அத்தியாயம் -3

“டேய் ஹர்ஷா சீக்கிரம் கிளம்புடா. பாவம் ஹாசி வந்து வெயிட் பண்ணிட்டு இருக்க போறா” என்று பத்மாவதி கத்தி கொண்டு இருக்க,

கூலாக கார் சாவியை கையில் சுற்றி கொண்டு வந்தவன் “ம்மா ஏன் டென்சன் ஆகுறீங்க. கிளம்பிட்டுதானே இருக்கேன். பிளைட் வர டைம் இருக்கு.

ரொம்பதான் ஏதோ சீப் மினிஸ்டர் வர மாதிரி என்னை போட்டு பாடா படுத்துறீங்க”.

“அப்படி இல்லடா கண்ணா ரொம்ப வருஷம் கழிச்சு சென்னை வறா. இடம் தெரியாம எங்கயாவது போயிட்டா அந்த பயம்தான். ஊரு வேற கெட்டு போய் கெடக்கு. வயசு புள்ளைய நம்மள நம்பிதானே அனுப்பியிருக்காங்க. இங்க இருந்து போகும் போது அவளுக்கு எட்டு வயசுதான் இருக்கும்”
“அதேதான்ம்மா நானும் சொல்றேன். அவ இங்க இருந்து போய் பல வருஷம் ஆச்சு. சின்ன வயசுல பார்த்தது இப்போ எப்படி அவளை கண்டுபிடிப்பேன். ஏதோ பொக்கிஷத்த காப்பாத்துற மாதிரி போட்டோவ கண்ணுலயே காட்ட மாட்டிக்கறீங்க”

“ஹிஹிஹி…… சாரி டா கண்ணா. போட்டோ கேட்கணும்னுதான் நினைச்சுட்டே இருந்தேன். மறந்துட்டேன். இப்போ என்ன உனக்குதான் அவளை தெரியாது. அவளுக்கு உன்னை நல்லா தெரியும். நம்ம பேமிலி போட்டோ எல்லாம் அனுப்பியிருக்கேன். அதையெல்லாம் பார்த்துட்டு என்கிட்ட அதைப்பத்தி பேசியும் இருக்கா. அதனால நீ போய் நில்லு அவளே உன்கிட்ட வருவா” என்றவரை பார்த்து முறைத்தவன்,

“என் பக்கத்துல வர்ற பொண்ண கூட்டிட்டு வரேன். அது வேற பொண்ணா இருந்தா என்னை குறை சொல்ல கூடாது சொல்லிட்டேன்” என்னும்போதே அங்கு வந்த அவன் பாட்டி “ம்கூம்…. மருமக வர போறா இன்னும் ஒரு கூறு இல்ல.

ஒரு போட்டோ வாங்கி வைக்கணும்னு கூட தெரியல. இவளை வச்சி என்னன்னு என் மகன் குப்பை கொட்றானோ தெரியல. அப்போவே அந்த மனுஷன்கிட்ட சொன்னேன். உங்கவீட்டு வகையறா வேணாம். உங்க ஆளுங்க எல்லாருக்கும் வாய்தான் இருக்கும் வெவரம் இருக்காதுன்னு கேட்டாதானே.

என் தங்கச்சி மக ஊர்ல இல்லாத சீம சிறுக்கின்னு சொல்லி என் பையன் தலைல கட்டிவச்சுட்டு எனக்கென்னன்னு போய் சேர்ந்துட்டாரு. இவ கூட காலத்துக்கும் மாறடிக்கறது நான்தானே.

ச்ச….. என் அண்ணன் மகள கட்டலாம்னு தலபாடா அடிச்சுக்கிட்டேன். எங்க கேட்டார். அவ எவ்ளோ அமைதி, எவ்ளோ அழகு. ம்கூம்…..என் பையன் வாழ்க்கையே போச்சு” என்று இல்லாத கணவனை தேவகி பாட்டி கரித்து கொட்டி கொண்டு இருக்க,

தாய் பேசுவதை பார்த்து கொண்டிருந்த கிருஷ்ணன் அருகில் சென்ற பத்மா “அங்க என்ன உங்க அம்மா வாய பார்த்துட்டு இருக்கீங்க. வயசான காலத்துலயாவது வாய மூடிட்டு இருக்கணும்னு அவங்களுக்கு தோணுதா. இன்னும் ஒரு வார்த்தை அவங்க வாயில இருந்து வந்துச்சு காலை டிபன்ல பேதி மாத்திரை கலந்து குடுத்துடுவேன் பார்த்துக்கோங்க” என்று மிரட்ட,

தாயை எண்ணி அரண்டு போன கிருஷ்ணன் ‘ஆத்தி…. இவ செஞ்சாலும் செய்வா எதுக்கு வம்பு’ என்று நினைத்தவர், தாயிடம் ம்மா…. முடிஞ்சதை பேசி இப்போ என்ன ஆக போகுது. அதையே ஏன் பேசிட்டு இருக்கீங்க. ஆமா அந்த வெள்ள பணியாரம் இப்போ எங்க இருக்காளாம்”.

