கடந்து செல் காதலுடன்! 20 1 6434 கடந்து செல் காதலுடன்! 20 குருமூர்த்தி விமானத்தில் பயணித்து கொண்டிருந்தார். இன்னும் சில நிமிடங்களில் சென்னையை சென்றடைந்துவிடும் விமானம். “அண்ணா. என்னாச்சு?” என்று மணி அவரை கவனித்து கேட்க, “என் பொண்ணுகிட்ட பேசணும் மணி என்றார். “இறங்கினதும் பேசிடலாம்ண்ணா” மணி சொல்ல, “ம்ம்” என்றவருக்கு மனது ஒரு நிலையில் இல்லை. “நம்ம வீடு விஷயமா தான் சென்னை வரோம்ன்னு ஆபிஸ்ல சொல்லிட்டேன்ண்ணா. இங்க லிங்கம் அய்யாவும் அதையே சொல்லி வைச்சிருக்கார்” என்று தகவல் கொடுத்தார். சென்னை பயணப்பட காரணம் வேண்டுமே! குருமூர்த்தி தரையிறங்கியதும் முதல் வேலையாக மகளுக்கு அழைத்தவர், “லைன் போகலை மணி” என்றார். “மலை இறங்கிட்டு இருப்பாங்கண்ணா. சில இடத்துல நெட்வொர்க் கிடைக்காது” என்று மணி சமாதானமாக சொன்னார். “அப்படி தான் இருக்கும்” என்று அவர் சொல்ல, “வேணும்ன்னா ட்ரைவர்க்கு கூப்பிடவா?” மணி கேட்டார். “இல்லை. வேணாம், வண்டி ஓட்டும் போது தொந்தரவு பண்ண வேண்டாம்” என்றவர், மகளுக்கு செய்தி அனுப்பினார். லிங்கம் அனுப்பி வைத்த காரில் இருவரும் பயணம் மேற்கொண்டு, குருமூர்த்தியின் சென்னை வீட்டிற்கு வந்தடைந்தனர். சம்யுக்தா, “அப்பா கால் போக மாட்டேங்குது. கொஞ்ச நேரத்துல மலையில இருந்து இறங்கிடுவோம்” என்று செய்தி அனுப்பியிருந்தாள். “சரிம்மா” என்று பதில் அனுப்பிய குருமூர்த்தி, மகளின் செய்தி வந்ததிலே நிம்மதி ஆகிவிட்டார். “மூர்த்தி” என்று லிங்கம் அவரை வரவேற்று அணைத்து கொண்டார். “நானே உங்களை பார்க்க வந்திருப்பேன் இல்லை. நீங்க ஏன் அலைச்சல் எடுத்துகிறீங்க?” என்று குருமூர்த்தி கேட்க, “பக்கத்து தெரு வரதுக்கு என்ன அலைச்சல்? நீ வா. முதல்ல சாப்பிடுங்க” என்று ஆட்களை விட்டு உணவு பரிமாறினார். குருமூர்த்தி, மணி பொதுவாக பேசியபடி உண்டு முடிக்க, மூவரும் கிளம்பி லிங்கம் வீட்டிற்கு வந்தனர். “இப்போ சொல்லுங்க. என்ன பிளான்?” என்று கேட்டார் குருமூர்த்தி. “பையன் இப்போ பண்ணை வீட்ல இருக்கான்” என்ற லிங்கம் அந்த வீட்டை, ஏரியா எல்லாம் வீடியோவாக காட்டினார். “அவன் போட்டோ?”என்று மணி கேட்டு வாங்கி பார்த்தவர், “அண்ணா” என்றார் அதிர்ந்து. “இவனா?” குருமூர்த்தியின் புருவங்கள் இடுங்கியது. “ஆளை தெரியுமா?” என்று லிங்கம் கேட்க, “சஞ்சீவ் பஞ்சாயத்துல கூட இருந்தான். அண்ணா பேசும் போது எதிர்த்து பேசினது இவன் மட்டும் தான்” என்றார் மணி. “யாரையும் இவனுங்க நம்பலை. சஞ்சீவ் கூட இருந்து வேவு பார்க்கிறானுங்க. சஞ்சீவ்க்கு கூட இவனை தெரியாதுன்னு தான் தோணுது” என்ற குருமூர்த்தியின் சந்தேகம் சண்முகம் பேசியபின் உறுதியாகி போனது. “எனக்கும் நேத்து நைட் தான் தெரியும். பையன் ரொம்ப மோசம். சஞ்சீவ் கிளம்பி