அத்தியாயம் 15

அவர்களுக்கான அன்றைய இரவில் சக்தீஸ்வரனின் அறையில் இருந்தாள் இளவஞ்சி.

இரு கால்களையும் மடித்து முட்டியில் தனது கன்னத்தை வைத்து அமர்ந்திருந்தவளின் மனமோ பலவிதமான சிந்தனையில் சுழன்றிருந்தது.

இன்றைய திருமண நிகழ்வில் நெகிழ்ந்திருந்த மனத்தின் மகிழ்வு நிலையிலேயே அடுத்தடுத்த சடங்குகள் நடந்திருந்தன.

இப்பொழுது எண்ணிப் பார்க்கையில் அனைத்தும் துரிதகதியில் நடந்து முடிந்ததற்கு அவளுக்கு வந்த கனவுகளே காரணமாய் இருந்திருக்கிறது என்று புலப்பட்டது.

‘முதல் முதலா சக்தியைப் பார்த்த பிறகு தான் கனவு வந்துச்சு. ஏன் என்னைத் தேடி வர இத்தனை நாளாச்சுனு கேட்குற மாதிரி தானே அந்த கனவு இருந்துச்சு. எவ்ளோ சரியா ரியல் சூழ்நிலைக்கு கனெக்ட் ஆகுது இந்த கனவு! ஒருத்தர் பொண்ணு பார்த்துட்டு போன பிறகு, நான் தான் உனக்கு கணவனாக வேண்டியவன்னு வேற ஒருத்தர் வந்து நின்னா, ஏன் என்னை தேடி வர இவ்வளோ நாளாச்சுனு கோபமா தானே கேட்க தோணும். அடுத்து வந்த கனவு…’ எனத் தலையில் தட்டியவாறு சிந்தித்தவள்,

‘ஹான் இரண்டு பேரும் சேர்ந்து சிவ பூஜை செய்றது. நான் அவரை வெளியூருக்கு எங்கேயோ வழியனுப்பி வைக்கிறது. அவர் என்னை விட்டு பிரிஞ்சி போற மாதிரி… அந்த கனவுக்கு பிறகு தானே அவருக்கு ஆக்சிடென்ட் ஆச்சு. இந்த ஆக்சிடெண்ட்டை தான் கனவுல மறைமுகமா என்னை விட்டு பிரிஞ்சி வெளியூருக்கு போற மாதிரி காண்பிச்சாங்களோ? ஆனாலும் பிரிஞ்சி போறதுனா இதுக்கு அர்த்தமே அபத்தமானதாச்சே‌! ஒரு வேளை அந்த நேரம் அந்தளவுக்கு ஏற்பட வேண்டிய ஆபத்தான ஆக்சிடென்ட்டை ஈசன் தடுத்து சின்னதா இந்தளவுக்கு மாத்திட்டாரோ’ என்று எண்ணியவளாய் அமர்ந்திருந்தவள்,

‘மூனாவது வந்த கனவு என்னோட நினைப்பே அவருக்கு இல்லனு நான் கோபப்பட்ட கனவு! நிஜமாவே அப்ப அவர் மேல அந்த மாதிரியான கோபத்துல தானே நான் இருந்தேன். இந்த கனவு வந்தனால தானே காலைல அவர்கிட்ட பேச முடிஞ்சிது‌’

‘அப்ப மூனு கனவும் முன்ஜென்மத்தை காண்பிக்குதுனு நினைச்சாலும் நிகழ்கால நிகழ்வுகளோட கனெக்ட் ஆகுற மாதிரி இருந்திருக்குதே! இது எப்படி சாத்தியம்? இந்த கனவுக்குலாம் என்ன அர்த்தம்? இதுலாம் நடக்க போறதைச் சொல்றதுக்கு வந்த கனவுகளா இல்ல முன்ஜென்மத்தை நினைவுப்படுத்த வந்த கனவுகளா?’

‘ஆமா நேத்து பகல் கனவு மாதிரி ஒன்னு வந்துச்சே! பெருமாள் கோவில்ல சிவன் சன்னதி! இவர் என் மேல் கோபப்படுறாரு! இதுக்கு என்ன அர்த்தம்? இது முன் ஜென்ம கனவா இல்லை இப்ப நடக்க போறது எதையோ இந்த கனவு சொல்ல வருதா?’

“தங்கப்பொண்ணு”

பெருத்த சிந்தனையில் இருந்தவளைக் கலைத்தது அவன் குரல்.

சட்டெனப் பதறி நிமிர்ந்து கண் சிமிட்டி அவனை பார்த்தாள் இளவஞ்சி.

