பிரசாத்திற்கு உதய் மேல் இருந்த சந்தேகம் தீர்ந்தது அந்த நொடி. இவன் தான் என்னை தூக்கியிருக்கான்.. உள்ளுக்குள் கொந்தளித்தவன், “அதான் ரிசப்ஷன் இருக்கு இல்லை உதய்.. அதுக்கு கண்டிப்பா வந்துடுறேன்..”  என்றான் வஞ்சத்துடன்

வாங்க வாங்க.. உங்களை ரொம்ப எதிர்பார்ப்பேன்..”   உதய்யின் முகத்தில், வாடி.. வந்து தான் பாரேன்.. என்ற சவாலே தான் இருந்தது

இருவரையும் கவனித்த ஷா கிளம்பிவிடும் எண்ணத்தில்,  “சரி அங்கிள்.. நாங்க கிளம்புறோம், நீங்க உடம்பை பார்த்துக்கோங்க..”  என

முகுந்தன் திணறி, “ராமை வர சொல்லு..” என்றார்

கண்டிப்பா உங்களை பார்க்க  வருவார் அங்கிள்.. நீங்க ரிலாக்ஸா இருங்க..” விடைபெற


என்ன அவசரம் ஷா மேடம்.. இருந்து என்னோட விருந்து சாப்பிட்டு போங்க, ஆப்டர் ஆல் பேமிலி  ப்ரண்ட்ஸ் நாம..” என்றான் பிரசாத்

நோ.. தேங்ஸ் பிரசாத்.. ஆன்ட்டி கிளம்புறோம்..” என்றவள் உதய் கை பிடிக்க, அவனும் பெரியவர்களிடம் சொல்லி கொண்டு வெளியே வந்தான்

பவி குட்டி.. பூஜை ரூம் வா..”  தம்பதிகளுக்கு புது உடையுடன் தாம்பூலம் கொடுக்க முகுந்தன் மனைவி  அவளை உள்ளே அழைத்து செல்ல, உதய்  காருக்கு வந்துவிட்டான்

என்ன உதய் சார்.. என்னை பார்த்ததும் கிளம்புறீங்க..? அப்படியென்ன பண்ணிட போறேன் நான்..?”  பிரசாத் தொடர்ந்து வந்து நக்கல் பேச, உதய்க்கு எரிச்சலாக தான் இருந்தது. ம்ப்ச்.. உனக்கு பதில் சொல்லனுமா..? பார்வை மட்டுமே பார்க்க, பிரசாத்திற்கு  ஆத்திரம் கண் மறைத்தது

நான் கூட உன்னை என்னமோ நினைச்சேன், ஆனா நீ இவ்வளவு கோழையா இருப்பேன்னு நினைக்கல, மோதறதா இருந்தா நேரா மோதணும், அதென்ன அடையாளத்தை மறைச்சி தூக்கிறது, என்ன உன்கிட்ட மட்டும் தான் ஆள் இருக்காங்களா..? என்கிட்ட எத்தனை படை இருக்கு தெரியுமா..?”

தெரிஞ்சு நான் என்ன செய்ய போறேன்..?”

என்னடா திமிரா..? நான் இப்போ நினைச்சா கூட  நீயும், ஷாவும் இந்த காம்பவுண்ட் தாண்ட முடியாது.. எதோ பாவம் பார்த்து விட்டா.. நான் முதல்ல நினைச்சது போல ஷாவை தூக்கியிருக்கணும், விட்டது தப்பு, அதான் இவ்வளவு ஏத்தமா நிக்கிற..”  பிரசாத் பேசி கொண்டே போக, உதய் உள்ளே திரும்பி ஒரு பார்வை பார்த்தான்

முகுந்தனின் மனைவி இவர்களுக்கு முதுகு காட்டி பேசி கொண்டிருக்க, ஷா தான் இவர்களையே பார்த்தபடி அவரிடம் பேசி கொண்டிருந்தாள்

