“முருகா எல்லா அரேஞ்சமென்ட்ஸ் முடிஞ்சுதா..? பூ இன்னும் இங்க கட்டல பாரு, பேனர் ஓரமா வைக்க சொல்லு, சின்ன தம்பி பார்த்தா கோவிப்பாரு, சீக்கிரம் எடு, இன்னும் கொஞ்ச நேரத்துல ஐயா வந்துடுவாரு..” நரசிம்மனின் வலது கை கலையரசு அந்த மைதானத்தில் அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்தார்.
“கலையரசு எல்லாம் ரெடியா..?” நரசிம்மன் அங்கு வேகமாக வந்தவர் பார்வையாலே எல்லாவற்றையும் ஸ்கேன் செய்து கொண்டிருந்தார்.
“எல்லாம் முடிஞ்சுது தலைவரே..” அவர் சொல்ல, தூரத்தில் தெரிந்த பேனரை பார்த்து நரசிம்மன் முகம் கோவத்தில் சிவந்தது.
“யார் அந்த பேனர் அடிச்சது, வர சொல்லு அவனை..” கத்தி கேட்க, பார்த்த கலையரசு தலையில் அடித்து கொண்டவர்,
“எடுக்கிறது முக்கியமில்லை கலையரசு, இது போல நினைப்பு இங்க யாருக்கும் வர கூடாது, அது தான் முக்கியம்..” கத்தி சொன்னவர் பார்வை சுற்றியிருந்த கட்சி ஆட்கள் மீது அழுத்தமாக படிந்தது.
“இல்லை தலைவரே உங்களுக்கு அடுத்து சின்ன ஐயா தானேன்னு..”
“யார் சொன்னா..? என் மகனுக்கு அரசியல் தேவையில்லை, இனி இது போல வருங்கால அமைச்சர், சின்ன தலைவா பேனர் எல்லாம் வைக்க கூடாது, அவர் அரசியலுக்கு எல்லாம் வரமாட்டார், யாரும் எதிர்பார்க்க கூடாது..”
“அவர் ஐபிஸ் ஆகவும் உங்க வேலையை காட்டுறீங்க பார்த்தீங்களா..?”
“நம்ம லைன் வேற, அவர் லைன் வேற, எக்காரணத்தை முன்னிட்டும் நாம அவருக்கு இடைஞ்சல் கொடுக்க கூடாது, நம்ம ஐயா மகன் தானே போலீஸ் ஆபிசர்ன்னு ஏதாவது அழிச்சாட்டியம் பண்ணீங்க நானே உங்களை உள்ள தூக்கி வச்சு தோலுரிச்சிடுவேன்..” அதிகாரமாக எச்சரித்தவர் பார்வையில் மொத்த கட்சி ஆட்களும் அமைதியாகி போனார்கள்.
“தலைவரே.. நீங்க சொல்லிட்டீங்க இல்லை, இனி நம்ம ஆளுங்க இது மாதிரி பண்ண மாட்டாங்க, நீங்க வாங்க, கட்சி தலைவர் கிளம்பிட்டாராம்..” கலையரசு அவரை கூப்பிட்டு கொண்டு செல்ல, அப்போது தான் நினைவுக்கு வந்தவராக, கங்காவிற்கு போன் அடித்தார்.
அவர் அந்த பக்கம் எடுக்கவும், “எங்க வந்திட்டு இருக்கீங்க, கெஸ்ட் எல்லாம் வர ஆரம்பிச்சிட்டாங்க, CM கிளம்பிட்டார்..” பரபரப்பாக கேட்க,
“பக்கத்துல வந்துட்டோங்க, பாப்பா தான் கிளம்ப லேட் பண்ணிட்டா..” அனுவை மடியில் வைத்திருந்தவர் சந்தோஷமாக சலித்து கொண்டார்.
“சரி சரி அதுக்காக பேத்தியை எதுவும் சொல்லாதீங்க, வாங்க..” என்று வைத்துவட்டார்.
