“நீ சொல்றதும் சரிதான். இவங்க வரவேணாம்,  நான் அங்க சும்மா போக முடியாது, பூ பழம்னு வாங்கி கொடு” என்றார் அருணா.

அம்மாவுக்கு ம் போட்டுக் கொண்டான். யசோ இறங்கப் போக, “என் நம்பர் இருக்கா உன்கிட்ட?” எனக் கேட்டான்.

“அத்தை நம்பர் இருக்கு” என்றாள்.

“ஹையோ நான் உங்கத்தை நம்பர் இருக்கான்னு கேட்கலையே” என்றான் கெளதம்.

“சும்மா இருடா” என மகனை அதட்டிய அருணா, “நான் சொல்றேன் குறிச்சுக்க” என மருமகளிடம் சொன்னார்.

அவள் கைப்பேசி எடுப்பதற்குள் மகனின் கைப்பேசி இலக்கத்தை ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்ட அருணா, அவள் கையில் கைப்பேசி எடுக்கவும், “ம்ம்.. இப்ப சொல்லட்டா?” எனக் கேட்டார்.

“வேணாம் அத்தை, தெரிஞ்சுது” என சொல்லி கைப்பேசியில் சேமித்துக் கொண்டாள்.

பின்னால் திரும்பி அவளையே பார்த்திருந்த கெளதம், “எங்க மிஸ்டு கால் கொடு” என்றான். அவள் அழைப்பு விடுக்க அவனுடைய கைப்பேசி ஒலித்தது.

புருவங்களை உயர்த்தி உதடுகளை வளைத்து பெரியாளுதான் என்பது போல கிண்டல் செய்தான்.

“அவன் கெடக்குறான் நீ இறங்கு யசோ” என அருணா சொல்லவும் இறங்கிக் கொண்டாள்.

அருணா வரப் போவதை குணா முன்னரே வீட்டில் சொல்லியிருக்க, இப்போது கருணாவும் தெரிய படுத்தியிருந்தார் போல. காதம்பரி வாசலுக்கே வந்து வரவேற்றார். குணா அம்மாவின் கையை ஆசையாக பிடித்துக்கொண்டான்.

கௌதமை வரவேற்ற காதம்பரி, “எங்க யசோ நவீன்லாம் வர்றதா அவர் சொன்னாரே?” எனக் கேட்டார்.

“அவங்க வர்றதா மாமாகிட்ட நான் சொல்லவே இல்லை, தப்பா சொல்லியிருப்பார்” என்றான் கெளதம். சாந்தமான குணம் கொண்டவன்தான், அம்மா மூலமாக காதம்பரி எப்படியெல்லாம் யசோவிடமும் நவீனிடமும் நடந்து கொண்டார் என அறிந்திருந்ததால் இயல்பாகவே அவரிடம் சற்று கடுமை தொனியில்தான் அவனுக்கு பேச வந்தது.

காதம்பரியின் முகம் விழுந்து விட்டது. ஹேமா  வரவில்லையே என அருணா குணாவிடம் விசாரிக்க, “அவ ரெஸ்ட் எடுக்கிறா” என்றார் காதம்பரி.

“ஏன் அண்ணி முடியலையா அவளுக்கு?” என விசாரித்தார் அருணா. முன்பிலிருந்தே இவர்களுக்குள் பழக்கம்தானே, அதனால் வழக்கம் போலவே முறை வைத்து பேசினார்.

“ஒரு வாரமாவே அவ டல்லாதான் இருக்கா” என சொல்லிக் கொண்டே மகளின் அறைக்கு அருணாவை அழைத்து சென்று விட்டார் காதம்பரி.

ஹேமாவின் தங்கை மோனிகா சென்னையில் பொறியியல் முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.

கெளதம் தனக்கு திருமணம் நடந்த அன்று தம்பியை பார்த்தது. கொஞ்சம் எடை போட்டது போலிருந்தான். அப்பா ஆக போவதற்கு தம்பிக்கு வாழ்த்து சொன்னான் அண்ணன்.

“தேங்க்ஸ் கெளதம், உன்னை நினைச்சு நிறைய ஃபீல் பண்ணியிருக்கேன். எப்படிப்பட்ட பொண்ணு வேணும்னு ஆசைப்பட்ட நீ, சரியா முடிவெடுத்துதானே  போன? திரும்ப ஏன் வந்த? சொத்து கிடைக்கும்னு சொல்லி உன் மனசை மாத்திட்டாரா அப்பா?” எனக் கேட்டான் குணா.

