25

வேகமாக ஐந்தாறு வருடங்கள் ஓடிவிட்டன. அம்மு இப்போது முதல் வகுப்பு போகிறாள். அவளுக்கு ஒரு தம்பி பிரணவ் வேறு இருந்தான். அது அரவிந்திற்கும் கீர்த்திக்கும் பிறந்த மகவு. அம்முவை விட பல மடங்கு குறும்பு செய்தான்.

அம்முவை வளர்ப்பது கீர்த்திக்கு என்றும் சிரமமாகவே இருந்ததில்லை. ஆனால் ப்ரணவ்வை வளர்ப்பது அவளுக்கு ப்ரம்ம ப்ரயத்தனமாக இருந்தது. நிறைய குறும்பு செய்தான்.

இப்போதுகூட கீர்த்தியை அவன் பின்னால் சுத்த வைத்துக் கொண்டு இருந்தான்.

“டேய் ஓடாத நில்லு, போன் குடு, கீழ போட்டுடாத…” என்று கத்த கத்த… அவன் கையில் வைத்திருந்த அவளின் செல்போனை ஒரே வீசாக தரையில் வீசினான்.

அது பார்ட் பார்ட்டாக கீழே விழுந்து சிதறியது. அவன் முதுகில் ஒரு அடி வைத்தாள். அவள் அடித்தது என்னவோ மெதுவாகத் தான். ஆனால் அவன் போட்ட கூச்சல் வீட்டில் இருந்த எல்லோரையும் ஹாலுக்கு வரவைத்தது.

அவசரமாக அவனைத் தூக்கிய அரவிந்த், “என்ன கீர்த்தி” என்று கேட்க…

மகனை அதிகம் அடிக்க முடியாத கோபத்தில்… அரவிந்த் தோளில் ஒரு அடி வைத்தாள்… பலமாகவே வைத்தாள்.

தோளைத் தடவியபடியே தந்தையும், மகனும் அவளைப் பார்த்து முறைத்தனர்.

“என்னோட எத்தனாவது போன் இதுன்னு கணக்கே இல்லை. அத்தனை போனை தூக்கிப் போட்டு உடைச்சிட்டான். இவனை என்ன பண்ண” என்று கண்களை உருட்டியபடி கேட்டாள்.

இது தினம் நடக்கும் வாடிக்கையான சண்டை என்பதால் ராணியும், சிதம்பரமும்… “ஆரம்பிச்சிட்டீங்களா” என்ற மாதிரி ஒரு பார்வை பார்த்து உள்ளே சென்றனர்.

அதற்குள் அங்கே வந்த அம்மு, “வாட் ஹாப்பன்ட் அம்மா” என்றாள். தமிழ் நன்றாகப் பேசினாலும், அதிகமாக அம்முவிற்கு ஆங்கிலமே வந்தது. அவள் பிறப்போ என்று சில சமயம் கீர்த்திக்கும் அரவிந்திற்கும் தோன்றும்.

கீழே கிடந்த செல்போனை கீர்த்தி காட்ட, “மறுபடியும் ஒடைச்சுட்டானா” என்றபடியே கீழே இருந்ததை அம்மு எடுக்க ஆரம்பித்தாள்.

அதைப் பார்த்த கோபத்தில் கீர்த்தி, மறுபடியும் கண்ணை உறுத்தி, அவனை அடிப்பது போல வர… ப்ரணவ் தன் தந்தையின் கழுத்தை இறுக்கக் கட்டிக் கொண்டான்.

அரவிந்த் அப்படியே திரும்பிவிட, மறுபடியும் ப்ரணவ் மேல் விழுந்திருக்க வேண்டியஅ டி, அரவிந்த் மேல் விழுந்தது.

“ஏய், ராட்சசி எதுக்கு இப்படி அடிக்கற… போன் போனா போகுது போ, அடிக்காத” என்றான்.

“அடிக்காம என்ன செய்வாங்க… எவ்வளவு பொறுமையா அவன் கிட்ட சொல்லியிருக்கேன். கேக்கறானா… இனி அடிதான். வேற வழியேயில்லை” என்றாள் கோபமாக.