“க்கும்.. பேத்தியை சொன்னவுடன் அப்படியே வைக்குறதை பாரு..” கங்கா சிரிப்புடன் நொடித்து கொள்ள, பல்லவி லேசான சிரிப்புடன் கார் ஒட்டி கொண்டிருந்த ஈஷ்வரை பார்த்தாள்.
“க்கும்..” அவன் திரும்பவே இல்லை. எப்போதும் போல அதே முகத்துடன் இருந்தான். ஒரு வாரமாக அப்படி தான் இருக்கிறான். அவன் மனதில் என்ன ஓடுகிறது என்று அனுமானிக்க முடியாத ஒரு முகம். பார்க்கும் பார்வைகளும் அப்படியே இருக்க, பேச்சு மட்டும் தேவைக்கு ஏற்ப சகஜமாகவே பேசினான்.
அவன் டிஸ்பி என்று தெரிந்த நாளில் இருந்து இப்படி ஒரு மாற்றம். “எங்க மேல் ரொம்ப கோவம் போல..” பல்லவி நினைத்து கொண்டவள் தானும் அமைதியாகி விட்டாள். நரசிம்மனும் அவ்வாறே இருக்க, கங்கா தான் முன் நின்று சில முடிவுகளை எடுத்தார்.
அதில் முதலாவது அவர்கள் வீட்டிற்கு செல்வது என்று. ஈஷ்வர் காணாமல் போன ஒரு வாரமும் மொத்த குடும்பமும் அபார்ட்மெண்டில் தான் இருந்தனர். அவன் திரும்பி டிஸ்பியாக வந்த மறுநாள் ஈஷ்வரிடம், “வீட்டுக்கு எப்போ வரீங்க..?” என்று கேட்டார். அவன் அப்பா, மனைவியை பார்க்க, அம்மாவாக கங்காவிற்கு தாங்க முடியவில்லை.
“உனக்கு எப்போவும் உங்க அப்பா, பல்லவி தான் முக்கியமா..? உன்னை பெத்த என்னை பார்த்தா உனக்கு மனுசியா தெரியலையா..? நீ எப்போதான்டா என்னை நினைப்ப..? நானும் இத்தனை வருஷமா பார்க்கிறேன் பொண்ணுக்கும் சரி, பையனுக்கும் சரி அம்மான்ற நினைப்பே வராது போல..”
“வர வேண்டாம் போங்க, எனக்கு என் பேத்தி மட்டும் கொடுத்துடுங்க, அவ வீட்ல இருக்கட்டும்.. நீங்க எல்லாம் என்னமும் பண்ணுங்க..” மொத்தமாக பொங்கிவிட்டார்.
“ம்மா.. நான்..” ஈஷ்வர் மனம் வருந்தி சமாதானம் செய்ய வர,
“ஈஷ்வர்.. எனக்கு உன் சமாதானம் தேவையில்லை, எனக்கு உங்க போல சண்டை போட்டுட்டு இருக்க முடியாது, எனக்கு தேவை என் குடும்பம் ஒன்னா ஒரே வீட்ல இருக்கனும் அவ்வளவுதான்..” முடித்துவிட்டார்.
ஈஷ்வர் ஒரு நொடி யோசித்தவன், “கிளம்பலாம்..” என்றுவிட்டான். அதில் பல்லவிக்கு சற்று வருத்தம் தான். ஈஷ்வர் சொன்னதை மறுக்கவில்லை ஆனால் முகம் சுருங்கி போக, புரிந்து கொண்ட ஈஷ்வர் அமைதியாக தான் பார்த்தான்.
மகன் சம்மதம் கிடைத்தவுடன் கங்கா நாட்கள் கடத்தவில்லை. மறுநாளே நாள் எப்படி இருக்கிறது என்று பார்த்து, மகன், மருமகள், பேத்தியை ஆரத்தி எடுத்து வீட்டுக்கு கூப்பிட்டு கொண்டார்.
