Advertisement

15
 
“என்னாச்சு என் வள்ளிக்கண்ணுக்கு?? உம்முன்னு இருக்கான்னு…” இவிய கேட்டாவ.
 
அத்தை திட்டிட்டாங்கல மனசுக்கு சங்கடமாம இருக்கு, அதேன் எங்க ரூமுக்கு போயிட்டேன், என் மூஞ்சியை பாத்து தான் இவிய என்னை அப்படி கேட்டாவ.
 
நானே எப்போ கேப்பாவ, மனசுல இருக்கறதை கொட்டிறலாம்ன்னு பாத்துக்கிட்டு கிடந்தேன். அவிய கேக்கணும் ஆரம்பிச்சவ தான் கடைசியா அவிய பதில் பேசவும் வாயை மூடினவ தான் பொறவு திறக்கவே இல்லை. என்னன்னு பேசினேன்னு நானே சொல்லுதேன்.
 
“வள்ளிக்கண்ணுன்னு…” திரும்பவும் கூப்பிட்டாவ, அதுக்கு மேல பேசாம இருந்தா நல்லாயிருக்குமா அதேன் சொல்லிட்டேன்.
 
“என்னன்னு சொல்லுறது??”
 
“என்ன நடந்துச்சு ஏன் இப்படி இருக்கே என்கிட்ட சொல்ல மாட்டியா??”
 
“அத்தை என்னை வைஞ்சுட்டாவ??”
 
“அதை தான் நான் அன்னைக்கே சொன்னேனே. அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டியா…”
 
“என்னத்தை அட்ஜஸ்ட் பண்ண, அவிய என்னலாம் சொன்னாவன்னு தெரியுமா உங்களுக்கு. நா என்ன வேலை செய்ய மாட்டேன்னா சொல்லுதேன்…”
 
“இன்னைக்கு காபியில மறந்தாக்குல சீனி போடாம விட்டேன். அதுக்கு வாய்க்கு வந்ததுலாம் பேசுதாவ…”
 
“உங்கம்மா உன்னைய இப்படித்தான் வளர்த்தாவலான்னு கேக்குதாவ. என்னைய போனா போகட்டும்ன்னு தான் உங்களுக்கு கட்டி வைச்ச மாதிரி பேசுதாவ…”
 
“பொண்ணு பாக்க வந்தப்பவே நா என்னையப்பத்தி உங்ககிட்ட சொன்னம்லா. உங்களுக்கு என்னைய பிடிக்கலைன்னா எதுக்கு கட்டி வைச்சாவ…”
 
“நீங்க என்னைய வேணாம்ன்னு சொன்னியலா…”
 
“வள்ளிக்கண்ணு…”
 
“பேசாதிய எதுவும் பேசாதிய, நா ஊர்ல வளர்ந்த பொண்ணுன்னு என்னைய உங்களுக்கு கட்டிவைச்சாவலாம். இல்லைன்னா என்னைய வேணாம்ன்னு சொல்லிருப்பாவளோ…”
 
“எங்க அக்கா வேலை செய்தாலாம் நான் செய்யலையாம், எங்கக்கா பாத்து தான் என்னைய பொண்ணு எடுத்தன்னு சொல்லுதாவ. நா என்ன குறைஞ்சு போயிட்டேன்…”
“இதை செய்ன்னு சொன்னா, செஞ்சுட்டு போறேன். அதுக்கு இம்புட்டு பேச்சு பேசினா நா எப்படித்தான் அவியளோட குப்பை கொட்ட, இதுல எங்கம்மாவை எல்லாம் எதுக்கு இழுக்காவன்னு எனக்கு தெரியலை…”
 
“நீங்க என்னைய வேணாம்ன்னு சொன்னியளா, அப்புறம் எதுக்கு அன்னைக்கு என்னைய பிடிச்சிருக்குன்னு சொன்னிய…”
 
“நா வேணாம்ன்னா உங்களுக்கு பிடிச்சாக்குல சீமையிலேயே போய் பொண்ணு எடுக்க வேண்டியது தானே… என்னைய எதுக்கு கட்டினிய…”
 
“எங்கம்மா என்னைய நல்லா தான் வளர்த்தாவ. அவியகிட்ட சொல்லி வைங்க, நா ஒண்ணும் தப்பா வளரலை”
 
“இப்படியே பேசிட்டு இருந்தாவ ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆகிப்போகும் பார்த்துக்கோங்கன்னு…” சொல்லி நானும் பேசிட்டே இருந்தேன்.
 
