Advertisement

 
எங்கம்மா என்னைய வளைச்சு வளைச்சு கேள்வி கேக்காவ நா என்னன்னு சொல்லுவேன். இவியளா சொன்னா பரவாயில்லை.
 
அப்பா வரவும் சாப்பிட்டு இவிய பேச்சை ஆரம்பிச்சாவ. அம்மா அதுக்கு என்னைய முறைக்காவ, நா தான் எல்லாத்துக்கும் காரணம்ன்னு.
 
இவிய என்னைய இங்க கூட்டிட்டு வந்தா அதுக்கு நா என்ன செய்ய… இவிய பேசப்பேச அம்மா என்னைய தான் மனசுக்குள்ள ஏசுதாவ அது எனக்கு நல்லாவே தெரியுது.
 
அம்மாவே இவியட்ட இவ ஏதும் கோட்டித்தனமா பேசிட்டாளான்னு கேக்காவ. நா எங்க போய் முட்டிக்கன்னு சொல்லுங்க.
 
இவியளுக்கு கோவம் வந்திட்டு போல அது நல்லாவே எனக்கு தெரியுது. இத்தனை நாள்ல இவியளோட கோபம் எப்படியிருக்கும்ன்னு எனக்கு தெரியாம இருக்குமா.
 
திட்டுற மாதிரியும் இருக்காது, ஆனா என்ன சொல்லணுமோ அதை நமக்கு பேச்சுலவே புரிய வைச்சுடுவாவ.
 
அந்த குரலே நமக்கு எப்படியோ இருக்கும். எனக்கு புரிஞ்சுது எங்கம்மாக்கு புரியலை. நீங்க இவ்வளவு சங்கடப்பட்டா நாங்க இன்னைக்கு ஊருக்கு கிளம்புதோம்ன்னு இவிய சொல்லவும் அம்மா கப்சிப்.
 
உங்களுக்கு இப்போ புரிஞ்சு இருக்குமே நா ஏன் இப்படி பேசுதேன்னு. அம்மாகிட்ட இருந்து கத்துக்கிட்டது தான், பேசிட்டு அப்புறம் ஏச்சு வாங்கறது தான் எங்க வேலையே.
 
இனி அப்பா அம்மாவை நல்லா வைய்ய போறாங்கன்னு தெரிஞ்சு போச்சு எனக்கு. அப்பா இவிய இருக்காங்களேன்னு அமைதியா பேசுனாவ. அம்மாவை பார்வையிலவே ஏசுனாவ.
 
எங்க ரூமுக்கு போய்ட்டோம். அம்மா ரெஸ்ட் எடுங்க, டிரைன்ல வந்தது களைப்பா இருக்கும்ன்னு சொன்னாவ.
 
இவிய இன்னும் என்ட பேசலைன்னு எனக்கு அழுகை முட்டிக்கிட்டு நிக்கு. இதுல அந்த ரூம்ல இவியளோட நானும் எங்க இருக்க, எனக்கு ஒண்ணும் சொல்ல முடியலை.
 
என்னை கூப்பிட்டாவ, பக்கத்துல வரச்சொன்னாவ. நானும் போனேன். என்னாச்சு உங்கம்மா ஏசுனாவலான்னு கேட்டாவ.
 
இல்லைன்னு தலையாட்டினேன், அப்புறம் என்னாச்சுன்னு கேட்டாவ, நீங்க தான் என்னோட பேசலைன்னு சொன்னேன்.
அதை சொல்லும் போது எனக்கு கண்ணீர் வந்திட்டு. நான் பேச மாட்டேன்னு நீயா நினைச்சுக்குவியான்னு கேக்காவ. வேற எப்படி நினைப்பாவலாம். இவிய என்ட பேசி ஒரு வாரம் மேல ஆகுது.
 
என்னென்னவோ பேசினாவ. அவியளுக்கும் என் மேல கோவம் தான்னு சொன்னாவ. நானும் கூட பேசினா வார்த்தையை விட்டிருவேன்னு தான் பேசலைன்னு சொன்னாவ.
 