ஓய்வறையிலிருந்து கால்களைத் தாங்கி நடந்தவாறு வந்தவனைக் கண்டவள் சட்டென எழுந்து அவனுக்கு உதவ முன் வர, “ஐம் ஓகே. நானே நடப்பேன்” என்றவாறு பொறுமையாக நடந்து வந்து அமர்ந்தான் சக்தீஸ்வரன்.

கால்களை நீட்டியவாறு கட்டிலில் அவன் சாய்ந்து கொள்ள, “நீங்க சாப்பிட வேண்டிய மாத்திரை எல்லாம் சொல்லுங்க. நான் எடுத்து தரேன்” என்றவாறு மாத்திரை வைத்திருந்த மேஜைக்கு சென்று எடுத்து வந்து அவனருகில் அமர்ந்தாள்.

அவன் கூறியவற்றை எடுத்துக் கொடுத்துக் குடிக்க நீர் அளித்தாள்.

அதனை வாங்கி வைத்து விட்டு அருகில் வந்து அமர்ந்திருந்தவளிடம், “சாரி” என்றான் சக்தீஸ்வரன்.

எதுக்கு என்பது போல் அவள் பார்க்க, “இந்த நாள் இந்த இரவு வேற மாதிரி இருந்திருக்கனும். ஆனா இந்த நிலைல என்னைக் கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டதுக்கு தேங்க்ஸ். இப்படி உன்னை உரிமையோட பக்கத்துல வச்சிக்கனும்னு தான் உடனே கல்யாணம் வைக்க சொன்னேன். ஆனா இப்ப யோசிக்கும் போது உன்னோட உணர்வுகளை கொல்ற உணர்வு வருது. சாரி” என்றான் சக்தீஸ்வரன்.

கண்டிப்பான பார்வையுடன் அவனது கரங்களைப் பற்றியவள், “நீங்க நினைச்ச மாதிரியே தான் நான் நினைச்சேன் தெரியுமா!” என்றதும், “என்ன நினைச்ச?” என்றவன் கேட்க,

“இளவஞ்சி சக்தீஸ்வரன்! சக்தி.. அதாவது நீங்க இந்த வஞ்சியோட சக்தியாகிட்டா மட்டும் போதும்னு தான் நினைச்சேன்” அவனது பார்வையோடு கலந்தவளாய் ஆழ்ந்த குரலில் உரைத்தவள் அவனது கரங்களை அழுத்தமாய் பற்றியிருந்தாள்‌.

இரவின் ஏகாந்தமும் அறையினுள் ஒலித்துக் கொண்டிருந்த மெல்லிய இசையும் அந்த இரவிற்கான பொருளும் இருவரின் மனத்தையும் ஒருவித மோன நிலைக்குத் தள்ளியது.

அவளின் கூற்றில் பூரித்து மெய்மறந்து அவளின் விழி மொழியினுள் தன்னைத் தொலைக்க சித்தமாய் இருந்தவனை, சட்டெனப் பார்வையை விலக்கி அவனின் கரங்களைப் பார்த்தவளாய்,

“நிறைய நிறைய ஆசை இருந்துச்சு சக்தி. எனக்குனு ஒருத்தர்! என் காதல் மொத்தத்தையும் கொட்டுறதுக்குனு ஒருத்தர். அவரோட கைக்கோர்த்து நடக்கனும். அவரோட தோள் சாயஞ்சிக்கிட்டே நீண்ட பயணம் போகனும். நான் கேட்டு ரசிக்கிற பாடல்களுக்கான பிம்பமாய் அவர் இருக்கனும். அவரை நினைச்சிக்கிட்டே அந்தப் பாடலை கேட்கும் போது வரும் உணர்வை ரசிக்கனும்‌. அவரை இறுக்கி அணைச்சிக்கிட்டே தூங்கனும். என் இன்பம் துன்பம் புலம்பல் நல்லது கெட்டது எல்லாமே அவர்கிட்ட மொத்தமா நான் புலம்பும் போது எல்லாத்தையும் அவர் பொறுமையா கேட்டுக்கனும். அவரோட மொத்த காதலும் நான் தான்னு என் மேல அன்பை பொழிஞ்சி இனி உனக்கு வாழ்க்கைல கஷ்டமே இல்லைனு என்னை அவரோட சிறகுக்குள்ள வச்சி அப்பா போல பார்த்திருக்கிற ஒரு ஆண் தேவதையை கணவனா அடையனும்னு பேராசை இருந்துச்சு சக்தி”

