த்தியாயம் 13

நிறைகளை மட்டும் பார்த்து வரும் காதல்…

குறைகளை பார்த்தும் உன்னோடு அதையும் சேர்த்து நேசிக்கும் காதல்…

சாதாரண பட்டு புடவை, காதில் ஜிமிக்கி, கழுத்தில் நெக்லஸ், அதனுடன் ஒரு செயின், கையில் கண்ணாடி வளையல்கள் என்று அனைத்தையும் மாட்டி விட்டாள் அமிர்தம்.

“அழகா இருக்க மகா, இன்னும் தலை வாரி பூ வச்ச போதும் “ என்று தலை முதல் கால் வரை ஒரு முறை பார்த்து திருப்தி அடைந்தவர் திரும்பி பூவை பார்த்து

“யார் பூ வாங்கிட்டு வந்தது தமுத்தோண்டு இருக்கு என் பொண்ணு முடிக்கு எங்க இருந்து இது பத்தும் “

என்று சுற்றி நின்று கொண்டிருந்த மூவரையும் முறைக்க

“அது சித்தப்பா தான் வாங்கி வந்தாரு ம்மா “ என்று குணா சொல்லவும் முழித்த அமிர்தம்

“ அது வந்து…. அ…மாப்பிள்ளை வீட்டுல இருந்தும் வாங்கி வருவாங்க தான அதை வைக்க இடம் வேணா “ என்று சமாளித்தவர்

“சரி அவளுக்கு தலை வாரி பூ வச்சி மேக் அப் எதாவது பண்ணி விடுங்க டி “ என்று அமிர்தம் பலகாரம், ஸ்வீட் செய்ய கிளம்பி விட்டார்.

அமிர்தம் சென்றதும் “ மகா… உன்ன யாரு இவ்ளோ அழகா கிளம்பி இருக்க சொன்ன. கொஞ்சம் சுமாரா கிளம்பி இருக்க வேண்டியது தான” என்று சுபா மகாவை உலுக்க

“ஏய் எருமை பொறுமையா பேசு அம்மா வந்துற போறாங்க “ என்று பதிலுக்கு மகா அவள் வாயை மூட பார்க்க

“அவுங்க வர மாட்டாங்க கிட்சன் போய்ட்டாங்க மகா நீ வேற ட்ரெஸ் போடு இந்த புடவை வேணாம் “

“ஏ…. லூசு சுபா… அம்மா தான் இந்த புடவை எடுத்து மகாவ கிளப்புனது இப்போ மட்டும் மகா மாத்துனா முடிஞ்சா “ என்று குணா மண்டையில் தட்ட

“அப்போ என்ன பண்ண வரவன் அக்காவ இப்படி பாத்த ஓகே சொல்லிடுவானே”

“ அதெல்லாம் நான் விட மாட்டன் அவன எப்படியாவது கல்ல கொண்டு அடிச்சாவது துரத்த மாட்டான் “ என்று ஜெயா பொங்கி கொண்டு மகாவின் கையை பிடிக்க

மகா இவர்களை பார்த்த படி இருந்தவளுக்கு மனதில் சந்தோஷம் எட்டி பார்த்து கொண்டிருந்தது.  நேற்று ஜெயா கல்யாணத்தில் விருப்பம் இல்லையா என்று கேட்டதில் பயந்து போனவள்

“அது அது… நான் அப்படி எப்போ சொன்ன ஜெயா “ என்று திணறி முழித்தவளின் விழியையே மூவரும் முறைக்க,அதில் தலையை குணிந்த படி மகா

“ அது இரண்டு வருஷம் கழிச்சி சொன்னாங்க தான. ஆனா இப்போ திடிர்னு பாக்க வராங்க ன்னு சொன்னதும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு “

“அப்போ உனக்கு இந்த கல்யாணம் ஓகே தான…. நான் அப்பவே சொன்ன மகா பேய் பாத்து பயந்து தான் முகம் இப்படி இருக்குன்னு யார் கேட்டா “ என்று சுபா டாப்பை தூக்கி விட்ட படி சொல்ல

“இல்லை… இல்லை எனக்கு இந்த கல்யாணம் வேணாம் “ என்று வேகமாக சொன்ன மகாவை மூவரும் பார்த்து நாங்க இருக்கோம் என்று நம்பிக்கை கொடுத்து விட்டு அப்போ ப்ளான் போட ஆரம்பித்தது தான் இப்போ வரை போகிறது.