நா அவியகிட்ட மன்னிப்பு கேட்டேன். அதெல்லாம் வேணாம் நீ புரிஞ்சு நடந்துகிட்டா போதும்ன்னு சொன்னாவ.
 
என்ன நினைச்சாவளோ என்னைய வெளிய போவோமான்னு கூப்பிட்டாவ. ஆத்துக்கு குளிக்க போகலாமான்னு கேட்டாவ.
 
பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு நா அவியளை ஜன்னல்ல வழியா எட்டிப்பார்த்தேன்னு கண்டுப்பிடிச்சிட்டாவ. எனக்கு அப்போவே சந்தேகம் தான்.
 
ரெண்டு நாளும் என்னோடவே இருந்தாவ. அவிய மனசு சங்கடப்படுற மாதிரி நா எதுவும் பேசலை. அவியளும் எனக்கு பிடிச்சது எல்லாம் செஞ்சாவ.
 
ஊருக்கு கிளம்பிட்டாவ, நானும் ஸ்டேஷன்க்கு போயிருந்தேன். போன முறை ஸ்டேஷன்க்கு வந்தப்போ அம்மா அப்பாவை பிரியப்போறதை நினைச்சு அழுதேன்.
இப்போ இவியளை விட்டு எப்படி இத்தனை மாசம் இருக்கப்போறேன்னு நினைச்சு எனக்கு அழுகை வந்திச்சு.
 
நா அழுதா இவிய வருத்தப்படுவாவன்னு கண்ட்ரோல் பண்ணிட்டு இருந்தேன். ஆனாலும் டிரைன் கிளம்பும் போது கண்ணீர் வந்திட்டு.
 
“பாத்து போயிட்டு வாங்க. போன் பண்ணுங்கன்னு சொன்னேன்…”
 
டிரைன் கண்ணைவிட்டு மறைய வரைக்கும் அங்கவே இருந்தேன். அப்பா எதுவும் சொல்லலை நா நிக்கிற வரை அவியளும் என்னோடவே நின்னாவ.
 
“போலாம்மா…” அப்பா தான் கேட்டாவ.
 
“ஹ்ம்ம் கிளம்பலாம்ப்பா…”
 
“என்னாச்சு வள்ளிம்மா??”
 
“எதைப்பா கேக்குறீங்க??”
 
“மருமவன் கூட கோச்சுட்டு வந்துட்டியா??”
 
“உங்க மருமவன் சொன்னதை நீங்க நம்பலையா…”
 
“அப்படியில்லை நீ… ஒண்ணும்மில்லை விடுடா…”
 
“என்னப்பா கேக்க வந்திய, நான் சங்கப்படுத்தேன்னு அப்படி கேக்குதியல. அவிய ஊருக்கு போறாவ எனக்கு வருத்தமா இருக்காதா”
 
“எங்க கல்யாணம் முடிச்சு அவிய என்னைய விட்டு அவ்வளவு தூரம் போவுதாவ, திரும்பி வர்றதுக்கு ரொம்ப நாளாகும் அதான்ப்பா…”
 
“புரியுது வள்ளிம்மான்னு…” சொன்ன அப்பா அதுக்கு பொறவு ஒண்ணும் கேக்கலை.
 
அம்மாவும் எதுவும் கேக்கலை. அப்பா கேக்க விட்டிருக்க மாட்டாவன்னு தோணிச்சு.
 
இவிய வீட்டுக்கு ஒன்பது மணி போல ரீச் ஆகிட்டேன் போன் பண்ணாவ. அன்னைக்கு நைட் என்னால தூங்கவே முடியலை.
 
எத்தனையோ நாள் இதே ரூம்ல நா தனியா தான் படுத்து இருந்தேன். அப்போ எல்லாம் எனக்கு இப்படி தோணினதே இல்லை.
 
