங்க… சார் வாங்க நாம போகலாம்…. மாமா அக்கா இனி உங்க பொறுப்பு…. நான் எப்படி கொண்டுவந்து விட்டேனோ… அப்படியே திருப்பி அனுப்பனும் புரிஞ்சிதா….”

“சரிங்க மேடம்… உங்க அக்காவை நான் கவனமா பார்த்துக்குறேன்….”

“அந்த பயம் இருக்கட்டும்… அக்கா நாங்க போய்ட்டு ஒரு வன் ஹவரில்  வர்றோம்..” என்றுவிட்டு அவர்களுக்கு தனிமையை ஏற்படுத்தி கொடுத்துவிட்டு ரிஷியை அழைத்து சென்றாள் ஶ்ரீ. ரிஷயை அருகிலிருந்த மாந்தோப்பிற்கு அழைத்து சென்றாள் ஶ்ரீ.. அங்கு வாசலில் இருந்து சிறு கூடாரம் போல் அமைக்கப்பட்டிருந்த அம்மன் சன்னிதானத்திற்கு ரிஷியை அழைத்து சென்றவள் தான் அணிந்திருந்த காலணியை ஓரமாக கழற்றி வைக்க அவளை பின்தொடர்ந்து ரிஷியும் அதையே செய்தான்… அந்த அம்மனை இருவரும் ஒரு சேர தரிசித்து விட்டு அங்கிருந்த விபூதியை எடுத்து ரிஷிக்கு கொடுத்தவள் பின் தானும் பூசிக்கொண்டு மீதமிருந்ததை வாயில் போட்டுக்கொண்டாள்… அவளை விசித்திரமாக பார்த்த ரிஷியிடம்

“கன்னி பொண்ணுங்களை காத்து கருப்பு லபக்குனு புடிச்சிருமாம்… அதுகிட்ட இருந்து தப்பிக்க தான் இந்த தற்காப்பு முயற்சி…”

“கன்னிப்பொண்ணுங்களை மட்டுமா இல்ல கன்னி பசங்களையுமா??”

“ஐதிங் கன்னிப்பொண்ணுங்களா தான் இருக்கும்.. ஏன்னா பாட்டி அன்னைக்கு அங்க இருந்த பொண்ணுங்களை மட்டும் தான் வாயில போட்டுக்க சொன்னாங்க… சோ பொண்ணுங்களை தான் புடிக்கும்னு நினைக்கிறேன்….”

“அப்போ மோகினி பிசாசு கன்னி பசங்களை பிடிக்கும்னு சொல்லுறாங்களே… அது உண்மையில்லையா??”

“என்ன சார் புதுசா என்னென்னமோ சொல்லுறீங்க?? இப்போ எதுக்கு பீதியை கிளப்புறீங்க?? நான் ஏதோ சும்மா இந்த பாட்டி உளறுனத சொன்னா நீங்க என்னமோ பேய் பிசாசுனு கிளப்பிவிடுறீங்க??” என்று அழுகுரலில் கேட்க

“நீ ஏன் ஶ்ரீ பயப்படுற??? அதுதான் நீ விபூதியை வாயில போட்டுகிட்டியே.. அப்புறம் எதுக்கு நீ இப்படி பயப்படுற??”

“ஐயோ சார்… இந்த கோயிலில் இருக்க விபூதி செம்ம டேஸ்ட்… அதை சாப்பிடுவதற்காக இதை ஒரு சாக்கா சொல்லிப்பேன்…”

“ஏன் ஶ்ரீ உனக்கு சாப்பிட வேற ஏதும் கிடைக்கலையா?? சின்ன பிள்ளை மாதிரி விபூதி சாப்பிட்டுட்டு இருக்க??? இது மட்டும் தானா இல்லாட்டி சைட் டிஸ்ஸிக்கு குங்குமம் சந்தனமும் எடுத்துப்பியா???”

“சார் நான் என்ன மனுஷனா வேறெதுமா?? அதெல்லாம் சாப்பிடுவதற்கு??”

“உன்னை நம்ப முடியாது ஶ்ரீ… நான் சொன்னதை நீ செய்தாலும் செய்வ…”

“இல்லை சார் எனக்கு புடிச்ச ஐட்டம் இதில்லை… இன்னொன்னு இருக்கு….” என்றுவிட்டு மாந்தோப்பினுள் அழைத்து சென்றாள் ஶ்ரீ.. அங்கு நன்கு கிளைபரப்பி இருந்த ஒரு மாமரத்தின் மீது கணப்பொழுதில் ஏறியவள் மாம்பழங்களை பறித்து கீழே போட்டாள்… அவள் ஏறியதும் பதறிய ரிஷி அவளை கீழிறங்குமாறு அழைக்க அவளோ தன் வேலையை முடித்த பின்பு தான் கீழே இறங்கினாள்… அவளை முறைத்தவாறு நின்ற ரிஷியிடம்

“ஏன் சார் இப்படி முகத்தை வைத்திருக்கீங்க… உங்களுக்கு இது செட்டாகல… இப்போ நீங்க என்ன செய்வீங்கலாம் அதோ அந்த மரத்து மேல ஏறி அங்க இருக்க கத்தி,உப்புத்தூள், மிளகு தூள் எல்லாம் எடுத்துட்டு வருவீங்களாம்…” என்று ரிஷியை மரமேறச்சொல்ல அவனும் அவள் காட்டிய மரத்தின் மீது ஏறி அவள் காட்டிய இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினான்… அதற்குள் பறித்து போட்ட அனைத்து மாங்கனிகளையும் கடைபரப்பியிருந்தாள் ஶ்ரீ… ரிஷியிடம் மாங்கனிகளை வெட்டக்கூறியவள் அதற்குள் மிளகுத்தூளையும் உப்புத்தூளையும் கலந்து ஒரு கலவையை தயாரித்திருந்தாள்…  

அந்த கனிகளை ருசிப்பதற்கு முன் அவள் தன் மொபைலை வைத்து ஏதோ தடுமாறிக்கொண்டிருக்க

“என்ன ஶ்ரீ?? எனி ப்ராப்ளம்???”