“எதையும் தூக்கி வீசக்கூடாதுன்னு பல தடவை சொல்லிட்டேன்… எதையும் கேக்கறது கிடையாது… நம்ம பொருளை மட்டும் போட்டா பரவாயில்லை. அந்த கிட்ஸ் ஸ்கூல்ல இருக்கிற மிஸ்ஸோட போனையும் தூக்கிப் போட்டுட்டான். அவங்களுக்கு புதுசு நான் வாங்கி கொடுத்தேன்” என்று பொரிய…

ப்ரணவ்வை இறக்கிவிட்ட அரவிந்த்… “ஐய்யே… என்ன கீர்த்தி, இவ்வளவு கோபம்… குழந்தைங்க அப்படித்தான்…” என்று அவள் தோள் மீது கைபோட…

“என்ன இது நடுவீட்ல தோள் மேல கை போட்டுட்டு, கைய எடுங்க” என்று அரவிந்தை கீர்த்தி அதட்டினாள்.

“அப்போ சரி, வா ரூமுக்குப் போகலாம்” என்று சீரியஸாக அவள் கைபற்றி அரவிந்த் இழுக்க…

“அச்சோ, என்ன இது இப்படி படுத்தறீங்க” என்று சிணுங்கியபடியே கையை விடுவித்தாள் கீர்த்தி.

“வா, கீர்த்தி” என்று சலுகையாக மறுபடியும், கீர்த்தியின் கையை… அரவிந்த் பிடிக்கப் போக… அப்போது பார்த்து தொலைபேசி தொல்லை செய்தது.

அழைத்தது ஹரிஷ்… “சொல்லு ஹரிஷ்” என்றபடி ஆர்வமாக அரவிந்த் பேச…

“டேய்! நான் அப்பா ஆகிட்டேன்டா” என்றான் சந்தோஷமாக ஹரிஷ்.

“கங்க்ராட்ஸ் ஹரிஷ்” என்று அரவிந்த் கூறி, என்ன குழந்தைடா” என்றான்.

“பொண்ணுடா” என்று கூறிய ஹரிஷ், சரி நான் உன்னை அப்புறம் கூப்பிடுறேன்” என்று சொல்லி வைத்தான்.

ப்ரணவ்வை தோளில் இருந்து இறக்கிய அரவிந்த்… அப்படியே கீர்த்தியைத் தூக்கி… தட்டாமாலை சுற்றினான்.

“என்ன இது? விடுங்க! விடுங்க!” என்று அவள் கூற கூற மீண்டும் மீண்டும் சுற்றினான்.

“விடுங்க… அத்தையாவது, மாமாவாவது வந்துடுவாங்க” என்று அவள் கூறிய பிறகு, ஒரு வழியாக அவளை இறக்கியவன்… அவளை அப்படியே ரூமிற்கு தள்ளிச் சென்று “ஐ அம் ஸோ ஹாப்பி” என்றான்.

“என்ன” என்பது போல் கீர்த்தி பார்க்க…

“லிசாவிற்கு குழந்தை பொறந்திருக்கு” என்றான் மிகவும் சந்தோஷமாக போன வருடம் தான் ஹரிஷின் வெகு நாளைய காத்திருப்பிற்கு பிறகு லிசா அவனை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டு இருவர் திருமணமும் நடந்தது.

“ஒரு வேளை நம்ம அம்முவை கேட்டுடுவாளோ லிசான்னு பயந்துட்டே இருந்தேன். இனிமே வரமாட்டா. அவளுக்கு இன்னொரு குழந்தை பொறந்துடுச்சே…”

“ஒரு வேளை வந்துட்டா” என்று கீர்த்தி கேட்க…

“வரமாட்டா என் உள் மனசு சொல்லுது” என்றான் அரவிந்த்.

அது கொடுத்த சந்தோஷம் கீர்த்தியை அணைத்துக் கொள்ள… அவன் கைகளில் அடங்கியவள்… வெகுநேரம் அப்படியே நின்றாள்.

இருவரும் ஒருவேளை லிசா வந்து விடுவாளோ என்று பயந்து கொண்டே இருந்தனர். இனி அந்த பயத்திற்கு அவசியமில்லை போல இருவருக்குமே தோன்றியது.

மனம் சொல்லொணா மகிழ்ச்சியில் திளைத்தது. அம்முவின் ரகசியம் அப்படியே தான் காப்பாற்றப்பட்டு வந்தது. அவள் அரவிந்தின் குழந்தையாக தான் சிதம்பரமும், ராணியும், ஏன்… தண்டபாணியின் அன்னையும் கூட நினைத்திருந்தனர்.

அதை… அந்த ரகசியத்தை உடைக்க கீர்த்தியோ, அரவிந்தோ… ஏன் ராஜேந்திரனோ கூட விரும்ப வில்லை.