பத்மா, “எதே…. வெள்ள பணியாரமா….”

பாட்டி, “ஆமாடி. என் அண்ணன் மக நல்லா வெள்ளையா இருப்பா. அவளை அவன் அப்படிதான் கூப்பிடுவான்” என்று பெருமையாக சொன்னவர்,

மகனிடம் “அவ திருச்சில இருக்காப்பா. என்னைய கூட வீட்டுக்கு வாங்க அத்த…வீட்டுக்கு வாங்க அத்தைனு கூப்பிட்டுட்டுதான் இருக்கா. ம்ம்ம் … எங்க எனக்குதான் போக குடுப்பனை இல்ல. இவளை நம்பி குடும்பத்தை விட்டுட்டு போக முடியல. ஒரு போட்டோகூட வாங்கி வைக்க துப்பு இல்லாதவளை கட்டி வச்சு உன் வாழ்க்கையை வீணாக்கி புட்டு போட்டோல எப்படி மீசைய முறுக்கிகிட்டு நிக்குறான் பாரு. உன் அப்பன் அவனை சொல்லணும்” என்றவர் புலம்ப,

கிருஷ்ணன் பாவமாக மனைவியை பார்க்க, ஹர்ஷாவோ இது எப்போவும் நடப்பதுதான் என்பதால் பெரிதாக எடுத்து கொள்ளாமல் போனை எடுத்து வைத்து அமர்ந்து கொண்டான்.

“டேய் புருஷ் இந்த அப்பாவி லுக் எல்லாம் என்கிட்ட விடாத. உன் ஆத்தா அவ்ளோ பேசுதே நீ எதாவது வாய தொறக்குறியா.

வெள்ள பணியாரமா…. என்ன இளமை திரும்புதோ தொரைக்கு. இப்போ நீ வாய திறந்து உங்க ஆத்தா வாய மூட சொல்லல, நான் உன் வாயில குத்துற குத்துல உன் முகமே பணியாரம் மாதிரி வீங்கி போகும் பார்த்துக்கோ . என்னால அப்படி என்ன உன் வாழ்க்கை வீணா போச்சு” என்று கேட்டு கொண்டிருக்கும்போதே,

பாட்டி “என்னடி அங்க என் பையன்கிட்ட குசு குசுன்னு பேசிட்டு இருக்க. சத்தமா பேசு” என்று தன் கேட்காத காதை தேய்த்து சொன்னவரை பார்த்து முகத்தை கோணிய பத்மா “சத்தமா சொன்னா மட்டும் கேட்றுமாக்கும்” என்று முணு முணுக்க,

அது சரியாக பாட்டி காதில் விழ, “என்னடி எனக்கு காது கேட்காதுன்னு எகத்தாளம் பேசுறியா. அதெல்லாம் நல்லா கேட்கும். நீ ஒழுங்கா பேசு” என்க,

நெஞ்சில் கை வைத்த பத்மா “டேய் ஹர்ஷா உன் பாட்டிக்கு இதெல்லாம் நல்லா கேட்குது பாரேன்” என்று சொல்ல,

கடுப்பானவன் “ம்மா…. உங்க டாம் அண்ட் ஜெர்ரி சண்டையை விட்டுட்டு ஹாசினிய நான் எப்படி கண்டு பிடிக்கறதுன்னு சொல்லுங்க. சும்மா தேவையில்லாம பேசிட்டு”.

“டேய் மகனே உங்க ஆயா என்னை கேவலமா பேசுறது உனக்கு தேவையில்லாத விஷயமாடா. உன்னை பெத்த இந்த வயிறு குளுந்து போச்சு டா” என்று சரோஜா தேவி போல் வராத கண்ணீரை துடைத்த தாயை கண்ட ஹர்ஷா,

“விடும்மா…. விடும்மா…. பாட்டி உங்க குடும்பத்தை கேவலமா பேசுறதும். நீங்க அவங்களை கழுவி கழுவி ஊத்துறதும் புதுசா. இதை எல்லாம் சின்னதுள்ள இருந்து பார்த்துட்டுதானே இருக்கேன்.