“நீயா ஏதாவது நினைச்சிட்டு பேசாத குணா” என சற்றே கடினக் குரலில் சொன்னான் கெளதம்.

“இல்லைடா, ஹேமா நிறைய சொல்லிருக்கா, நானும் வீட்ல இருந்தப்போ கவனிச்சிருக்கேன், உனக்கு ஏத்த பொண்ணே இல்லை அவங்க. ரொம்ப ஓல்ட் டைப்” என்றான் குணா.

“உனக்கு யசோ அண்ணி குணா!” கோவமாகவே சொன்னான் கெளதம்.

“ஸாரி, உன் மேல உள்ள அக்கறைலதான்…” என்றான் குணா.

“பரவாயில்லடா என்னை பத்தி இவ்ளோ அக்கறை இருக்கு உன்கிட்ட. என்ன இங்கேயே செட்டில் ஆக போறியா? அப்பாட்ட பேசிட்டேன், நேர்ல வந்து அவர்கிட்ட மன்னிப்பு கேளு. நீ ஒருத்தந்தான் உள்ளூர்ல இருக்க, அம்மா கூட இருந்தா அம்மாக்கு நிம்மதியா இருக்கும்” என கெளதமும் சாதாரணமாகவே பேசினான்.

“இப்போ எப்படி வர்றதுன்னு தெரியலை. குழந்தை பொறக்கட்டும் பார்க்கலாம். நான் போய் அம்மாவை பார்த்துக்கிறேன்” என்றான் குணா.

“ஹேமாவை வர சொல்றியா? ஒரு வார்த்தை பேசிடுறேன். வரலாம்தானே, ஹெல்த் ஓகேதானே?” எனக் கேட்டான் கெளதம்.

“நீ வாயேன் ரூம்க்கு, அவ படுத்திருக்கா” என்றான் குணா.

காலையில்தான் கருவுற்றிருப்பதே தெரிந்திருக்கிறது. அதற்குள் என்ன இது என கௌதமுக்கு தோன்றாமல் இல்லை. வேண்டுமென்றே மரியாதை குறைவாக நடக்க இப்படி செய்கிறார்களோ என சரியாக சந்தேகப் பட்டான். ஆனால் தம்பியிடம் கேட்டுக் கொள்ளவில்லை.

குணா சுயநலவாதி என்றாலும் அம்மா அண்ணனை அவமான படுத்தும் நோக்கமெல்லாம் அவனிடத்தில் இல்லை. சண்முகம் ஏற்றுக்கொள்ளாமல் கோவத்தில் பேசியதை ஹேமா மறந்திருக்கவில்லை.

ஆரம்பத்தில் யசோவுடன் நவீனையும் இங்கிருந்து அனுப்பி விடுவதில் மும்முரமாக இருந்த காதம்பரி, ஸ்டோரை அடைய ஆசை கொண்டு வேறு திட்டம் பொட்டிருந்தார். அதற்குள் அவர்களை கௌதமின் பெற்றோர் அழைத்து சென்று விட்டதில் காதம்பரிக்கு புகைச்சல். இப்போது அவர்கள் வராமல் போனதில் வேறு காட்டம் சேர்ந்து கொண்டது.

ஆகவே அம்மாவும் மகளும் தங்கள் வெறுப்பை இப்படி வெளிப்படுத்துகிறார்கள்.

வந்த வரை பார்த்து விடுவோம் என ஹேமாவின் அறைக்கே சென்று வாழ்த்து சொல்லி நலம் விசாரித்தான்  கெளதம். அவனை கண்டு கூட எழவில்லை ஹேமா. அருணாவின் முகமும் சரியில்லை, கெளதம் வெளியே செல்லும் போது அவனுடனே அவரும் வந்து விட்டார்.

காபியும் நொறுக்குத் தீனியும் வேலை செய்யும் பெண் கொண்டு வந்து கொடுத்தாள்.  சாப்பிட்டு விட்டு போகலாமே என காதம்பரி உபசரித்தது அருணாவின் மனதை தொடவே இல்லை. வேலை இருக்கிறது என சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டனர்.

கார் வரை வந்தான் குணா.