இவர்கள் ப்ளான் போடும் ஆர்வத்தில் மாப்பிள்ளை யார், எவர் என்று அமிர்தத்திடம் கேட்காமல் போக, அமிர்தமும் வேலை பரபரப்பில் சொல்லாமல் விட்டுவிட்டார்.

 “ மகா ஏன் எங்க அப்பா கிட்ட பேச கூடாது நீ. அப்பா தான் நீ என்ன சொன்னாலும் கேப்பாங்க தான “ என்று ஜெயா கேட்ட கேள்விக்கு யோசித்த படி மகா இருக்க

“அப்படியே அம்மா கிட்டயும் சொல்லுவோம் ரெண்டு பேரும் நம்ம சைட் இருந்தா அப்பாவ ஈசியா சமாளிச்சிடலாம் “ என்று குணா சொல்வதை கேட்டு மீதம் இருந்த அனைவரும் தலையசைத்து உடனே வெளியே அம்மாவிடம் பேச சென்றனர்.

இவர்கள் பேசியதை கேட்டு அமிர்தம் திட்டாத குறையாக மூவரையும் அடித்து அனுப்பி வைத்து விட்டு மகாவிடம் அமைதியாக அமர்ந்து பேசினார்.

“என்னம்மா மகா உனக்கு இது பிடிக்கலயா “

“அதும்மா இப்போ இது அவசியமா ம்மா “

“இப்போ இல்ல நாளும் எப்பவாது கல்யாணம் பண்ணிக்க தான போற அதை ஏன் இப்போவே பண்ணிக்க கூடாது “ என்று அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல திணறி மகா பார்க்க

“எதுவும் யோசிக்காத நாளைக்கு பையன பாரு அப்பவும் உனக்கு பிடிக்கலனா சொல்லு அம்மா பாத்துக்குறேன் “ என்று அனுப்பி வைத்தவர் அப்போதும் பேரை சொல்ல தவறி இருந்தார்.

இவற்றை கேட்டு சோகமாக அமர்ந்திருந்த மகாவை எதேதோ பேசி சிரிக்க வைத்து தைரியம் கொடுத்து இப்போது வரை கூடவே இருக்கின்றனர் மூவரும்.

மகாவிற்கு நேற்றிலிருந்து ஒன்று மட்டும் உறுதியாக தெரிந்தது, அவளின் வாழ்க்கையில் இன்பாவை தவிர வேறு யாரையும் கணவனாக நினைத்து கூட பார்க்க முடியாது என்பது தான்.

அதனாலயே ஒரு முடிவும் எடுத்திருந்தாள், இந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு நாளை இன்பாவுடன் பேசி ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பது தான்.

இவற்றை எல்லாம் யோசித்த படி, வேண்டா வெறுப்பாக கிளம்பி அவள் முகத்தை பார்க்க, என்றும் இல்லாமல் மிக அழகாக கண்ணாடியில் அவள் உருவம் தெரிந்தது. அதை முகம் சுளித்து பார்த்தவள்.

“பாத்து பாத்து கிளம்புனா கூட இவ்ளோ அழகா ரெடி ஆகியிருக்க மாட்டேன்” என்று முனுமுனுத்த படி அமர்ந்திருக்க கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

அதில் மூவரும் எழுந்து கதவை திறக்க முயல அது வெளிபுறம் தாள் போட்டிருந்தது.

“இந்த அம்மாவை ஏதோ குழந்தையை பூட்டி வைக்கிற மாதிரி பூட்டி வச்சிருக்கிங்க  பாரு” என்று சுபா முனங்க அனைவரும் பொறுமையாக வேறு வழியின்றி காத்திருந்தனர்.

இங்கு காலையில் இருந்து ஒரு வித பதட்டத்துடன் இருந்த இன்பா  காரிலும் பதரியே படியை அமர்ந்திருந்தான்.

இன்பாவிற்கு ஏசி ஓடியும் வியர்வை துளிகள் முகத்தை நிறைக்க அடிக்கடி கைகுட்டையால் அதை துடைத்த படி வந்தவனை வினோதமாக காரின் முன் கண்ணாடி வழியே நோட்டம் விட்ட படி தான் வண்டியை ஓட்டி வந்தார் வீர முத்து.

