Nenjai Koithaal Vanji 6 2 8035 மாமா அப்படி விசாரித்தது அவனுக்கு பிடிக்கவில்லை, இருந்த போதும் தவறாக ஏதுமில்லை என சொல்லி மஹாவின் தற்போதைய நிலையை சொன்னான். “அதுக்கு நீ என்ன பண்ண முடியும்? ஏன் அந்த பொண்ணுக்கு பெத்தவங்க, கூட பொறந்தவங்க யாரும் இல்லையா? ஸ்கூல்ல சேர்க்க ரெகமென்டேஷன் வேணும்னா அவங்க ஆளு இருக்கானே அதான் அந்த வாஞ்சிநாதன். அவன்கிட்ட போக வேண்டியதுதானே, நீ தள்ளி இரு தர்மா” என்றார் நம்பி. “வாஞ்சிநாதன் சும்மா எதையும் செய்வானா மாமா? அவனும் பணம் கேட்பான். உதவியாதான் செய்ய போறோம், செஞ்சி தந்திடுவோம் மாமா” என்றான் தர்மா. “அப்படியொன்னும் ஏழை குடும்பம் இல்லடா அவங்க, வேணாம்னா விட்ரு. கல்யாண பத்திரிகையெல்லாம் ஏன் கொடுத்த? வருஷக் கணக்கானாலும் ஊரு உலகத்துல எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். ஆளுக்கொன்னு பேச மாட்டாங்களா? நல்ல நாள்ல கண்ட சங்கடமும் நமக்கெதுக்கு? யோசிக்க மாட்டியா?” காட்டமாகவே கேட்டார் நம்பி. “கொடுக்க கூடாதுன்னு எனக்கு ஏதும் தோணல மாமா. என் மனசுல வேற எண்ணமும் இல்லை. அப்புறம் ஸ்கூல் அட்மிஷனுக்கு ஹெல்ப் பண்றேன்னு நான் சொல்லிட்டேன், பின் வாங்க முடியாது மாமா” என்றான் தர்மா. நம்பி அவனை முறைத்துப் பார்க்க, “தூங்க போங்க” என சொல்லி அவனது அறைக்கு சென்று விட்டான். மாமா இப்படி பேசியதில் சற்று மன சஞ்சலத்தோடு இருந்தான் தர்மா. அந்த நேரம் பார்த்து அவனது ஆடையை எடுத்துக் கொண்டு வந்தாள் கனி. வைத்து விட்டு செல் என அசுவாரஷ்யமாக சொன்னான். “இப்பவே போட்டு பாரேன் மாமா, சரியா இருக்கான்னு பார்க்கிறேன்” என்றாள் கனி. “நொய் நொய்ங்காம போ” என எரிச்சலாக சொன்னான். “என்ன மாமா எதுக்கு கோவ படுற?” “எங்க கோவ பட்டேன்?” “அப்புறம் இனிக்க இனிக்க பேசினியா இப்போ?” “ப்ச் படுத்தாம போ” “என்னதான் ஆச்சு உனக்கு? மஹாவை பார்த்தியா…” அவள் பேசிக் கொண்டிருக்க, “ஆமாம் இப்ப அதுக்கென்ன?” என சீறினான். கையிலிருந்த ஆடையை படுக்கையில் வைத்தவள் அவனை பாராமல் கலங்கிய கண்களோடு வெளியேறி விட்டாள். காலையில் கனி தயாராகி உணவுக்கு வர, தர்மா முன்னரே கிளம்பி சென்று விட்டதை அறிந்தாள். சோக முகத்தோடு வந்தான் ஆசைத்தம்பி. கட்சி அலுவலகம் புறப்பட்டுக் கொண்டிருந்த நம்பியிடம் தன்னை கனிக்கு மட்டும் டிரைவராக இருந்தால் போதுமென தர்மா சொல்லி விட்டதாக புகார் சொன்னான். “கனிக்கு பாதுகாப்பா இருக்கட்டும்னு சொல்லியிருப்பான், என்ன இப்போ? கனியை அழைச்சிட்டு போ” என்றார் நம்பி. “அதெல்லாம் இல்லைங்க ஐயா, அந்த பொண்ணு மஹா பத்தி உங்கள்ட்டயும் கனிகிட்டேயும் சொல்லி கொடுத்திட்டேன்னு அண்ணா என்னை தள்ளி நிறுத்த பார்க்கிறார். நேத்து வந்தவன் அந்த கோபு, அவனுக்கு என் இடத்தை கொடுத்திருக்கார். நீங்க சொல்லுங்க, நீங்க சொன்னா அண்ணன் கேட்டுப்பார்” என்றான். “ஏய் அவனுக்கு தெரியாதா யாரை எங்க வைக்கணும்னு? கனி கூட இருக்க சொன்னா காரணம் இருக்கும். பேசாம வேலைய பாரு” என்றார். