CM வருவதற்காக ஈஷ்வர் எல்லாம் மேற்பார்வை பார்க்க, அடுத்த சில நொடிகளில் CM கார் உள்ளே வந்தது. ஒரு கட்சி மாநாடு போல கூட்டம் அலைமோத,  “மகா..  நீங்க எல்லாம் ஒரு இடத்துல இருங்க..” ஈஷ்வர் குடும்பத்தை ஓரிடத்தில் உட்காரவைத்தவன், பல்லவியுடன் மேடையேறியவன் அவளின் கையை விடவே இல்லை.

முக்கிய கட்சி ஆட்கள், உயர்  அதிகாரிகள் என்று அங்கு நிற்க இடமில்லாமல் கூட்டம் நெறுக்கியடித்தது. போலீஸ், கட்சி ஆட்கள் எல்லாம் முன் நின்று ஆர்கனைஸ்டாக செய்ய, நிலைமை கட்டுக்குள் இருந்தது.

என்னதான் ஈஷ்வர் வருபவர்களிடம் பேசி கொண்டிருந்தாலும் கண்கள் கூட்டத்தையே தான் அலசி கொண்டிருந்தது. CM வரும் போது மட்டும் அனு  பல்லவியிடம் இருந்தாள்.

அவர் கிளம்பவும்  “போதும்.. பேபியை  கீழே எடுத்திட்டு போயிடுங்க..” ஈஷ்வர் கங்காவிடம் மகளை கொடுத்துவிட, அவள் மகாவிடம் இருந்தாள்.  இடையிடையே நரசிம்மன்  வந்து  பேத்தியை பார்த்து போக,  கங்கா, துர்கா அவளுக்கு உணவு கொடுத்தனர்.

அவளோ கூட்டத்தில் மிரண்டு போயிருந்தவள், இடையிடையே அம்மாவை தேடி சிணுங்கியவள், ஒரு கட்டத்தில் பெரிதாக அழுக ஆரம்பித்துவிட்டாள். “ரொம்ப அழுகிறாளே இப்போ என்ன பண்றது..?”  பெண்கள் கை பிசைய,

“என்ன ஆச்சு..?  ஏன் பேபி அழுறா..”  என்று வந்து நின்றான் விஷ்ணு.

“நல்ல நேரத்துல வந்த விஷ்ணு, இவங்களை பல்லவிகிட்ட கூட்டிட்டு போ..” கங்கா சொல்ல, விஷ்ணு மகாவை பார்த்தான். இவன் பார்க்கவும், மகா எங்கோ பார்த்து நின்றாள்.

“வா..” விஷ்ணு முன் நடக்க, மகா  அமைதியாக  அவன் பின் சென்றாள். மேடை நெருங்க கூட்டம் அதிகமாக இருக்க, “நீ இங்கேயே இரு, பேபியை என்கிட்ட கொடு..” என்றான் விஷ்ணு.

மகா புரிந்து அவனிடம் கொடுக்க, அனுவோ போக மாட்டேன் என்று அத்தை கழுத்தை இறுக்கமாக கட்டி கொண்டு அழுதாள். விஷ்ணு உர்ரென்று பார்க்க, மகா அனுவின் முதுகை வருடி விட்டபடி, “இப்படி முகம் முழுக்க தாடியா இருந்தா குழந்தை பயப்படாம என்ன செய்யும்..?”  என்றாள் முணுமுணுப்பாக.

“என் ஈஷ்வர் பேபிக்கு என்னை தெரியல அதான்..” கடுப்பாக நொடித்து கொண்டவன், வா.. என்று அவளுடன் பாதுகாப்பாக நடந்தான். இவர்கள் மேடை நெருங்க, சென்ட்ரல் மினிஸ்டர் வந்துவிட்டார்.

அவருடன் வந்த ஆட்கள் மொத்தமாக சூழ்ந்துவிட, எதிர்பாராமல் ஆட்கள் முன்னால், பின்னால் நகர்ந்தனர். விஷ்ணு புரிந்து அனுவுடன் சேர்த்து மகாவையும்  தோளோடு அணைத்து பிடித்தான். மகா வேறு புடவை கட்டியிருக்க, விஷ்ணு பிடித்ததில் முந்தானை விலகிவிட்டது.

