ஏன் எதற்கு என்றே தெரியாமல் அவ்வளவு கோவம் அவளுள் வீறு கொண்டு எழுகிறது.
“எதுக்குடி இப்போ ஏறிக்கிட்டு வர?”
துளசி பல்லை கடித்து, “எனக்கு பசிக்கலை” என்றாள்.
“எனக்கு பசிக்குது” என்றான் கணவன்.
“ஆனா சாப்பிட முடியல. தொண்டையில் இருந்து இறங்க மாட்டேன்னு சதி பண்ணுது. அதுக்காக அலட்டிக்க கூடாது. தண்ணீர் குடிச்சு முழுங்கிடணும். பல வருஷ அனுபவம்” என்றான் சாதாரணமாக.
தேவா இப்போதும் சாப்பிட்டதை விட, தண்ணீர் குடிப்பது அதிகம்.
மாலதி அவளை தொந்தரவு செய்யாமல் விலகி வர, “என்ன மருமகளுக்கு கொடுக்கலையா?” என்று அடுத்த கட்ட விசாரணையை ஆரம்பித்தனர்.
“தூங்கிட்டா போல” என்று மாலதி சொல்ல,
“தூங்கிட்டாளா? நம்ம வீட்டுக்கு கிளம்ப வேண்டாமா? கல்யாணம் முடிஞ்ச கையோட அம்மா வீட்டுக்கு வந்துட்டா. சரி மறுவீடு முடிச்சு வருவான்னு பார்த்தா மருமகளுக்கு அம்மா வீட்டை விட்டு கிளம்புற எண்ணமே இல்லை போலவே” என்று பாட்டி ஒருவர் கேட்க,
மாலதிக்கு இதென்ன புதுசா முளைக்குது என்ற அதிர்ச்சி.
“ஜெயலட்சுமி எங்க? நல்ல நேரம் பார்த்து மகனையும், மருமகளையும் கிளப்பிகிட்டு போகாம என்ன பண்ணிட்டு இருக்கா? மாமியார் ஆகிட்டா இன்னும் இதெல்லாம் சொல்லி கொடுத்துட்டு இருக்க முடியுமா” என்றார் பெரிய அத்தை.
“அக்கா வெளியே இருக்காங்க. நான் சொல்றேன்” என்று மாலதி நழுவ பார்க்க,
“நானே வரேன்” என்று ஜெயலட்சுமியை தேடி சென்றனர்.
“அத்தை நீங்க படுக்கலையா? காபி ஏதும் கொடுக்க சொல்லவா?” என்று ஜெயலட்சுமி இவரை பார்த்ததும் கேட்க,
“நிம்மதியா படுக்கிற மாதிரியா இங்கெல்லாம் நடக்குது?” என்று நொடித்தார் அவர்.
மாலதி அக்காவை பரிதாபமாக பார்க்க, கவனித்த ஜெயலட்சுமி, “என்னாச்சு அத்தை?” என்று விசாரித்தார்.
“உன் மருமக ரூமுக்குள்ள போய் அடைஞ்சுட்டா”
“டையர்டா இருக்கும் அத்தை. வந்திடுவா?”
“ஏன் லட்சுமி. நல்ல நேரம் பார்த்தியா இல்லையா?”
“எதுக்கு அத்தை நல்ல நேரம்?”
“இப்போ தானே புரியுது. நீயே இப்படி இருந்தா உன் மருமக எப்படி இருப்பா?”
“என்னாச்சு அத்தை?”
“மகனையும், மருமகளையும் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போற எண்ணமே உனக்கு இல்லையா என்ன?”
ஜெயலட்சுமிக்கு புரிந்து போனது. பதில் தான் என்ன சொல்வது என்ற தடுமாற்றம்.
“என்னக்கா? அத்தை கேட்கிறது அப்போ சரிதானா? தேவா மாமியார் வீட்டோட இருக்க போறானா?” என்று உடனே கேள்வி வந்தது.
“அப்படியெல்லாம் இல்லை. நம்ம வீட்டுக்கு வருவாங்க” அகல்யா சொல்ல,
துளசியை வழியனுப்பி வைக்க என்று எந்த ஏற்பாடும் நடக்கவில்லை.
வளர்மதி கிச்சனில் எல்லோருக்கும் குடிக்க தயார் செய்து கொண்டிருக்க, துளசி அறைக்குள் அடங்கி கொண்டாள்.
“சீர்வரிசை ஏதும் கண்ணுக்கு தெரியலை” என்று ஒருவர் சொன்னார்.
“அப்புறமா கொடுக்க சொல்லிட்டோம்” என்றார் ஜெயலட்சுமி.