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கனியிடம் திரும்பிய ஆசைத்தம்பி, “ஐயா கேட்க மாட்டேங்குறார், அண்ணனை பத்தி உங்ககிட்ட தப்பாவா சொன்னேன்? அண்ணன்கிட்ட நீங்க எடுத்து சொல்லுங்க, நான் என்ன கெட்டவனா?” என்றான். “சரி தம்பியண்ணா, கவலை படாதீங்க, சாப்பிட்டீங்களா இல்லையா? வாங்க சாப்பிடுங்க” என்றாள் கனி. “என்ன சரி? உனக்கென்ன தெரியும்? தர்மா எது செஞ்சாலும் அர்த்தம் இருக்கும், இந்த விஷயத்துல எல்லாம் தலையிட்டுக்குற அளவுக்கு பெரியாளு ஆகிட்டியா? ஹ்ம்ம்…” அதட்டினார் நம்பி. “அதில்லப்பா தம்பியண்ணா கஷ்டப்படுறாங்க போல…” என அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, “இப்பதான் இதை பத்தி பேசாதன்னு சொன்னேன்!” நம்பி மீண்டும் அதட்ட, கனிக்கு அழுகை வருவது போலானது. அறைக்கு சென்று விட்டாள். சின்ன காரணத்துக்காக எல்லாம் இப்படி செய்ய மாட்டான் தர்மா, உடனே எடுத்த முடிவாக இருக்காது, கனிக்கு சிறப்பான பாதுகாப்பை உன்னை அன்றி யாரால் தர முடியும்? வேண்டாம் என முடிவெடுத்து விட்டால் வேலையை விட்டு அனுப்புவானே தவிர, கனியுடன் இருக்க சொல்ல மாட்டான் என பொறுமையாக எடுத்து சொல்லி ஆசைத்தம்பியை சமாதானம் செய்து வைத்தார் நம்பி. இப்படியெல்லாம் தர்மாவே சொல்லியிருந்தால் ஆசைத்தம்பிக்கு ஏற்புடையதாக இருந்திருக்கும். கோபுவை உடன் அழைத்துக் கொண்டு அவன் மூலமாகத்தான் கனிக்கு மட்டும் டிரைவராக இரு என சொல்லியனுப்பியிருந்தான். ஆனால் நம்பியே இவ்வளவு எடுத்து சொல்லவும் இதற்கு மேல் பேச முடியாமல் கனி வெளியே செல்லும் நேரத்துக்காக காத்துக் கொண்டு வீட்டிலேயே காத்திருக்க ஆரம்பித்து விட்டான். நம்பி கிளம்பி விட்டார். கனி பாடலை ஒலிக்க விட்டு கைக்கு வந்ததை வரைந்து கொண்டு பொழுதை போக்கிக் கொண்டிருந்தாள். பாட்டியிடம் வெளியில் செல்லும் மூட் இல்லை என சொல்லியிருந்தாள். கனி ஃபேக்டரிக்கு வந்து சேராததால் அவளுக்கு அழைத்தான் தர்மா. பேசியவளிடம் ஏன் வரவில்லை எனக் கேட்டான். “மூட் சரியில்லை மாமா” என்றாள். “ம்ம்… நீ என்ன பொழுது போக்க வந்திட்டு இருக்கியா இங்க? மூட்க்கு என்னாச்சு இப்போ?” “வேற ஏதோ எரிச்சலை என்கிட்ட காட்டுற நீ. இதோ இப்ப கூட கடுப்பாதானே பேசுற என்கிட்ட? எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்றார் உன் மாமா. நிஜமா அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன் மாமா” என்றவள் அழைப்பை துண்டித்து விட்டாள். மதியம் போல வீட்டுக்கு வந்தான் தர்மா. ஆசைத்தம்பி அவனது முகம் பார்த்து நிற்க, அவனை கடினமாக பார்த்துக் கொண்டே உள்ளே சென்று விட்டான். “கல்யாண பொண்ண ஏதோ பேசி கஷ்ட படுத்திட்டான் உன் மாமன். பாவம் சரியாவே சாப்பிடல அவ. என்னன்னு பாருப்பா” என்றார் பாட்டி. கனியின் அறைக்கு சென்றான். வரைந்த ஓவியங்கள் மேசையில் அப்படியே இருக்க, முகத்துக்கு ஃபேஸ் பேக் போட்டுக் கொண்டு