சம்யுக்தா வெற்றிகரமாகப் படிப்பை முடித்து விட்டாள். ஆரியன் விளையாட்டுக்கு சொல்லவில்லை. உண்மையிலேயே மனைவியைச் சுவிட்சர்லாந்துக்கு இன்னொரு தேன்நிலவுக்கு அழைத்துச் சென்று வந்தான்.

சந்திரா சில நாட்கள் மகளிடம் சென்று இருந்து விட்டு வந்தார். பவித்ரன் மாமியாருக்கு எல்லாம் பார்த்து பார்த்து தான் வாங்கிப் போட்டான். ஆனால் அதற்கு மேல் எந்தப் பேச்சும் வைத்துகொள்ள மாட்டான். அவரிடம் வைத்துக் கொண்டால் வீணாக தன் மரியாதை கெடும் என்று அவனுக்குத் தெரியும். 

அதோடு ஆரியன் தான் எச்சரித்து இருந்தானே அதன்படியே நடந்து கொண்டான். சந்திரா மகளிடம் எதாவது விசேஷம் இருக்கா என்றதற்கு, “இப்போ குழந்தை வேண்டாம்னு சொல்றார் மா… இன்னும் நல்ல வேலை கிடைகட்டும்னு சொன்னார்.” என்றதும், அதைத் தன் சம்பந்தி வீட்டினரிடம் பஞ்சாயத்து வைத்தார் சந்திரா.

முதல் பிள்ளை செலவு முழுசும் எங்களோடது. அப்புறம் ஏன் உங்க பிள்ளை இப்படிப் பண்றார்.” என்றார்.

எங்களுக்குக் குழந்தை வரும் போது, நாங்க இன்னும் நல்ல நிலையில் இருக்கணும்னு நினைக்கிறோம். என் குழந்தைக்கு எல்லாம் நானே பார்த்துப்பேன்.” என்ற பவித்ரன் இறங்கி வருவதாக இல்லை. அதெல்லாம் சந்திராவுக்கு மிகுந்த வருத்தம். ஆனால் அவருக்குத் தெரியாமல் சீதா மகனுக்கு அறிவுரை வழங்கினார்.

குழந்தை பிறந்து அதை வளர்க்க முடியாத நிலையில ஒன்னும் நீ இல்லை. இதெல்லாம் காரணும்னு சொல்லாத… ஒழுங்கா காலக் காலத்தில பிள்ளையைப் பெத்துக்கப் பாரு.” என்றார்.

வெளிநாட்டில் இருந்து வந்த சிறிது நாட்களில் சம்யுக்தா உண்டாகி இருப்பது தெரிய… அவளும், ஆரியனும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். இருவரின் குடும்பமும் அவளைத் தாங்கியது. அவளைத் தனியாக இருக்க விடவே இல்லை.

சரளா வந்து உடன் இருப்பார். அவர் ஊருக்குச் செல்லும் போது அம்மா வீட்டில் இருப்பாள். ஆரியன் அதற்கு மேல் தாங்கினான்.

ஞானம் இதை வேறு ஒருவரிடம் பெருமையாகச் சொல்லும் போது, சந்திரா கேட்டுக் கொண்டு இருந்தார். சம்யுக்தா உண்டாகி இருப்பது பற்றி சரளா அவரிடம் எதுவும் சொல்லவில்லை.

சம்யுக்தாவுக்கு ஐந்து மாதங்கள் நடந்து கொண்டிருக்க… கணவனுடன் ஊர் திருவிழாவுக்கு வந்திருந்தாள். பவித்ரனும் ஸ்ரீநிதியும் கூட வந்திருந்தனர்.

பவித்ரன் வேறு வேலைக்கு மாறி இருக்க… இப்போது சம்பளம் அதிகம் தான். அதனால் இப்போது இருக்கும் அலுவகத்திற்குப் பக்கத்தில் இன்னும் நல்ல வீட்டிற்கே மாறி இருந்தான். இப்போது தான் சந்திரா தனது பொருமலை கொஞ்சம் விட்டிருந்தார்.

வழக்கம் போல எல்லோரும் கோவிலின் முன்பு தான் பொங்கல் வைத்தனர். சீதா உட்கார்ந்து கொண்டு மருமகளையே எல்லாம் செய்ய வைத்தார். சம்யுக்தா உண்டாகி இருப்பதால்… சரளா அவர் மட்டும் முன்பே வந்துவிட்டு, மருமகளைத் தாமதமாகத்தான் வர செய்தார்.

