வர்ஷினிக்கு சர்வேஷ் அழைத்தான்.. அந்த வார இறுதியில். அவள் வேலையிலிருந்து இப்போதுதான் வருவாள்.. இப்போது உண்டிருப்பாள்.. என நேரத்தினை கணக்கு செய்து.. அழைத்தான்.
வர்ஷினி உண்டுக் கொண்டிருந்தாள்.. அம்மா அப்பாவோடு.. தன் அலுவலக கதைகளை பேசிபடியே. அவளின் தந்தை.. போன் அழைப்பதை உணர்ந்து.. “யாரும்மா” என வினவினார்.
பெண்ணவள் “சர்வேஷ் பா” என்றாள்.
அவளின் தந்தையும் சர்வேஷ் உடல்நிலை பற்றி விசாரித்தார். வர்ஷினி, சர்வேஷ் பற்றி பேசிக் கொண்டிருந்தாள்.
விஜயா அப்போத்துதான் “அப்பா பிறந்தநாள் வருது வர்ஷி.. இந்ததடவ கொஞ்சம் பெருசா பண்ணனும் டா” என்றார்.
வர்ஷினி “அஹ ம்மா.. அப்பா அறுபதாவது கல்யாணம்.. அதானே ம்மா, அப்பா எப்படி பண்ணலாம்.. உங்களுக்கு எப்படி செய்துக்கனும்ன்னு ஆசை..” என்றாள்.
தந்தை புன்னகையோடு “உனக்கு கல்யாணம் பண்ணனும் முதலில்.. உன் குடும்பமா வந்து.. நீ எனக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணு” என்றார்.
மகளோ “ப்பா.. கதைக்கு ஆகுறத பேசுங்க ப்பா… அதெல்லாம் நடக்கும் போது பார்த்துக்கலாம். இப்போது உங்களுக்கு ஏதாவது ஸ்பெஷல்லாக செய்யனுமா சொல்லுங்க” என்றாள்.
தந்தை “எனக்கு ஸ்பெஷல்.. என் பொண்ணு வர்ஷினி கல்யாணம் தான், மற்றபடி.. என் தர்மபத்தினிக்கு என்ன விருப்பம்ன்னு கேளு..” என ஜாடையாக மனையாளை பார்த்து.
வர்ஷினி இருவரின் பார்வை பரிமாற்றம் உணர்ந்து எழுந்து சென்றாள் கைகழுவும் சாக்கில்.
விஜயா “எனக்கு என்ன ஆசை.. எல்லோருக்கும் மாதிரி எனக்கும் அறுபதாம் கல்யாணம் செய்துக்கனும்ன்னு ஆசைதான் வேற என்ன..” என்றார் புன்னகையோடு.
வர்ஷினி “அம்மா சூப்பர்.. மண்டபம் பார்க்கணுமா.. நான் அண்ணன் மதுகிட்ட பேசுகிறேன்.. அப்பா ஒகேதானே.. எல்லோரையும் கூப்பிட்டு செய்திடலாம்.. ம்..” என சொல்லிக் கொண்டே போனோடு எழுந்து சென்றாள்.
தந்தையோ “என்னமோ உனக்கு கல்யாணம் செய்திட்லாம்ன்னு பார்க்கிறேன், ஒரு இடமும் அமையமாட்டேன்ங்கிறது..” என்றார்..
வர்ஷினி அறை வாசலில் நின்றுக் கொண்டு “அப்பா.. எனக்கு இன்னமும் ரெண்டு வருஷம் ஆகும்ன்னு அம்மா பார்த்த ஜோசியர் சொல்லியிருக்கார் ப்பா.. இந்த வருஷம் நீங்கதான் நீயூ கப்புள்ஸ்.. அப்பா கலக்குங்க” என்றாள், விளையாட்டாக.
விஜயா “ரெண்டு வருஷத்திற்குள் நடக்கும்ன்னு சொல்லியிருக்கார்” என்றார்.
