எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 12
இரு சக்கர வாகனத்தில் பொள்ளாச்சி வரை வந்து, அங்கு அவனுக்குத் தெரிந்தவர் இடத்தில் வண்டியை விட்டுவிட்டு, இருவரும் கோயம்புத்தூர் செல்லும் பேருந்தில் ஏறினர்.
பேருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே இருவரும் உறங்கி விட்டனர். இரவு நேரம் சென்று உறங்கியது, அதிகாலை எழுந்து அவசரமாக எடுத்து வைத்து கிளம்பியது என இருவருக்கும் போதுமான உறக்கம் இல்லை.
காலை ஐந்து மணிக்கு ஜெய் அலாரம் வைத்து எழுந்தவன், மனைவியை எழுப்ப, வெண்ணிலாவால் கண்ணைத் திறக்கவே முடியவில்லை.
அவளைப் பார்க்கவும் பாவமாக இருந்தது. முன்தின இரவு அவளை வெகு நேரம் சென்று தான் உறங்க விட்டிருந்தான்.
“சரி முதல்ல நான் போய்க் குளிச்சிட்டு வரேன். பிறகு நீ எழுந்துக்கோ.” என்றவன், அவன் குளித்து விட்டு வந்து வெண்ணிலாவை எழுப்பி விட்டான்.
அதற்கு மேல் காலம் தாழ்த்த முடியாது என வெண்ணிலா எழுந்து கிளம்ப, அவள் வருவதற்குள் ஜெய் அறையை ஒழுங்கு செய்து வைத்திருந்தான்.
வெண்ணிலா சுடிதார் அணிந்து தலையில் துண்டை சுற்றியபடி குளியல் அறையில் இருந்து வர… அதன் பிறகே கொண்டு செல்ல தேவையானது எல்லாம் இருவரும் சேர்ந்து எடுத்து வைத்தனர்.
வெண்ணிலா அவளது ஆடை அணிமணிகளை அங்கிருந்த மேஜையில் வைக்க, ஜெய் எடுத்துப் பெட்டியில் அடுக்கியவன், இன்னும் வேறு என்னென்ன வேண்டும் எனப் பார்த்து எடுத்து வைத்தான். ஊட்டியில் நினைத்த நேரம் மழை பெய்யும் என்பதால்.. ஒரு குடையும் எடுத்து வைத்துக் கொண்டான்.
இருவரும் கீழே இறங்கி வர… பெரியவர்கள் மட்டும் விழித்திருந்தனர். அமுதா அவர்களுக்குக் காபி கொண்டு வந்து கொடுத்தார்.
ஜெயராமன் மகனை அறைக்குள் அழைத்தவர், “பணம் எதுவும் வேண்டுமா?” எனக் கேட்க,
“தேவையானது இருக்கு.” என்றான்.
நிஜமாகத்தான் சொல்கிறானா என்பது போல ஜெயராமன் மகனைப் பார்க்க, ஜெய்கும் அது புரிந்தது.
“தோட்டம் போட்டுக் கொடுத்ததுல கொஞ்சம் பணம் வர வேண்டியது இருந்தது. அதோட இந்த மாசம் சம்பளமும் வாங்கிட்டேன்.” என்றான்.
அதன் பிறகு எல்லோரிடமும் விடைபெற்று கிளம்ப ஏழு மணி ஆகி இருந்தது.
கோயம்புத்தூர் வந்துவிட்டது என நடத்துனர் குரல் கொடுத்ததும் தான் இருவரும் விழித்தனர். அங்கே இறங்கி ஒரு நல்ல உணவகத்தில் காலை உணவை முடித்துக் கொண்டு, ஊட்டிக்குச் செல்லும் ஆம்னி வேன்னில் ஏறினர்.
சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்த வெண்ணிலாவுக்கு மலை ஏறும் போது தலை சுற்ற… கண்ணை மூடி சாய்ந்து கொண்டாள்.
“என்ன ஆச்சு?” ஜெய் கேட்க,
“தலை சுத்துது, வாந்தி வர்ற மாதிரி இருக்கு.” என்றதும்,
தன்னிடம் இருந்த லிம்காவை கொடுத்துக் குடிக்கச் செய்தவன், அவன் மடியில் அவளைப் படுக்க வைத்துக் கொண்டான்.
வெண்ணிலாவும் சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள். அவளை மடி தாங்கியவன், அவள் விழுந்து விடாமல் அணைவாகப் பிடித்துக்கொண்டு வெளியே வேடிக்கை பார்த்தபடி இருந்தான். மேலே வந்தவுடன் தான் மனைவியை எழுப்பினான்.
உறங்கிக் கொண்டு வந்ததால் தலை சுற்றல் வாந்தி எதுவும் இல்லை. இப்போது நன்றாக இருந்தாள்.
“ரொம்ப நேரம் படுத்து தூங்கிட்டேனா… உங்களுக்குக் கால் வலிச்சிருக்கும். என்னை எழுப்பி இருக்கலாம்.” என மனைவியின் கவலையைப் பார்த்து, ஜெய் புன்னகையுடன் இல்லையென மறுத்தான்.