போன பின்னாடியும் இங்க இருந்து எங்களை எல்லாம் அவன்தான் வேவு பார்த்துட்டு இருந்திருக்கான்” என்றார் சண்முகம். “இப்போ என்ன பண்ணலாம்?” என்று குருமூர்த்தி கேட்டார். சண்முகம் தொலைபேசி இணைப்பில் இருந்தவர், “பண்ணை வீட்ல இருக்க பசங்களை நான் பார்த்துகிறேன். அவனை கட்டம் கட்டுறது மட்டும் தான் மூர்த்தி வேலை” என்றார். “அது முடிஞ்சிடும். ஆனா அவனை எங்க வைக்கிறது?” என்று மணி கேட்க, “சிவப்பிரகாசம் சார் ஒரு வீடு சொல்லியிருக்கார்” என்றார் லிங்கம். “சரிப்பட்டு வராது. அவங்க சம்மந்தப்பட்ட எதுவும் வேலைக்கு ஆகாது” மூர்த்தி மறுத்துவிட்டார். “வேறெதையும் யோசிக்கலை” லிங்கம் சொல்ல, குருமூர்த்தி தொலைபேசியை நோக்கி கண்காட்டினர். லிங்கம் புரிந்து கொண்டு, “சண்முகம். எதாவது இடம் இருக்கா?” என்று கேட்டார். “மூர்த்திக்கு என்மேல நம்பிக்கை இல்லை. என் இடம் வேணும்ன்னு அவர் நினைச்சா நான் கொடுக்கிறேன்” என்றார் சண்முகம். உண்மை தான்! சண்முகமும் இவர்களுடன் இருக்க வேண்டும், அப்போது தான் பின்னால் எங்களை மட்டும் கைகாட்டி அவர் ஒதுங்கி விட முடியாது என்று குருமூர்த்தி நினைப்பது உண்மை. யாரையும் நம்பும் இடத்தில் குருமூர்த்தி இப்போது இல்லை! “என் மகன் பேர்ல வாங்க இப்போதான் ஒரு இடம் பார்த்திருக்கேன். யாருக்கும் தெரியாது. நாம அதையே பிக்ஸ் பண்ணிக்கலாம்” என்றார் சண்முகம். “நல்லது சண்முகம். நீ எங்களுக்கு பண்ற உதவியை நாங்க என்னைக்கும் மறக்க மாட்டோம்” என்று லிங்கம் மனதார சொல்ல, “என்னோட குற்ற உணர்ச்சிக்காக தான் நானும் உதவி பண்றேன். ஆனா என் பதவி எனக்கு ரொம்ப முக்கியம். அதுக்கு பங்கம் வந்திடாம மட்டும் மூர்த்தியை பார்த்துக்க சொல்லுங்க போதும்” என்று சண்முகம் சொல்ல , “இவனுங்க எல்லாம் அயோக்கியனுங்க. ஏதோ பெருசா பண்ணிட்டு தான், அது வெளியுலகத்துக்கு தெரிஞ்சிட கூடாதுன்னு சர்வாச்சார்யாவை டார்கெட் பண்ணிட்டு இருக்கானுங்க” குருமூர்த்தி சொன்னார். “வசுந்தரா மேடம் மகன் கெட்டவனா இருக்க வாய்ப்பில்லை. அந்த நம்பிக்கையில் தான் நானும் துணிஞ்சு இறங்குறேன்” என்றார் சண்முகம். “சர்வாச்சார்யா நல்லவன். அவனுக்காக துணிஞ்சு பண்ணலாம். தப்பா போகாது” என்று குருமூர்த்தி உறுதியாக சொன்னார். “இது போதும். நேரம் பார்த்துட்டு நான் போன் பண்றேன்” என்று சண்முகம் வைத்துவிட்டார். அடுத்த சில நிமிடங்களில், சண்முகம் சில தகவல்களை அனுப்பிவிட்டார். “அண்ணா. சண்முகம் சொன்ன இடம், பண்ணை வீட்டுக்கு பக்கத்துல தான் இருக்கு” என்றார் மணி. “நல்லது. நாம இப்போ சும்மா இருக்க முடியாது” என்று லிங்கம் சொல்ல, “என்னோட வீடுங்களை போய் பார்த்துட்டு, அப்படியே நம்ம அகாடமி போலாம்” என்றார் குருமூர்த்தி. அதன்படி மூவருமாக