நா ஆத்தமாட்டாம மனசுல நினைச்சது எல்லாம் அவியகிட்ட படபடன்னு கொட்டி வைக்க அவிய என்னைய பார்த்தாவளே ஒரு பார்வை ஆத்தி இதுக்கு முன்ன அவியளை நா அப்படி பாத்ததே இல்லை.
 
“வள்ளி…”
 
வள்ளிக்கண்ணுல இருந்து இப்போ நான் வள்ளியாகிட்டேன், கோவமா இருப்பாவ போல. வைவாவளோன்னு நினைச்சுட்டு இருக்கேன். அவிய வேற சொன்னாவ, அதுக்கு அவிய என்னைய நல்லா வைஞ்சிருக்கலாம் போல.
 
“வள்ளி கொஞ்சம் நிறுத்து…”
 
“என்ன??”
 
“எதுக்கு இப்படி மூச்சுவிடாம பேசுறே??”
 
“வேற எப்படி தான் நா பேசுறது, என்னைய அவிய அப்படி ஏசுதாவ. எனக்கு கஷ்டமா இருக்காதா…”
 
“அதுக்காக என்ன வேணாலும் பேசுவியா??”
 
“நா என்ன தப்பா சொல்லிட்டேன்”
 
“ஒண்ணுக்கிடக்க ஒண்ணு ஆகிபோகும்ன்னா என்ன அர்த்தம்ன்னு…” கேட்டுட்டு அவிய என்னை பார்த்த பார்வை எனக்கு ஜில்லுன்னு ஆகிட்டு.
 
நா ஏதோ கோவத்துல சொல்லிட்டேன் இவிய அந்த வார்த்தைய பிடிச்சு தொங்குவாவன்னு நா எங்க நினைச்சேன்.
 
“அது தெரியாம…”
 
கையை அமத்தி பேசாம இருக்க சொன்னாவ. நா வாயை மூடிக்கிட்டேன்.
 
“உன்னோட டிரஸ் எல்லாம் எடுத்து வைச்சுக்கோன்னு…” சொன்னாவ.
 
என்னது டிரஸ் எடுத்து வைக்கணுமா எதுக்கு எனக்கு அடிவயிறு எல்லாம் கலங்கி போச்சு. “எதுக்குன்னு??” கேட்டுட்டேன்.
 
“ஊருக்கு போக…”
 
“எந்… எந்த ஊருக்கு??”
 
“உங்க ஊருக்கு தான்…”
 
“இப்… இப்போ எதுக்கு??”
 
“நீ அங்க கொஞ்ச நாள் இரு… நான் ஊருக்கு போயிட்டு வந்து உன்னை கூட்டிட்டு வர்றேன்…”
 
“இல்… இல்ல வேணாம்…”
 
“நாம இது விஷயமா மேற்கொண்டு எதுவும் பேச வேணாம். எனக்கு பேச பிடிக்கலை… உனக்கு ஒரு விஷயத்தை நான் ஒரு தடவை தான் சொல்லுவேன்…”
 
“நீ ஒண்ணும் சின்ன குழந்தை இல்லை. நான் என்ன சொல்றேன்னு புரிஞ்சுக்காத அளவுக்கு. அன்னைக்கே உன்கிட்ட சொன்னேன். எங்கம்மா எதுவும் சொன்னா பேசாம கடந்து போக பழகுன்னு…”
 
“அவிய என்ன பேசினாலும் நான் பேசாம இருக்கணுமா, நா என்ன ஜடமா…” மறுபடியும் வார்த்தையை விட்டேன் அவியல பேச விடாம.
 