சரி டைம் ஆச்சு நான் கிளம்பறேன். எப்படியோ ஹாசினியை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வரேன்” என்றவன் கிளம்பிவிட, மாமியாரும், மருமகளும் ஒருவரை ஒருவர் பார்த்து கழுத்தை நொடித்து கொண்டு சென்றனர்.

இருவருக்கும் இடையில் கிருஷ்ணன் அப்பாவியாக விழித்து கொண்டு நின்றிருந்தார்.

ஹாசி தன் ஹேண்ட் பேகை எடுத்து கொண்டிருக்க, அப்போது அவள் அருகில் வந்த ஏர் ஹோஸ்டஸ் லேடி “என்ன மேடம் முகத்துல டால் அடிக்குது ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்தியா வர்றீங்களா” என்று கேட்க,

அவளும் சிறு புன்னகையுடன் “ஆமாம்” என்றாள்.

“ஹப்பாடா இங்க வர்றக்குள்ள எத்தன டைம் எப்போ சென்னை போவோம்? எப்போ சென்னை போவோம்னு கேட்டே என்னை ஓட விட்டுட்டீங்க மேடம். இங்க வர்றதுல எவ்ளோ ஆர்வம் . என்னோட சர்வீஸ்ல சின்ன குழந்தைங்க கூட என்கிட்ட வந்து இத்தன டைம் கேட்டது இல்ல. ஆனா நீங்க கேட்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியாம நான் திணறி போயிட்டேன்” என்றவளை கண்டு ஹாசி வெட்கப்பட்டு சிரிக்க,

“நீங்க அழகா சிரிக்கறீங்க. எனி வே நீங்க வந்த வேலை சக்ஸஸ் புல்லா நடக்க வாழ்த்துக்கள்……” என்று கையை நீட்டியவள் கையோடு தன் கையை சேர்த்தவள் “ஐ ஆம் ஹாசினி.. அண்ட் தேங்க் யூ” என்றாள் அழகான புன்னகையோடு,

அந்த பெண்ணும் “வாழ்த்துக்கள் ஹாசினி பாய்…வாய்ப்பிருந்தா மறுபடியும் இதே அழகான சிரிப்போட சந்திக்கலாம்” என்றுவிட்டு செல்ல,

ஹாசியும் அவர் பின்னோடு பல கனவுகளோடு சென்றாள்.

ஹர்ஷா வைட் டி சர்ட், ப்ளூ ஜீன்ஸ் அணிந்து கண்ணில் கூலர்ஸ்சுடன் ஸ்டைலாக நின்றிருக்க, அவனை தூரத்தில் இருக்கும்போதே கவனித்த ஹாசி மனதில் பல பட்டாம்பூச்சிகள் பறக்க துவங்கியது.

‘வாவ் என் செல்ல குட்டி எவ்ளோ அழகு. அழகன்டா நீ’ என்று நினைத்தவள் தானும் ஒரு கூலர்சை எடுத்து கண்ணில் மாட்டி கொண்டு அவனை நோக்கி செல்ல, அவன் பார்வையோ அவள் பின்னால் வந்த ஒரு பெண்ணிடம் நிலைத்திருந்தது.

ஆணவன் பார்வை தன்னிடம் இல்லை என்பதை தெரிந்து கொண்ட ஹாசி. யாரை பார்க்கிறான் என்று தானும் திரும்பி பார்க்க அங்கு அல்ட்ரா மாடர்ன் யுவதி ஒருவள் வந்து கொண்டிருந்தாள்.

அவள் டாட்டுவும், மூக்கில் ஸ்டைல் என்று நினைத்து மாட்டியிருந்த வளையமும், கழுத்து வரை மட்டும் குட்டையாக வெட்டப்பட்டிருந்த முடியையும் பார்த்தவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை ஏனென்றால் அதையெல்லாம் அங்கு பார்த்து வளர்ந்தவள்தானே. ஆனால் இவளை ஏன் இவன் இப்படி பார்க்கிறான் என்று நினைத்தவள் தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளாமல் அவன் என்ன செய்கிறான் என்பதை பார்க்க விரும்பி அமைதியாக அங்கு இருக்கும் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அந்த பெண் அருகில் சென்ற ஹர்ஷா “ஹாய் ஹாசினி……” என்க, அந்த பெண்ணோ “வாட்…ஹாசினினினி…..” என்று கேவலமாக பார்த்து வைக்க,