காரில் பயணப்பட்டனர். தெரிந்தவர்கள் எல்லாம் குருமூர்த்தியிடம் பேசினார்கள். காரை அடிக்கடி நிறுத்த வேண்டியிருந்தது. குருமூர்த்தி சொத்துக்களையும் மேற்பார்வை பார்த்து கொண்டார். மனதில் நிறைவு! பணத்தின் அருமை தெரிந்தவர் என்பதால், ஒரு ரூபாய் கூட விரயம் செய்ததில்லை. அவர் சம்பாதிக்க ஆரம்பித்ததும் சேமித்து, மண்ணில் தான் முதலீடு செய்தார். “பொன்னும், மண்ணும் நம்மை ஏமாத்தது மூர்த்தி. துணிஞ்சு வாங்கி போடு” என்று லிங்கம் சொன்ன புத்திமதி நன்றாக வேலை செய்தது. பின்னாளில் தொழில் நன்றாக செல்ல, பணமும் குவிந்தது. மாசிலாமணியை வற்புறுத்தி சில இடங்களை வாங்க வைத்தார். குருமூர்த்தியின் இந்த பரிமாணம் சுபத்ராவிற்கு வியப்பே! “உங்களுக்குள்ள இவ்வளவு தொலைநோக்கு பார்வையா? கேஸ், கோர்ட், அடிதடி மட்டும் தான் உங்களுக்கு தெரிஞ்சதுன்னு இல்லை நான் நினைச்சிட்டு இருந்தேன்” என்று திருமணம் ஆன புதிதில் குருமூர்த்தியின் சொத்துக்களை பார்த்து வியந்து போனார். அவர்கள் சொந்த வீட்டில் தான் சுபத்ரா வாழ்ந்தார். அந்த வீட்டை மட்டும் வாடகைக்கு விடாமல், ஆட்களை வைத்து பார்த்து கொள்கிறார் குருமூர்த்தி. மற்றபடி வீடுகள் வாடகைக்கும், இடங்கள் தரை வாடகைக்கும் விடபட்டு, அது ஒரு வருமானமாக அவர் வாங்கி கணக்கில் சேர்ந்து கொண்டிருக்கிறது. இல்லையென்றால் ஊட்டியில் எஸ்டேட் வாங்கி கொண்டு செல்ல முடியுமா? பணத்தில் குருமூர்த்தி விவரமானவர்! “அடிக்கடி உன்னோட இடங்களை கேட்டு தொந்தரவு பண்றாங்க மூர்த்தி. அதிலும் இந்த ஒரு ஏக்கர், இப்போ மெயின் இடமா மாறிட்டு வருது. ஏதோ உன்மேல இருக்க பயத்துல யாரும் நெருங்கி வர மாட்டேங்கிறாங்க. அப்படியே சும்மா விட்டு வைச்சா எல்லார் கண்ணையும் உறுத்தும். அதுல எதாவது செய்யலாம். என்ன சொல்ற?” என்று லிங்கம் கேட்க, “இல்லை. என் பொண்ணு வளர்ந்து, எல்லாம் அவளோட முடிவு. இனி அவளும் இதையெல்லாம் பார்த்துக்கதான் வேணும்” என்றார் குருமூர்த்தி. “காலேஜ் போயிட்டா. சின்ன பொண்ணு இல்லை மூர்த்தி. அவளுக்கும் எல்லாம் சொல்லி கொடு” என்றார் லிங்கம். “சரிங்கய்யா” என்று கேட்டுக்கொண்டார் குருமூர்த்தி. சம்யுக்தாவிற்கு சொத்துக்கள் பற்றி தெரியும். ஆனால் அவளையும் இனி கலந்தாலோசிக்க வேண்டும். இதற்கு எல்லாம் பழக்கப்படுத்த வேண்டும். தந்தை முடிவெடுத்துவிட்டார். “மலை இறங்கியிருப்பாங்களே. ஏன் இன்னும் சம்யுக்தா போன் பண்ணலை” குருமூர்த்தி நேரம் பார்த்து, அவரின் தொலைபேசியை எடுத்தார். “அண்ணா” என்று மணி கண் காட்ட, மூவரும் காருக்கு விரைந்தார்கள். இவர்களுக்குள் பேசுவதற்கு என்றே தனியாக அலைபேசி உள்ளது. யாரும் ஒட்டுக்கேட்க முடியாதபடி சிவப்பிரகாசம் ஏற்பாடு செய்து கொடுத்தது. அதில்தான் இப்போது