“ஓகே தானே..?”  மகா, அனுவை பார்த்த விஷ்ணு, முந்தானை விலகியதையும் பார்த்துவிட்டான்.

“இப்படி கூட்டமா இருக்கிற இடத்துக்கு எதுக்குடி புடவை கட்டுன..? சரி பண்ணு..” காதுக்கருகில் கடிந்து கொண்டான்.

மகா புரியாமல் அவனை பார்க்க, அவன் கண்கள் சென்ற இடம் பார்த்து, அவசரமாக ஒரு கையால் முந்தானையை அட்ஜஸ்ட் செய்து இழுத்து சொருகினாள்.

“அனு பேபி, அங்க பாரு எவ்வளவு கூட்டம்..? நீங்க இப்படி அழுதுட்டே இருந்தா எப்படி அம்மாகிட்ட போக, பாருங்க இப்போவவே தொண்டை கட்டிடுச்சு..”  பல்லவியை காட்டி நைசாக பேசியபடியே விஷ்ணு அவளை தன் கையில் தூக்கி கொண்டவன், மகாவின் தோளை அணைத்த படி ஈஷ்வர், பல்லவி இருக்கும் இடம் சென்றுவிட்டான்.

மகள் அழுதபடி வரவும் பல்லவி வாங்கி அவளை சமாதானம் செய்ய, ஈஷ்வர் விஷ்ணுவை முறைத்தான்.   அவனோ,   “எனக்கு பசிக்குது நான் சாப்பிட போறேன், நீ முடிச்சிட்டு வா..” அவனின் முறைப்பை கண்டு கொள்ளாமல் மகாவை கூப்பிட்டு கொண்டு இறங்கிவிட்டான்.

சிறிது சிறிதாக கூட்டம் குறைய, குடும்ப ஆட்கள் மேடை ஏறினர். கங்கா, துர்கா, மகா  இருக்க, பல்லவி குடும்பம் மேடை ஏறியது. அவர்களுடன் சரண் குடும்பமும்.

பல்லவி இதை எதிர்பார்க்காமல் கண் விரித்து பார்க்க, “அப்பா நேரா போய் கூப்பிட்டார்..”  என்றான் ஈஷ்வர் அவளிடம் குனிந்து.

“வாங்க.. வாங்க..” கங்கா இவர்களை வரவேற்றார். பல்லவிக்கு ரத்னா வந்தது அவ்வளவு மகிழ்ச்சி.

“ம்மா..” அவரின் கையை பிடித்து கொண்டாள் மகள். இருவர் கண்களும் கலங்கியது.

“பல்லவி சாரிடா..” பரணி தங்கையிடம் வர, சிரிப்புடன் தலை ஆட்டினாள். மூர்த்தி ஏதோ பேச, அமைதியாக தலை ஆட்டினாள். மகிளா, அவர்கள் பெண் பார்த்து வரவேற்பாக தலை அசைத்தவள், கோமதி பக்கம் திரும்ப கூட இல்லை.

“எவ்வளவு திமிர் பார்த்தியா உன் மகளுக்கு..”  கோமதி கொஞ்சம் சத்தமாக பொரிய, பல்லவி திரும்ப கூட இல்ல. அவளை பொறுத்தவரை இனி அவர் யாரோ அவள் யாரோ, அவர்களிடம் தனக்கு எந்த உரிமையும் இல்லை. மொத்தமாக விலகிவிட்டாள்.

“என்ன சொன்னீங்க..?”  ஈஷ்வர் தீர்க்கமாக கேட்டவாறே அவன் பேக்கட்டில் கை விட்டான்.

“பாட்டி நான் தான் சொன்னேன் இல்லை அவர் டிஸ்பின்னு.. பாருங்க துப்பாக்கி எடுக்கிறார்..” பரணி ரகசியமாக அவரின் காதை கடித்தான்.

கோமதிக்கு கொஞ்சம் திக்கென்று இருந்தாலும்,  “துப்பாக்கி இருந்தா சூட்டுட முடியுமா..?”   என்றார். குரல் நைந்து ஒலித்தாலும் பார்த்து கொண்டே இருந்த ஈஷ்வருக்கு புரிந்தது.