அக்காவும் தங்கையும் அருகருகே இருந்து பொங்கல் வைக்க… சந்திரா எதிர் வரிசையில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தார்.

பவித்ரன் தான் முதலில் ஆரம்பித்தான். “அக்கா தங்கச்சி ரெண்டு பேர்ல யார் பொங்கல் முதல்ல பொங்குதுன்னு பார்ப்போம்.” என்றதும், ஸ்ரீநிதி ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், அங்கிருந்த விறகு மட்டை என எல்லாவற்றையும் அடுப்பிற்குள் திணிக்க… அடுப்பு அணைத்து புகைய ஆரம்பித்து விட்டது.

சம்யுக்தா போட்டியாகக் கருதாததால்… விறகு எரிய எரிய தான் இன்னொன்றை உள்ளே வைத்தாள். தோழி ஜெயிக்க வேண்டும் என அவினாஷ் வந்து உதவ ஆரம்பித்தான்.

புகையில் ஸ்ரீநிதிக்குக் கண் எரிய ஆரம்பிக்க… சம்யுக்தா எழுந்து சென்று அவளின் அடுப்பில் இருந்த அதிகப்படி விறகு மாட்டை எல்லாம் எடுத்து விட்டு, மீண்டும் அடுப்பை பற்ற வைத்துக் கொடுத்தாள். சரளாவும் சீதாவும் பார்த்ததாலும், அக்காவும் தங்கையும் அவர்களே செய்யட்டும் எனக் கண்டுகொள்ளாமல் இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்.

அடுப்பு திரும்ப எறிந்ததும் தான் ஸ்ரீநிதிக்கு நிம்மதியானது. “நான் டென்ஷன் ஆகிட்டேன்.” என

நம்ம ரெண்டு பேர்ல யார் பொங்கல் பொங்கினாலும் இப்போ என்ன? அத்தான் சொல்றாருன்னு நீயும் டென்ஷன் ஆகிட்டு.” என்றவள், நிதானமாகவே பொங்கல் வைக்க… ஆனால் அவினாஷ் தோழியை ஜெயிக்க வைக்க… ஏதேதோ செய்து கொண்டிருந்தான்.

முதலில் சம்யுக்தாவின் பானை பொங்கி வழிய…. அடுத்து உடனேயே ஸ்ரீநிதியின் பொங்கல் பானையும் பொங்கி விட்டது. அக்கா தங்கை இருவருக்கும் அடுத்தடுத்து பொங்கல் பொங்கியது மகிழ்ச்சியே.

ஆரியன் எதிலுமே கலந்து கொள்ளவில்லை. அவன் தள்ளி நின்று மனைவியை ரசித்துக் கொண்டிருந்தான்.

பச்சையில் வெள்ளி ஜரிகை வைத்த பனாரஸ் புடவையில்…. ஐந்து மாத கருவை தாங்கும் தாய்மையின் பூரிப்பும் சேர்ந்து கொள்ள… சம்யுக்தா அவ்வளவு அழகாக இருந்தாள்.

பொங்கல் பொங்கியதும், “புகையா இருக்கு நீ உள்ளப் போ… இனி நான் பார்த்துக்கிறேன்.” என அவளை சரளா கோவிலுக்குள் அனுப்பி விட்டார். ஆனால் சீதா ஸ்ரீநிதியை அப்படி அனுப்பாமல், அவர் சொல்ல சொல்ல பொங்கலை செய்ய வைத்தார்.

இந்த அம்மா பொங்கலை கிண்டக் கூடாதா… என் மகளையே வேலை வாங்குதே…” எனச் சந்திரா மனதிற்குள் பொங்கிக் கொண்டு தான் இருந்தார்.

எல்லோரும் பொங்கல் வைத்து எடுத்துக் கொண்டு கோவிலுக்குள் வந்தனர். கூட்டமாக இருந்ததால் சம்யுக்தா அங்கிருந்த இன்னொரு பிரகாரத்தில் உட்கார்ந்து இருந்தாள்.

அத்தான் என்னோட எல்லாம் பேச மாட்டீங்களா?” என ஸ்ரீநிதி அவளாக ஆரியனிடம் கேட்க…

பேசக் கூடாதுன்னு எல்லாம் இல்லை. ஏன் நீ பேச வேண்டியது தான.” என்றான்.

நாங்க இப்போ வீடு மாறிட்டோம், உங்களுக்குத் தெரியுமா? சம்யுக்தாவை கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வாங்க.” 

