அத்தியாயம் 14
பைக் சத்தம் கேட்டு தர்மாவும் கீர்த்தியும் திரும்ப, அபியும் உள்ளே இருந்து ஆவலாக ஓடி வந்தாள். அவளது ஆவலை பொய்யாக்காமல் வந்தது விஷால்தான்.
“ஹாய் விஷால் பா….” என அபி பைக்கை நெருங்க…. விஷாலும் பைக்கை நிறுத்தி விட்டு இறங்க, அதற்குள் “வாங்க விஷால்.” எனக் கீர்த்தியும், “வா டா…” என்றபடி தர்மாவும் அவனை நெருங்கி இருந்தனர்.
விஷால் வண்டியின் முன்புறம் இருந்து பெரிய பொம்மை ஒன்றை எடுத்துக் கொடுத்து, “ஹாப்பிப் பர்த்டே பேபி.” என, அபி பொம்மையை வாங்கி ஆர்வமாகப் பார்த்தவள், பொம்மையைப் பிடித்தபடி தனது இரண்டு கைகளையும் விரித்துத் தூக்கு என்பது போலச் செய்ய…… விஷால் அவளைத் தூக்கிக் கொண்டான்.
அவன் கன்னத்தில் முத்தமிட்ட அபி, அவனுக்கு நன்றி சொல்ல… பெற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்ந்தனர்.
“உனக்கு இந்தப் பொம்மை பிடிச்சிருக்கா?”
“ம்ம்…. வாங்க உங்களுக்குக் கேக் தரேன்.” என அபி உள்ளே அழைக்க… மறுக்க முடியாமல் விஷாலும் உள்ளே சென்றான்.
வெறும் கேக்கோடு ஜமுனா விடுவாரா? விஷாலுக்கு உணவையும் பரிமாற… கீர்த்தியும் அபியும் உடன் இருக்க, தர்மா ஹாலிலேயே இருந்து கொண்டான்.
“உங்ககிட்ட காட்டணும்னு டிரெஸ்ஸை கூடக் கழட்ட விடலை…” என்ற கீர்த்தி, “நீங்க வரலைன்னு இவ மட்டும் இல்லை. இவ அப்பாவும் முகத்தைத் தூக்கிதான் வச்சிருந்தார்.” எனச் சொல்லவும் மறக்கவில்லை. விஷால் எதுவும் சொல்லவில்லை அமைதியாக உண்டான். கீர்த்தியும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
தன்னிடம் அவன் ஆரம்பிக்கும் கம்பனி பற்றித் தர்மா எதாவது கேட்பான் என எதிர்பார்த்தான். ஆனால் அவன் எதுவும் கேட்கவில்லை. விஷாலும் விடைபெற்றுக் கொண்டான்.
தர்மா தனது அலுவலகத்தை வீட்டின் அருகிலேயே மாற்றிக் கொண்டான். முன்பே யோசித்ததுதான். கீர்த்திக்கு இரட்டை குழந்தைகள் எனத் தெரிய வந்ததும், அதற்கான வேலையைத் துவங்கிவிட்டான்.
முன்பு இருந்தது வாடகை கட்டிடம். ஆனால் இப்போது இவர்களின் சொந்த இடத்திலேயே தரை தளத்தில் பார்கிங் மற்றும் வேலை ஆட்களின் ஓய்வு அறைகள் இருக்க… முதல் தளம் முழுவதும் அலுவலகக் கட்டிடம்.
அவன் தாத்தா, மற்றும் சித்தப்பாக்களிடம் சொல்லிவிட்டுத் தான் செய்தான். அவர்களுக்கு என்ன வேலை நடக்க வேண்டும் அவ்வளவுதான். அதனால் ஒன்றும் சொல்லவில்லை.
மூன்று மாதத்தில் வேலைகள் முடித்து, அங்கே அலுவலகத்தை மாற்றியும் விட்டனர். வீட்டின் அருகேயே அலுவலகம் என்பதால்.. தர்மாவுக்கு அலுவலகத்தில் சமையலுக்கு ஆள் வேண்டியது இல்லை .அதனால் ஜமுனாவுக்கு வேலை பளுவை குறைக்க, கணேசனை வீட்டு சமையலுக்கு என நியமித்து விட்டான்.
கீர்த்திக்கு சூப், பழச்சாறு என ஜமுனாவுக்கும் அதிக வேலைகள் இருந்தது. அத்தைக்குதான் ரொம்ப வேலை என எப்போதும் கீர்த்திச் சொல்லுவாள், இப்போது அவளாலும் நிம்மதியாக இருக்க முடிந்தது.
ரோட்டரி கிளப் விழா ஒன்றில் கலந்துகொள்ளத் தர்மா சென்றிருந்தான். அங்கே அவனுக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்கள் நிறையபேர் இருக்க… அவனது மாமனார் சோமசேகரும் இருந்தார். அவரை அவனுக்கு அறிமுகம் வேறு செய்தனர்.
நேருக்கு நேர் பார்த்துவிட்டுப் பேசாமல் செல்வதும் மரியாதையாக இருக்காது. அதே நேரம் அவருடைய விருப்பமும் இருக்கிறது. அதனால் “ஹலோ சார், உங்களைப் பார்த்தது சந்தோஷம்.” என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.
அவனுடைய அணுகுமுறை சோமசேகருக்குப் பிடித்திருக்க வேண்டும், அவர் நினைத்திருந்தால்…எதாவது காரணம் சொல்லி கிளம்பி இருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.
அன்று தர்மா பேசியது சுய ஒழுக்கத்தைப் பற்றி. அவனது பேச்சு திறன் அறிந்த ஒன்றுதான். அன்றும் அதை மெய்ப்பிக்கும் வகையில் இருந்தது அவனது பேச்சு.