“இதுக்கு தான் சொன்னேன். நீ கூட கூட பேசுவே, எனக்கு டென்ஷன் தான் ஆகும். நான் ஊருக்கு போகும் போது நல்ல மைன்ட் செட்டோட போகணும். கண்டதும் நினைச்சுட்டு போகக் கூடாது…”
 
“இதுக்கு மேல உன்கிட்ட பேச எதுவும் இல்லை. நான் நாளைக்கே டிக்கெட் பாக்குறேன். இந்த வாரமே உன்னை கூட்டிட்டு போய் ஊர்ல விட்டு வர்றேன்…”
 
“எங்கம்மா என்னன்னு கேப்பாங்க??”
 
“கண்டிப்பா சொல்ல மாட்டேன் இங்க சண்டை அதனால தான் கூட்டிட்டு வந்து விட்டேன்னு, போதுமான்னு…” சொல்லிட்டு என்னைய பாக்க கூட பிடிக்காம மூஞ்சியை திருப்பிட்டு கட்டில்ல போய் படுத்திட்டாவ.
 
எனக்கு அழுகையா வருது. பேசாம எழுந்து பால்கனிக்கு போய் உட்கார்ந்திட்டேன். எனக்கு அவிய மேல கொஞ்சம் கோவம் தான்.
 
நா இவ்வளவு சொல்லுதேன், அவிய அம்மாவை போய் என்னன்னு ஒரு வார்த்தை கேக்கலாம்ல. என்னையவே குத்தம் சொல்லுதாவ, நா தான் பேசாம போவணும்ன்னு சொல்லுதாவ. எனக்கு தொண்டை அடைக்கி, அழுகக்கூடாதுன்னு பேசாம இருந்தேன்.
 
அவிய ஊருக்கு போற நேரம் நா இங்க இருக்கணும்ன்னு நினைச்சேன், இப்போ அவிய என்னைய ஊர்ல விட போவுதேன்னு சொல்லுதாவ.
 
ஒரு வாரம் எப்படி போச்சுன்னு தெரியலை. அத்தைகிட்ட நா எதுவும் சொல்லலை. எப்பவும் போல தான் இருந்தேன், அவிய ஏசினாலும் பேசாம கேட்டுக்கிட்டேன்.
 
எப்பவும் நா எதுத்து பேசினதில்லை. இருந்தாலும் மனசுல இப்படி வைதாவளேன்னு சங்கடமா இருக்கும். இப்போலாம் அது கூட எனக்கு தோணலை, பழகிட்டு.
 
இரண்டு நா கழிச்சு இவிய ஊருக்கு போவ ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் போட்டேன்னு சொன்னாவ. காலையில டிபன் சாப்பிடும் போது அத்தைட்ட அவியளே சொன்னாவ.
 
அத்தை என்னைய தனியா கூப்பிட்டு வைஞ்சாவ. எதுக்கு ஊருக்கு போவணும்ன்னு. நா உங்க மகன் தான் சொன்னாவன்னு சொன்னேன்.
 
அப்புறம் அத்தை இவியட்ட என்னைய இங்கவே இருக்கட்டும்ன்னு சொன்னாவ, இவிய தான் விடாப்பிடியா ஊருக்கு கூட்டிட்டு போயிட்டாவ.
 
டிரைன்ல கூட என்ட எதுவும் பேசலை. ஒரு வாரம் ஆச்சு இவிய என்னோட சரியா பேசி. பேசாதவன்னா பரவாயில்லை.
 
நானா போய் பேசினாலும் சரியாவே பதில் பேச மாட்டேன்னுட்டாவ. அதுக்கு மேல நா என்ன பேச அவியட்ட
 
ஏதோ கோட்டித்தனமா மனசுல இருந்ததை கொட்டிட்டேன், அதுல என்னத்தை குத்தத்தை கண்டாவலோ எனக்கு விளங்கலை.
 