சரி…” என்ற ஆரியன், “பவித்ரனே தான் எல்லாமே பார்த்து பார்த்து தானே செய்யுறான். ஆனா உங்க அம்மாவுக்குக் கொஞ்சம் பொறுமையா இருக்க முடியலை இல்லை… அதுக்குள்ள அவன்கிட்ட மூஞ்சை காமிச்சு… பேசாம முகத்தைத் திருப்பிட்டு இதெல்லாம் நல்லவா இருக்கு.” என்றதும்,

நானும் சொல்லிட்டேன் அத்தான். ஆனா அம்மா கேட்க மாட்டேங்கிறாங்க.” என்றாள்.

நீ உங்க அம்மா மாதிரி இல்லாம இருந்தாலே போதும்.” 

நீங்க வேணா அவர்கிட்ட கேளுங்க, நான் நல்லத்தான் இருக்கேன்.” 

எப்பவும் இப்படியே இருந்தேனா உனக்குத் தான் நல்லது. நான் அவ்வளவு தான் சொல்வேன்.” என்றவன் மனைவியிடம் சென்றான்.

பவித்ரன் இதே நிலை போதும் என்று இருக்கவில்லை. அது ஸ்ரீநிதிக்கும் தெரியும். நாமும் நன்றாக இருப்போம் என்ற நம்பிக்கை வந்திருந்ததால்… அவள் கணவனுடன் மனம் ஒத்து தான் வாழ்ந்தாள். 

பூஜை நேரத்திற்குச் சடகோப்பனும் வந்து விட… “நாம கூப்பிடும் போது எல்லாம் கோவிலுக்கு வரலை… இப்போ மருமகள் உண்டாகி இருக்கானதும் சாமி குத்தம் ஆகிடக் கூடாதுன்னு வர்றார்.” என்றார் சரளா கிண்டலாக.

ஏன் அத்தை மாமா வந்தாலும் குத்தம் சொல்றீங்க?” என சம்யுக்தா மாமனாருக்கு பரிந்து கொண்டு வர…

அப்படிச் சொல்லுடா… என் மருமகளுக்காக நான் வருவேன்.” என்றார் சடகோப்பன்.

கோவிலில் பூஜை முடித்து எல்லோரும் ஒன்றாகத்தான் வெளியே வந்தனர். பிறகு அவரவர் விடைபெற்று செல்ல… சம்யுக்தாவை மட்டும் ஆரியன் அங்கேயே உட்கார்ந்து இருக்கச் சொன்னவன், “நான் போய்ப் பைக் எடுத்திட்டு வரேன். நீ நடக்காத.” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

பெற்றோரை அழைத்துக் கொண்டு, அதோடு காரில் சாமான்களையும் ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டியது இருந்ததால்… அவினாஷும் சென்று விட…. சரளாவும் சடகோப்பனும் ஆளுக்கொரு சாமானை எடுத்துக் கொண்டு அவன் பின்னே சென்றனர்.

சம்யுக்தா மட்டும் கோவிலுக்கு வெளியே உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள். பைக் என்றால் கோவில் வரை வரலாம் என்று தான் பைக்கில் வந்திருந்தனர். காரில் வந்தால் அதிகத் தூரம் நடக்க வேண்டியது இருக்கும். அதோடு இப்போதெல்லாம் பொங்கல் வைக்கும் இடத்தில் பெரிய வாகனங்களை அனுமதிப்பதும் இல்லை.

ஏய் பொண்ணு.” எனக் குரல் கேட்க…

யாரோ என்று சம்யுக்தா திரும்பிப் பார்க்க… சந்திராவைப் பார்த்ததும் அவள் முகம் மாறவே செய்தது. ஆனாலும் அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.

முறையா கல்யாணம் பண்ணி பிறந்த என் பொண்ணுக்கு சரியில்லாத வாழ்க்கை. ஆனா உனக்கு மட்டும் எல்லாம் சரியா நடக்குது.” என்றார்.

சந்திரா சம்யுக்தாவுடன் பேசுவதைத் தூரத்தில் இருந்து கவனித்த பவித்ரன், அவன் பெற்றோரை கிளம்பச் சொல்லி விட்டு மனைவியுடன் அங்கே வந்தான்.