காலம் அந்த ரகசியத்தை அப்படியே தான் கொண்டு சென்றது.

உள்ளே சென்று வெகு நேரமாகியும் வராத அம்மாவையும், அப்பாவையும் தேடி ப்ரணவும், அம்முவும் உள்ளே நுழைந்தனர்.

குழந்தைகள் வருவதைப் பார்த்து அவசரமாக கீர்த்தியும், அரவிந்தும் விலகினர்.

தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ப்ரணவை தூக்கி கீர்த்தி… “ப்ரணவ் குட் பாய் தானே அம்மா செல்போன் ஏன் உடைச்சீங்க” என்று கேட்க…

“அப்போதானே அம்மாக்கு புதுசு கிடைக்கும்” என்று பதிலளித்த அம்மு… தன் தந்தைக்கு ஹை-பை கொடுக்க…

“ஆமாம் ஆமாம்” என்பது போல ப்ரணவும் தலையாட்டினான்.

“அம்மும்மா அவன் தப்பு பண்ணினா சப்போர்ட் பண்ணக்கூடாது” என்று கீர்த்தி அம்முவிற்கு அறிவுறுத்த…

“சரி அம்மா, ஐ வில் ட்ரை” என்றாள் அம்மு.

“என்ன பேசினாலும் இந்த இங்க்லீஷ் இவளை விட்டுப் போகாதுடா” என்று அரவிந்தும், கீர்த்தியும் ஒருவரை ஒருவர் பார்த்து ரகசிய புன்னகை புரிந்தனர்.

அம்மாவும், அப்பாவும் புன்னகைக்க… அந்த புன்னகை மக்களையும் தொற்ற… அம்முவின் ரகசியம் அவர்களோடே புதைந்து போக… அம்மு சலுகையாக அரவிந்தின் மேல் ஏறிக் கொண்டு கீர்த்தியை நோக்கி புன்னகை புரிந்தபடியே… அரவிந்த் தோள் சாய்ந்தாள்.

அந்த இல்லறத்தில் சந்தோஷம் பொங்கியது. இருவர் பார்வையும் ஒருவரை ஒருவர் தழுவி நிற்க… அது, “உன் பார்வை நானறிவேன்” என்று உணர்த்தியது.

“எல்லாப் பிரச்சனையும் ஓரளவு சால்வ் ஆகிடிச்சி கீர்த்தி… இப்போ கூட நீ என்னைப் பார்த்து அந்த வார்த்தை சொல்ல மாட்டியா” என்றான் அரவிந்த்.

அவன் பார்வையைப் பார்த்தவள்… “ஐ லவ் யூ” என்றாள் சந்தோஷமாகவே. “இதை சொன்னாதான் உங்களுக்குத் தெரியுமா… இல்லைன்னா என்னை உங்களுக்குத் தெரியாதா…”

“அது அப்படியில்லை கீர்த்தி… நீ எத்தனை வருஷமா இந்த வார்த்தையை என்னைப் பார்த்துச் சொல்லாமயே இருக்கத் தெரியுமா… கல்யாணத்துக்கு முன்ன இருந்து கேட்கறேன்… நீ கல்யாணத்துக்கு பிறகு கூட சொல்லலை” என்றான் சற்று முறுக்கியபடி…

“அதான் இப்போ சொல்லிட்டேனே” என்று செல்லம் கொஞ்சினாள் அவன் மனைவி.

அவன் அசையாது நிற்க… “சரி வேண்டாம்னா திரும்ப குடுத்துடுங்க…” என்றாள்.

‘திரும்ப குடுக்கறதா எப்படி” என்று அவன் ஆராய்ச்சி பார்வை பார்க்க… “இப்படி பார்த்தே என்னைக் கொல்றான்டா’ என்று மனதிற்குள் நினைத்தவள்.

“என் ஐ லவ் யூ வ திரும்ப குடுங்க” என்றாள்.

அவன் விழிக்க… “ஐ லவ் யூ சொல்லுங்க” என்று கேட்டு… அவனை அதைச் சொல்ல வைத்து…

“சொல்லிட்டீங்களா” என்று ரசித்துச் சிரிக்க… குழந்தையை விட்டு “போடி” என்று அவளை வளைத்துப் பிடிக்க…

அவன் கைக்குள் சுகமாக அடங்கினாள்…

இருவர் பார்வையும் குழந்தைகளைத் தழுவியது.