மகளோ “எப்படியோ.. இப்போ இல்லையில்ல ம்மா” என்றாள்.
அன்னை புன்னகையோடு “இங்க சென்னை வந்ததிலிருந்து உனக்கு, வாய் ஜாஸ்த்தியாகிடுச்சி” என்றார்.
தந்தை சிரித்தார்.. மகளும் புன்னகையோடு உள்ளே சென்றாள்.
வர்ஷினி சர்வேஷ்ஷுக்கு அழைத்தாள்.
சர்வேஷ் “சும்மாதான் கூப்பிட்டேன்.. எப்படி இருக்க வர்ஷி” என்றான்.. குரல் காந்தமாக ஈர்த்தது.
வர்ஷினி “நல்லா இருக்கேன்.. வீட்டில் எல்லோரும் எப்படி இருக்காங்க” என்றாள்.
சர்வேஷ் பதில் சொன்னான்.. அவனின் உடல்நலம்.. வேலை.. நண்பர்கள் என எல்லாம் பேசினர். நேரம் கடந்தது.
இருவரும் கடகடவென பேசிய நிம்மதியில் நன்றாக உன்றங்கினர்.
மறுநாள் உமர் தம்பதிக்கு வீடியோ கால் செய்தாள் வர்ஷினி.
நேற்றே மெசேஜ் வழியாக எப்போது பேசுவது என நேரம்.. தெரிந்தெடுத்துக் கொண்டனர் உமர் வர்ஷினி இருவரும். உமருக்கு இப்போதுதான் திருமணம் ஆகியிருக்க.. நேரம்காலம் பார்த்து அழைக்க வேண்டும் என வர்ஷினி முதல்நாளே நேரம் கேட்டிருந்தாள்.
அப்படியே இன்று அழைத்தாள். வர்ஷினி, உமர் அவனின் மனைவி இருவரோடும் பேசினாள்.
உமரி மனையாள் நலம் விசாரித்துவிட்டு போனினை.. கொடுத்துவிட்டு சென்றாள்.
இப்போது உமர் “என்ன சென்னை வாழ்க்கை எப்படி இருக்கு..” என்றான்.
வர்ஷினி பொறுமையாக சென்னை வாழ்க்கை பற்றி சொன்னால்.. ராக்கி சர்வா தனக்கு உதவியது பற்றி சொன்னால்.. என்னமோ பேசிக் கொண்டே இருந்தாள்.. அப்படிதான் உணர்ந்தான் உமர்.
வர்ஷினியே சற்று நேரத்தில் “உமர், சர்வேஷ்க்கு கூப்பிடுறேன்.. பேசலாம்” என்றாள்.
உமர் நேற்றுதான் சர்வாவிடம் பேசினான். ஆனாலும் வர்ஷினி சொல்லவும் ஏதும் சொல்லாமல்.. அமைதியாகிவிட்டான்.
வர்ஷினி சர்வாவிற்கு அழைத்தாள். உமர் “மச்சான் என்ன இது கையில் கட்டு” என புதிதாக கேட்பது போல விசாரித்தான்.
சர்வேஷ் உமர் இருவரும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு பேசினர். வர்ஷினி, மீண்டும் இருவருக்கும் பள்ளி பருவமங்கையானாள்.. உமர் “ஏன் டா என்கிட்டே நீ சொல்லலை.. சொல்லியிருந்தால் ஆப்பிள் வாங்கிட்டு வந்து பார்த்திருப்பேன்..” என்றான் புன்னகையோடு.
சர்வேஷ் “நாங்க முன்னாடி போன போது அவதான் ட்ரைவ் பண்ணா முழுசா.. சூப்பரா டிரைவ் பண்றாடா.. ஸ்டியரிங்க.. ரைட் ஹன்ட்ல பட்டும் படமால தொட்டு..” என சொல்ல சொல்ல..