இப்போ மட்டும் என்ன கெட்டு போச்சு, உன் பொண்டாட்டியை தூக்கி உன்னை கதறவிடுறேன் இரு.. அப்போதான் என்னை பத்தி தெரியும் உனக்கு..”  உதய் அமைதியில் பிரசாத் வார்த்தைய விட, அதற்கு மேல் பொறுக்க முடியா உதய், நொடியில் பிரசாத் காலை தட்டி முட்டி போட வைத்துவிட்டான்

ஏதோ உங்க அப்பா, அம்மாக்காக பார்த்தா ரொம்ப பேசுற நீ..?”  அடிக்குரலில் சீறியவன், காலால் அவனின் காலை இறுக்கி கொண்டவன், அவனின் கைகளை பின்னால் வளைத்தவாறே,  “இங்கயே என் பொண்டாட்டியோட  நிக்கிறேன், வர சொல்லு உன் படையை, எவன் என் பொண்டாட்டி மேல கை வைக்கிறான் பார்க்கிறேன்..”  மேலும் முறுக்கி வளைக்க, பார்த்த ஷா கண்கள் அதிர்ச்சியில் விரிந்து போனது

உதய்யின்  கிடுக்கு பிடியில் பிரசாத்தால் அசைய கூட முடியவில்லை. வாய் விட்டு கத்த கூட அவனின்  வீணா போன கௌரவம் இடம் கொடுக்கவில்லை. வலியை பொறுத்து கொண்டே உதய்யிடம் இருந்து விடுபட முயல, “போய் தொலை.. இதுவும் உன்னை பெத்தவங்களுக்காக தான்..”  அவனின் அம்மா திரும்புவது போல இருக்க, உதய் தானே அவனை விட்டு விட்டான்

அவன் அப்படி விட பிரசாத்தால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை. முட்டி போட்டவாறே கவிழ்ந்துவிட, பார்த்துவிட்ட அவனின் அம்மா, “பிரசாத் என்ன ஆச்சுப்பா..?” என்று ஓடி வர, உதய் அவனின் கை பிடித்து தூக்கி விட்டான்

கீழே விழுந்ததில் மூக்கில் சதை பெயர்ந்திருக்க, “என்னப்பா பார்த்து வரமாட்டியா..?” தன் புடவை முந்தானையில் மகன் மூக்கை துடைத்துவிட்டார் அம்மா. அவரின் கையை தட்டிவிட்ட மகன் உதய்யை  வெறியுடன் பார்த்தான்

பார்த்து இருங்க பிரசாத், உங்க வீட்டுக்கு ஒரே  பிள்ளை, அம்மா, அப்பா வருத்தப்படுவாங்க இல்லை..”  உதய் அவனுக்கு புரியும் எச்சரிக்கை குரலில் சொன்னவன், மனைவியுடன் புறப்பட்டான்

என்னங்க இப்படி செஞ்சிட்டிங்க..?” ஷா காரில் கணவனிடம் கேட்டாள்

என்ன செஞ்சுட்டேன், அவன் பேசுன பேச்சுக்கு இதெல்லாம் ஒன்னுமே இல்லை..”  இன்னும் கோவம் குறையாமல் சொன்னவன் கையில் கார் பறந்தது. வீடு வரவும், மனைவியை இறக்கிவிட்டவன், “முகிலை பார்க்க போறேன்..” என்று கிளம்பிவிட்டான்.

“உதய் எங்க ஷா..?”  மகள் மட்டும் உள்ளே வர ராம் கேட்டார். 

“முகில் அண்ணாவை பார்க்க போயிருக்கார்ப்பா..”  என, ராம் மகளின் முகத்திலே ஏதோ நடந்திருக்கிறது என்று கண்டு கொண்டார். 

“பிரசாத் இருந்தானா அங்க..?” கேட்க, 

“ஆமாம்ப்பா..”  என்றவள் அப்பாவிடம் சொல்லலாமா வேண்டாமா என்று யோசிக்கவே செய்தாள். அவரின் உடல் நலம் குறித்த தயக்கம். முன்னமே அவனை தூக்கி இருக்க, திரும்ப பெரிய பிரச்சனை ஆகிவிடுமோ என்ற தயக்கம் அது. எப்படியும் உதய் இனி பிரசாத்தை விடமாட்டான் என்று ஷாவிற்கு தெரிய தான் செய்தது. 