“ஆமா சார்… இந்த  சிட்டுவேஷனுக்கு ஒரு பாட்டு தேடுறேன்… கிடைக்க மாட்டேன்குது… நீங்க ஏதாவது சஜஸ்ட் பண்ணுங்களே சார்” என்று கேட்டவளை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று அவனுக்கு தெரியவில்லை…

“ஏன் ஶ்ரீ நீ எப்பவும் இப்படியா இல்ல இப்பதான் இப்படியா??”

“ஏன் சார் உங்களுக்கு இப்படி ஒரு டவுட்டு ???? நான் எப்பவும் இப்படி தான்… எனக்கு தோன்றுவதை செய்வேன்… ஐ வான்ட் ஆல்வேஸ் மை செல்ப் டூ பீ ஹெபி….”

“செம்ம ஶ்ரீ…. இப்படியே ஹாப்பியா இருக்கேனு சொல்லி சுற்றி இருக்கவங்களை திணறடிச்சிட்டே இரு…. அது சரி இங்க எப்படி சால்ட் என்ட் பெப்பர் வந்தது?? அப்புறம் உன்னோட வானரச்சேனை எங்க??”

“அதுங்களை வீட்டுல கழட்டிவிட்டுட்டு டெயிலர் ஷாப் போறோம்னு அக்காவை கூட்டிட்டு வந்தேன்… அக்காவும் மாமாவும் மீட் பண்ணவே இல்லைனு தெரிந்தது… அதான் இந்த சான்சை யூஸ் பண்ணிக்கலாம்னு அக்காவை கூட்டிட்டு வந்தேன்…இங்க அடிக்கடி யாராவது வந்து மாங்காய் திருடுறது வழக்கம்… திருடி கொண்டு போறது அவ்வளவு ஸ்சேப் இல்ல..அதான் இங்கயே சாப்பிடுவதற்காக இதெல்லாம் ஸ்டாக் பண்ணி வைப்பாங்க… அப்படி தான் இதெல்லாம்…”

“ஓ…அப்ப இதையே பொளப்பா வச்சிட்டு சுத்துறீங்க… அது சரி அடிக்கடி ஊருக்கு வருவீங்களோ??”

“ஸ்கூல் டைமில் ஒவ்வொரு திருவிழாவுக்கும் குடும்பமா வந்திருவோம்.. பட் இப்போலாம் ஏதாவது பங்ஷன்னா மட்டும் தான் வருவோம்…”

“ஓ…”

“சார் உங்களை பற்றி ஏதும் சொல்லலையே??”

“என்ன சொல்லனும்னு எதிர்பார்க்குற??”

“எஸ் யூஷுவல் இந்த இன்டர்வியூவில் பதில் சொல்லுற மாதிரி இல்லாம உங்களோட இன்டஸ்ட்ஸ், ஹொபிஸ், ரொம்ப புடிச்ச விஷயம், டிராவல் பண்ண கன்ட்ரீஸ் இப்படி ஏதாவது இன்டஸ்டிங்கா சொல்லுங்க….” என்று கேட்க தன்னை பற்றிய முழு விபரத்தையும் கூறினான் ரிஷி… அவன் பேச பேச ஶ்ரீயிற்கு அவளறியாமலேயே அவன் மீது ஒரு ஈர்ப்பு உண்டானது…. இதுவரை நேரம் அவனை பற்றி அறிந்துகொண்டது ஒன்றுமில்லை என்று அவனுடனான இந்த உரையாடலில் அறிந்து கொண்டாள் ஶ்ரீ…. ஈர்ப்பையும் மீறி அவன் மீது ஓரு மரியாதை உண்டானது…. ரித்வி அடிக்கடி தன் அண்ணன் பற்றி பெருமையாக பேசும் போது எல்லாம் அவனை இவள் கேலி செய்வாள்..

“ஏன் ரித்வி அண்ணா உங்களுக்கு உங்க அண்ணா புராணம் பாடி போர் அடிக்கலையா???  எப்போ பார்த்தாலும் அண்ணா அண்ணானு அவர் பாட்டு தான்…. பேசாம நீங்க நாரதர் மாதிரி ரிஷியாய நமஹ ன சொல்லிட்டு திறிங்க…” என்று அப்போது கேலி செய்தவளுக்கு இப்போது தான் அவனது ரிஷி புராணத்திற்கு அர்த்தம் புரிந்தது..

பேச்சு ஸ்வாரஸ்யத்தில் நேரம் கடக்க ரிஷி தான் தாமதமாவதை உணர்ந்து அவளை அங்கிருந்து கிளப்பி ஹரி மற்றும் ப்ரீதா இருந்த இடத்திற்கு அழைத்து சென்றான்..

 

Advertisement