அவனோ “ஹிஹிஹி….. நொதிங்.,…” என்றுவிட்டு விலகியவன் மனதில் ‘பத்து….. வச்சுட்டியே ஆப்பு. இப்படியே எத்தனை பொண்ணுங்ககிட்ட அசிங்கப்பட போறேன்னு தெரியலையே’ என்று புலம்பியவன் அடுத்து வந்த அல்ட்ரா மாடர்ன் பெண்ணிடம் செல்ல, ஹாசிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

‘அட என் தத்தி சிக்கி உன் கண்ணுக்கு நான் தெரியலையா? அது ஏன் வித்தியாசமா வர பொண்ணுங்ககிட்டயே உன் பார்வை போகுது. இருந்தாலும் இது ஜாலியாதான் இருக்கு. என்னதான் நடக்குதுன்னு பார்க்கறேன்’ என்றவள் ஆர்வமாகவும் சிரிப்புடனும் அங்கு நடப்பதை பார்க்க துவங்கினாள்.

பிளைட்டில் இருந்து வரும் கடைசி ஆள் செல்லும் வரை ஒவ்வொருவரிடமும் சென்று அசிங்கப்பட்ட ஹர்ஷா கடுப்பாகி ‘ச்ச….. ஆபிஸ்ல எவ்ளோ பேரு என் பின்னாடி சுத்தி வர்றாங்க. அந்த சில் வண்ட தேடி என்னை அலைய வச்சுட்டாங்களே. அட போங்கடா என்னால முடியல’ என்று சோர்ந்து போய் ஹாசி பக்கத்தில் இருக்கும் இடத்தில் அமர்ந்தவன்.

‘சில் வண்டு எங்கடி போன. என்னால முடியல. அம்மா பெருசா சொன்னாங்க. நீயே என்கிட்ட வருவன்னு…..’ என்று சொல்லும்போதே அவன் எதிரில் போய் நின்றவள் “நான்தான் வந்துட்டனே மிஸ்டர் ஹர்ஷ வர்தன். நீங்கதான் வேற யாரையோ தேடிட்டு இருந்தீங்க. சரி டிஸ்டர்ப் பண்ணாம ஓரமா வெயிட் பண்ணுவோம்னு உட்கார்ந்து இருந்தேன்” என்றவளை கண்டு வாயை பிளந்தான் ஹர்ஷா.

காட்டன் டாப்,பிளாக் ஜீன்ஸ், போனி டெயில் என முகத்தில் எந்த மேக்கப்பும் இல்லாமல் சாதாரணமாக இருந்தவளை கண்டு நெஞ்சில் கை வைத்தவன் “ஹா…ஹா…ஹாசினி… நீயா….” என்று அதிர்ந்து பார்க்க,

அவன் முகத்தில் வந்த அதிர்வை கண்டு தனக்குள் சிரித்து கொண்டவள், அவனை எப்படி அழைப்பது என்று தெரியாமல் தடுமாறி பின் ‘சரி முதல்ல மரியாதையாவே ஸ்டார்ட் பண்ணுவோம். போக போக ப்ளோல பார்த்துக்கலாம்’ என்று நினைத்து கொண்டவள், “என்ன ஹர்ஷ வர்தன் என்ன ஆச்சு? ஏன் இப்படி பாக்குறீங்க?”

“ஹிஹிஹி…. ஒன்னும் இல்ல”

“இல்ல ஏதோ இருக்கு. பரவால்ல சொல்லுங்க” என்றவளை யோசனையாக பார்த்தவன் மனதுள் ‘என்ன மரியாதை எல்லாம் குடுக்கறா. சின்னத்துல இப்படி எல்லாம் பேச மாட்டாளே. ஓஓ…. வளர்ந்துட்டால்ல அதனால வந்த மாற்றமா இருக்கும்’ என்று மனதில் நினைத்தவன் அவளிடம் “இல்ல நான்…. நீ….”

ஹாசி, “என்னங்க நீ….. நானுட்டு சும்மா சொல்லுங்க”.

“இல்ல தப்பா நினைக்காதீங்க….”

“அட என்னங்க ஹர்ஷா. நான் உங்களைவிட சின்ன பொண்ணுதான் சும்மா பேர் சொல்லியே கூப்பிடுங்க. வாங்க போங்கன்னு மரியாதை எல்லாம் வேண்டாம்” என்றவளை புருவம் சுருக்கி பார்த்தவன் பின் “இல்ல ஹாசினி சும்மா ரெண்டு வருஷம் வேலை விஷயமா அமெரிக்கா போயிட்டு வர்றவங்களே, அங்கேயே பிறந்து வளர்ந்த மாதிரி இங்க வரும்போது பாரின் ஆளா மாறி ஓவர் அலட்டளா வருவாங்க.ஆனா…. நீ இத்தனை வருஷம் அங்க இருந்திருக்க ஆனா ரொம்ப சிம்பிளா லோக்கல் பிகரா..….” என்று சொல்லவந்தவன் “ஹக்…ம்கூம்…” என்று செருமி, குரலை சரி செய்து கொண்டவன் “லோக்கல்ல இருக்க பொண்ணுங்க மாதிரி வந்திருக்க அதான் நான் ஷாக் ஆகிட்டேன்”.