தாங்கிறதுக்கு ஆள் இருக்குன்னு திமிர்ல திரியாத. உன் பேர்ல உங்க அப்பா கொடுக்கிற சொத்துக்குத்தான், உங்க அத்தை குடும்பம் உன்னைத் தலையில வச்சு கொண்டாடிட்டு இருக்கு. உனக்கு அந்தச் சொத்து கிடைக்க நான் எப்பவும் விட மாட்டேன்.” என்றார் திமிராக.

என் அண்ணனும் தம்பியும் எனக்காக என்ன வேணா செய்வாங்க. அது உனக்கும் தெரியும்.” என்றதும், சம்யுக்தா கொஞ்சம் வெலவெலத்துப் தான் போனாள். இப்போது வரை அவள் அம்மா படும் பாடு அவள் அறிவாள். அதோடு அப்போது ஏற்பட்ட மன உளைச்சலில் சக்ரவர்த்தியின் உடல் நிலையும் இப்போது வரை சீராக இல்லை.

உன் புருஷன் இருக்கத் தைரியம், அவனையும் ஒரு கை பார்க்கிறேன்.” என்றவர் கிளம்பி செல்ல… சம்யுக்தா ஒரு மாதிரி அதிர்ச்சியில் இருந்தாள். ஆனால் சந்திரா கிளம்புகிறார் என்றதும்,

ஒரு நிமிஷம் பெரியம்மா…” என்றவள்,

உங்களுக்குச் சொத்தை கொடுத்தா… அதோட எங்க அப்பாவை எங்களுக்கே விட்டுடுவீங்களா… அவரை எந்த விதத்திலேயும் தொந்தரவு பண்ண மாட்டேன்னு சொல்லுங்க, சொத்தை நான் கொடுத்திடுறேன்.” என்றாள்.

அம்மாவை அழைத்துச் செல்ல வந்த ஸ்ரீகாந்த், ஏற்கனவே அங்கே வந்திருந்த ஸ்ரீநிதி இருவருக்கும் அதிர்ச்சி தான். சந்திராவுமே அவள் இப்படிக் கேட்பாள் என்று நினைக்கவில்லை.

நீ சொன்னதைச் செய். அப்புறம் பார்க்கலாம்.” என்றார்.

நீங்க கண்டிப்பா விடுதலை பத்திரம் எழுதி தரணும். அதோட எங்க அப்பாவையோ, அம்மாவையோ… இல்லை என் புகுந்த வீட்டையோ நீங்க தொந்தரவு பண்ணக் கூடாது.” என்றாள் தெளிவாக.

நீ சொன்னா போதுமா உங்க அப்பா ஒத்துக்க வேண்டாமா… அவரை ஒத்துக்க வை பார்க்கலாம்.” என்றார் சந்திரா.

அம்மா…” என ஸ்ரீகாந்தும், ஸ்ரீநிதியும் ஒரே நேரத்தில் கத்த… தூரத்தில் கணவன் வருவதைப் பார்த்த சம்யுக்தா, “இங்க எந்தச் சண்டையும் வேண்டாம்.” என்றவள், கணவனை நோக்கி சென்றாள்.

இவளை இறக்கி விட்டுப் பைக்கை தள்ளி சென்று நிறுத்தி இருந்தான். எடுக்கச் சென்ற போது, நண்பர்கள் சிலர் எதிரில் வர… அவர்களோடு பேசிவிட்டுச் சென்றதில் காலத் தாமதம் ஆகி இருந்தது.

மனைவியின் அருகே வண்டியை நிறுத்தியவன், “ரொம்ப நேரமா வெளியே நிற்கிறியா? நான் உன்னை உட்கார தான சொன்னேன்.” என்றான்.

இல்லை இப்போ தான் வந்தேன்.” என்றவள், வண்டியில் ஏறி உட்கார… அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

இவர் என்ன ஜென்மம் என்பது போலப் பவித்ரன் மாமியாரைப் பார்க்க… “எங்களுக்கு அப்பா வேணும்மா.” என்றனர் ஸ்ரீகாந்தும், ஸ்ரீநிதியும்.

உங்க அப்பா எங்க போயிடப் போறார்.” என்றார் அலட்சியமாக.

சந்திராவுக்குப் புரியவே இல்லை. சக்ரவர்த்தியுடன் இருக்கும் வரைதான் தனக்குப் பாதுகாப்பு என்பது இன்னும் தெரியவில்லை.

இப்போது அவர் பேசியது முதலில் ஆரியனுக்குத் தெரிந்தால்… அவர் கதி என்ன ஆகும்.