விஷ்ணு தனிமை வேண்டும் என்று அவர்கள் கெஸ்ட் அவுஸ் போய்விட, ஈஷ்வர் அந்த வாரம் முழுதும் அவனுடன் தான் இரவு தங்கினான். கங்கா எல்லா விஷயத்தையும் பல்லவிக்கு சொல்லியிருக்க, அவளுக்கும் விஷ்ணு நிலை புரிந்தது.
இனியாவது மகா வீட்டிற்கு வருவாள் என்று கங்கா நினைத்திருக்க, அவள் இப்போதும் வரவில்லை. “அவளை எதுவும் கேட்க கூடாது, ப்ரீயா விடுங்க..” என்று ஈஷ்வர் முன்பே சொல்லிவிட, கங்கா மனம் பொருமினாலும் அமைதியாக இருந்து கொண்டவர், அடுத்து ஆரம்பித்தார்.
“ஈஷ்வர், பல்லவி கல்யாண விஷயம் எல்லாருக்கும் தெரியணும், என் பேத்தியை ஊர் உலகத்துக்கு காட்டணும்..” என்று நரசிம்மனிடம் போய் நின்றார்.
அவருக்கும் கொள்ளை ஆசை தான். ஒரு மகனின் திருமணம் தான் அவர்கள் பார்க்காமலே முடிந்துவிட்டது. மற்றதையாவது பெரிதாக எடுத்து செய்ய ஆசைப்பட்டார். ஆனால் மகனிடம் நேரடியாக கேட்க தயக்கம் கொண்டார்.
ஏதோ ஒரு இடத்தில் தானும் மகன், மருமகள் என்று நினைக்காமல் இருந்துவிட்டோமோ என்று உறுத்தல் கொண்டவர், இப்போது இது எல்லாம் செய்ய ஆசைப்படுகிறேன் என்று கேட்க முடியவில்லை. ஈஷ்வரின் அமைதியும் அதற்கு ஒரு காரணம்.
அதனாலே மனைவியிடம், “எனக்கு சரி தான், ஆனா அவர் என்ன நினைப்பார் தெரியலையே..?” என, கங்கா அடுத்து ஈஷ்வரிடம் நின்றார்.
அவனுக்கு புரிந்து தான் இருந்தது தன் மனைவி, மகளை வெளியுலகத்திற்கு காட்டி அவர்களுக்கான உறவை, உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று.
“சரிம்மா.. பண்ணிடலாம்..” என்று சம்மதம் சொல்லிவிட்டான். கங்கா எப்போதும் போல உடனே அந்த வார இறுதியிலே நாள் குறித்து விட்டார்.
“பல்லவிக்கு, பாப்பாக்கு டிரஸ்..” கங்கா ஆரம்பிக்க,
“அது நான் பார்த்துகிறேன்..” என்றுவிட்டான். பல்லவி அங்கேயே இருந்தாலும் எதிலும் பேசவில்லை.
சொன்னது போல அவன் தான் மனைவி மகளுக்கு உடை எடுத்ததோடு இருவருக்கும் போதுமான அளவு நகையும் வாங்கி இருந்தவன், “பல்லவி.. இது உங்களுக்கு..” என்று மனைவியிடம் நீட்டினான். பார்த்த பல்லவிக்கு சட்டென கண்கள் கலங்கிவிட்டது.
கங்கா இங்கு வந்த போதே அவளுக்கும், அனுவிற்கும் நகைகளை வாங்கி அடுக்கிவிட்டார் தான். ஆனால் அவளால் தான் அதை போடமுடியவில்லை. இப்போது கணவன் வாங்கி கொடுக்கவும், அப்படியே அவனை அணைத்து கொண்டாள்.
“இது என்னோட இத்தனை வருஷ சம்பாத்தியத்துல வாங்கினது..” அவன் சொன்ன வார்த்தைகள், அவளுக்கான மருந்தாக அமைந்தது.
நரசிம்மன் என்னதான் மனதார, உள் அர்த்தத்தோடு பேசவில்லை என்றாலும் சில வார்த்தைகள் வார்த்தைகள் வலிக்க தானே செய்யும், பல்லவிக்கான அந்த வலி இன்று கணவனால் ஆனந்தமாக மாறி போனது. அவனை அணைத்து கண்ணீர் விட, இப்போதும் ஈஷ்வர் அவளை அணைக்கவில்லை. அது பல்லவிக்கு பெரிதாகவும் தெரியவில்லை.