“இவனுக்கு இப்போ என்ன? பொண்ணு தான பாக்க போறான் எதோ பேய்யை பாக்க போறது மாதிரி பயந்து போய் இருக்கான்.

கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணு பேயா தெரியுது போல இவனுக்கு. கல்யாணம் ஆகட்டும் அப்போ புரியும் எல்லாம் மாதிரி பேய் இல்ல நிஜ பேய்ங்கன்னு.

எப்பவும் ஏதோ விரோதியை பாக்குற மாதிரி தான பாப்பான் என்ன. கல்யாணத்துக்கு அப்பறம் பாக்குறேன் எப்படி இவன் வாழ்க்கை போக போகுதுன்னு. அப்போ புரியும் என் கஷ்டம்.” என்று வன்மமாக நினைத்த படி வீர முத்து கார் ஓட்ட தீடீரென்று

“வண்டியை நிறுத்துங்க…” என்ற சத்தத்தில் சடால் என்று வண்டியை நிறுத்தியவர் திரும்பி இன்பாவை பார்த்து முறைக்க அவன் எங்கே இவர் பார்வையை பார்த்தான் வீர முத்துவை கண்டு கொள்ளாமல் கீழே இறங்கியவன்.

அங்கு பூ விற்று கொண்டிருந்தவர் அருகே செல்ல

“இன்பா பூ எல்லாம் வாங்கிட்டேன் டா” என்று சித்திரவும் பேசிய படி அவன் பின்னே இறங்க

“அது அத்தை முதல் முறை பூ கொடுக்க போறோம். அதை நான் வாங்கி கொடுக்குறேனே” என்று கண்களை சுருக்கி கேட்டவனிடம் மறுப்பு சொல்ல முடியாதவர்

“அப்போ இந்த பூவ என்ன பண்ண”

“அதான் அந்த வீட்டுல மூனு வாலுங்க இருக்காங்களே அவங்க வச்சிப்பாங்க அத்தை”

“ஆமா நான் கூட அவங்கள மறந்துட்டேன் டா”

“சரி இப்போ நான் வாங்கிக்கவா” என்று சிரிப்புடன் கேட்டவன் திரும்பி பூவை பார்த்து

“காக்கட்டான் பூ ஒரு நாளு முழம் தாங்கக்கா”

“டேய் மல்லி வாங்குடா அதுல வாசனையே இருக்காது”

“அதான் அத்தை அதை வாங்குறேன் என் மகாக்கு பூ நிறைய வைக்க பிடிக்கும். ஆனா பூ வாசனை ஒத்துக்காது அத்தை அவளுக்கு தலை வலி வந்திரும்  அதான் இந்த பூ”

“ஓ.. கல்யாணத்துக்கு முன்னாடியே ஐஸ் வைக்க ஆரம்பிச்சிட்ட நடத்து நடத்து…..  சரி  அதோட  கனகாம்பரம் கொஞ்சம் வாங்கு டா”

“ம்ம்ம் அத்தை”

என்று சொல்லி காக்கட்டான் மேலும் இரண்டு முழம் கனகாம்பரம் நான்கு என்று பூ கடையே வாங்கியது போல வாங்கி திரும்பியவன் கண்ணில் நொங்கு பட அதையும் வாங்கி கொண்டான்.

அதை பார்த்து சிரித்த சித்திரா அவன் கன்னம் கிள்ளி “என்ன இதுவும் அவளுக்கு பிடிக்குமா?”

என்று இருவரும் கொஞ்சி கொள்வதை காரில் அமர்ந்தபடி பார்த்த வீர முத்து,

“இந்த கல்யாணம் முடியட்டும், உன்னை வீட்டுல வெச்சு பூட்டி வைக்கிறேன்” என்று வாய்க்குள் திட்டியபடி அமர்ந்திருந்தார்.

அதன் பின் மூவரும் கிளம்பி செல்லும் வழியில் மகேஷையும் அவன் அம்மா சாந்தாவையும் அழைத்துக்கொண்டு மகாவின் வீட்டிற்கு சென்று சேர்ந்தனர்.