வர்ஷினி தந்தை கதவை திறந்து எதோ சொல்லிக் கொண்டிருக்க.. அவரிடம் பேசிக் கொண்டிருந்தாள், இவர்களின் பேச்சினை கவனிக்கவில்லை..
சர்வேஷ் அமைதியானான்.
உமர் “டேய்.. பேசிட்டியா அவகிட்ட..” என்றான்.
சர்வேஷ் “இல்லை.. ஏதும் சொல்ல முடியலை.. இப்போதான் கூபிட்டால் பேசுகிறாள்.. எங்க சொல்றது” என்றான், தலை கோதிக் கொண்டே வருத்தமாக.
வர்ஷினி “சாரி.. என்ன பேசிட்டு இருந்தீங்க ” என்றாள்.
உமர் “சரி, வர்ஷினி, அவனை எங்காவது வெளிய கூட்டி போய்ட்டு பத்திரமா கூட்டிட்டு வா.. எத்தனை பேரை சமாளிச்சவன்.. இப்போ பாரு உன்னை நம்பி வரான்.. காலம் பதில் சொல்லுது போல” என்றான் விளையாட்டாக.
சர்வேஷ் “வர்ஷி, நீ ப்ரீயாக இருந்தால் போலாம்.. இப்போது, அப்பா கூப்பிட்டாருல்ல பாரு” என்றான்.
வர்ஷினியும் விடைபெற்று கிளம்பினாள்.
அன்று வர்ஷினிக்கு வேலை நிறைய இருந்தது.. அப்பாவின் பிறந்தநாள் விழாவிற்கு இவள்தான் இங்கே ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது. அதனால் சர்வேஷ்ஷோடு வெளியே செல்ல முடியவில்லை.
அதன்பின் சர்வேஷ் வர்ஷினி இருவரும் மெசேஜ் வழியாக அதிகம் பேசிக் கொண்டனர்.
சர்வேஷ் தினமும் காலை நேரத்தில் அவளுக்கு ஏதேனும் செய்தி அனுப்புவான்.. அவனின் புகைப்படம்.. இல்லை.. பால்கனி செடிகள்.. அவன் மருத்தவமனை விசிட் செய்யும் நேரம்.. என ஏதேனும் ஒன்றினை அனுப்புவான், தன்னை அவள் நினைவில் வைக்க என.
அதற்கு தக்க அவளும் ரிப்ளே செய்வாள்.
அப்படியே தன்னுடை தந்தையின் பிறந்தநாள் விழா பற்றியும் சொல்லியிருந்தாள் அவனிடம். பேச்சுகள் இருந்துக் கொண்டே இருந்தது.
அலுவலகம் முடித்து ஒருநாள் சர்வேஷ் வீட்டிற்கு அழைப்பதற்கு வந்தாள் பெண்.
சர்வேஷ், தெருவின் ஆரம்பத்தில் சென்று அவளை அழைத்து வந்தான். அந்த இருபது மீட்டர் தூரத்தை.. அவளின் பின்னில் அமர்ந்துக் கொண்டு அவளின் டூ வீலரில் வலம் வந்தான் சர்வேஷ்.
வர்ஷினி கை நிறைய தின்பண்டங்களோடு வந்தாள் அவன் வீட்டிற்கு.
சர்வேஷ் வண்டியிலிருந்து அவள் இறங்கியது.. அவளிடம் இருந்த பைகளை வாங்கிக் கொண்டான்.. வர்ஷினி “சர்வேஷ் இருங்க.. எவ்வளோ வெயிட் போடுவீங்க இந்த ஒருகையில்..” என கூறி.. தன்னுடைய பொருட்களை வாங்கினாள்.
சர்வா “அட விடு வர்ஷினி” என சொல்லி இவன் வாங்க என.. இப்படியே இருவரும் பேசிக் கொண்டே மேலே வந்தனர்.
சர்வேஷ்ஷின் அன்னை வரவேற்றார்.. பிள்ளைகள் இன்று வரவில்லை போல.. வர்ஷினி “என்ன பசங்க யாரையும் காணோம்..” என்றாள்.