“இங்க செக்கியூரிட்டி அதிகம், சந்தேகப்படுற மாதிரி யார் இருந்தாலும் உள்ள தூக்கி வச்சு நாலு நாளைக்கு வித விதமா விசாரிப்போம்..” என்றான் சத்தமாக. தன்னை தான் சொல்கிறான் புரிந்த கோமதி வாய் படக்கென மூடி கொண்டது.

“என்ன ஆச்சு..?”  நரசிம்மனுக்கு புரிந்திருந்தாலும் வேண்டும் என்றே கேட்டவர், கோமதியை கூர்மையாக பார்த்தார்.

“நான் இல்லை..” என்பது போல கோமதி எங்கோ பார்த்தார். முன்ன மாதிரி பல்லவியை பேச முடியாது, புருஷன் போலீஸ், மாமனார் மினிஸ்டர், க்கும்.. உள்ளுக்குள் வெந்து தான் போனார்.

மற்றவர்ளுக்கு புரிந்தாலும் ஈஷ்வர் நக்கல் சிரிப்பில்  அதை பெரிதாக எடுக்க தோணவில்லை, அதோடு கோமதி போல ஆட்களுக்கு இது தேவை என்ற எண்ணமும் இல்லாமல் இல்லை.

“சாப்பிட போலாம் வாங்க..” கங்கா அவர்களை கூட்டிக்கொண்டு போக, ரத்னாவிற்கு மகள், பேத்தியை விட்டு செல்ல முடியவில்லை. பரணியும் தேங்கி நின்றான்.

“கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கட்டும்..” என்றாள் பல்லவியும் வாய் திறந்து. புரிந்த கங்கா மற்றவர்களை கூட்டி கொண்டு செல்ல, ரத்னா பேத்தியை கொஞ்சி, மகளுடன் பேசிகொண்டிருந்தார்.

“அத்தை, பரணி.. உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ எல்லாம்  நம்ம வீட்டுக்கு வந்து  பல்லவியை, பேத்தியை பார்த்துட்டு போங்க..” ஈஷ்வர்  உறவு முறை சொல்லி உரிமையாக கூப்பிட, ரத்னாவும், பரணியும் மனநிறைவுடன் இறங்கினர்.

பல்லவி மேல் அவர்களுக்கு இருக்கும்  பாசம் உண்மை என்பது அவனுக்கு முன்பே தெரியும் தானே. பல்லவிக்கும் முகம் மலர்ந்து போனது.

“ம்மா.. கொஞ்சம் குடிக்க தண்ணி கொடுங்க..” ஆட்கள் குறையவும் ஈஷ்வருக்கு தண்ணீர் தாகமே உறைத்தது. அதுவரை ஆட்கள் நிறைய இருக்க, சிறுது நாட்களுக்கு முன் அவன் செய்த என்கவுன்டர், அதன் பாதிப்பு என்று அவன் நினைவு முழுதும் அதிலே நிறைத்திருந்திருந்தது.

“தண்ணி எதுக்கு..? சாப்பிட போலாம்.. ரொம்ப நேரம் ஆச்சு.. இனி யாரும் இல்லை..” நரசிம்மன் மனைவியிடம் சொல்வது போல மகனை பார்த்தார். பல்லவி வாடி போயிருப்பது புரிந்த ஈஷ்வர், சரி என்று சாப்பிட சென்றனர்.

அப்போது தான் நரசிம்மனும் சாப்பிட அமர, பார்த்த ஈஷ்வர் விஷ்ணுவிடம் கண் காட்டினான். அவன் அவருக்கு ஏத்த உணவை எடுத்து வந்து கொடுக்க, சக்ரவர்த்தி வந்தார்.

“வாங்க மாமா உட்காருங்க..” நரசிம்மன் அவரை பார்த்ததும் மரியாதையாக எழுந்து கூப்பிட்டார்.

“நீங்க உட்காருங்க..”  சக்ரவர்த்தி அவர் பக்கத்திலே அமர,  மகா இருவருக்கும் முன் நின்று உணவு வைத்தாள்.