வீடு வரும் வரை வீர முத்து முனுமுனு என்று எதோ முனங்கிய படி தான் வந்தார். ஆனால் அவரை கண்டுகொள்ள தான் இங்கு யாருக்கும் நேரம் இருந்திருக்கவில்லை.

மகா வீட்டின் முன் கார் வந்து நிற்க, அமிர்தம், சந்தானம், சீனி என்று மூவரும் இவர்களை வரவேற்று உள்ளே அழைத்து வந்து அமர வைத்தனர்.

பின் அமிர்தம் அனைவருக்கும் காபி எடுத்து வந்து நீட்ட, அதை எடுத்து குடித்தபடி மகாவைத்தான் தேடிக்கொண்டிருந்தான் இன்பா.

அவன் தேடியவளோ உள்ளே தங்கைகளுடன் அமர்ந்து இவனை எப்படி துரத்தலாம் என்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.

“சிரிச்ச மாதிரி போகாத மகா, கோபமான முகத்தை வச்சிட்டு போ ” என்றாள் ஜெயா.

“அதே மாதிரி தலையை குனிஞ்சிட்டு போகாதே, நிமிர்ந்து போ. அப்போதான் பொண்ணுக்கு திமிரு அதிகம் போலன்னு சொல்லுவாங்க” என்ற குணாவை தள்ளி விட்ட சுபா.

“யாருடி இவளுங்க? இன்னும் குழந்தை பிள்ளை மாதிரியே யோசிக்கிறீங்க” என்ற சுபாவை முறைத்தாள் குணா.

“சரி நாங்க குழந்தைதான், நீதான் பெரியவ ஆச்சே, பெரியவங்க மாதிரி ஐடியா சொல்லு.”

அதற்கு வில்லி போல சிரித்த சுபா கையில் வைத்திருந்த மாத்திரையை காட்டி,

“இது பேதி மாத்திரை. எப்படியும் அக்காவை கூட்டிட்டு போய் சாப்பிட பாயசத்தை அம்மா எல்லாருக்கும் கொடுக்க சொல்லுவாங்க.

அந்த கேப்ல நான் சமையல் அறைக்கு போய் இதை கலக்கிறேன்.

அப்புறம் என்ன? குடிச்சிட்டு வயித்தை கலக்குறதுல எங்க இருக்கு கல்யாணம் பேசுவாங்க” என்று கண் அடித்தவளை,

“சரியான விச பாட்டில் டி நீ, உன்கிட்ட இனிமே பார்த்துதான் வாய் கொடுக்கணும்” என்று குணா பதுங்க,

“சீ…. நம்ம ஃபேமிலிக்கு போய் இதை கலக்குவேனா என்ன?” என்று குணா மீது கை போட்டு சிரித்தவளை , குணா “ அப்படியா….” என்று அவள் முகம் பார்க்க

“அப்படியே வாயில டேரக்டா போட்டு அமுக்க மாட்டேன்”

என்று அவள் வாயில் மாத்திரை ஒன்றை போட, குணா அவளை தள்ளி விட்டு மாத்திரையை துப்பி,

“வெ…. வெ…. அடியே கட்டெரி உன்னை” என்று அவள் அடிக்க பாயும் முன் கதவு திறக்கும் சத்தம் கேட்டு நால்வரும் அமைதியாக அமர்ந்து விட்டனர்,

“என்னங்கடி ஒரே சத்தமா போட்டிட்டு இருக்கீங்க? வந்தவங்க என்ன நினைப்பாங்க?” என்று அமிர்தம் கத்திய படி வர

“சும்மா பேசிட்டு இருந்தோம்மா” என்று கோரசாக நால்வரும் சொல்ல,

அவர்களை சந்தேகமாக பார்த்தபடி அமிர்தம்,

“சரி சரி வா மகா உன்னை கூப்பிடுறாங்க” என்று அவளை அழைத்து செல்ல, அவள் பின்னாலேயே வால் பிடித்தது போல மூவரும் வெளியே வந்தனர்.

மகா மனதில் செய்ய வேண்டியவற்றை எல்லாம் ஒரு முறை ஒத்திகை பார்த்தபடி எதார்த்தமாக நிமிர்ந்து பார்த்தவள் ஷாக்கில் அங்கேயே நின்று விட்டாள்.