“ஏன் இப்போ கொடுத்தா என்ன? நாங்க எல்லாம் பார்க்க கூடாதா? என் மருமக வீட்ல கொடுத்ததை, என் சொந்தபந்தங்களுக்கு காட்டிட்டு தான் விட்டேன். மூணு லாரி இறங்குச்சு” பெருமையாக அடித்து விட்டார்.
‘இது வேறயா?’ ஜெயலட்சுமிக்கு தலை வலித்தது.
தள்ளி ஏதோ பேசி கொண்டிருந்த மகனை பார்க்க பற்றி கொண்டு வந்தது. ‘இவனை பெத்துட்டு நான் படுற பாடு இருக்கே’ என்று உள்ளுக்குள் அங்கலாய்த்து கொண்டார் அன்னை.
“லட்சுமி” என்று அந்த பாட்டி அருகில் வந்தவர் ரகசியமாக, “அப்போ தேவா வீட்டோட மாப்பிள்ளையா இருக்க போறானா என்ன?” என்று கேட்டார்.
‘க்கும். எல்லோருக்கும் கேட்கிற மாதிரி ஒரு ரகசியம். இதுக்கெதுக்கு கிட்டக்க வரணும்’ ஜெயலட்சுமி கடுகடு முகத்தை சாதாரணமாக மாற்றி கொள்ள,
“ம்மா. என்னம்மா. பாட்டி சொல்றது உண்மையா” என்று அகல்யா வேகமாக கேட்டாள்.
“அகல்யா நீ அமைதியா இரு” என்று செல்வி தங்கையை அடக்க,
“எப்போ பார்த்தாலும் என்னையே நீ அமைதியாக்கிடுறக்கா. ஏன் நான் எதுவும் தெரிஞ்சுக்க கூடாதா?” என்று தங்கை பொறுத்து பார்த்து சண்டைக்கு வந்துவிட்டாள்.
திருமண பேச்சு ஆரம்பித்ததில் இருந்து அவள் எது கேட்டாலும், செல்வி அவளை அடக்குவதை தங்கையும் கவனிக்காமல் இல்லையே.
ஜெயலட்சுமி மகளை அடிக்கண்ணால் முறைத்து, ‘இனி நீ பேசின அவ்வளவு தான்’ என்று பார்வையால் எச்சரித்தார்.
பல வருடம் கழித்து அம்மாவின் டெரர் லுக்கில் மகள் வாய் மூடி கொண்டது. பிள்ளைகள், கணவன் முன்பு பூஜை வாங்க அவள் தயாரில்லை.
“என்ன லட்சுமி பதில் பேச மாட்டேங்கிற. தேவா இனி இங்க தானா?” என்று வெகு ஆவலாக அவரை பார்த்திருந்தார்கள் சொந்தபந்தங்கள்.
“வளர்மதிக்கு ஒரே பொண்ணு. அதான் பொண்ணை அனுப்ப மனசில்லையோ என்னமோ?”
“அப்படி பார்த்தா நம்ம லட்சுமிக்கும் ஒத்த மகன் தான். அவ எப்படி அனுப்புவா? என்ன நான் சொல்றது சரிதானே லட்சுமி?” என்று அவரிடமே கேட்டனர்.
“இப்போ என்ன நடந்து போச்சுன்னு ஆளாளுக்கு ஒன்னு பேசுறீங்க. தேவாவும், மருமகளும் நம்ம வீட்டுக்கு தான் வர போறாங்க” என்றார் ஜெயலட்சுமி.
ஆர்வம் குறைந்து போக, “சரி. அப்போ என்ன சட்டு புட்டுன்னு நல்ல நேரம் பார்த்து கிளம்புவோம்” என்றவர், அப்போதே நேரத்தையும் கணித்து உறுதி செய்தார்.
“தேவாவை வர சொல்லு” என்று லட்சுமி மகனை தனியே பிடித்தவர்,
“நம்ம வீட்டுக்கு போலாம் தேவா” என்றார்.
“ம்மா”
“ஏதும் பேசிடாத. மகன்னு கூட பார்க்க மாட்டேன்”
“ம்மா. ஏற்கனவே தலை வலிக்குது. நீங்க வேற ஏன்ம்மா?” என்றான் மகன்.
“எனக்கு தலையே வெடிக்குதுடா. நான் பேசாம செல்வியோட நிறுத்தியிருக்கணும். அதுக்கு அப்புறம் பொறந்த இரண்டும் என் உசுரை வாங்குதுங்க” என்று வெடித்தார் அன்னை.
“க்கா. அம்மாவை என்ன பண்ண நீ?” என்று அகல்யாவிடம் பாய்ந்தான் நல்லவன்.
“அம்மா. உன்னையும் தான் சொன்னாங்க” என்றாள் அக்கா முறைப்புடன்.
“சொந்த பந்தம் எல்லாம் எப்போ கிளம்புறோம்ன்னு கேட்கிறாங்க தேவா” என்றார் செல்வி.