சர்வேஷ்ஷின் அன்னை பதில் சொல்ல..
“சரி ஆன்ட்டி.. பசங்களுக்கு இந்த ஸ்னாக்ஸ் எல்லாம் நான் கொடுத்ததுன்னு சொல்லி, நாளைக்கு கொடுத்திடுங்க” என சொல்லிக் கொண்டே சர்வேஷ்ஷிடமிருந்த பைகளை வாங்கி.. சர்வேஷ் அன்னையிடம் கொடுத்தாள்.
அவரும் “கண்டிப்பா உன் பேர் சொல்லி கொடுக்கிறேன் வர்ஷினி” என்றார் புன்னகையோடு.
சர்வேஷ் “உட்கார் முதலில்.. என்ன குடிக்கிற..” என்றான்.
அவனின் அன்னை காபி கலக்க என உள்ளே சென்றார். சர்வேஷ் பேசிக் கொண்டே தண்ணீர் ஊற்றி கொடுத்தான்.. பெண்ணுக்கு.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தான், ஏதும் பேசாமல்.
வர்ஷினி தண்ணீர் குடித்து முடித்து.. ‘என்ன’ என்றால் பார்வையால்.
சர்வேஷ் அதன்பின் சுதாரித்து ‘ஒண்ணுமில்ல’ என்றான்,
வர்ஷினி தலியசைத்துவிட்டு எழுந்து உள்ளே சென்றாள் “ஆன்ட்டி என்ன பண்றீங்க..” என கேட்டுக் கொண்டே.
அவர் பழங்கள் எடுத்து வைத்தார் ஒரு கிண்ணத்தில்.. இன்னொன்றில் இனிப்பு பணியாரம் இரண்டு.. அடுத்து பால் அடுப்பில் இருந்தது, வர்ஷினியை பார்த்ததும் “இந்த ம்மா.. சாப்பிடு..” என டைனிங் டேபிளில் வைத்தார்.
சர்வேஷ் “நீ உட்காரும்மா.. பால் நான் பார்க்கிறேன்” என்றான்.
அன்னையும் அமர்ந்தார்..
“நீ இவ்வளவு தூரம் வரணுமா?.. போனில் சொல்லியிருக்கலாம் வர்ஷினி” என்றார், முத்துநாயகி.
“எனக்கு இப்போது.. உள்ளூரில் இருக்கும் ஒரே பிரின்ட் சர்வேஷ்தான்.. எப்படி நேரில் வராமல் ஆன்ட்டி..” என்றாள்.
சர்வேஷ் காபி கலந்து எடுத்து வந்தான்.
வர்ஷினி சின்ன குரலில் “காபி கலக்க தெரியுமா சர்வேஷ்” என்றாள்.
அவனின் அன்னை “எல்லாம் தெரியும்.. சமையல் முழுவதும் செய்வான்.. என்ன நினைச்ச அவனை.” என்றார் மகனின் புகழ்பாடி.
வர்ஷினி ஆர்வமாக காபியை ருசித்தாள். கண்கள் விரிந்தது. ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் சேர்த்து.. ஒலி எழுப்பாமல்.. உதடு பிரித்து ‘சூப்பர்’ என்றாள்.
சர்வேஷ் லேசாக வெட்க புன்னகை கட்டிக் கொண்டான்.
பொதுவாக சற்று நேரம் மூவருக்குள்ளும் பேச்சுகள் சென்றது.
உண்டு முடித்து.. வந்த வேலையை செய்தாள் பெண் “ஆன்ட்டி அக்காக்கள் இருவருக்கும் நான் போனில் பேசுகிறேன்.. கண்டிப்பா எல்லோரும் வரணும்..” என கூறி பத்திரிகை எடுத்து கொடுத்தாள்.
வாங்கிக் கொண்டார் முத்துநாயகி.