முன் மதிய நேரத்தில் ஊட்டியில் சென்று சேர்ந்திருந்தனர். நேராக அறைக்குச் சென்றவர்கள், சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு மதிய உணவுக்குச் சென்றனர்.
இருவரும் நல்ல பசியில் இருக்க, மதிய உணவை நன்றாக உண்டனர். மழை தூறிக் கொண்டே தான் இருந்தது.
ஜெய் ஒரு கையில் குடையை வைத்திருந்தவன், மறுகையால் மனைவியை அணைத்தபடி நடந்தே அருகில் இருந்த கார்டனுக்கு அழைத்துச் சென்றான்.
அங்கேயே ஒரு மணி நேரம் போல இருந்தனர். பிறகு மழை வலுக்க, ஒரு ஆட்டோவில் அறைக்கு வந்து விட்டனர்.
அறையில் ஹீட்டர் இருந்ததால்… குளிரை சமாளிக்க முடிந்தது. இருவரும் இருந்த அசதியில் நன்றாகப் படுத்து உறங்கி விட்டனர். வெண்ணிலாவுக்கு மீண்டும் விழுப்பு வந்த போது, மாலை ஏழு மணி ஆகி இருக்க… இவ்வளவு நேரமா உறங்கினோம் என நினைத்தவள், ஜெய்யை எழுப்பி விட்டாள்.
இருவரும் பால்கனியில் நின்று சுற்றிலும் பார்க்க, மழை பெய்ததால்… தெருவில் ஆள் நடமாட்டமே இல்லை. மழை நேரத்தில் வந்தால் இப்படித்தான். வெளியில் செல்லாமல் அறையில் தான் அடைந்து கிடக்க நேரிடும்.
முகம் கழுவி தயராகிக் கீழே சென்றவர்கள், அங்கே இருந்த உணவகத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டு மேலே அறைக்கு வந்தனர்.
வெண்ணிலா இரவு உடை மாற்றி வர… இருவரும் கட்டிலில் படுத்து பேசிக் கொண்டிருந்தனர்.
“களைப்பா இருக்கா?”
“இல்லையே…”
“நல்லா சாப்பிட்டியா?”
“ம்ம்…”
“பால் எதுவும் வேணுமா?”
“இப்பத்தானே சாப்பிட்டோம். கொஞ்ச நேரம் கழிச்சு வேணா பார்க்கலாம்.”
ஜெய்யும் எழுந்து சென்று உடைமாற்றி வந்தவன், விளக்கணைக்க… “திடுக்கிட்ட வெண்ணிலா அதுக்குள்ளவா தூங்கப் போறோம்.” என்றதும், ஜெய்கு சிரிப்பு வந்து விட்டது. ஆனால் இருட்டில் அவன் சிரிப்பது அவளுக்கு எப்படித் தெரியும்.
கட்டிலில் மனைவியின் அருகே நெருங்கிப் படுத்தவன், அவளை அனைக்க… பிறகே வெண்ணிலாவுக்கு விஷயம் புரிந்தது. நேற்று விளக்கனை என்றால் கேட்காதவன், இன்று இருட்டில் மட்டுமே கூடல் கொண்டான்.
வீட்டில் இருப்பது போல வெளியிடத்தில் இருக்க முடியாது என நினைத்திருக்கலாம்.
கூடல் முடிந்தது உடனே இருவரும் உறங்கி விடவில்லை. டிவியை போட்டுக் கொண்டு உட்கார்ந்தவர்கள், அறைக்கே சில உணவுகள் வரவழைத்து உண்டு என இரவு பன்னிரெண்டு மணி வரை விழித்திருந்தனர்.
மறுநாள் காலை மழை இல்லாமல் லேசாக வெயிலும் அடிக்க.. இருவரும் கிளம்பி முக்கியமான இடங்களை மட்டும் சென்று பார்த்து விட்டு, மதியத்திற்கு மேல் ஊட்டியில் இருந்து கிளம்பி விட்டனர்.
திரும்ப வரும் போது, போக்குவரத்து நெரிசல் இருக்க.. மெதுவாகத்தான் வர முடிந்தது. அதுவும் கோயம்பதூரில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்ற பேருந்தும் கூட்டமாக இருக்க… வெண்ணிலா மிகவும் துவண்டு போனாள். அவள் பெரிய பெண் ஆனதில் இருந்தே வீட்டில் கார் இருக்கிறது. எங்குச் சென்றாலும் கார்தான். இப்படிக் கஷ்டப்பட்டு எல்லாம் எங்கும் சென்றது இல்லை.Advertisements
ஜெய்கும் எதுவும் செய்ய முடியாத நிலை. வேறு யாரையும் திருமணம் செய்திருந்தால் வசதியாக இருந்திருப்பாள். தன்னைத் திருமணம் செய்ததால் தான் கஷ்டப்படுகிறாளோ என்றும் தோன்றியது.
Advertisements