இன்னைக்கு இது என் இடமில்லைன்னு தோணிச்சு. இந்த வீடு எனக்கு அந்நியமா இருந்துச்சு. என் கல்யாணத்துக்கு முன்னாடி அக்கா இங்க வந்திருந்தப்போ நா அவளை கேலி பண்ணியிருக்கேன்.
 
அத்தான் இல்லாதது என்னவோ போல இருக்குன்னு அக்கா சொல்லுவா. எங்க வீட்டில தூங்குன மாதிரி இல்லைன்னு சொல்லுவா.
அப்போலாம் நா அவளை பார்த்து சிரிச்சிருக்கேன். நம்ம வீடு இல்லையா அப்போன்னு சொல்லி வம்பு பண்ணியிருக்கேன்.
 
அக்காவோட அன்னைக்கு மனநிலையில தான் இன்னைக்கு நா இருக்கேன். அவிய இல்லாம இருக்க முடியலை. அவிய இருந்தாலும் இல்லைன்னாலும் இது என் வீடு இல்லைன்னு எனக்கும் தோணுது.
 
சென்னையில எங்க வீட்டுல எங்க ரூம்ல இருந்தது தான் எனக்கு ஞாபகத்துக்கு வருது. அவிய விசாகப்பட்டினம் போன அந்த நாள்ல எனக்கு கஷ்டமா இருந்தாலும் நானும் அவியளும் இருந்த ரூம்ன்னு அங்கவே தான் கிடப்பேன்.
 
வேலை முடியவும் முதல்ல ரூமுக்கு தான் வருவேன். அவியளோட இருக்கற ஒரு நினைப்பு எப்பவும் அந்த ரூம்ல கிடைச்சுது அப்போ.
 
நா உடனே ஊருக்கு போகணும்ன்னு மனசு தவிக்குது. அவிய போகும் போது சொன்னது தான் நினைவுக்கு வருது.
 
ஒரு மாசமாச்சும் இங்க இருந்திட்டு அப்புறம் ஊருக்கு கிளம்பிறணும் இது தான் இப்போதைக்கு என மனசுக்குள்ள ஓடுது.
 
ரெண்டு நா செண்டு கல்யாணி வந்தா. எங்கம்மா வேலைன்னு தெரிஞ்சுது.
 
“வாட்டி என்ன இந்த பக்கம்??”
 
“நீ கூட தான்ட்டி இந்த பக்கம் வந்திருக்கா, நா கேக்க வேண்டியது நீ கேக்க… மெட்ராஸ்காரிக்கு இப்போ எங்க என்ன திடீர் விசிட்டு… ஒரு போன் கூட போடலை நீ வந்திருக்கன்னு”
 
“நா என்னைக்கு மெட்ராஸ்காரி ஆனேன்??”

“அது ஆகி ரொம்ப நாளாச்சு, நா கேட்டதுக்கு பதில் சொல்லுட்டி”
 
“சொல்றேன். நீ சொல்லு திடிர்னு எல்லாம் நீ இங்க வரமாட்டியே”
 
“அம்மா வீட்டுக்கு வந்தேன். உன் மாமன் தான் கொண்டு வந்து விட்டாவ, மேலுக்கு முடியலை எனக்கு…”
 
“என்னாச்சுட்டின்னு…” நா கேக்க அவ வெக்கப்பட்டா.
 
“என்னட்டி செய்யுத சகிக்கலைன்னு…” சொன்னேன்.
 
கடுப்பாகி தலையணை எடுத்து மேல வீசினா. “மேலுக்கு முடியலைங்கேன் என்னன்னு கேட்டியாட்டி??”
 
“அதை கேட்டதுக்கு தான் நீ என்னவோ செய்தியே, அதான்ட்டி எனக்கு பயந்து வருது…”
 
“போட்டி நா சொல்ல மாட்டேன்…”
 
“சரி சரி என் கண்ணுல சொல்லுட்டின்னு…” கேட்டேன்.
 
“மூணு மாசம்…”
 
“என்ன மூணு மாசம்.. ஓ!! அதுவாட்டி??”
 