ஹாலுக்கு சென்றார்.. பத்திரிக்கையை, மூக்கு கண்ணாடி அணிந்துக் கொண்டு படிக்க.
சர்வேஷ் “தங்கள் சித்தம்.. என் பாக்கியம்” என்றான் அமர்ந்துக் கொண்டே குனிந்து, இதமான புன்னகையோடு.
வர்ஷினி “முதல்முதலில் அப்பா என்னை நம்பி.. இந்த பங்க்ஷன் கொடுத்திருக்கார்.. நானே விசாரித்து எல்லாம் பண்றேன் தெரியுமா” என தன் சுடிதார் காலரினை தூக்கிக் விட்டுக் கொண்டு.
“ப்ரௌட் ஓப் யூ வர்ஷி..” என்றான் இமைக்காமல் பார்த்து.
பின் அவனே “என்னை சர்வான்னு கூப்பிட்டேன்.. கேட்கனும் போல இருக்கு” என்றான் தலை கோதிக் கொண்டு தயங்கி.. இதமாக வினவினான்.
வர்ஷினி “என்னையும் அறியாமல் வரட்டுமே சர்வேஷ்..” என்றாள் நேராக அவனை பார்த்து.
சர்வேஷ் அமைதியானான்.
நேரம் ஓடியது..
வர்ஷினிக்கு தோசை தன் கையால் ஊற்றி.. பரிமாறி.. அவளின் வயிறு நிரப்பிதான் அனுப்பினான்.. சர்வேஷ்.
கீழே வந்தான் அவளோடு.. கால்கள் பரபரத்தது.. அவளின் வண்டியை எடுத்து கொடுக்க.. ஆனாலும், நின்று.. அவள், அந்த டூ வீலர் எடுத்ததை வேடிக்கை பார்த்தான்.
இந்த சில நிமிடங்கள்.. சின்ன வருத்தமாக இருந்தது.. அவள் வேலை செய்கிறாள்.. அவளிடமிருந்து அதை பகிர முடியவில்லையே என்னால்.. என இருந்தது.
வண்டியில் அமர்ந்து ஹெல்மெட் அணிந்துக் கொண்டாள்.. சர்வேஷ் “பார்த்து போ.. ட்ராபிக் ஜாஸ்தி..” என்றான், குரலில் வலி தெரிந்தது.
“சரி சரி.. நீங்க போங்க.. பைய்” என சொல்லிக் கொண்டே வண்டியை மூவ் செய்து.. கிளம்பினாள்.
சர்வேஷ்.. அவள் தெருமுனையில் திரும்பும் வரை நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் வீடு செல்லும் நேரம் கணக்கிட்டு.. அவளுக்கு செய்தி அனுப்பினான் “என்ன வீட்டுக்கு போய்ட்டியா” என.
சற்று நேரம் அவள் அந்த போனினை எடுக்கவில்லை.. புதுகாதலன் லேசாக பதறினான்.
தன்னை முயன்று அமைதியாக்கி கொண்டு அமர்ந்திருந்தான் அவளின் அழைப்பிற்காக.
வேண்டி நின்ற நிகழ்வுகள் எல்லாம்.. இப்போது அவனுள் நடக்கிறது. ஆனால், அதை ரசிக்க முடியவில்லை.. வர்ஷினி வர்ஷினி என மனது அவளிடமே ஓடுகிறது. அதுதானே அவன் வேண்டியது.. கிடைத்திடும் போல.
பொறுமையாக வர்ஷினி ‘வந்து சேர்ந்து விட்டேன்’ என செய்தி அனுப்பினாள்.
அவன் எதோ அடுத்த கேள்வி கேட்க்க.. பெண்ணவள் “மோர்னிங் பேசுகிறேன்.. தூக்கம் வருது” என் செய்தி அனுப்பி வைத்தாள்.
சர்வேஷ் அவள் வந்து சென்ற.. இந்த மூன்று மணி நேரத்தை அசைபோட தொடங்கினான்.