ஆட்டோ பிடிச்சு எங்க வீட்டுக்கு வந்திட்டோம். நாங்க வர்றோம்ன்னு அவியகிட்ட நாங்க சொல்லவே இல்லை. காலையில நாங்க வீட்டுக்கு வந்து இறங்கவும் உள்ள இருந்தே அம்மா பார்த்திட்டு ஓடி வந்தாவ.
 
“என்னட்டி இப்படி திடுதிப்புன்னு வந்து நிக்கன்னு??” கேட்டாவ. கொஞ்சம் பயந்து தான் என்னைய பாத்தாவ.
 
நா திரும்பி அவியளை பாத்தேன். “மருமகனும் வந்திருக்காவலா ஏதாச்சும் வேலையா வந்தீயளோன்னு…” என்ட ரகசியமா கேட்டாவ.
 
“உள்ளார போய் பேசுவோம்ன்னு…” சொல்லிட்டேன்.
 
“வாங்கன்னு…” அவியளை பாத்து சொன்னாவ எங்கம்மா.
 
“அப்பா எங்கம்மா??”
 
“காலையில நேரமாவே எந்திச்சு ஆத்துக்கு குளிக்க போனாவ, வந்திருவாவ…”
 
“காபித்தண்ணி போடுதேன், நீங்க போய் கொஞ்ச ரெஸ்ட் எடுங்க…” ரெண்டு பேரையும் பாத்து பொதுவா சொன்னாவ எங்கம்மா.
 
என்னை பாத்து “அவியளை ரூமுக்கு கூட்டிட்டு போன்னு…” சொன்னாவ.
 
நா நிமிர்ந்து அவியளை பாத்தேன். “உள்ள வாங்க…”
 
அவிய பதிலே பேசாம என்னோட உள்ள வந்தாவ, அவிய குளிக்க தேவையானது எல்லாம் எடுத்து வைச்சேன்.
 
“நீ போய் முதல்ல குளிச்சுட்டு வா, நான் இங்க இருக்கேன்னு…” என்னைய பாத்து சொன்னாவ.
 
இத்தனை நாள்ல இன்னைக்கு தான் என்னைய பாத்து பேசியிருக்காவ. ஒரு வாரமாச்சு அவிய என்னைய ஒழுங்கா பாத்து பேசி.
 
நா குளிச்சுட்டு அவியள போகச் சொன்னேன். அம்மாகிட்ட போய் காபி வாங்கிட்டு வந்தேன் அவிய குடிக்க.
 
அதுக்குள்ளே அம்மா ஆயிரம் கேள்வி கேட்டாவுது. “என்னட்டி இப்படி சொல்லாம கொள்ளாம வந்து நிக்க?? ரெண்டு நா முன்னாடி பேசினப்போ சொல்லியிருக்கலாம்ல…”
 
“அவிய எதாச்சும் வேலைன்னு உன்னைய கூட்டிட்டு வந்தாவலா??”
 
“அம்மா காபி ரெடியா, இல்லைன்னா சொல்லும்மா நானே போட்டுக்கிடுதேன்…” நா பதிலே சொல்லலை.
 
எதுனாலும் அவியளே சொல்லட்டும் நா ஒண்ணு சொல்லி அவிய ஒண்ணு சொல்லின்னு இருக்கக்கூடாதுல. நா தப்பு பண்ணேன்னு சொன்னாலும் எனக்கு கவலையில்லை.
 
தப்பை தப்புன்னு ஒத்துக்கறதுல எனக்கு எந்த கவுரவ குறைச்சலும் இல்லை. அன்னைக்கு நா கொஞ்சம் அதிகமா பேசிட்டேன்.
 
ரெண்டு நாள் என்னோட தங்கிட்டு புதன்கிழமை காலையில ரயிலேறிட்டாவ.

Advertisement