கனிந்த பார்வையுடன் தான் கூறியதை கேட்டுக் கொண்டிருந்தவனை பார்த்தவள் மென்னகை புரிந்தவளாய்,

“பேராசை தான். காலேஜ் முடிச்ச புதுசுல சுத்தி ஃப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் கல்யாணம் ஆகும் போது இப்படிலாம் ஆசை இருந்துச்சு. இருபத்து அஞ்சு வயசுக்கு மேலயும் என் கல்யாணத்தைப் பத்தி யோசிக்க கூட யாரும் இல்லைன்ற உண்மை கன்னத்துல அறைஞ்சு சொன்ன நேரத்துல இப்படி ஆசையான ஒரு வாழ்க்கை இல்லைனாலும் நிம்மதியான ஒரு வாழ்க்கை போதும்னு மட்டும் நினைச்சிக்கிட்டேன்‌” என்று பெருமூச்சு விட்டவள் தன்னையும் மீறி தனது மனத்தினை அவனிடம் கூறிக் கொண்டிருந்தாள்.

“இனி வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியலை சக்தி. ஈசன் மேல் பாரம் போட்டு அவசர அவசரமாய் நான் தேர்ந்தெடுத்த இந்த வாழ்க்கை என்னை எங்கே கொண்டு போய் நிறுத்தும்னு கூட தெரியலை சக்தி. ஆனா இந்த காதல் உணர்வை ரசிக்கிறேன். உங்க மேல எனக்கு இருக்கும் இந்த காதலை ரொம்பவே ரசிக்கிறேன். அது வலியோட கொடுக்கிற ஒருவிதமான சுகம். ஒன்னுமே செய்யாமலே மனசை என்னமோ செய்றீங்க சக்தி! நான் இப்படிலாம் ஒருத்தர்கிட்ட பேசுவேன்னு நினைச்சதே இல்ல. ஆனா சக்தினா பிடிக்கும். சக்தினு சொன்னாலே பிடிக்கும்ங்கிற அளவுக்கு உங்க மேல பித்தா இருக்கேன். என் உணர்வுகளை நீங்க கொல்லலை இப்ப தான் உயிர்ப்பிச்சிருக்கீங்கனு புரியுதா சக்தி. இந்த காதலை இதே உயிர்ப்போட ஆயுசுக்கும் என் மனசுல நீங்க நிலைக்க வச்சிட்டா போதும் சக்தி”

காதல் பொங்க அவளை பார்த்திருந்தவன் விழிகளை மூடியவாறு, “ஈஸ்வரா, என் மனைவி என் மேல வச்சிருக்கிற இந்த காதலை இதே போல ஆயுசுக்கும் குறையாம நான் பார்த்துக்கனும்னு உங்கள் தாள் பணிந்து வணங்கி வேண்டிக்கிறேன் எம்பெருமானே” என்று கைகளைக் கூப்பியவாறு ஆழ்ந்த பக்தியுடன் வேண்டியவனைக் கண்களில் கொள்ளை மகிழ்ச்சியுடனும் இதழில் குறுஞ்சிரிப்புடனும் பார்த்திருந்தாள் இளவஞ்சி.

கண்களைத் திறந்த சக்தி அவளின் சிரிப்பினில் புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க, “ஃபர்ஸ்ட் நைட்ல ப்ரே பண்ண ஒரே ஆளு நீங்களா‌ தான் இருப்பீங்க” கேலிச்சிரிப்புடன் கூறியவள் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.

“அட தங்கப்பொண்ணே! ஃபர்ஸ்ட் அடெம்ப்ட்ல மனைவிக்கிட்ட நல்ல பேரு வாங்கனும்னு நிறைய மாப்பிள்ளைங்க ஃபர்ஸ்ட் நைட்ல பிரே செஞ்சிட்டு தான் இருப்பாங்க” என்று சட்டெனக் கூறவும் குப்பெனச் சிவந்து போன முகத்தை கைகளில் மூடியவளாய் சிரித்துக் கொண்டாள்.

அவளின் முகப்பாவனைக் கண்டு குறும்பாய் சிரித்தவனாய் அவளின் கைப்பற்றி அருகே இழுத்து நெற்றியில் முட்டினான். அவளை அருகே அமர செய்து தோளில் கை போட்டவனாய் அவளை நோக்கி லேசாக திரும்பி அமர்ந்தான்‌.