“இன்பா….” என்று அதிர்ந்து மகா வாயை பிளக்க, அவள் அதிர்ச்சியில் அழகாக கண்களை சிமிட்டி இன்பா சிரிக்க,

அதில் சுயம் வந்த மகா “ அச்சோ சுபா …” என்று வேகமாக திரும்பி கிட்சன் உள்ளே செல்ல போன சுபாவை பார்த்து

“சுபா….” என்று அவள் கத்திய கத்தலில் அனைவரும் என்ன என்று மகாவை பார்க்க அமிர்தம்.

“எருமை ஏன் இப்படி கத்துற “ என்று அவள் கையில் ஒன்று போட, அதை எங்கே அவள் கவனித்தாள், அமிர்தம் கையை தட்டி விட்டு வேகமாக சுபா நோக்கி ஓடியவள் அவள் கையை பிடிப்பது போல அந்த மாத்திரையை வாங்கி எறிந்துவிட்டு

“ப்பூ…..” என்று காற்றை வாயில் ஊதி தள்ளி நிமிர

“என்னக்கா பண்ற “ என்று சுபா புரியாமல் மகாவை பார்த்து நிற்க அதற்கு மகா கேவலமாக சிரித்து சமாளித்து அவள் கையை பிடித்து அழைத்து வந்திருந்தாள்.

இவற்றை அனைவரும் குழம்பி போய் பார்த்தார்கள் என்றாள் இன்பா “ என்னத்த தூக்கி போட்ட தங்கம் “ என்று யோசனையாக பார்த்தான்.

“அது தங்கச்சிங்க கூட நின்னா நல்லா இருக்கும்னு நினைச்சேன் “ என்று சமாளித்தவள் மூவரையும் அவளை சுற்றி நிற்க வைத்துக்கொண்டாள்.

அவர்கள் எதுவும் செய்யாத படி

“மகா, என்ன ஆச்சு உனக்கு ஏன் மாத்திரையை தூக்கி போட்ட “ என்று ஜெயா குரல் தாழ்த்தி கேட்க

“வேற ஏதாவது பிளான் பண்ணிட்டியா மகா “ என்று சுபாவும் கேட்க , குணாவோ

“அப்பா இப்போ தான் நிம்மதியா இருக்கு எங்க பாயாசம் சாப்பிட முடியாம போயிடுமோன்னு ரொம்ப ஃபீல் பண்ணிட்டேன் “

என்று பெருமூச்சு விட்டவளில் மண்டையில் சுபா கொட்டவும் வலியில் முகத்தை சுருக்கி தலையை தேய்த்து கொண்டவளை தான் ஒருத்தன் நன்றாக சைட் அடித்து கொண்டு இருந்தான்.

இங்கு இன்பா யோசனையான முகத்துடன் மகாவை பார்த்து கொண்டிருக்கும் போது அருகில் இருந்த மகேஷ் மெல்ல இன்பாவை சுரண்டினான்.

“இனிமே என்ன மாமான்னு கூப்பிடாதடா இன்பா…. “ என்று சொன்னவனை “ இவன கொண்ணுறலாமா…” என்பது போல தான் பார்த்து வைத்தான் இன்பா.

“ இங்க என்ன நடந்திட்டு இருக்கு இவன் ஒருத்தன் கிறுக்கன் மாதிரி பேசிட்டு இருக்கான்” என்று நினைத்த படி மீண்டும் மகாவை பார்க்க தொடங்கி விட்டான்.

“அப்புறம் என்ன பையனுக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு பொண்ணுக்கு பையன் ஓகேவா ன்னு கேட்டு சொல்லுங்க “என்று சித்ரா சொல்லி முடிப்பதற்குள் மகா

“எனக்கு பிடிச்சிருக்கு” என்று சொல்லி முடித்திருந்தாள்.

மகாவின் பதிலை கேட்டு ஒரே நேரத்தில் மூவரும் நெஞ்சில் கை வைத்து மகாவை பார்க்க, எங்கே இவர்களை பார்த்தாள் என்ன சொல்லி சமாளிக்க என்று தடுமாறியவள் “ உங்கள நிமிர்ந்து பாத்தா தான…. “ என்று தலையை நிமிராமல் தரையை ரசித்து கொண்டிருந்தாள்.