பால்கனியில் அமர்ந்திருந்தாள். ஓவியத்தை கையில் எடுத்து பார்த்தான். மான், யானை என விலங்குகள் வரைந்து பாதி வண்ணம் தீட்டப் பட்டதோடு இருந்தது. “நல்லாருக்கிற மூஞ்சிய என்ன பண்ணிட்டு இருக்க?” எனக் கேட்டுக் கொண்டே அவளருகில் போய் நின்றான். கண்களை திறந்து அவனை பார்த்தவள் முகத்தை திருப்பிக் கொண்டாள். “ட்ரெஸ் காலையிலேயே போட்டு பார்த்திட்டேன், கரெக்ட்டா இருக்கு” என்றான். “ம்ம்…” “நைட் எனக்கு மூட் சரியில்லை கனி. பெருசா எடுக்காத” “ம்ம்…” “நேத்து மஹாவை பார்த்தேன், கஷ்டத்துல இருக்கா அவ. நம்ம கல்யாணத்துக்கு கூட இன்வைட் பண்ணியிருக்கேன்” “தெரியும்” “உனக்கு கோவமா?” என அவன் கேட்கவுமே சற்றே சமாதான பார்வையோடு அவனை பார்த்தாள். “மாமா மேல கோவமா?” என மீண்டும் கேட்டான். “கோவம் இல்லை மாமா, ஆனா எப்படியோ இருக்கு, எனக்கு சொல்ல தெரியலை” என்றாள். “நீ என்னை புரிஞ்சுப்பேன்னு நினைச்சேன் கனி” “உனக்கு சரின்னு படறத செய்” “உனக்கு சரின்னு படலையா?” என அவன் கேட்கவும் ஆம் என தலையாட்டினாள். சுவரில் சாய்ந்து கொண்டு அவளையே பார்த்தான். எழுந்து அவனிடம் வந்தவள், “உன்னை தப்பா நினைக்கல மாமா, எப்பவும் அப்படி நினைக்க மாட்டேன், மத்தவங்க ஏதாவது பேசுவாங்கல்ல மாமா? தம்பியண்ணாக்கு கூட உறுத்தலா இருக்க போயிதான் என்கிட்ட சொன்னார்” என்றாள். “அவனை பத்தி பேசாத” “அவரை ஏன் மாமா எனக்கு டிரைவர் ஆக்கிட்ட? எப்பவும் போல உன் கூடவே இருக்கட்டும் அவர்” “பலமான ரெகமென்டஷனை பிடிச்சிருக்கானா?” என அவன் கேட்கவும் செல்லமாக முறைத்தாள். ஆசைத்தம்பியை கனிக்கு பாதுகாவலனாக நியமிக்க முன்னரே முடிவெடுத்ததாக சொன்னவன், அந்த முடிவில் மாற்றமில்லை எனவும் சொல்லி விட்டான். “அப்படியென்ன எனக்கு பாதுகாப்பு முக்கியம்?” எனக் கேட்டாள். “என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுன்னா இப்படித்தான் கனி. நீதான் வம்பா ஆபத்தை வளைச்சு பிடிக்க நினைச்சிட்டியே” என்றான். “நீ எனக்கு ஆபத்தா? உன் முகத்துக்கும் ஃபேஸ் பேக் போட்டு விடவா மாமா?” “எனக்கும் சேர்த்து நீயே போட்டுக்க. அதென்ன பட்டுனு அம்மாவை மிஸ் பன்றேன்னு சொல்லிட்ட? அவ்ளோ கஷ்டமா உனக்கு?” “எனக்கு எதாவதுன்னா உன்கிட்ட சொல்வேன், நீயே கோவ பட்டா?” “இனிமே எனக்கு நீ வெறும் மாமா பொண்ணு மட்டும் இல்லை கனி” என சிறு சிரிப்புடன் சொன்னான். “கல்யாணம் பண்ணிக்கிட்டா கோவ பட்டுகிட்டே இருப்பியா?” “வாழ்க்கை முழுக்க சேர்ந்து இருக்க போறோம். என்னோட சேர்த்து என் கோவத்தையும் நீ சகிக்கத்தான் வேணும் கனி, பதிலுக்கு நீயும் கோவப்படு” “கோவப்படவா? ம்ம்ம்… பார்க்கிறேன்” என்றாள். “கோவமெல்லாம் வருமா உனக்கு?” எனக் கேட்டு வாய் விட்டு சிரித்தான். அவளும் சிரிக்க, முகத்தில் போட்டிருந்த பூச்சு காய்ந்து போய் கன்னத்து தசைகளை இழுக்க, ஆ என முகம் சுளித்து சிரிப்பதை நிறுத்தினாள். அதைப் பார்த்து விட்டு இன்னும் பலமாக சிரித்தான் தர்மா.