“இறைவனும் இல்லறமும் வேற வேற இல்லடா தங்கப்பொண்ணு. ஆணும் பெண்ணும் காதலோட வாழுற வாழ்க்கைல இருக்கிற நல்லறத்தை பார்த்து மகிழ்ந்து இறைவனே இரங்கி வருவான். அப்படியான நல்லறத்துடன் கூடிய இல்லற வாழ்வு வாழ்கிறவங்களால் தான் இறைவனை அறியவும் அடையவும் முடியும்னு இல்வாழ்க்கை அதிகாரத்துல திருவள்ளுவரே சொல்லிருக்காரு‌. இல்லறம் அல்லது நல்லறம் அன்றுனு கொன்றைவேந்தன்ல நம்ம ஔவையாரும் சொல்லிருக்காங்க. தாய், தந்தையரை நேசித்துக் காப்பதும்,
கட்டிய மனையாளை உண்மையாய் காதலிப்பதும், ஈன்ற சிசுக்களை நன்னெறிப் படுத்தி வளர்ப்பதும் இறைவனை அடையும் ஒரு மார்க்கமேனு நம்மளோட முன்னோர்கள் சொல்லிருக்காங்க” அவனின் பேச்சை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தவள்,

“இவ்வளோ பேசுறவங்க ஏன் முப்பத்து மூனு வயசு வரைக்கும் கல்யாணம் செய்யாம இருந்தீங்க?” எனக் கேட்டாள்.

“நானா செய்ய மாட்டேன்னு சொன்னேன். பொண்ணு கிடைக்கலையே! என்னமோ என்னைப் பிடிச்ச பொண்ணுங்களை எனக்குப் பிடிக்கலை. எனக்குப் பிடிச்ச பொண்ணுங்களுக்கு என்னைப் பிடிக்கலை. அப்ப தான் அந்தக் கனவு வந்துச்சு அதைப் பத்தி வரைகிறவங்ககிட்ட சொல்லி வரைஞ்சி வாங்கினேன். ஆனா உன் முகம் அந்தளவுக்கு மைண்ட்ல நிக்கலை. இருந்திருந்தா முன்னாடியே உன்னைக் கண்டுபிடிச்சிருப்பேனா இருக்கும். அன்னிக்கு கூட உன் மூக்குத்தி தான் என்னை உன்கிட்ட இழுத்துச்சு. இன்னிக்கு கூட அந்த மூக்குத்தி பார்த்தேன் வஞ்சி‌. என்ன மாதிரியான உணர்வு அதுனு தெரியலை. ஏன் அழுதேன்னு தெரியலை. நமக்குள்ள பூர்வஜென்ம பந்தம் இருக்குமோனு தோணுச்சு இன்னிக்கு. எல்லாம் அவன் செயல்” நெகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தவனைப் பார்த்தாள்.

“ஆமா கண்டிப்பாக பூர்வஜென்ம பந்தம் இருக்கு” அவளின் கூற்றில் அதிர்ச்சியுற்றவனாய்,

“என்னது? அதெப்படி இவ்வளோ திடமா சொல்ற?” எனக் கேட்டான்.

“எனக்கு கனவு வந்துச்சு சக்தி” என்றவள் இது வரை தனக்கு வந்த மூன்று கனவுகளையும் அவனிடம் உரைத்தாள்.

அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் கேட்டிருந்தவனுக்கு உடல் புல்லரித்தது‌. அவள் கூறி முடித்ததும் உணர்வுப்பெருக்கில் அவளை இறுக அணைத்திருந்தான் அவன். அவள் முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தான். அவனின் அணைப்பும் முத்தமும் அவளின் உடலில் ஏற்படுத்திய நடுக்கத்தையும் சிலிர்ப்பையும் உணர்ந்தவனாய் மீண்டுமாய் மென்மையாக அணைத்து அவளின் முதுகை வருடியவாறு “ரிலாக்ஸ்டா ஒன்னுமில்லை” என்றான்‌‌.

அதீதமாகப் படபடத்திருந்த அவளின் மனது கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்கு வந்தது.

அவளை விட்டு விலகி கைகளைப் பற்றியவனாய், “சாரி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்” என்றான்.

“பரவாயில்லை” என்றவள் அமைதியாக இருக்க, “இன்னுமே என்னால நம்ப முடியலை வஞ்சி! எப்படி இப்படி? அப்ப நாம இணையனும்றது இறைவனோட பிளேனிங் தானே” பூரிப்பாய் கூறினான்.