“முடிஞ்சுதா கிளம்பலாமா..?” நரசிம்மன் கட்சி ஆட்களை கவனித்து வந்தவர், குடும்பத்துடன் வீட்டிற்கு கிளம்பினர். விஷ்ணு துர்கா காரில் ஏற, ஈஷ்வர் நிம்மதியுடன் கிளம்பினான்.

நடு இரவு நெருங்கிவிட்டது வீடு வர. அப்போதும் கங்கா ஈஷ்வர் குடும்பத்திற்கு திருஷ்டி கழித்து வீட்டிற்குள் கூப்பிட்டார். பல்லவி முதலில் அனுவை சுடுநீரில் துடைத்தவள், லேசான உடை மாற்றி படுக்க வைத்தாள்.

ஈஷ்வர் சென்று குளித்து வர, பல்லவி அடுத்து குளிக்க சென்றாள். கங்கா கதவு தட்டி அனுவிற்கு பால் கொடுத்து சென்றார். ஈஷ்வர் கதவை மூடி வந்தவன், மகள் பக்கத்தில் நன்றாக கால் நீட்டி படுத்தான்.

பல்லவி குளித்து வந்தவள், ஈஷ்வர் மகள் பக்கத்தில் படுத்திருப்பது பார்த்து முகம் மலர்ந்தாள். மனதுள் ஒரு  நிம்மதி. ஒரு வாரமாக விஷ்ணுவுடன் தங்கி கொண்டவன், இன்று குடும்பமாக இருந்தான்.

தானும் அலுப்புடன் மகள் பக்கத்தில் படுத்தாள். இருவரும் கண் மூடி இருந்தனர். ஆனால் தூங்கவில்லை. உடல் முழுதும் அசதி இருந்தாலும் தூக்கம் வரும் போல இல்லை. பல்லவிக்கு ஈஷ்வரிடம் பேச வேண்டும் போல இருக்க, யோசித்து கொண்டே படுத்திருந்தாள்.

சில நிமிடங்கள் செல்ல,  ஈஷ்வர் தண்ணீர் குடிக்க எழுந்து பார்த்தால் பாட்டிலில் தண்ணீர் இல்லை. கீழே வந்தவன் தண்ணீர் குடித்து,  பாட்டிலில் பிடித்து மேலேற, நரசிம்மன் ஆபிஸ் ரூமில் லைட் எரிந்து கொண்டிருந்தது.

“அப்பா இன்னும் தூங்காம என்ன பண்றார்..?” ஈஷ்வர் கேள்வியுடன் கதவை தட்ட,

“ம்ப்ச்.. கங்கா நான் வரேன், நீ தூங்கு போ..” என்றார் நரசிம்மன் உள்ளிருந்து. குரல் நலிந்து ஒலிக்க, ஈஷ்வர் மீண்டும் தட்டினான்.

“இவளோட..” நரசிம்மன் கதவை திறக்க, முன் மகன்.

“தூங்கலையா..?” நரசிம்மன் கேட்க,

“நீங்க தூங்காம என்ன பண்றீங்க..?”  என்றான் மகன்.

“தூங்க போறேன்..” என்றவர், லைட் ஆப் செய்து வெளியே வர,

“ப்பா..”  என்றான் ஈஷ்வர். அவர் திரும்பி பார்க்க, அவரின் கண்களை பார்த்தபடி,   “உங்களுக்கு என்கிட்ட ஏதாவது பேசணுமா..?” என்றான்.

“ஆம.. இல்லை.. இல்லைப்பா.. நீங்க தூங்க போங்க..” என்றார் அவர்.

“எனக்கு உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்,  கேட்லாமா..?” என்றான்  மகன்.

நரசிம்மன் கேள்வியாக பார்க்க, ஈஷ்வர் பாட்டிலை வைத்தவன் அவர் அருகில் நின்றபடி, “உங்களை கட்டி பிடிக்கணும்..” என்றான்.

நரசிம்மன் அதிர்ந்து பார்த்து கொண்டே இருக்க,  ஈஷ்வர் அவரின் தோள் வழியாக அணைத்து கொண்டான். நரசிம்மனின் தொண்டை அடைத்த கண்ணீர் மகன் தோளில் இறங்கியது.