“அது அவங்களுக்கு பிடிச்சிருக்கு மாறுனாங்க. எனக்கு பிடிக்கல மாறல அவ்ளோதான். இப்போ நாம போகலாமா?” என்று அலட்டல் பேசிவளை முதல் பார்வையிலேயே அவனுக்கு பிடித்து போனது.

காரில் செல்லும் போது வெளியில் வேடிக்கை பார்ப்பது போல் ஓரகண்ணால் ஆணவனை ரசித்து கொண்டே வந்தாள்.

ஹர்ஷா அவர்கள் வீட்டில் இருப்பவர்களின் நலன் விசாரித்தவன் அதன்பின் அதிகம் பேசவில்லை.

கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க அவன் எதாவது பேசுவான் என்று எதிர்பார்த்து ஏமாந்து போன ஹாசி. அவளே அவனிடம் பேச்சை துவங்கினாள் “அப்புறம் ஹர்ஷா ஜாப் எல்லாம் எப்படி போகுது”.

“ம்ம்…. நல்லா,……போகுது”.

“ஆண்டி, அங்கிள் எல்லாரும் நல்லா இருக்காங்களா? மித்து எப்படி இருக்கா?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க” என்றவனுக்கு அப்போதுதான் அவளது ஒருமை அழைப்பு கருத்தில் பட புருவம் சுருக்கி பார்த்தவன் எண்ணம் அறிந்தவளாக “நான் டீசண்ட்டா சும்மா பேர் சொல்லி கூப்பிடு சொன்னேன்ல அது மாதிரி நீயும் சொல்லுவன்னு பார்த்தேன். சொல்ற மாதிரி தெரியல அதான் நானே ஒருமைக்கு தாவிட்டேன். பிரண்ட்ஸ்……” என்றவள் தலையை சாய்த்து கையை நீட்ட,

அவளையும் நீட்டிய கையையும் மாறி மாறி பார்த்தவன் சிறு சிரிப்புடன் “ஓகே பிரண்ட்ஸ்……” என்று அவள் கையோடு தன் கையை சேர்த்தான்.

தன் மெல்லிய சிறிய கையோடு ஆணவனின் முரட்டு கரம் இணைந்திருப்பதை கண்டு ரசித்தவள் பின் சாதாரணமாக அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

“சூப்பர். ஆமா சென்னை இப்போ ரொம்ப மாறிடுச்சுல்ல. நிறைய மால்ஸ் எல்லாம் இருக்குன்னு கேள்வி பட்டேன். அங்க எல்லாம் என்னை கூட்டி போறியா?

“ஆமா நாங்களும் டெவலப் ஆவோம்ல. கண்டிப்பா போலாம். ஆனா நீ மாறவே இல்ல. சின்னதுல எப்படி இருந்தியோ அப்படியே இருக்க”.

“அப்படியா” என்றவள் கேள்விக்கு “ஆமாம்” என்றவன் “உன் அண்ணன் சோடா புட்டி எப்படி இருக்கான்”.

“ம்ம்….. அண்ணா இப்போ எல்லாம் ஸ்பெக்ஸ் போடறது இல்ல”.

“இப்போ போடலைனா என்ன? முதல்ல போட்டுட்டுதானே இருந்தான்”.

“ம்ம்…போட்டுட்டுதான் இருந்தான். ஆனா….. உனக்கும் அண்ணாக்கும் எப்போவுமே முட்டிக்குதே ஏன்?”.

“அதுக்கு நான் காரணம் இல்ல”.

“வேற யாரு காரணம்?”

“அது என்னமோ தெரியல அவனை பார்த்தாலே எனக்கு வம்பிழுக்கனும்னு தோணுது. அதுக்கு காரணம் எல்லாம் இல்ல” என்று சொல்லி சிரித்தவனை பார்த்தவள் மனம் அண்ணனையும், இவனையும் எப்படி சேர்த்து வைப்பது என்ற கவலையில் மூழ்கியது.

அதன்பின் இருவரும் பேசி கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.