“எனக்கு எங்கடா..?” பல்லவி மாமியாருக்கு எடுத்து வந்து காட்டவும், கங்கா வாய் திறந்து கேட்டுவிட்டார். என்னதான் இருந்தாலும் மகனின் சம்பாத்தியத்தில் வாங்கி தருவது வேறு தானே.
“வாங்கியிருக்கேன்.. ஆனா உங்க அளவுக்கு இல்லை..” ஈஷ்வர் மீதம் இருந்த பைகளை எடுத்து டீபாய் மேல் வைத்தவன் தந்தையை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்பிவிட்டான்.
கங்கா பிரித்து பார்க்க, அவருக்கு, மகாவிற்கு புடவை, நகை இருந்தது. அதனுடன் இன்னொரு பார்சல் இருக்க, பிரித்து பார்த்தால் நரசிம்மனின் வேஷ்டி சட்டை. உடன் ஒரு மோதிரமும்.
மனதில் ஒரு ஏக்கத்துடன், ஏமாற்றத்துடன் பார்த்து நின்ற மனிதர், மகன் தனக்காகவும் வாங்கியிருக்கிறான் என்றதில் ஹால் என்றும் பாராமல் உடைகளை அணைத்து ஒரு சொட்டு கண்ணீர் விட்டுவிட்டார்.
திகைத்து பார்த்த பல்லவிக்கு ஈஷ்வர் மீதான அவரின் அளவில்லா பாசம் புரிந்தது. “என்னங்க இது..” கங்கா அவரை சமாதானம் செய்ய, பல்லவி, கங்கா முன்னால் நிற்பது உரைத்தது அவருக்கு.
கண்ணீரை ஒற்றி கொண்டவர், “இல்லை.. அது.. ஐ இன்பெக்ஷன் போல..” நடந்து கொண்டே சொன்னவர் ரூமிற்கு ஓடிவிட்டார். அவர் கையில் மகன் கொடுத்த உடை, மோதிரமும் இருந்தது.
இன்றய பன்க்ஷனுக்கு ஈஷ்வர் எடுத்து கொடுத்த உடைய தான் மொத்த குடும்பமும் அணிந்திருந்தது. மகாவிற்கும் அவளின் உடை கங்கா மூலம் சென்று சேர்ந்திருக்க, அதையே அணிந்து கொண்டு வந்திருந்தாள்.
ஈஷ்வர் கார் மைதானத்திற்கு வர, சக்ரவர்த்தி காரும் வந்தது. ஆனால் அதில் மகா, துர்கா மட்டுமே இருந்தனர். “வாங்க..” நரசிம்மன் குடும்பத்தை தானே முன் நின்று வரவேற்று உள்ளே கூட்டி செல்ல,
“க்கும்.. மகனுக்கு கொடுக்கிற மரியாதை நமக்கும் கிடைக்குது..” என்றார் கங்கா துர்காவிடம் நொடிப்பாக.
“சரி தான் அண்ணி.. நெல்லுக்கு வர தண்ணி நம்மளை மாதிரி புல்லுக்கும் பாயுது..” அவரும் கிண்டலாக சொல்ல, பல்லவி லேசான சிரிப்புடன் நடந்தாள்.
“ஹாய் அண்ணி..” மகா தானே பல்லவியிடம் பேச, முதல் முறை தானே பேசும் நாத்தனாரிடம் பல்லவியும் தயக்கம் உடைத்து பேசினாள். சில நிமிடங்களிலே அனு அத்தையிடம் ஒட்டி கொள்ள, அவளும் அண்ணன் மகளை பூரிப்புடன் அள்ளி கொண்டாள்.
“அப்படியே என்னை மாதிரி..” என்று கொஞ்சி தீர்க்க, பல்லவி சிரிப்புடன் பார்த்து நின்றாள்.