சண்முகம் அழைத்து, “அரை மணி நேரத்தில நீங்க அங்க போகணும்” என்றார். குருமூர்த்தி தன்னை தயார்படுத்தி கொண்டார். உடனே லிங்கம் வீட்டுக்கு சென்றவர்கள், அங்கிருந்த பின் வாசல் வழியாக யாருக்கும் தெரியாமல் மற்றொரு காரில் பண்ணை வீடு நோக்கி சென்றார்கள். சம்யுக்தாவிடம் பேச முடியா உறுத்தலில், மகளுக்கு செய்தி அனுப்பிவிட்டு, போனை அணைத்து வைத்தார் குருமூர்த்தி. சண்முகம் சொன்ன நேரத்தில் பண்ணை வீட்டுக்குள் கார் நுழைய, வாசலிலே ஆட்கள் மறித்து விசாரித்தார்கள். சண்முகம் சொல்லி கொடுத்த பதிலை சொல்ல, அவர்கள் விலகி வீட்டுக்குள் வழி விட, மாசிலாமணி நேரே சென்று ஓர் அறை கதவை தட்டினார். “யாரு” என்று அவன் வேறு மொழியில் கேட்க, மணி பதில் அளிக்காமல் தட்டி கொண்டே இருந்தார். அவனுக்கு சந்தேகம் வந்திருக்க வேண்டும். துப்பாக்கியுடன் கதவை திறக்க, எதிர்பார்த்திருந்த மாசிலாமணி மறைந்திருந்து அவனை துப்பாக்கியை தட்டிவிட்டார். “நீயா?” என்று அலட்சியமாக பார்வையை சுழற்றியவன், ஹாலில் அமர்ந்திருந்த குருமூர்த்திய கண்டு கொண்டான். “நான் யாருன்னு தெரிஞ்சிடுச்சு போல” என்று தமிழில் பேசியபடி, மாசிலாமணி தாக்க, மணியும் அவனுக்கு பதிலடியை கொடுத்தார். அவனுக்கு நன்றாக சண்டையிட தெரிந்திருந்தது. மாசிலாமணியை சமாளித்தவனை குருமூர்த்தி ஆச்சரியமாக பார்த்தார். நேரம் கடந்து கொண்டிருக்க, இவனை வீழ்த்தியாக வேண்டிய கட்டாயம். குருமூர்த்தி, “மணி” என, அதிலே அவர் ஒதுங்கி கொள்ள, “வா. வா. உன்னைத்தான் எதிர்பார்த்தேன்” என்று இவர் மேல் பாய்ந்து கொண்டு வந்தான். குருமூர்த்தி அவனை மயக்கமடைய என்ன செய்ய வேண்டும் என்பதிலே கவனம் வைத்து அடியை கொடுத்தார். அவனுக்கு புரிந்துவிட்டது போல. அதற்கான வாய்ப்பை கொடுக்காமல் சண்டையிட்டான். சில நிமிடங்கள் நீடித்த சண்டையில், குருமூர்த்தி நேரம் பார்த்து ஓர் புள்ளியில் அடித்து, அவனை சாய்த்தார். சண்முகம் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தவர்கள், லிங்கத்திற்கு தகவல் கொடுத்தார்கள். வந்த வேலை முடிந்தது. குருமூர்த்திக்கு மகளுடன் பேச வேண்டும் என்று தீவிரமாக தோன்றிவிட்டது. “இந்த இடத்துல இருந்து பேச முடியாது. நான் என் பொண்ணுகிட்ட பேசியே ஆகணும் மணி. நீ பார்த்துப்ப இல்லை” என்று கேட்டார் குருமூர்த்தி. “அண்ணா. அதான் தேவைப்பட்ட எல்லாம் இங்க இருக்கே. நான் பார்த்துகிறேன், நீ போய் பாப்பாகிட்ட பேசிட்டு வா‘ண்ணா” என்றார் மாசிலாமணி. குருமூர்த்தி நிம்மதியுடன் கார் எடுத்து கொண்டு வெகுவாக தள்ளி வந்தபின் மகளுக்கு அழைத்தார். சம்யுக்தா திக், திக்கென அதிர்ந்த இதயத்துடன் தந்தை எண்ணை பார்த்திருந்தாள். காலை அவர்கள் பயணம் ஆரம்பிக்கும் போது எல்லாம் சரியாக தான் இருந்தது.