“ஏன்டா காலைல புள்ள உண்டானது தெரிஞ்சு மதியத்துக்குள்ள மசக்கை படுத்த ஆரம்பிச்சிடுமா? எந்திரிச்சு கூட உட்காராம படுத்தே கெடக்குறா? முத முறை பார்க்க வர்றேன், பட்டும் படாம பேசுறா. அவளுக்குத்தான் தெரியலைன்னா உன் மாமியா எடுத்து சொல்லாம மகளை அசையக் கூட விட மாட்டேங்குறாங்க. இதெல்லாம் சரியில்லை” என வெளிப்படையாக சொல்லியே விட்டார் அருணா.

“நிஜமா அவளுக்கு முடியலைமா” என்றான் குணா.

“என்னவோ! நீ இங்க நல்லாருந்தா சரிதான். அவளை நல்லா பார்த்துக்க. அப்பாக்கு கோவமெல்லாம் குறைஞ்சு போச்சு, நீ வந்து அவர்கிட்ட பேசு. நம்ம வீட்டுக்கு வர்ற வழிய பாரு” என சொல்லி காரில் ஏறிக் கொண்டார் அருணா.

கௌதமுக்கு யசோவின் எண்ணிலிருந்து அழைப்பு வர ஏற்றான்.  நவீன்தான் பேசினான். கெளதமின் சட்டையின் அளவு கேட்டான், அவன் மாமாவுக்கு வாங்கித் தருகிறானாம்.

அளவை சொன்ன கெளதம், கடையின் பெயரை சொல்லி, “இன்னிக்கு அங்க கல்லாவை நிறைக்கிறதா நீயும் உன் அக்காவும் வேண்டுதல் வச்சிருக்கீங்களாடா? நாங்க கிளம்பிட்டோம்டா, சீக்கிரம் உங்க ஷாப்பிங்கை முடிங்க. சாப்பிட போகணும்” என்றான்.

“உங்களுக்கு என்ன கலர் மாமா பிடிக்கும்?” எனக் கேட்டான் நவீன்.

யோசித்த கெளதம், “தெரியலைடா” என்றான்.

 நவீன் சிரிக்கும் சத்தம் கேட்கவும், “உனக்கு பிடிச்ச கலர்ல எடுடா” என்றான்.

“அக்காக்கு பிடிச்ச கலர்ல எடுக்கிறேன்” என சொல்லி வைத்து விட்டான் நவீன்.

பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த குணா, “இங்க பக்கத்துலதான் விட்டுட்டு வந்திருக்கியா? வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திருக்கலாம்ல?” எனக் கேட்டான்.

“எங்களுக்கு கிடைச்ச மரியாதையிலேயே நிறைவா இருக்குடா தம்பி, எங்களை விழுந்து விழுந்து கவனிச்சே உனக்கு உன் வீட்டம்மாவுக்கு எல்லாம் உடம்பு வலி வந்திருக்கும், இதுல அவங்க வேற வந்து… எதுக்கு உனக்கு கஷ்டம், ஹ்ம்ம்…?” என்றான் கெளதம்.

“நிஜமா கெளதம்,  காலையிலேயே அவளுக்கு தலை சுத்தல். இல்லைனா அவளே உன்னை தேடிகிட்டு வந்து வாங்கன்னு கூப்பிடிருக்க மாட்டாளா?” என மனைவிக்கு முட்டு கொடுத்தான் குணா.

“ம்ம்…  நாங்க கிளம்பறோம், உனக்காவது கிடைக்க வேண்டிய மரியாதை கிடைச்சா சரி, எதுக்கும் கவனமா இரு” என சொல்லி கௌதமும் காரில் ஏறிக் கொண்டான்.

குணாவுக்கு என்னவோ போலானது. மனைவியின் மீது கோவம் கொண்டுதான் உள்ளே போனான்.

ஹேமாவோ, “முத முறை பார்க்க வரும் போதே என்னை பத்தி உங்ககிட்ட தப்பு தப்பா சொல்லி கொடுத்திட்டு போறாங்க, நம்மளை பிரிக்கத்தான் இவங்க இப்ப வந்திருக்காங்க, நீங்க மாறிட்டீங்க…” என ஏதேதோ பேசி கண்ணீர் விட்டே அவனது கோவத்தை நீர்த்து போக செய்து விட்டாள்.

கடை வரவும் அருணா காரிலேயே இருக்க, கெளதம் மட்டும் கடைக்குள் வந்தான்.  அக்காவும் தம்பியும் பில் போடுமிடத்தில் இருந்தனர்.