“ஹ்ம்ம் ஆமா…”
 
“சந்தோசமா இருக்குட்டின்னு…” சொல்லி அவளை கட்டிக்கிட்டேன்.
 
நிஜமாவே அவ்வளவு சந்தோசம் எனக்கு.
 
“நீ எதுவும் விசேஷமா இருக்கியாட்டி??”
 
நா இல்லைன்னு தலையாட்டினேன்.
 
“ஏட்டி இன்னும் உங்களுக்குள்ள…”
 
“சீய்!! அதெல்லாம் இல்லை…”
 
“இல்லையா கோட்டிக்காரி கோட்டிக்காரின்னு…” என்னைய வைஞ்சா.
 
“ஏட்டி பேசாம இருட்டி, அதெல்லாம் ஆச்சு…”
 
“அப்பாடா என் வயித்துல பாலைவாத்த”
 
“ஏட்டி ஒரு மாதிரி இருக்கவ??”
 
“நீ எத்தனை நா இங்க இருப்ப??”
 
“ஒரு மாசம் செண்டு போகலாம்ன்னு இருக்கேன்…”
 
“அப்போ இன்னைக்கு நைட் என்னோட படுக்க வர்றியா??”
 
“என்னட்டி எதுவும் பெரிய பிரச்சனையா??”
 
“உடனே பிரச்சனையான்னு தான் கேப்பியா??”
 
“இல்லைட்டி சும்மா தான்…”
 
“நீ தானேட்டி எனக்கு பிரண்டு உன்கிட்ட தானே நா ப்ரீயா பேச முடியும்”
 
“சரி வர்றேன்…”
 
“அம்மாகிட்ட எதுவும் சொல்லிட்டு இருக்காத. எனக்கு தெரியும் அம்மா தான் உன்னைய இங்க வரவைச்சுச்சுன்னு”
 
“எப்படிட்டி தெரியும்??”
 
“அதை நா பொறவு சொல்றேன் நீ சொல்லு அம்மா என்னன்னு சொல்லி உன்னைய இங்க வர வைச்சாவ”
 
“உங்க மாமன் என்னைய கூட்டிட்டு வந்து விட்டது தான் நிஜம். நேத்து தான் பெரியம்மா வீட்டுக்கு வந்திச்சு. உன்னைய பத்தி தான் விசனப்பட்டு கிடந்துச்சு…”
“உன் மாமியா பெரியம்மாட்ட பேசியிருப்பாவ போல. பட்டும்படாம பேசுனாவ போல அதேன் பெரியம்மாவுக்கு சங்கடம். அவசரப்பட்டுட்டமோ, அவ அப்போவே வேணாம்ன்னு தான் சொன்னா, நானும் அவியளும் சேர்ந்து தான் அவசரப்பட்டோம்ன்னு…”
 
“எனக்கே பாக்க கஷ்டமா போச்சுட்டி?? நா வந்து உன்கிட்ட பேசுதேன்னு நா தான் சொன்னேன்…”
 
“சரி நீ நைட் வா நாம பேசுவோம்…”
 
“சரி நா வர்றேன்…”
 
“இங்க வந்து சாப்பிடுட்டி உனக்கு பிடிச்ச உளுந்தன்சோறு கறிக்குழம்பும் செஞ்சு வைக்கேன்…”
 
“என் செல்ல வள்ளிக்கண்ணு…”
 
“அப்படி கூப்பிடாதட்டி??”

“ஏன்??”
 
“உங்க அத்தான் அப்படி தான் என்னைய கூப்பிடுவாவ…”
 
“பார்றா… சரி சரி நடக்கட்டும் நடக்கட்டும்ன்னு…” சொல்லிட்டு அவ கிளம்பிட்டா, நானும் கிளம்பிட்டேன். நைட் அவளுக்கு பிடிச்சதை செஞ்சு தர்றேன்னு சொன்னேன்ல அதை செய்யத்தான்.
 

Advertisement