“சரிப்பா.. நான் இவர் வரதுக்குள்ள ஆஃபிஸ் போய்ட்டு வரவா..?”  காலையில் இருந்து அந்த பக்கமே செல்லாமல் இருந்ததில் கேட்டாள். 

“அப்பா பார்த்துட்டு தான் இருக்கேன் ஷா, நீ வா நாம ஜுஸ் குடிச்சிட்டு தோட்டத்துக்கு நடக்க போலாம்..”  என, அதற்கு பிறகான நேரம் அப்பா, மகள் இருவருக்குமாக சென்றது. 

“ப்பா.. இது நீங்க சைன் பண்ண வேண்டிய பைல், பவ்யா.. இது உனக்கான பைல்..”  என்று ஜித்தன் வர, உடன் ஜின்னாவும் இருந்தான். 

“புது மாப்பிள்ளை.. உன்னை தான் ஆபிஸ் போக வேண்டாம் சொன்னேன் இல்லை, ஏன் போன..?” ராம் ஜின்னாவிடம் கேட்க, 

“இருக்கட்டும்ப்பா.. நான் கூட போல இவன் ஆபிஸ்ல வேலை பார்க்க மாட்டான், கடலை தான் வறுத்துகிட்டு இருப்பான்..” தம்பியை வம்புக்கு இழுத்தான் அண்ணன். 

“யாரு நானு.. ரைட்டு.. நீ வறுத்த கடலை எல்லாம் அண்ணிக்கு தெரியாது இல்லை.. இப்போ போய் சொல்லிட வேண்டியது தான்..”  மிரட்டவே செய்தான் தம்பி. 

“டேய்.. அப்போ ரெண்டு பேரும் வேலை பார்க்க ஆபிஸ் போல, கடலை வறுக்க தான் போறீங்களா..?  இருங்கடா உங்களை கொண்டு போய் சிமெண்ட் பிளான்ட்ல போடுறேன்..” ராம் சீண்டலாக சொன்னார். 

“அப்படியாவது என்னை இங்கிருந்து துரத்திவிடுங்க, இவன் தொல்லையில் இருந்து நிம்மதியா இருப்பேன்..” ஜின்னா வேகமாக சொல்ல, 

“எதுக்கு இதான் சேன்ஸ்ன்னு அண்ணியோட தனி குடித்தனம் போக பிளான் பண்ணிட்ட அப்படித்தானே..?” தம்பி கிண்டலாக  கேட்க, நீண்ட நாட்களுக்கு பிறகு வீடு சகஜ நிலைக்கு திரும்பிய உணர்வு. 

ராம், ஷா இருவரின் மனநிலை தெரிந்து அண்ணன், தம்பி இருவரும் அமைதியை கடைபிடித்தவர்கள், இன்று எப்போதும் போல அடித்து கொண்டனர்.  

“போதும்.. முதல்ல காபி குடிங்க..”  ஜோதி ரெண்டு பேருக்கும் காபி எடுத்துட்டு வர, “உட்காருங்கடா..”  அவர்களை சோபாவில் அமர்த்தி கொள்ள, அவர்களுடன் ஜோதியும், அவரின் கணவரும் சேர்ந்து கொண்டனர். 

“மருமக பிள்ளையை வர சொல்லுங்க, நைட் இங்கேயே சாப்பிடலாம்..” ராம் சொல்ல, ஜின்னா மனைவியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். இரவு ஒன்பது மணி போல உதய் வீட்டிற்கு வரும் போது, எல்லோரும்  அரட்டை அடித்து கொண்டிருந்தனர். 


“வாங்க தம்பி.. உங்களுக்காக தான் காத்திருக்கோம்..” ஜோதி மருமகளுடன் உணவு வைக்க செல்ல, ஷா கணவன் முகத்தையே பார்த்தாள். தெளிந்திருந்தான். உதய்யும் மனைவியை ஒரு நொடிக்கு அதிகமாகவே பார்த்தான். குளித்து புடவை மாற்றி, தலை பின்னி பூ வைத்திருந்தாள். 