“ஆனா நாம இரண்டு பேரும் சேருவதுக்கு பின்னாடி ஏதாவது காரணம் இருக்குமானு மைண்ட்க்குள்ள தோணிட்டே இருக்குங்க. இதுக்கு மேல எனக்குக் கனவு வரலைனா நம்ம கல்யாணத்துக்காகத் தான் இந்தக் கனவுலாம் வந்துச்சுனு விட்டுடலாம். ஒரு வேளை இதுக்கு மேலயும் கனவு வந்துச்சுனா நாம சேர்ந்து செய்ய வேண்டிய காரியம் ஏதோ இருக்குனு அர்த்தம்” என்றவளை வியப்புடன் பார்த்தவன்,

“ஆனா எனக்கு ஏன் கனவு வரலை. உனக்கு மட்டும் ஏன் வருது? ஒரு வேளை எல்லா ஜென்மத்துலயும் என்னை தான் கட்டிக்கனும்னு நீ தான் ஈசன்கிட்ட வரன் வாங்கிருப்பியோ” அத்தனைத் தீவிரமாக அவன் கேட்டிருக்க,

“ஓஹோ அப்ப நீங்க எல்லா ஜென்மத்துலயும் யாரை வேணாலும் கல்யாணம் செஞ்சிக்கலாம்னு நினைச்சீங்களா?” என்று அவனை முறைத்தாள் அவள்.

“அந்த ஜென்மத்துல நான் என்ன நினைச்சேன்னு எனக்கு எப்படிமா தெரியும்” என்று அவன் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க, சிரித்து விட்டாள் அவள்.

அவளின் சிரிப்பைப் பார்த்து இவனும் சிரித்தவனாய் அவளோடு கட்டிலில் சாய்ந்தான். லேசாக அவளை அணைத்தவாறு அப்படியே படுத்திருந்தான்.

சில நிமிடங்கள் இருவரும் முகத்தைப் பார்த்தவாறு அமைதியாகப் படுத்திருக்க, நினைவு வந்தவளாய், “உங்க காலுக்கு தலைக்காணி வைக்கனும்ல?” எனக் கேட்டவாறு எழுந்து அவன் காலுக்கடியில் தலையணை வைத்து அவனுக்கு போர்த்தி விட்டு ஏசியின் குளிரை சற்றுக் கூட்டி வைத்தவள் மெல்லிய பாடல்கள் ஒலிக்க விட்டவாறு அவனருகில் வந்து அமர, “உன் மடியில படுத்துக்கவா?” எனக் கேட்டவன் அவளின் தலையசைப்பில் மடியில் தலை வைத்தான்.

இவள் அவனது தலைமுடியைக் கோதியவாறு இருக்க, கண் மூடிப் படுத்திருந்தவனின் மனத்தை வருடியது அந்த பாடல்.

முழுமதி அவளது முகமாகும்…
மல்லிகை அவளது மணமாகும்…
மின்னல்கள் அவளது விழியாகும்…
மௌனங்கள் அவளது மொழியாகும்…

மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…

அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்…
இதயம் கொடு என வரம் கேட்டேன்…
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்…

கண் விழித்துத் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த வஞ்சியைப் பார்த்தவன்,

“நீ சொன்னல வஞ்சி! நீ கேட்டு ரசிக்கிற பாட்டின் பிம்பமாய் ஒருத்தர் வேணும்னு அந்த மாதிரி தான் இந்த பாட்டுக் கேட்கும் போது எனக்குத் தோணும். இப்ப இதோட ஒவ்வொரு வரிக்கும் நீ தான் கண்ணு முன்னாடி வந்து நிக்கிறடா தங்கப்பொண்ணு” என்றான் மையல் சிரிப்புடன்.

நெஞ்சுருகிப் போனது அவளுக்கு. சட்டெனக் குனிந்து மார்போடு அணைத்துக் கொண்டாள் அவனை.

அவனின் தலை மீது தனது கன்னத்தைப் பதித்து இறுக்கமாய் அவனை அணைத்திருந்தாள்.

முகம் பதிந்திருந்த இடத்தின் மென்மை அவனை உணர்ச்சிவசமாக்க, நெஞ்சாங்கூட்டில் அழுத்தமாய் முத்தமிட்டிருந்தான். தன்னிச்சையாக அவனின் கைகள் அவள் இடையை வளைத்தன.

இருவருக்கும் இந்த நெருக்கத்தை விலக்க மனமே இல்லை. அடுத்த நிலைக்கு செல்லவும் விரும்பவில்லை. அப்படியே அவள் பின்னோக்கிக் கட்டிலில் சாய, அவளை அணைத்து அவள் மார்பில் முகம் புதைத்தவனாய் மாத்திரையின் வீரியத்தில் உறங்கிப் போனான் சக்தீஸ்வரன்.

அவனை வளைத்தவாறு அதீத மகிழ்விலும் நெகிழ்விலும் உறக்கம் வராது படுத்திருந்தாள் இளவஞ்சி.