“நான் ரெஃப்ரஷ் பண்ணிட்டு வந்துடுறேன்..” உதய் ரூம் செல்ல, ஷாவும் கணவன் பின்னே சென்றாள். பார்த்த ராமிற்கு நிம்மதியானது. 

“சாப்பிட போலாமா..?” உதய் பாத்ரூமில் இருந்த்து வரவும் ஷா கேட்க, 

“சாரிப்பா.. நீங்க எனக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பீங்கன்னு நினைக்கல, நான் முகிலோடே சாப்பிட்டேன்..” என்றான் உதய்.  

“ஓஹ்..” ஷா முகம் வாடித்தான் போனது. 

“உடனே என்ன..? வா இட்லி மட்டும் சாப்பிடுறேன்..” மனைவியுடன் கீழே வர, மற்றவர்கள் சோபாவிலே இருந்தனர். 

“நீங்க எல்லாம் சாப்பிட வரலையா..?”  உதய் நின்று கேட்க, 

“நான் என்னோட நேரத்துக்கு சாப்பிட்டேன் உதய்.. இவங்க மட்டும் தான்.”. ஜின்னா குடும்பத்தை கை காட்டினார். 

“சரி வாங்க.. நாம சாப்பிட போலாம்..”  உதய் என்ன நினைப்பானோ என்று தயங்கி நின்றவர்கள், உதய் சாதரணமாக கூப்பிடவும், அவனுடனே உண்டனர். சில நேரங்களில் இது போல இங்கு சாப்பிட தான் செய்வார்கள். 

ஜோதியும், ஜின்னா மனைவியும் பரிமாற, ஷா உதய்க்கு தானே இரண்டு இட்லி மட்டும் வைத்தாள்.  “ஏன்ம்மா..” ஜோதி கவனித்து கேட்க

எனக்கு போதும் ஆன்ட்டி..” என்றுவிட்ட உதய் அவர்களுடன் பேசி கொண்டே சாப்பிட்டு முடித்தான். ராம் சொல்லி கேரட் அல்வா செய்திருக்க, உணவு முடித்து ஹாலில் அமர்ந்து பேசி கொண்டே  அதையும் சாப்பிட்டு முடித்தனர்

ராம் முன்னமே தூங்க சென்றிருக்க,  “நேரம் ஆச்சு.. தூங்க போலாம்..”  ஜோதி சொன்ன பிறகே மற்றவர்கள்  அவரவர் இடம் சென்றனர்

ரூமிற்கு சென்ற ஷா பெட்டை விரித்து தூங்க ஆயத்தமாக, சப்பென்றான உதய், டிவி போட,   “நீங்க தூங்க வரலையா..?”  கேட்டாள் மனைவி.  

அவளை ஒரு பார்வை பார்த்தவன், “நீ தூங்கு.. எனக்கு தூக்கம் வரலை..”  டிவியை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

“இதுக்கு எதுக்கு புடவை கட்டி பூ எல்லாம் வச்சு மனஷனை உசுப்பேத்தனும்..?” உர்ரென்று உதய் அமர்ந்திருக்க, டிவியில் அவனை சோதிப்பது போல் பாட்டு.

“சேலையில வீடு கட்டவா..” என்று சிம்ரன் வளைத்து வளைத்து ஆடி கொண்டிருந்தார். 

“க்கும்.. கட்டிட்டாலும்..”  உதய் கடுப்பாக அமர்ந்திருக்க, “நல்ல பாட்டு இல்லை..” என்றாள் ஷா. 

ஒருவன் பிரியாணி சாப்பிட தவித்து கொண்டிருக்க, ஆடு தானே தலையை கொடுத்த நிலை. உதய்க்கு முகத்தில் திடீர் குறும்புடன் கூடிய பிரகாசம். 

“ஆஹா.. வழி இருக்குடா, விட்டுடாதாடா..”  உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டு கொண்டவன், “ரொம்ப நல்ல பாட்டு, அதுவும் சிம்ரன் டேன்ஸுக்கே ஓடி ஓடி பார்த்த கூட்டம் நாங்க.. என்ன அழகு.. யப்பா..” உதய் ரசித்து  சொல்ல, ஷாவிற்கு அந்த நொடி பாட்டு, சிம்ரன் இரண்டையும்  பிடிக்காமல் போனது. 

“அப்படியென்ன நல்லா  இருக்கு.. ஒன்னுமில்லை இந்த பாட்டுல..” என்றுவிட, வாடி வா இதுக்கு தான் காத்திருத்தேன்.. உல்லாசம் கொண்ட கணவன், 

“என்ன நல்லா இல்லை, எவ்வளவு கருத்தான பாட்டு தெரியுமா..? இதை பத்தி நாங்க எவ்வளவு ரிசர்ச் பண்ணியிருக்கோம், நீ என்னன்னா பொசுக்குன்னு ஒன்னுமில்லை சொல்லிட்ட..”

“என்ன ரிசர்ச்சா..?” ஷா நம்பாமல் கேட்க, 

“ஆமா.. இந்த பாட்டு மட்டுமில்லை, எங்க தலைவர் வாலி, வைரமுத்து எல்லாம் என்னென்ன எழுதிருக்காங்கன்னு தெரியுமா..? அதை எல்லாம் கண்டுபிடிக்க நாங்க பட்ட பாடு எங்களுக்கு தானே தெரியும், சரி.. அதை விடு, முதல்ல இதை கேளு..” டிவியில் பாட்டு முடிந்திருக்க, மொபைல் வழியே யூ டியூபில் திரும்ப அதே பாட்டை போட்டான். 

“அப்படியென்ன கருத்து இருக்கு..?” ஷா உன்னிப்பாக  லிரிக்ஸ் கேட்க, உதய் அடக்கப்பட்ட சிரிப்புடன் அமர்ந்திருந்தான். 

தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே.. 

அசைந்ததும் உன் விழி அழகினை திருடுதே..

ஓவியத்தை திரை மறைவில் ஒழித்து வைப்பதேனமா..

 காற்று மழை சாரலில் நனையவிட்டால் நியாயமா..

 ரசிக்க வந்த ரசிகனின் விழியினை மூடாதே..

 விழியை மூடும் போதிலும் விரல்களாலே திருடாதே.. 

“போதும்.. போதும்..”  ஷா வேகமாக சொல்ல, 

“என்ன போதும் இன்னும் இருக்கு.. இனி வரது  இதைவிட நல்லா இருக்கும்.. கேளு..”  உதய் சவுண்ட் கூட்டிவைக்க, ஷா மொபைலை பிடிங்கி ஆபே செய்துவிட்டாள். 

“என்னடி  நீ..? சரி விடு.. இப்போ சொல்லு, எப்படி இருக்கு பாட்டு..?”  கேட்டு கொண்டே அவளின் எதிரில் முட்டி போட்டு அமர்ந்தான். 

“அது எப்படி இருந்தா என்ன..? நீங்க முதல்ல இதுல என்ன ரிசர்ச் பண்ணீங்கன்னு சொல்லுங்க..?”  மனைவியாக கேட்டாள் அவள்.  

“சொல்லணுமா..? அதைவிட..” அவளின் அருகில் வர, ஷாவிற்கு முதல் முறையாக ஒரு படபடப்பு. 

“என்.. என்ன..”  பின்னால் நகர, எட்டி அவளின் கை பிடித்து தன் அருகில் இழுத்து கொண்டவன், 

“நீயும் இன்னிக்கு சேலை தான் கட்டியிருக்க.. என்னோட ரிசர்ச்சை டெஸ்ட் பண்ணி பார்த்துடலாமா..?” கண் பார்த்து கேட்டான். அவனின் கண்களில் காதல் தீவிரம். 

பார்வைக்கே ஷாவின் உடல் முழுதும் சிலிர்க்க, காதல் கொண்ட மனது அவளின் சம்மதத்தை கண்களால் காட்டிவிட, உதய் அவளை அணைத்து அவளின் கழுத்தில் முகம் புதைத்தான். 

கணவனின்  தொடுதலை மனைவி விரும்பி ஏற்ற போதும், பெண்ணுக்கே உண்டான அச்சத்தில் தத்தளித்தவளை, உதய் தன் காதலால் வசப்படுத்தி கொண்டான்.